Thursday, May 16, 2013

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு 100 இல்லை 110 வழி - தீர்வு - கிடைக்குமா?


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மேனிலைப் பள்ளியில் கடந்த 2012 மார்ச் மாதம் 12 -ம் வகுப்பு படித்த தலித் மாணவி. சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  அதே பள்ளியின் கணித  ஆசிரியர் சங்கர்  /பெ நாராயணன் இடம் கணிதப் பாடத்திற்கு தனிப்படிப்பு சென்றுள்ளார்.  இவர் திருமணமாகி  ஒரு ஆண் குழந்தை உள்ளது.  அவரது மனைவி உமா அரசுப் பள்ளியில் பட்ட்தாரி  ஆசிரியராக உள்ளார். ஆனால், கணக்குப் பாட்த்திற்கு தனிப்பயிற்சி சென்ற மாணவியை சாந்தியை, ஆசிரியர் சங்கர், காதலிப்பதாகவும்,  திருமணம் செய்துகொள்வதாகவும் பேசி, ஆசை வார்த்தைக்கூறி கட்டாயப்படுத்தி, அவரது வீட்டில் அவரது மனைவி இல்லாதநேரத்தில்  உடலுறவுக்கு உட்படுத்தி 5 முறை கருகலைப்பு செய்துள்ளார்.   தேர்வு முடிந்து, முடிவுகள் வந்தபிறகு 04.05.2012 அன்று  மாணவி சாந்தியை,  மேல்மருவத்தூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.  முறையற்ற வகையில் சட்டவிரோதமாக திருமணம் செய்துகொண்ட மாணவியை மறுநாள் 05.05.2012 அன்று சங்கர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பலருக்கும் தகவல் தெரிந்து அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சசி முன்னிலையில் பஞ்சாயத்து (பேச்சுவார்த்தை) நடக்கின்றது.  அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு ஒப்பந்தப் பத்திரம் உருவாக்குகின்றார் தலைமை ஆசிரியர். பள்ளியில் மாணவியை, மைனர் குழந்தையை சட்டவிரோதமாக, சமூக விரோதமாக திருமணம் செய்த, ஓராண்டு காலமாக வீட்டில் வைத்து தொடர்ந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், சாந்தியை ‘’நன்றாக வைத்து குடும்பம் நடத்தும்படி” 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு மாணவி சாந்தியை, ஆசிரியர் சங்கருடன் (ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை உள்ள) குடும்பம் நடத்த அனுப்புகின்றார்.  
வீட்டிற்குச் சென்ற சங்கருக்கும், அவரது குழந்தை மணைவி சாந்திக்கும்  ஆசிரியையாக உள்ள மனைவி உமா மற்றும் சங்கரின் அம்மா இருவரும் கடும் வரவேற்பு அளித்துள்ளனர். அதாவது, மாணவி சாந்தியை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்து, சாதி சொல்லி இழிவுப்படுத்தி வீட்டைவிட்டு தெருவில் தள்ளி கதவைச் சாத்தியுள்ளனர்.  அதன்பிறகு 10.05.2012 அன்று களிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிhpவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களில் அவர் பிணையில் வந்தார். அவரது மனைவி உமா கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முன்பினை கிடையாது. ஆனால் ஏதோ ஒரு வழியில் பிணைபெற்று தொடர்ந்து இன்று வரை ஆசிரியராக பணியாற்றுகின்றார்.  
இந்நிலையில் மேற்படி ஆசிரியர் சங்கர்  பலமுறை தொலைபேசியிலும், நேரிலும் வேறு ஆசிரியர்கள் மூலமும், பல்வேறு வகையிலும் மாணவி சாந்தியின் பெற்றோரிடம்  சமதானம் பேச முயன்றார். வழக்கை  திரும்பப் பெறச்சொல்லி தொடர்ந்து  நேரிலும் வந்துன் கட்டாயப்படுத்துவது, தொல்லைகொடுப்பது, மறைமுகமாக அச்சுறுத்துவது போன்று அனைத்து செயல்பாடுகளையும் செய்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தபிறகு பெற்றோரிடம் முயற்சிப்பதை விட்டுவிடுகிறார் ஆசிரியர் சங்கர். நேரடியாக மீண்டும் மாணவி சாந்தியை சரிசெய்கின்றார். என்ன ஆசை வார்த்தைக் கூறினார். என்ன நாடகம் நடத்தினார் எனத் தெரியவில்லை. மீண்டும் ஆசிரியர் சங்கர்-மாணவி சாந்தி பழையபடி உறவு தொடர்ந்துள்ளது. தெரிந்த பெற்றோர் கல்லூரியில் சாந்தியை அழைத்துச் சென்று வீட்டோடு தங்கவைத்துள்ளனர்.
ஆனாலும், எப்படியோ கடந்த 02.05.2013 அன்று இரவு சங்கர் என் மாணவியை சாந்தியை அழைத்து சென்றுவிட்டார். மகளைக் காணவில்லை என தாயார் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகத்துடன் சங்கருடன் பேசிய மகளிர் போலீசாரிடம் சாந்தி தன்னுடன் உள்ளதாக கூறியுள்ளார். அழைத்துவருமாறு கூறியதற்கு சாந்தி விருப்பத்துடன் வந்தோம் எனக்கூறி வர மறுத்துள்ளார். உனது மனைவியிடம் புகார் பெற்று வழக்கு பதிவோம் என்று போலீசார் கூறியபிறகு  மறுநாள் 04.03.2012 அன்று உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பெண் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சாந்தியை பெற்றோருடனும், சங்கரை அவர் வீட்டிக்கும் அனுப்பி வைக்க முயன்றனர். அப்பொது பெண் போலீசாரிடம், பெண்ணின் தாயார் புகார் மற்றும் சி.எஸ்.ஆர் உள்ளது. சங்கரிடம் அழைத்துச் சென்றதை எழுதி வாங்குங்கள் என்று கூறினோம். விழித்துகொண்ட பெண் போலீசார் சங்கரிடம் எழுதிக் கேட்டனர். போலீசார் எப்படியெல்லாம் கேட்டும் இறுதிவரை சாந்தியை தான் அழைத்துச் சென்றதாக எழுதிக்கொடுக்கவில்லை. கேட்காமலேயே சாந்தி தன் விருப்பத்துடன் போனதாக எழுதிக்கொடுத்தார். ஆனாலும் சங்கர் முறைப்படி எதுவும் எழுதவில்லை. நாமும் டி.எஸ்.பியிடம் தொலைபேசியில் முறையிட்டோம். பெண் போலீசாரும் டி.எஸ்.பியிடம் ஆலோசனை பெற்றனர். அவர் அறிவுறுத்தலின் பேரில், சாந்தியின் தாயார் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அழைத்துசென்றனர்.
பல விசித்திரமான வழக்குகளைப் பார்த்த நீதிமன்ற என்று திரைப்படம் வசனம் ஒன்று நினைவுக்கு வந்த்து. நீதிமன்ற கலாட்டாவை நினைத்தால். போலீசார் எவ்வளவோ பரவாயில்லை சட்டத்தின்படி நடக்க முயற்சிக்கின்றார்கள் என்றாகிவிடுகின்றது. நீதித்துறை நடுவர் சாந்தியிடம் யாருடன் போக விருப்பம் என்கிறார். சங்கருடன் போகின்றேன் என்று சொன்னதும் தாராள மனதுடன் சங்கருடன் போகுமாறு கூறி அனுப்புகின்றார். அப்போது நாம் நீதித்துறை நடுவரிடம் சங்கர் ஏற்கனவே திருமணமாணவர், குழந்தை உள்ளது, தன்னிடம் படித்த இந்த மாணவியை மைனர் திருமணம் செய்த எஸ்.சி/எஸ்.டி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ளது, இவர் தற்போது பெயிலில் உள்ளார் என்று முறையிட்டோம். உடனே அவர் சுதாரித்துகொண்டு இருவரையும் வீட்டிற்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு யாரிடமோ ஆலோசனை கேட்டார். (அனேகமாக விழுப்புரம் மாவட்ட நீதிபதியாக இருக்கலாம்).  அதன்பிறகு சங்கரை விடுவித்து, பாதிக்கப்பட்ட சாந்தியை விழுப்புரத்தில் உள்ள கலைசெல்வி கருணாலாயா இல்லத்தில்  வைக்க உத்திரவிட்டுள்ளார்.
·               ஆசிரியர் சங்கர் தனது ஆசிரியர் பணியினை தக்கை வைத்துக் கொள்வதற்கும் வழக்கினை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்வதற்குமான அனைத்து வழிகளிலும்  அனைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.  அதன் தொடர்ச்சியாகத்தான் சாந்தியின்  விருப்பதுடன் அனைத்தும் நடக்கின்றது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார். ஏற்கனவே அரசுப் பள்ளி பெண் ஆசிரியரை திருமணம் செய்துகொண்டு, குழந்தையுடன் உள்ள ஒரு ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, 5 முறை கருவை கலைத்து, மைனர் மாணவியான சாந்தியை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி, சட்டவிரோதமாக திருமணம் செய்தார். இவ்வழக்கில் கைது செய்யபட்ட சில நாட்களில் பிணையில் வந்து தொடர்ந்து மேற்கூறியபடி சாட்சிகளை களைப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை செய்துவருகின்றார்.  இப்போது மீண்டும் சாந்தியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்கின்றார். கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமூத்திற்கும் அவமானத்தையும், இழிபெயரையும் தேடித்தருவதுடன், தன்னிடம் படிக்க வந்த சிறு வயது மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் மேற்படி ஆசிரியர் சங்கர் பிணை மனுவை ரத்து செய்து, அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து, னது மகளை காப்பாற்றுமாறு வேண்டுகின்றேன் என்று சாந்தியின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமும் நேரடியாக புகார் அளித்தும் இருவரும் மிக அலட்சியமாக ‘’உங்க பொண்ணு அப்ப மைனர். ஆனா இப்ப மேஜர். நாங்க என்ன செய்யமுடியும்” என்று கூறுகின்றனர். சங்கரை தங்களது மனசாட்சியின் படி எதுவும் செய்யமுடியாமல்தான் சட்டத்தின் வழியினை நாடி நடவடிக்கை கோருகின்றார் சாந்தியின் தாயார். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கைவிரிக்கின்றனர். ஒரு பேச்சுக்காக பார்ப்போம். இப்போது சாந்தி மட்டும் ஒரு ஆதிக்கச் சாதி சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், ஆசிரியர் சங்கரை ஒரு கூலிப்படை தேடியிருக்கும், அல்லது சாந்தியின் உறவினர்கள் முடித்திருப்பார்கள். இதுபோன்று சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் நீதிகிடைக்கவில்லை, கிடைக்காது, தேவையில்லை எனும்போதுதான் நடக்கின்றன.
·         மைனர் மாணவியை ஆசிரியர் சங்கர் குழந்தைத் திருமணம் செய்த, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு தற்பொழுது விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் மாணவி சாந்தி சம்மதத்துடன் அனைத்தும் நடப்பதாக நீதிமன்றத்தை நம்ப வைத்து, தண்டனையில் இருந்து தப்பிக்க முயல்கிறாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது. ஏனென்றால் மாணவி சாந்தியும் கண்மூடித்தனமாக சங்கர் சொல்வது பேசுவது செய்வது எல்லாம் நல்லது-நன்மைக்கே என்று நம்புகின்றார். இப்போது விழுப்புரம்  கலைசெல்வி கருணாலாயா இல்லத்தில் உள்ள சாந்தியை அவரது தாயாரால் சுலபமாக சந்திக்கமுடிவதில்லை. மீறிசென்றாலும், அங்குள்ள பொறுப்பாளர் சாந்தியின் தாயாரை திட்டுவதும், அவமானப்படுத்தும், கேவலப்படுத்துவமாக இருக்கின்றார். ஆனால் ஆசிரியர் சங்கர் எவ்வித தடையுமின்றி நினைத்த நேரத்தில் சந்க்கின்றார்.  “என் மகளின் வாழ்க்கை பாழானதுடன் இல்லாமல், இவர்  மீண்டும் ஆசிரியர் பணிக்கு வந்தால் பைரவியைப் போல் இன்னும் பல சிறு மாணவிகள்-குழந்தைகள் வாழ்க்கை சீரழியும் எனவே ஆசிரியர் சங்கர் உடனடியாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிணை ரத்து செய்யப்படவேண்டும்” என்று சாந்தியின் தாயார் கூறுகின்றார்.  
·         மேற்படி சங்கரின்  மனைவியும், ஆசிரியருமான உமா அவர்கள் மீதும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவர் மீது துறை ரீதியான  நடவடிக்கை எதுவும் எடுகப்படவில்லை. மேலும் வழக்கினை இல்லாமல் ஆக்குவதற்கு அவர் கணவர் ஆசிரியருமான சங்கர் செய்கின்ற அனைத்து குற்றச் செயல்பாடுகளுக்கும் உமா உடந்தையாக இருந்து வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.  
·         தன்னிடம் பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, 5 முறை கருவைக் கலைத்து, ஏமாற்றி குழந்தைத் திருமணம் செய்துகொண்ட ஆசிரிர் சங்கரின் சட்டவிரோத செயலைக்க கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி, பள்ளி +2 மாணவியை பள்ளி ஆசிரியருடன் (அவர் ஏற்கனவே திருமணமானவர் எனத்தெரிந்தும்) குடும்பம் நடத்த அனுப்பி வைத்த அப்போதைய தலைமை ஆசிரிர் சசி அவர்களின் இந்த கட்டப்பஞ்சாயத்து குறித்து கல்வித்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. படித்த சான்றிதழ்கள் மட்டுமே தலைமை ஆசிரியர் பணிக்குப் போதுமென்று கல்வி துறையும், அரசும் செயல்படுகின்றது.
·         சங்கரின் பிணை மனுவை ரத்து செய்யவும் முடியவில்லை. நீதிமன்றங்கள் முடியவில்லை. துறை ரீதியாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகிறார். மேஜர் ஆன பெண் விருப்பத்தில் நாங்கல் என்ன செய்யமுடியும் என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
·         பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியரின் படிப்புச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெறும் காகித்தோடு கிடக்கின்றது. அவருக்கு எப்படி நினைவுபடுத்துவது. ஏதேனும் 100 வழிகள் இல்லையில்லை 110 வழிகள் உள்ளதா? 

No comments: