Saturday, October 31, 2009

தலித் வழக்கறிஞரைத் தாக்கிய திண்டிவனம் போலீஸ்


வழக்கறிஞர் மு.பூபால்

திண்டிவனம் உரோசனையைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.பூபால், சென்னை உயர்நீதி மன்றத்தில், அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக இரண்டரை ஆண்டு பணியாற்றியவர். சொந்த ஊரில், சட்டப் பணியாற்றுவதற்காக திண்டிவனம் திரும்பி, கடந்த 4 ஆண்டுகாலமாக சிறந்த முறையில் வழக்கறிஞராக செயலாற்றி வருகிறார். பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு புகார் எழுதுவது, வழக்கு பதிவு செய்ய காவலதிகாரிகளுடன் உரையாடுவது உள்ளிட்ட மனித உரிமைப் பணியினையும் செய்துவருகிறார். திண்டிவனம் நகர மன்றத்தின் உறுப்பினராக 3-வது வார்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளராகவும் உள்ளார். சட்டவிரோதக் காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட தலித் இளைஞர்களைப் பார்க்க ரோசனை காவல் நிலையம் சென்ற இவரைத்தான், கடந்த 18.10.09 தலைமைக் காவலர் சுப்பையா தாக்கினார்.
ரோசனை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம்.

கடந்த 18.10.09, ஞாயிற்றுகிழமை, பகல் 1&30 மணியளவில், ரோசனையைச் சேர்ந்த ராசேந்திரன் என்பவர் தெள்ளார் போகும்போது, ஊரல் கிராமத்தில் இருசக்கர வாகனத்தை, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ இடிச்சிருக்கு. விபத்து தகவல் கிடைச்சு, ரோசனையில் இருந்து ராசேந்திரனின் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் வண்டியை சரி செய்து கொடுப்பதாக சொல்லியுள்ளார். அந்த நேரத்தில், சம்பவ இடத்திற்குச் சென்ற ரோசனை போலீசார், ரோசனை இளைஞர்களை மட்டும் கடுமையாக லத்தியால் அடித்து, ஜீப்பில் தூக்கிபோட்டு காவல் நிலையம் கொண்டு சென்று, சட்டவிரோதக் காவலில் அடைத்து, தொடர்ந்து அடித்துள்ளனர். சாதி சொல்லி தாக்கியுள்ளனர். வீட்டுப் பெண்களை இழிவு செய்து உதவிஆய்வாளர் நாகரத்தினம் கேவலமாக பேசியுள்ளார்.தகவல் அறிந்த வழக்கறிஞர் மு.பூபால், இளைஞர்களைப் பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், இளைஞர்களை போலீசார் அடித்துக்கொண்டிருந்துள்ளனர். ஆய்வாளரிடம் பூபால், ‘‘எதுக்குசார் பசங்கள இப்படி போட்டு அடிகிறீங்க’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘ஊர்காரங்க புகார் கொடுத்தா நாங்க விசாரிக்கக்கூடாதா’’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து பூபால், ‘‘விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்லமாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தம் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம் இப்படி வச்சி அடிச்சிங்கின்னா என்னா அர்த்தம். காலன்காறங்கன்றதாலதானே நீங்க இப்படி வச்சி அடிக்கிறீங்க.’’ என்று கூறியுள்ளார். அதற்கு ஆய்வாளர் எதுவும் பதில் சொல்லாத நிலையில் பூபால், ‘‘நான் எஸ்.பி&க்கு புகார் எழுதிட்டு அப்புறம் பேசிக்கிறேன். இல்லன்னா கட்சிக்காரங்கள் கூப்பிட்டு சாலை மறியல்தான் செய்யனும்‘‘ என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் செல்லத் திரும்பியுள்ளார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஏட்டு சுப்பையா என்பவர் எழுந்து, ‘‘ஓத்தா நீ என்னா பெரிய மயிறா. சாலை மறியல் செஞ்சி, புகார் எழுதிடுவியா’’ என்று கூறியபடி வழக்கறிஞர் பூபாலை கண்ணத்தில் ஓங்கி அடித்துள்ளார். தகவல் அறிந்து, ரோசனைபகுதி மக்கள் சுமார் 300 பேர் காவல் நிலையம் அருகில் கூடியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதைக்கு ஆளான 10 இளைஞர்களையும் போலீசார் விடுவித்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துகொண்டு, மீண்டும் காவல் நிலையம் திரும்பியுள்ளனர். விசாரனைக்கு டி.எஸ்.பி அவர்களிடம், தான் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பூபால் தனிப்புகாரும், சித்திரவதைக்கு ஆளான இளைஞர்கள் தனிப்புகாரும் அளித்தனர். பூபால் புகாருக்கு மட்டும் மனு ஏற்புச்சான்று அளித்தார்கள். தாக்கிய தலைமைக் காவல் சுப்பையா மீது இதுவரை வழக்கும் பதியப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்பட்டாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
மு.பூபால் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்

தலித்துகளுக்காக மட்டும் அல்லாமல், பல்வேறு கிராமங்களில் பாதிக்கப்படும் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், பழங்குடி இருளர்களுக்காகவும், தொடர்ந்து ஆதரவாக உதவி வருகின்றார். ஆசாரி சமூகத்தைச் சார்ந்த முருங்கம்பாக்கம் ஆட்டோ ஓட்டுனர் கணேசன் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதை மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்துச்சென்றார். பூதேரி கலா உயிரோடு எரித்து கொலை செய்யமுயற்சித்த சம்பவம், அதற்கு சாட்சியாகவும் ஆதரவாகவும் இருந்ததற்காக லட்சுமி தொடர்ந்து சமூகவிரோத சக்திகளாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஒங்கூர்&கரிக்கம்பட்டைச் சேர்ந்த 10 வயது காயத்திரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளி கைது செய்ய காரணமாக இருந்தார். மாணவர் பருவத்திலேயே, 1997&ஆம் ஆண்டு திண்டிவனம் கீழ்அருங்குணம் கிராமத்தில் நிகழ்ந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டிருந்த தலித்துகளை பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்ற இவரும் கைதுசெய்யப்பட்டு, 57 நாட்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை முகப்பேரில் கட்டிடத் தொழிலாளியின் மகளை காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மேலும், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களின் அத்துமீறல் சம்பவங்களை கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றியுள்ளார். அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியுள்ளார். 1998&ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும்போதே, செய்யார் காவல் நிலையத்தில் மரணமான, பெருங்களத்தூர் மோகன் என்பவர் இறந்துபோன சம்பத்திற்கு சி.பி.ஐ விசாரனைகோரி வழக்கறிஞர் பொ.ரத்தினத்துடன் இணைந்து பணியாற்றினார். மேலும், புதுசேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அத்தியூர் விஜயா வழக்கு, செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல்வன் கொடுமைக்கு ஆளான ரீட்டாமேரி வழக்கு போன்றவறிலும் பணியாற்றினார்.

உச்சநீதி மன்றத்தில் மனு

1996-ஆம் ஆண்டு மதுரை மேலவளவு கிராமத்தின் தலித் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அண்மையில் உச்சநீதிமன்றம் 17 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது. இவ்வழக்கில் 12 வழக்கறிஞர்களுடன் இணைந்து, திண்டிவனம் வழக்கறிஞர் நமது பூபாலும் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் பூபாலின் கல்விப்பணி

கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ரோசனையின் கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்காக 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். ரோசனையில் நடைபெறும் தாய்த் தமிழ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளியின் வளர்ச்சியில் இவருடைய பங்கு மகத்தானது ஆகும். அரசின் உதவியில்லாத நிலையிலும், நகரமக்களின் ஆதரவோடு நடைபெறும் மதிய உணவுத் திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். நகரத்தில் நடைபெற்று வரும் கல்விச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு மற்றும் மக்கள் கல்வி கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Thursday, October 8, 2009

சாதியின் பெயரால் படுகொலை செய்யும் சமுதாயம்.


சாதியின் பெயரால்

படுகொலை செய்யும் சமுதாயம்.


வண்டிப்பாளையம் கிராமம். திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஒன்றியம், நடுகுப்பம் ஊராட்சியில் உள்ளது. 30 தலித் குடும்பங்களும், சுமார் 300&க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களான வன்னியர், நாயுடு, ஆசாரி, செட்டியார் போன்ற சாதியைச் சேர்ந்தவர்களின் குடும்பம் உள்ளது. விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாக கொண்டுள்ள கிராமம். இரட்டை குவளை முறை உள்ளிட்ட தீண்டாமையை கடைபிடிக்கும் கிராமம்.
சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இரு சமூகத்தினருக்கும் தனித்தனி சுடுகாடு என்றாலும், இறுதி ஊர்வலம் கிராமத்திலுள்ள ஓடை வழியாக ஒரே பாதையில் சென்றுகொண்டிருந்துள்ளது. ஊராட்சிகள் வலுப்பெறத் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகள் உருவாக்கப்பட்டதும், சாதி இந்துக்கள் புதிய சாலை வழியாக பிணம் தூக்கிச்சென்றார்கள். தலித்துகள் மட்டும் அந்த பழைய ஓடை வழியிலேயே கொண்டு சென்றார்கள். இந்தவழி, காலப்போக்கில் சுருங்கி, ஓடை ஒத்தையடி பாதையாய் மாறியது. இருபக்கமும் முட்செடிகள் வளர்ந்து பாதையை மேலும் குறுகலாக்கியிருந்தது. சாதாரணமாக இருவர் நடந்துசென்றாலே ஒருவர் பின் ஒருவராக குனிந்து செல்லவேண்டிய நிலையில்தான் உள்ளது அந்த வழி.


15.09.09

14-09-09 அன்று மேற்படி வண்டிபாளையம் கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி(26) என்பவர் இறந்துள்ளார். அவரின் இறுதி ஊர்வலத்தை, ஓடைபாதையில் செல்ல வழியில்லை என்பதால், சாலை வழியாக கொண்டு செல்வது என்று தீர்மானித்து, 15-09-09 அன்று காலை 10-30 மணியளவில் வீட்டிலிருந்து சடலத்தை தூக்கிக்கொண்டு, தலித் குடியிருப்பை தாண்டினர். அப்போது அங்கு கூட்டமாக வந்த சாதி இந்துக்கள் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, ‘‘இந்த வழியே போகக்கூடாது, ஓடைவழியா போங்க எனக்கூறி’’ பாதையில் முட்களையும், கற்களையும், மரங்களையும் போட்டுத்தடுத்து, ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித்துகள் தொடர்ந்து பிணத்தை தூக்கிச்செல்ல வழியில்லாமல் நடுசாலையில் இறக்கிவைத்தனர்.
தகவல் அறிந்து 11.30 மணிக்கு, சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய கண்காணிப்பு குழுவினர், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அறிவித்து தலையீடு செய்த்காவல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாதி இந்துக்கள் வழிவிட மறுத்தார்கள். தலித் பெரியவர் ஒருவர், மிகுந்த வேதனையுடன், ‘‘ரெண்டு பேரும் ஒரே வழியில போனோம். திடீர்னு நீங்க மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச்சொல்ற’’ என்று கேட்டார். எவரும் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வட்டாட்சியர், ஊழியர்கள் மூலம் ஊர்வலப்பாதையின் வழியில் போடப்பட்டிருந்த மரம், கற்கள், முட்செடிகளை அப்புறப்படுத்தி, ஊர்வலத்தை நடத்தினார். பொது வழியாக பிணம் சென்றது.
இந்த வன்கொடுமையினை, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த பரந்தாமன் (எ) மோகன் த/பெ லிங்குசாமி நாயுடு என்பவர் தலைமையில், குப்புசாமி, வெங்கடேசன், சுந்தர், எட்டியப்பன், ரவி, செல்வம் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கூட்டாக நிகழ்த்தினர்.


04.10.09, ஞாயிற்றுகிழமை.
• 02.10.09 வெள்ளிக்கிழமை முதலே தலித்துகளுக்கு ஊரில் இருந்த கடைகளில் பொருட்கள் தர மறுத்துள்ளார்கள். குடிதண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. மணி, நாகராஜ் என்கிற இரு தலித்துகளின் கிணற்றில் இருந்த மின்மோட்டார்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 04.10.09 அன்று காலை மரக்காணம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர் தலித்துகள். ஆய்வாளர் மாலை விசாரிப்பதற்காக வரச்சொன்ன நிலையில், மீண்டும் மாலை 5&00 மணியளவில் காவல் நிலையம் சென்றுள்ளனர். • அன்று மாலை 6 மணியளவில், கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜா தனது, கோழிபண்ணை எரிவதரிந்து உடன் இருவரை அழைத்துக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது அங்கு சாதி இந்துக்களான பரந்தாமன் உள்ளிட்ட சுமார் 30 பேர் நின்றிருந்துள்ளனர். ராஜாவின் 300 அடி நீள கோழிபண்ணை எரிந்துகொண்டிருந்த நிலையில் கொளுத்திய சாதி இந்துக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களே, அருகே இருந்த சாதி இந்துவான அய்யனார் என்பவரின் கோழிபண்ணைக்கும் தீ வைத்துள்ளனர். • உடனடியாக ராஜா, விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். போலீசாரிடம் உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியினை ஊருக்கு அனுப்பியுள்ளனர். ஊருக்குள் சென்ற வண்டியினை வழிமறித்த சாதி இந்துக்கள் அய்யனாரின் கோழிப்பண்ணையை அணைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ராஜா, ‘‘என்னுடைய பண்ணை அதிகமாக எரியுது, நான்தானே போன் செஞ்சி வரவழைச்சேன் என்னுடையதை முதலி அணைங்க’’ என்று கூறியுள்ளார். ஆனாலும், ஊர்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக அய்யனாரின் பண்ணையில் தண்ணீர் அடிக்கத்தொடங்கியுள்ளனர். • அப்போது ‘‘ஏன் இந்தமாதிரி பண்ணையை கொளுத்திட்டு, சொத்த அழிக்கிறீங்க’’ என்று கூறிய ராஜாவை அங்கிருந்த சாதி இந்துக்கள் கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். ராஜாவின் உடன் சென்ற இருவரும் உயிர்பயத்தில் ஓடிச்சென்றுள்ளனர். மீண்டும் அடிப்பட்ட நிலையில் ராஜாவும் ஓடமுயன்ற நிலையில், கைலி தடுக்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ராஜாவை சாதி இந்துக்கள் அனைவரும் கூடி நின்று கட்டை, கல், கழி போன்றவற்றால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெரிய கல்லை தூக்கிப்போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். ராஜாவின் முகம் முழுவதும் சிதைந்துள்ளது. சாதி இந்துக்களின் தொடர் தாக்குதலில் ராஜா மயக்கமடைந்துள்ளார். • அதன்பிறகு சாதி இந்துக்களின் வன்முறைக்கும்பல் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ராஜாவைப்போன்று தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தலித்துகள் இரவோடு இரவாக தங்கள் குடியிருப்பைவிட்டு வெளியேறினர். • பேச்சில்லாமல் கிடந்த ராஜாவைக் காப்பாற்ற, ஆம்புலன்சிற்கு போன்செய்துள்ளனர். வந்த ஆம்புலன்சை வழிமறித்த சாதி இந்துக்கள் தங்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தி, மிரட்டி எடுத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகு தகவல்சொல்லி, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கும்போது, ராஜா இறந்துவிட்டிருந்தார்.
05.10.09, திங்கட்கிழமை

இறந்துபோன ராஜாவின் உடலருகே, ராஜாவின் குடும்பத்தினரை தவிர உள்ளூர் தலித்துகள் எவருமே இல்லை. சாதி இந்துக்களின் கொடுந்தாக்குதலுக்கு பயந்து இரவே கிராமத்தைவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். • சாதி இந்துக்களால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் சுமார் 200 பேர் கிராமத்தைவிட்டு வெளியேறி, 3 நாட்களாக அருகில் உள்ள நடுகுப்பம் என்கிற கிராமத்தின் தலித் குடியிருப்பில் தங்கியுள்ளனர். அங்குள்ள தலித்துகள்தான் உணவளித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக சொந்த கிராமத்தை விட்டு, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி மிகுந்த அவலமான வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்துவருகின்றார்கள் வண்டிபாளையம் தலித்துகள். • 06.10.09 அன்று காலை வீட்டில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளை பார்த்துவர கிராமத்திற்கு சென்ற தலித் பெண்களை, சாதி இந்துப்பெண்கள் வழிமறித்து, திட்டி, அவமானபடுத்தி, கிராமத்திற்குள் நுழையவிடாமல் திருப்பிஅனுப்பியுள்ளனர். • ராஜா கொலை சம்பம்தொடர்பாக 04.10.09 அன்று இரவு 8&00 மணியளவில் புகார் கொடுக்கச் சென்ற மாசிலாமணி த/பெ பெருமாள் என்பவரை, மரக்காணம் போலீசார், அய்யனார் கோழிப்பண்னையை கொளுத்தியதாக கூறி, காவல் நிலையத்திலேயே உட்கார வைத்திருந்துள்ளனர். புகார் கொடுக்கச்சென்றவர் திரும்பிவரவில்லை என்பதால், மறுநாள் 05.10.09 அன்று காலை 9-00 மணியளவில் காவல் நிலையம் சென்ற தலித் இளைஞர்கள், மாசிலாமணியை போலீசார் அடைத்துவைத்திருப்பது அறிந்துள்ளனர். அதன்பிறகு போலீசார் புகாரைப்பெற்று, மாசிலாமணியை அனுப்பி வைத்துள்ளனர்.