Saturday, November 29, 2008

மண்டல் நாயகன்



1971 தேர்தலில் வெற்றிபெற்ற விஸ்வநாத் பிரதாப் சிங், அப்போது வி.பி.என்.சிங் என்று குறிப்பிடப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை மண்டா ராஜா என்று அழைத்தார்கள். அலகாபாத் அருகில் இருந்த மண்டா என்ற ஒரு பகுதியில் ராஜாராம் கோபால் சிங் என்பவரின் தத்துப்பிள்ளையாக சென்றதால் மன்னர் பரம்பரையில் சேர்ந்தார்.




முதலில் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் இணை அமைச்சராக உயர்ந்தார். சில குழுக்களில் அவருடன் இருந்தபோது, அவர் அடக்கமாகவும், தெளிவாகவும், அனைவரும் பாராட்டும் வகையிலும் பணிபுரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தூய்மையான அமைச்சராக விளங்கினார். 1997-க்குப் பிறகு அவர் உத்திரப்பிரதேச அரசியலில் ஈடுபட்டு 1980-ல் அம்மாநில முதலமைச்சரானார்.




பின்னர் 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராவின் மரணத்துக்குப் பிறகு, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தொழிதுறை அமைச்சராக இருந்து பின்னர் நிதியமைச்சரானார். வரி கொடுக்காமல் ஏமாற்றிய பெரிய முதலாளிகளின் வருமான விவரங்களை ஆராய தனி கவனம் செலுத்தி ஊழல் பெருச்சாளிகளை அடக்க அவர் முற்பட்டார். அதில் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் சிக்கினார்கள். அதனால் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. அதிலும் வி.பி.சிங் சிறிதும் தளர்ச்சியடையாமல் அதன் விவரங்களை கடுமையாக கவனிக்கத் தொடங்கினார். இதில் உண்டான மோதலில் அவர் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத நிலைமையில் 1987-ல் ஏப்ரல் 12-ல் தமது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஊழலை ஒழிக்க முற்பட்ட உயர்தர அரசியல்வாதி என அவரை மக்கள் போற்றினார்கள். போபர்ஸ் பிரச்சனை மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.




அதைத்தொடர்ந்து பிரிந்து இருந்த ஜனதா அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு பெங்களூரில் 1988 அக்டோபர் 11-ல் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினர். போபர்ஸ் ஊழலை எதிர்த்தும், அரசாங்கத்தின் அலங்கோலங்களைக் கண்டித்தும் எதிர்கட்டிகளின் உறுப்பினர்கள் 1989 ஜூலை மாதத்தில் தத்தம் மக்களவை உறுப்பினர் பதவிகளை விட்டு விலகினார்கள். அதுவரை ராஜீவ் காந்தியின் தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு சிதைந்து 1989 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்த தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி அமைச்சரவை இந்திய அரசியலில் முதன்முறையாக தலைமையில் அமைந்தது. பிரதமர் வி.பி.சிங் காலத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட பிரதிநிதித்துவங்களைத் தரும் மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் அரசானை பிறப்பிக்கப்பட்டது. இதனால் பிற்பட்ட வகுப்பினர் பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய்வர்களாக இருந்த நிலைமையை நீக்க அரசியல் முறையில் தீர்வு காணப்பட்டது.




இந்த முடிவுக்கு பலமான கண்டனமும், கிளர்சியும் எழுந்தன. அத்துடன் அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் அத்வானி எடுத்த ரத யாத்திரை மீது வி.பி.சிங் காட்டிய எதிர்ப்பினால் அமைச்சரவைக்கு ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை நீக்கிக் கொண்டது.




மக்களவையில் உள்ள ஆதரவை நிரூபிக்க 1990 நவம்பர் 9-ஆம் தேதிக்குள் நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் வி.பி.சிங் கொண்டுவர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட காரணத்தால் வி.பி.சிங் முன்கூட்டியே பதவி விலகி விடுவது நல்லது என்று சிலர் அவரிடம் கூறினார்கள். இதற்குமுன் பெரும்பான்மை பலத்தை இழந்த பிரதமர் அவையில் வந்து தோல்விபெறாமல் அதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து விலகுவது வழக்கம். ஆனால் அவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோற்கடிக்கப்படுவதாக இருந்தாலும், தாம் எடுத்த சமுதாய நீதி பற்றிய குறிக்கோளுக்காக கடைசிவரை போராட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்து மிகவும் உறுதிப்பாட்டுடன் வி.பி.சிங் பேசினார். அவையில் காங்கிரஸ் கட்சி, பாஜக உட்பட எதிர்த்தரப்பினர் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டனர்.




மண்டல் குழுவின் பரிந்துரையை வி.பி.சிங் நிறைவேற்றியதற்காக அவருடைய அமைச்சரவை வீழ்த்தப்பட்ட பிறகும், அந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திரா ஷானி பெயரில் வந்த அந்த வழக்கு ஒன்பது உச்சநீதிமன்ற நீத்பதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இரண்டாண்டு காலம் நடைபெற்றது. கடைசியாக 16-11-1992 -ல் வி.பி.சிங் போட்ட அரசாணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.




வி.பி.சிங் பிரதமராக இருந்தது 2-12-1989 முதல் 10-11-1990 வரையிலான காலம் மட்டுமே. இது கால அளவில் குறுகியது என்றாலும், இந்திய நாட்டின் சமுதாய அரசியல் வரலாற்றில் நீடித்து நிற்கும் மகத்தான சாதனையை உண்டாக்கினார். இந்த மண்டல் நாயகனின் மற்றொரு மகத்தான பணி. இலங்கையில் இருந்த இந்தியாவின் அமைதிப் படையை திரும்ப அழைத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்றிய பெரும்பணியாகும்.

Friday, November 28, 2008



திட்டுக்காட்டூர்:

ஜாதித் தீவில் தலித்துகளின் வாழ்க்கை


திட்டுக்காட்டூர் - கடலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் 19 தலித் குடும்பங்களுக்கு 1965 இல் அரசு பட்டா வழங்கியுள்ளது. 1 ஏக்கர் 32 சென்ட் நிலப்பரப்பில் 19 தலித் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். குடிசை வீட்டைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். தலித் மக்கள் குடியிருப்பின் நான்கு பக்கங்களும் வன்னியர் சமூகத்தவர்களின் வயல்களும், தோப்புகளும், நிலங்களும், வீடுகளும் சூழ்ந்துள்ளன. 19 தலித் குடும்பத்தினரும் குடியிருப்பில் இருந்து வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ அன்றாடம் பெரும் போராட்டத்தையே நிகழ்த்தி வருகிறார்கள். பொது வழியின்றி ஒரு தனித் தீவாக சிறை வாழ்க்கையை அய்ந்து தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள்.


அவசரத்தின் பொருட்டு செல்கின்ற ஓர் ஒற்றையடிப் பாதைகூட, சாதி இந்து ஒருவருக்கு சொந்தமானது. யாரேனும் ஒரு தலித் அந்த வழியாகச் சென்றால், உடனடியாக அந்த வழி வேலி போட்டு அடைக்கப்படுகிறது; பாதை மறுக்கப்படுகிறது. வயல் வரப்புகளின் வழியே நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மிக அவசரத்தின் பொருட்டு அவ்வழியே செல்கின்ற தலித் மக்கள் சாதியின் பெயரால் இழிவு செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தலித்தும் எப்படி வெளியே செல்வது, உள்ளே வருவது எனத் தெரியாமல், நாள்தோறும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தை சந்தித்து வருகிறார்கள். தங்களின் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதைக்கூட சாதி இந்துக்கள் தடை செய்துள்ளனர்.சாதி ஆதிக்கத்தால் இப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலித் குழந்தைகள் படிக்க இயலாமல்,அருகில் இருக்கும் கீழகுண்டலவாடி கிராமத்தில் உள்ள ராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் அவலநிலை நிலவுகிறது. அதுவும் சாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியே செல்ல முடியாமல் வெகுதூரம் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த அய்ந்து தலைமுறைகளாக வசித்து வரும் இம்மக்களில் வெறும் 5 பேர் மட்டுமே மிக அதிகபட்ச படிப்பாக 10 ஆம் வகுப்பு படித்துள்ளனர்.


வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற தேநீர் மற்றும் உணவுக்கடைகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது. முருகன், தம்பிசாமி, கலியபெருமாள், துரைக்கண்ணு ஆகிய வன்னியர்கள் நடத்துகின்ற தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. உணவுக்கடைகளில் தலித்துகள் செருப்பினை வெளியே தெருவில் கழற்றிவிட்டு, கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிடும் இழிநிலை தொடர்கிறது. கோவிலில் சென்று கடவுளை வழிபடவும் கூட, தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திட்டுக்காட்டூர் தலித்துகள், பேருந்தில் சாதி இந்துக்களுடன் சமமாக அமர்ந்து செல்லமுடியாத நிலையே இன்று வரை நடைமுறையில் உள்ளது.


தலித் மக்கள் மீது, சாதி இந்துக்கள் தீண்டாமை பாகுபாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வன்கொடுமைத் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலரால், தலித் சமூகத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.தேர்தலின்போது தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தலித் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். சென்ற ஆண்டு, "எப்படி எங்கள் நிலத்தின் வழியே செல்லலாம்?' என தலித்துகளை தாக்க வந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பாசுபாதம் என்பவர், தன்னுடைய துணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் சென்று, தலித் பெண்களிடம் ஆபாசமாக சண்டையிட்டுள்ளார்.


தங்களுக்கு நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளையும் தாக்குதல்களையும் யாரிடமும் சொல்லவே பயந்து, அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளக் கூட தலித் மக்கள் தயங்குகின்றனர். பேசியதும், பேசுவதும் தெரிந்தால் எந்த நேரத்திலும் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களால் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.29.6.08 அன்று இரவு 6 மணியளவில் வன்னியர் சாதியைச் சேர்ந்த குமரவேல், அப்பு, நாகராஜ், பாசுபாதம், உரி, குமரகுரு, பாஸ்கரன், ராஜயோகம், சகுந்தலா ஆகிய 9 பேரும் தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 8 தலித்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரைப் பெற்ற போலிசார், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பிணையில் வந்துள்ள தலித் மக்கள், சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.


விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலித் மனித உரிமைக்காக செயல்படுகின்ற ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்' இக்கிராமத்தை ஆய்வு செய்து, திட்டுக்காட்டூர் தலித் மக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து மீட்டெடுக்க அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. அதன் இயக்குநர் வே. அ. ரமேஷ்நாதனிடம் இது குறித்து கேட்டபோது, “திட்டுக்காட்டூர் தலித் மக்கள் மனித மாண்புடன் அச்சமின்றி வாழ, இங்குள்ள 19 குடும்பத்தினரையும், தலித்துகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வேறு பகுதியில் குடியமர்த்தி, அரசு தனது பொறுப்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், தலித் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராம தலித் மக்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.தலித் குழந்தைகளை அரசு தனது பொறுப்பில் படிக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீது நிகழ்கின்ற வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை களைவதற்கான சீரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றி வரும் சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, அத்தேநீர்க் கடைகளை நிரந்தரமாக முடக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்பவர்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 17இன் கீழ் கூட்டு அபராதம் விதிப்பதோடு, இக்கிராமத்தை தீண்டாமை கிராமமாக அறிவிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு வாக்குரிமையை மட்டும் அளித்துள்ள அரசு, அவர்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.


தலித் மனித உரிமைக் கண்காணிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் இப்பிரச்சனை குறித்துப் பேசும் போது, “நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அடுத்த நூற்றாண்டில் நிலாவில் மனிதன் குடியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பூமியில் தலித் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. திட்டுக்காட்டூர் போன்று எத்தனையோ தலித் கிராமங்கள் உள்ளன. இவை பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. இதை உணர்ந்துதான் அம்பேத்கர், இது போன்ற நிலையை சந்திக்கும் தலித் மக்களை, அதே மாவட்டத்தில் தலித்துகள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


வட இந்தியாவில் அவ்வாறு செய்துள்ளார்கள். தமிழக அரசு இவ்வாறு செய்ய முன்வருமா? விசாரிக்கின்றோம் என்றோ, அமைதிக் குழு அமைக்கின்றோம் என்றோ தலித்துகளின் வாழ்க்கையை அது தள்ளி வைக்கும். தேர்தல் பேரம் தொடங்கிவிட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் போகவும் வாய்ப்புள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள்தான் இது குறித்து அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் திட்டுக்காட்டூர் தலித்துகளுக்கு தீர்வு கிடைக்கும்'' என்றார்.தலித் மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்று நான்கு மாதங்களுக்குமேலாகியும், இதுவரை அரசுஎத்தகைய உதவியையும் செய்யவில்லை. இலங்கைத் தீவில் அல்லலுறும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள், ஜாதித் தீவில் அல்லலுறும் சேரித் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவார்களா?

நன்றி : தலித்முரசு, அக்டோபர் 2008

Saturday, November 22, 2008

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)
தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.
20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.
இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.

பின்னணி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.

எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.

நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.

இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.

சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.
இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.

எமது பார்வைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.
2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.
3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.
4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.
5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.
6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.
8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.
2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.
3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.
4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.
5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.
6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.
8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.
9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.
நன்றி - சத்தியக்கடுதாசி