Friday, October 18, 2024

மழை செய்தி : காட்சி ஊடகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்?



பருவ மழை செய்திகளை காட்சி ஊடகங்கள் வெளியிடுவது குறித்து ஒரு வழிகாட்டுதல் உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று தோன்றுகின்றது. இப்போதாவது இதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.

பருவ மழை அவசியம் தேவை என்பதை அனைவரும் அறிவோம். மழையின் போது நீர் தேங்குவதும் அதன் அளவைப் பொறுத்து வடிவதும் இயல்பான போக்கு. ஒருவேளை அதிக மழை பெய்தால் தேங்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து, அதன் வேகத்திற்கு ஏற்ப வடிய காலம் எடுக்கும். இதுவும் அனைவருக்கும் தெரிந்ததுதான். யாருக்கும் புரியாதது அல்ல.
தேங்கிய நீர் காலங் கடந்தும் வடியாமல் இருந்தால் அதற்கு வடிகால் இல்லை என்பதும் அந்த வழிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறிக்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் அறிந்தது.
இந்நிலையில் மழை வர வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை கூறிய உடனே காட்சி ஊடகங்கள் ஏதோ பெரிய போர் வருவது போன்றும், இதற்குப் பின் மனிதர்கள் யாரும் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது போன்றும், வரும் மழை மனித இனத்தையே கொன்றழிக்கப் போகின்றது என்பது போலவும், இதனைத் தாண்டி எப்படி யார் உயிரோடு இருக்கமுடியும் என்பதைப் போன்று
செய்திகளை உருவாக்கி, வெளியிட்டு, அச்சமும் பீதியும் உருவாக்கி வருகின்றனர்.
யாராலும் கற்பனையாக நினைத்துப் பார்க்கமுடியாத வகையில், ‘’தப்பிக்குமா?’’ என்ற வகையில் மிகைப்படுத்தி, செய்திகளை வெளியிடுவது பொது அமைதியை சீர்குலைக்கும் ஒன்றாக உருமாறுகின்றது.
பருவ மழை காலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது, மழை பெய்தது என ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவதுதான் நாகரீகப் பண்பு, நடைமுறை.
ஒருவேளை அதற்கும் மேலாக விரிவான செய்திகள் வெளியிட விரும்பினால், மழை நீர் வடியாமலிருக்கும் இடத்தில், ஏன் வடியாமல் தேங்கி நிற்கிறது,
யார் காரணம், என்ன காரணம்,
நீர் வரத்து மற்றும் வடிகால் பகுதிகளை யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை வெளியிடுவதுதான் நெறிமுறை மற்றும் மதிப்புடையதாக (Ethics and Value) இருக்கும்.
இதுதான் பொது நலம் பயக்கும். அதுதான் அக்கறை உள்ளது என்பதை வெளிப்படுத்தும்.
மழை குறித்த செய்திகள்தான் வெளியிட வேண்டும் எனில்,
மிக அதிக கன மழை பெய்தாலும் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளம், ஓடை, குட்டை மற்றும் ஆறு போன்றவைகளில் ஏன் தண்ணீர் வருவதில்லை, இந்த நீர் பிடிப்பு அல்லது நீர் சேமிப்பு பகுதிகளுக்கு வரவேண்டிய தண்ணீர் எங்கே போனது, ஏன் வராமல் தடைபடுகிறது என்று ஆய்வு செய்திகளை வெளியிடலாம்.
இது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மனித வாழ்வுக்கும் அவசியமான அடிப்படையான ஒன்று.
மேலும்மழை நீரை எப்படி சேமித்து கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்கலாம் என்ற ஆய்வுகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிடலாம்

Sunday, October 13, 2024

சட்டங்களை தவறாகப் எப்படி பயன்படுத்தலாம் என தமிழகப் போலீசாரிடம் பயிற்சி எடுக்கலாம்!!




போக்சோ சட்டத்தை எப்படி தவறாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு

தமிழப் போலீசாரிடம், பிற மாநில போலீசார் பயிற்சி எடுக்கலாம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது குற்றம்.

கொடுத்தால் பொய் வழக்கு - சிறை - சித்திரவதை என அணுகும் காவல்துறை.

—------------------------------
முன்னாள் முதல்வர் கலைஞர் ‘’தமிழக காவல் துறையின் ஈரல் அழுகிவிட்டது” என்றார். அவரின் மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு, ’’காவல் துறையின் சித்திரவதைகளை நானும் அனுபவித்துள்ளேன்” என்று கூறியவர்.
தமிழகப் போலீசார் போக்சோ சட்டத்தை மிக மிக மோசமாக கையாள்வதையும், பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவதையும், இச்சட்டத்தை போலீசார் லஞ்சம் பெற்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.
காவல் துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கொஞ்சமும் திருத்திக்கொள்ளவில்லை.
70 வயதான பழங்குடி இருளர் பொன்னுசாமி. 70% மாற்றுத் திறனாளி. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார்.
அனந்தபுரம் போலீசார், குற்றமிழைத்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். அதுவும் போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர்.
அனந்தபுரம் போலீசார் இப்படி குற்றமிழைப்பது முதல் முறையல்ல. பழங்குடியினருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
அத்தியூர் விஜயா எனும் 17 வயது பழங்குடி இருளர் பெண்ணை, புதுச்சேரி போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ய உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுப்பதை ஒரு குற்றமாக பார்ப்பதில் விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் போலீசாருக்கு முதலிடம் அளிக்கலாம்