Friday, August 31, 2007

வாழ்தல் என்பது விபத்து :

ஈழக்கலைஞர் சி.ஜெய்சங்கர்-நேர்காணல்.

சந்திப்பு இரா.முருகப்பன்

(சென்ற இதழில் வெளியான பேட்டியின் தொடர்ச்சி - முக்கிய கேள்விகள் மட்டும்.)


இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?

எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?

நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.


முழுப் பேட்டியும் படிக்க http://keetru.com/dalithmurasu/

நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007

Tuesday, August 28, 2007

"பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்" - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர

சந்திப்பு : இரா.முருகப்பன்

கூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள்? அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

காலங்காலமாக பாரம்பரியமாக எம்மிடையே இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஒரு அடிமை மனோபாவத்தை கற்றுத்தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதாலும் இன்றைய நெருக்கடியான சூழலைக் கடந்துப் போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியாகவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாகச் செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தின் மூலமாக&கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் 'மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.

உலக மயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால்ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக்கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக்கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.

பாரம்பரியக் கூத்து மரபு என்பதை கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?


பாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல் இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி அதன் வடிவத்தை தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்கு கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவலமுடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும். கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.

கூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும் கூட இப்பணிக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் வருதல், பறை அறைதல், திருமணம் நடத்தல், வாழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பதும் மரபாகும். கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் ''சிறுதெய்வக்'' கோயில் சடங்குகளாக பத்தாசி முறையிலமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து தனிமனிதனையோ அல்லது அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமுடையதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.

மேலும் கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகை சுவைமிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.

தர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டுவிடவும் முடியாது. ஏனெனில் இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக அதிகாரத்தை நிலைநிறுத்தயிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக சனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டைப் போல!

இந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக்கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உணர்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது உலமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப்போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப்போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிபடுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

அதை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நாங்கள் ஒவ்வோரு கிராமமாக சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நம்பிக்கையுடன் நிறையபேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்கவேண்டியுள்ளது. மேலும் கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால் இன்று பாரம்பரியக்கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, ''வீரமைந்தன்'' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.

தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரிய கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாய் உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது. அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம் அடையும் போதுதான் முழுமையானதாகும்.

பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணரவைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிபடுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.

இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்கு புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

இவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்தச் செயல்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.

சடங்குகள் தற்போது சமற்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி?

கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மயப்பட்ட நம்பிக்கையுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளத்தில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால் எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விடயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாக பார்க்கின்ற பார்வையன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.

இந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாக புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூட நம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்போக்குதனமானதாக, நாகரீகமற்றைவையாக பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில், பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த உலகமயமாகல் ஆக்கிரமிப்பு பண்பாட்டு சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படி பிரயோகிக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மையப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாக கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கைமுறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கின்றோம்.

அதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண்ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சாவால் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டுவரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்த் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளாத நிலை, அவர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப்போக்குகள் மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விடயம் என்வென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்படு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.

இதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால், மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.

எனது சொந்த இடமான யாழ்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்டபின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை 'உயர்சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிறசாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிறசாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை ஒரு தீண்டாமைக்கு உட்படுத்திக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்தால்தான் என்பதினை தெளிவாகக் காணலாம்.

கூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், ஒரு சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகின்றது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாக பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழா சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மையப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பல சாவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விடயங்கள் நிராகரிக்கப்படு, கைவிடப்பட்டு தவிர்க்கப்படவேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.

இந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கானச் சாத்தியப்பாடுகளை ஆக்கிக்கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக அதற்கான சாதனமாக ஆக்கிக்கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரணவியல் ஊடகங்களின் ஆக்கிரமிக்குப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலமயமாக்கல் ஆக்கிரமிப்புப் பண்பாட்டு சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் சமத்துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக்கொள்ள ஒரு சமூக செயற்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறோம்.

இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?

எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?


நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.

-நிறைவு-


நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007

Thursday, August 16, 2007

‘‘கொலைகள் அதிகரிக்கக் காரணம்......."

சமூக பொறுப்பற்ற தன்மைதான்’’

0 ரா.முருகப்பன்

தமிழகத்தில் தற்போது ‘நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் காவல்துறையினர் பெரும் பரபரப்பை உருவாகி மக்களை பீதியூட்டி வருகின்றனர். இதன் இறுதியில் யாரையோ மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொலை செய்யப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில்தான் கடந்த 21.07.07 அன்று சென்னையில் போலிமோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்த & போலிமோதல் படுகொலை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ், பொ.ரத்தினம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், பிரபஞ்சன், சரஸ்வதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.


பேராசிரியர் அ.மார்க்ஸ் :‘‘இன்று உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்டவிரோதமான கொலைப் படகளை நடத்துகின்றன. சட்டம் ஒழுங்கை நிலநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்டவிரோதக் கொலைகளைச் செய்கிறது.

போராட்டப் பகுதிகளின் பாகாப்பைக் காரணம்காட்டி, குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும், அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் மாறிவிட்டன. நெருக்கடி நிலையில் மக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறிய்தையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது. 1996 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984&95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவம் இதுநடள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக்கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துகளையும் போலீசார் சூறையாடினர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெரும்தொகைகள் பறிக்கப்பட்டன.’’


பிரபஞ்சன் : ‘‘ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்வது குற்றம் என்றால், அது அரசாங்கம் செய்தாலும் குற்றம்தான், இன்று ஊடகங்களில் கொலைசெய்யப்படுவதை ஆதிரிப்பதாக காட்சிகள் அமக்கப்படுகிறது. ‘வேட்டையாடு விளையாடு’ என்றொரு படம். வேட்டையாடு என்றால் சுட்டுவிடு என்று அர்த்தம். இப்படத்தின் ஒரு பாடலில் ஏறக்குறய 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

திருச்சி அருகே நடந்த உண்மை சம்பவம் ஒன்று. சந்தேக வழக்கில் செருப்பு தைக்கும் தொழிலாளியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தன் கணவனக் காண காவல் நிலையம் சென்ற மனைவி காவல் ஆய்வாளரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். இந்தப் பாதிப்பினால் சுயநினைவு திரும்பாமல் 4 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதன்பின்புதான் கருவுற்றிருப்பது தெரிகிறது. குழந்தை பிறந்து, 5 ஆண்டுகள் கழித்து பத்திரிக்கயாளர்கள் அந்தத் தொழிலாளியிடமும், மனவியிடமும், ‘‘‘நீங்கள் இந்தக் குழந்தயை மனப்பூர்வமாக ஏற்று வளர்க்கிறீர்களா?’’ என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘‘யாரோ ஒருவர் செய்த பாவத்துக்கு இந்தக் குழந்ததை என்னங்க செய்யும். குழநதை குழந்தைதானே.’’ என்று பதில் சொல்லியுள்ளனர். இத்தகைய போலீசார்களைத்தான் ‘மக்களின் நண்பர்கள்’ என்று சொல்கிறது அரசாங்கம். நண்பர்கள் என்றால் மனிதர்களாக இருக்கவேண்டும். போலீசார்கள் மனிதர்களாக ஆகாத வரை அவர்களை நண்பர்களாக ஏற்க இயலாது.’’

கோ.சுகுமாறன் : ‘‘இந்தியா முழுவம் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரனை என்ற பெயரில் அவர்களுடய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது. ஆனால் இன்று குஜராத்திலும், மும்பயிலும் ‘தாதா’க்களை கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு ‘தாதா’ குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு ‘தாதா’ குழுவில் உள்ளவர்களை சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்குகளை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 27 பேர் ‘போலிமோதல்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.


இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடந்து முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரிக்ககளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்துகள் உருவாக்கப்படுகிறது. இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்கொண்டிருக்கின்றது.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைது செய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்படுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்வதுதில்லை. நீதித்துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.’’


பேராசிரியர் சரஸ்வதி : ‘‘இத்தனையாண்டு கால சுதந்திரம் நமக்கு எதை தந்திருக்கிறது என்று சொன்னால், அனவரும் மறுப்பில்லாமல் ஒரே குரலில் சொல்வீர்கள், போலீசார் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுட்டுக்கொல்வதற்கு உரிய ஜனநாயக்த்ட்தை தந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு தொல்லை தருபவர்களாக இருப்பதாக நினைப்பவர்களை சுட்டுக் கொலை செய்வதுதான் - இன்றைக்கு போலீசாரின் பணியாக இருக்கின்றது. போலீசாரின் இந்த ‘போலி மோதல்’ என்கிற படுகொலையின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு ‘சிவில் சொசைட்டி’ என்கிற இந்தக் குடிமைச் சமுதாயத்தின் மெத்தனப்போக்குதான் காரணம்.’’


சுரேஷ் : ‘‘இதே சூலை மாதம் 11 ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு, மும்பயில் ரமாபாய் குடியிருப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சிலையருகில் கூடுகிறார்கள். அங்கு வந்த மும்பை போலீசார் கண்மூடித்தனமாக சுட்டு 10 தலித்துகள் கொலைசெய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அரசாங்கம் அந்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இத்துடன் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அந்த வழக்கு விசாரனக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.

போலி மோதலுக்கு எந்தச் சட்டத்திலும் இல்லை ஆனாலும் காவல்துறை மோதல் கொலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் தன்னைப் பாதுக்காப்பதற்காக கொலை செய்யலாம் என ஒரு பிரிவு உள்ளது. அப்படி செய்தாலும் கூட அது சரியா? தவறா? என்பதை நீதிமன்றம்தான் சொல்லவேண்டும். தற்போது போலீசாரிடிமிருந்த விசாரனைத் திறமைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே விசாரனை சித்திரவதைதான். விசாரனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை ஒழித்துவிடுகின்றனர்.போலீசாரின் இந்த மோதல் படுகொலைகள் அதிகமாகி வருவதற்கு முக்கியக் காரணம், சட்டத்தின் ஆட்சியைப் போலீசார் நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக, தாங்கள் செய்கிற தவறுகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி தப்பித்ட்துக்கொள்ள நினைக்கிறார்கள்.’‘

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : ‘‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளில் தொடர்புடைய காவல் துறையினர் அனைவர் மீதும் - உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். போலி மோதல் கொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு, வெகுமதி போன்றவற்றை உடனே திரும்பப் பெறவேண்டும். போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். போலி மோதல் கொலையை தடுக்க, அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து மனித உரிமகளை காத்திட வேண்டும்.’’

நன்றி : தலித்முரசு ஆகஸ்ட் 2007

Thursday, August 2, 2007

''ஈழப் போர்ச்சூழல் சாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை'' பேராசிரியர் சி.ஜெய்சங்கர் நேர்காணல்

சந்திப்பு : இரா.முருகப்பன்.

சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ''மூன்றாவது கண்'' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். 'மூன்றாவது கண்' என தமிழிலும்,'தேர்ட் ஐ' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்பாணம் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம்&யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களை தனது முதன்மைக் ஆசானாக கருதும் இவர், யாழ்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் ‘தலித்முரசுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி.

ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடகில் யாழ்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கிறது?

உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையேயும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு இடையேயும் ஒத்துபோகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்ற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டகளப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் காணமுடியும். அதே போல் யாழ்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களை காணமுடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூகப், பொருளாதார நிலைமைகள்தான்.

ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டகளப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்த படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எழுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வும், குறிப்பாக தமிழ்மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கின்றது. இந்த இடப்பெயர்வு அந்த மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம்.

அரசியல் மொழியில் சொன்னால் வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக- பண்பாட்டு-பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இது எங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

வரலாற்றுக்காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது. போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமமாக பாதிக்கப்படுவர்கள் பெண்கள்தான். குடும்பச்சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையை புரிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடதுதுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதை காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.

ஒரு சமூக விடுதலை என்பது அனைத்துவகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கவேண்டும். ஒவ்வொன்றாக தனிதனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில்,இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில்,சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தபடுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்படவேண்டியுள்ளது.

இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொன்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படுகிறது. இது இரட்டிப்பு பாதகமான நிலையாக காணப்படுகின்றது. சிறுவர்கள் காண்கின்ற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காண்ப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான நிலை.

ஏவுகனைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களை ஒரு போராளிகளாக நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்கமுடியாது. மேலும் இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில் வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாக போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால்,தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள், அதிகார மையங்கள் மத்தியில், சுற்றுலா மையங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது இணையதளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.

சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான விடயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் விடயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கௌரவமான கட்டியகாரன் போல அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கௌரமாகவே பணியாற்றுவது யதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கௌரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினயில்லை. அது நல்லதுதான். ஆனால் அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்கமாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?

எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாக பயன்படுதப்படுகின்றது. குறிப்பாக விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள் அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது இன்று மேலோங்கியுள்ளது.

கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன. எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலை வெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருக்கிறது. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடைநாடகங்களாக பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. புலிகள் வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன். மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.

மூன்றாவது கண் என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?

எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்பு, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைகும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.

இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள் மூளைச்சலவை செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது மக்களுக்கு இன்றுள்ள யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படவும், சிந்திப்பதுமே மூன்றாவது கண் நோக்கம்.

இதற்காக அறிவுத்தளதில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன. அல்லது வியாபாரத்தை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுபட்டு இயங்குகின்றன.

தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைபின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக்கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மேலும் இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாராணம் சொல்கிறேன். பல்கலைகழக உயர்கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம், கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து ; அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை மேலும் நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித்துறையில் கற்பிக்கும் பணியை செய்துவருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான், மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?

காலனித்துவ கல்விமுறையால் இன்றைய யதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம் இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்றிறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்விசார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக்கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும், தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், படைப்பாற்றல்கள் வெளிபடவும் கூடியக் கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்’ணின் நோக்கம்.

(தொடரும்)

நன்றி: தலித் முரசு ஜூலை 2007