Saturday, December 26, 2020

நம்பிக்கை தந்த தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சருடனான சந்திப்பு

 நம்பிக்கை தந்த

தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சருடனான சந்திப்பு

--------------------------------------------------------------------------------------------------

தாய்த்தமிழ்க் கல்விப்பணி சார்பில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு பாண்டியராசன் அவர்களைச் சந்தித்தோம் .
திங்கள்கிழமை நடந்த இந்தச் சந்திப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் திரு விசயராகவன், எழுத்தாளர் த.செ.ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


தாய்த்தமிழ்க் கல்விப் பணித் தலைவர் பிரபா கல்விமணி, செயலாளர் கோ.வெ.குமணன், துணைச் செயலாளர் வெற்றிச் செழியன், ஆளுகைக் குழு உறுப்பினர் சிவ.காளிதாசன் , முருகப்பன் ஆகியோர் தாய்த்தமிழ்க் கல்விப்பணி சார்பில் சந்தித்தோம்.
அமைச்சர் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திகளைக் கேட்டறிந்தார். இரண்டாண்டுகளுக்கு முந்தைய சந்திப்பையும் அப்பொழுது பேசிய செய்திகளை நினைவு கூர்ந்தார். தமிழ்வழியில் இயங்கிவரும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் (தாய்த்தமிழ்க் கல்விப் பணி பள்ளிகள்), தமிழ்வழிப் பள்ளிகள் (தமிழ்வழிக் கல்விக்கழகப் பள்ளிகள்), குறள் நெறி தாய்த்தமிழ்ப் பள்ளி ஒன்றாய் ஓரமைப்பாய் இணைந்துள்ளதைப் பாராட்டினார்.
தமிழ்ப் பள்ளிகளின் தேவைகள் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறைமூலம் உதவும் வாய்ப்புகள் பற்றி விரிவாய்க் கலந்துரையாடினார். பொருளியல் சிக்கல் பற்றியும் கேட்டறிந்தார். உடன் இருந்த அமைச்சரின் துணைவியார் திருவாட்டி லதா அவர்கள் நம் பள்ளிகளுக்கு நிதி பெறும் வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார். வாய்ப்புள்ள வழிகளில் குறிப்பாக 3 வகைகளில் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறினார். விரைவில் அறிவிப்பாக வெளியாகும் என்றார்.
அமைச்சர் திரு பாண்டியராசனுடனான சந்திப்பு மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளது

செப்டம்பர் 16, 2020 முகநூல் பதிவு

No comments: