Wednesday, August 5, 2015

நூல் வெளியீட்டு உரைகள் - நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்


இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்   அமைப்பு 2007 முதல் 2012 வரை கள ஆய்வு செய்திருந்த 531 வன்கொடுமைச் சம்பவ வழக்குகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற ஆய்வினை மேற்கொண்டு, தொகுக்கப்பட்ட ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ நூல் வெளியீடு 23.03.3014 அன்று சென்னையில் நடத்தப்பட்டது

நீதியரசர் ஆர்.இராமமூர்த்தி அவர்கள் தமது தலைமையுரையில் கூறியதில் சில முக்கியக் கருத்துகள்...
‘’இந்தக் கூட்டதினை ஏற்பாடு செய்து, நடத்திக்கொண்டிருக்கின்ற அனைத்து அமைப்பினருக்கும், பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் வணக்கம். சட்டத்தினை உருவாக்குகின்ற வேலையினை அரசு செய்தாலும், அந்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்தவேண்டியது அதிகாரிகள் கடமையாகும். இப்படி அதிகாரிகள் தமது கடமையினைச் சரிவரச் செய்யவில்லை என்பதை இந்த ஆய்வு நூல் மூலமாக நாம் தெளிவாக அறியமுடிகின்றது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 20 வருடங்களுக்கு முன்பு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இதை நடைமுறைபடுத்த போராட்டங்கள் நடத்திடவேண்டியுள்ளது என்பது வருத்ததிற்குரிய ஒன்றாகும். இந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட சட்டத்தினை நடமுறைபடுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. இதற்கு கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் கட்டளைகளும் காரணமாக இருக்கலாம். எனவே கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு இந்த சட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படவேண்டும். இதனை முழுமையான சட்டமாக்க அனைவரின், அனைத்து கட்சியின் கூட்டு முயற்சிகள் தேவை’’ என்று கூறினார்.

சிறப்பு அழைப்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் தமது சிறப்புரையில் கூறிய முக்கிய சில கருத்துக்கள்...
‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய ஆய்வு நூலாக இருந்தாலும், ஜாதி ஒழிப்பிற்கும் முக்கிய ஆவணமாக இந்நூல் உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தலித் அல்லது பழங்குடியினருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனை என்று அல்லாமல், சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டிய கடமை உள்ளதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் உணர்ந்து, இதனை எல்லா மட்டத்திலும் கொண்டு செல்லவேண்டும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45% தலித் பழங்குடியினர் வருகின்றனர். இந்த 45% மக்களை ஒதுக்கிவைத்த முன்னேற்றங்களை முழுமையான முன்னேற்றங்கள் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் நில உச்சவரம்பு கொண்டுவரப்பட்டபோது அதிலிருந்த குறைபாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ப்பு நாய், மாடு போன்றவற்றின் பெயர்களில் நில உரிமைகளை எழுதி வைத்து சட்டத்தின்பிடியில் இருந்து பண்ணையார்கள் தப்பிக்க முயன்றனர். அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மிகவும் அடிப்படையான ஒன்று தீண்டாமை ஒழிப்பு என்பதாகும். ஜாதிபேதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சட்டப்படி குற்றம் என்று உள்ளது. 1952 இல் இச்சட்டம் இயற்றப்பட்டது. இத்தணையாண்டுகளுக்குப் பின்பு தலித் அல்லாத ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி கூட்டணி வைத்து செயல்படுவது மிகவும் கண்டிப்பிற்கு உரியதாகும். ஆட்சியாளர்கள் யாரும் இதை தடுக்க முன்வரவில்லை. இப்போதுள்ள நிலைமை மிகவும் சோதனையானக் காலம். சாதி மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசன் தமிழகத்தில் வாழமுடியவில்லை. ஜாதி ஒழிப்பிற்காக பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. ஆனாலும் இளவரசன் மரணம் தமிழத்தின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். இளவரசனும், திவ்யாவும் இணைந்த வாழமுடியாத புறச்சூழல் தமிழகத்தில் நிலவுகின்றது. சமூக நீதி இங்கு மறுக்கப்படுகின்றது. எல்லோரும் அவரவர்களின் மனசாட்சிபடி நடந்துகொள்ளவேண்டும். பிறப்பால் வேற்றுமை நடத்தப்படுமானால் இந்நாடு பின்னோக்கிச் செல்லும்.

ஆய்வு நூலினை வெளியிட்டுப் பேசிய தமிழக மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான திருமிகு.வே.வசந்திதேவி அவர்கள் தமது உரையில் கூறியது...
                ‘‘மிகச் சரியான நேரத்தில் வெளியாகியுள்ள மிகப் பொருத்தமான நூல் இது. இதனை வெளியிட்டுள்ள  ஷிகிஷிசீ-ழிஞிவியி அமைப்புகளையும், தொகுத்தவர்களையும், சம்பவங்களைக் கள ஆய்வு செய்து, பாதிபுற்றோருடன் ஒன்றாக நின்றுவருகிற களப்பணியாற்றுகின்றவர்களுக்கும்  முக்கியமாக நான் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களை நாம் அனைவரும் மனதார பாராட்ட வேண்டும். தலித், பழங்குடியினர், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், தலித் கிறித்துவர்கள், மிகக் குறைந்த அளவில் உள்ள குறவர் சமூகம் ஆகிய அனைவரின் மீதான வன்கொடுமைகள் குறித்து மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ள மிகச் சிறந்த் கையேடாக இது திகழ்கின்றது. இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கூறுபவர்களுக்கு பதில் சொல்கின்ற வகையில் அமைந்துள்ள இந்நூல் அவர்களின் கூற்றினை ஒழிக்கும். இச்சட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டிய காவல்துறை சட்டத்தினை மீறுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. நேரடியாக காவல்துறையே வன்கொடுமைகளில் ஈடுபட்ட கதைகள் நம்மிடம் ஏராளம் உண்டு. நான் ஆணையத்தின் தலைவியாக இருந்தபோது இதனை கண்டுள்ளேன்இதனை ஜாதி இந்து ஏவல் துறை என நூலின் தொகுப்பாளர்கள் ஓரிடத்தில் விளக்கமாக பதிவு செய்துள்ளனர்பழங்குடியினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆதிக்க வெறிபிடித்த அவர்களின் வேட்டைப்பொருளாக படைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர். ஜாதி வெறிபிடித்த ஆதிக்கச் சாதியினரின் ஜாதிய மனோபாவத்தைவிட, காவல் துறையின் ஜாதி ஆதிக்க மனோபாவம் மிகவும் கொடூரமானது. இதை சகித்துக்கொள்ளவே முடியாது. இந்த நிலையில் நமக்கான நீதி எப்படி கிடைக்கப்போகின்றது என்பதுபற்றி எத்தனையோ முறை சிந்தித்துப் பேசியாயிற்று. இதற்கு ஒரே தீர்வு போராட்டாம்தான் என எல்லோரும் சொல்லியும் உள்ளனர். ஊடகங்கள் வெளியிட்டு ஒரு சமூக அழுத்தங்களை ஏற்படுகின்ற நிலையில் அரசு வன்கொடுமைகள் குறித்து ஒரு விசாரணை கமிசனை அமைக்கின்றது. இந்தக் கமிஷன் இறுதியாக தனது முடிவினை அரசு செய்தது சரிதான் எனக்கூறி, அரசு செய்த அத்தனை வன்கொடுமைகளையும் மூடிமறைக்கின்ற வேலையைத்தான் செய்கின்றது. சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக எவ்வகையான திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என அரசியல் கட்சிகளிடம் நாம் கேட்கின்ற காலமாக இது உள்ளது. 1921 முதல் 2013 வரை நிகழ்ந்த வன்கொடுமைச் சம்பவங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளதுடன், 513 வழக்குகளில் காவல்துறை மற்றும் நீதித்துறை செய்யத் தவறிய கடமைகளை கடும் முயற்சிகளுடன் தொகுத்துள்ளனர்’’ என்று கூறினார்

நூலினை அறிமுகம் செய்து பேசிய எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான .கீதா அவர்கள் பேசும்போது கூறியது...
‘‘நூலின் முக்கிய அம்சங்களையும், நன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது குறித்தும் பலரும் சிறப்புற கூறிய கருத்துகளில் நானும் உடன்படுகிறேன். மீண்டும் அதனையே கூறத் தேவையில்லை. இதனை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் இதன் கடுமையான உழைப்பு எந்த அளவிற்கு என்பது. குறிப்பாக  ஷிகிஷிசீ, பிஸிதி  அமைப்புகள் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளும், வன்கொடுமைகள் தொடர்பான பொது விசாரணைகளையும் நடத்துகின்றனர். அவை அனைத்திலும் நான் ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகின்றேன். இத்தனையாண்டுகால உழைப்பும், முயற்சியும் இந்த் நூலில் உணரமுடியும். நல்ல மொழி நடையுடனும், சரியாக தலைப்புகள் பிரிக்கப்பட்டும், அவைகளுக்குரிய அடிப்படையான ஆதாரங்களுடனும் மிக மிக சிறப்பாக தொகுத்து எழுத்தப்பட்டுள்ள இந்நூலில் கூடுதலாக இருக்கவேண்டிய இன்னும் சில அம்சங்கள், அது குறித்த ஒரு கண்ணோட்டம், பார்வை வேண்டும் என்பதற்காகவும், அடுத்தப் பதிப்புகளில் வாய்ப்பிருந்தால் இணைக்கலாம் என்பதற்காகவும் என்னுடைய கருத்துக்களாக சிலவற்றை கூறுகின்றேன். 1921 முதல் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து தொகுப்பு மிக சிறப்பான ஒன்று. மிகுந்த ஆய்வுப் உட்படுத்தப்படவேண்டியதுமாகும். குறிப்பாக தொடக்கத்தில் ஆதிக்கச் சாதியினர் நிகழ்த்திய சாதிய வன்கொடுமைகளை கண்டுங்காணாமல், அக்கறையற்றும், அமைதியாக இருந்து காவல் மற்றும் வருவாய்த்துறை. ஆனால் 1980&க்குப் பிறகான சம்பவங்களைக் கண்ணுற்றால் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினரே நேரடியாக வன்கொடுமையினை  நிகழ்த்துகின்றனர். பெருமளவில் ஈடுபடுகின்றனர். இதற்கான சமூகப், பொருளாதார, அரசியல் பின்னணி குறித்தும் தொகுபாளர்கள் கருத்துகளை பதிவு செய்யவேண்டும். அல்லது அந்த கண்ணோட்டத்தில் வன்கொடுமை மீளாய்வு செய்யவேண்டும். மேலும், வாச்சாத்தி போன்ற சில சாதகமான தீர்ப்புகள், சம்பவங்களையும் இணைக்கலாம். இவைகள் படிப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையினை உருவாக்கும். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக தலித் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும்’’ என்று கூறினார்.

ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்கள் கூறியது..
‘‘ரமேஷ்நாதன் அவர்களையும், ஸ்ரீவல்ல பிரசாத் அவர்களையும் நன்றாகப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து விடா முயற்சியுடன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த ஆய்வு நூல் மிக முக்கியமான ஒன்று. வழக்கமாக எல்லோரும் ஆய்வுகளை நூலாக அச்சிடும்போது பெரிய தாளில், படிக்கமுடியாதபடி, பார்த்தாலே அப்புறம் படிக்கலாம் என நினைக்கின்றபடி அச்சடிப்பார்கள். ஆனால் அப்படியில்லாமல் மிகச் சிறப்பான முறையில், படிப்பதற்கு ஆர்வத்தினை தூண்டுகின்ற வகையில் அழகாக அச்சிட்டதற்கும் நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். இன்று அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதனை முழு சட்டமாக்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இந்த சட்டம் கட்டாயம் தேவை. மிகவும் அவசியம் என்பதை நாம் வலியுறுத்திக்கூறவேண்டும். அவ்வாறு நாம் கீழ்மட்ட அளவில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுக்கும்போது முக்கியமான முழக்கங்களை கூறவேண்டும். அந்த முழக்கமாக, போராட்ட ஆயுதமாக கொடிபிடிப்பது போன்று இந்த நூலினை நாம் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.’’ என்று கூறினார்

ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.சுகுமாரன் அவர்கள் கூறியது..
‘‘சட்டம் நடைமுறைபடுத்துவதில்லை என்று  பலரும் பொதுவாகக் கூறுவார்கள். எப்படி சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக, விரிவாக இந்நூல் விளக்கிக் கூறுகின்றது. சட்டத்தினை நடைமுறைபடுத்த போராடுகின்ற பல்வேறு அமைப்புகளை உள்ள தமிழகத்தின் நிலையே இப்படியென்றால் புதுச்சேரியின் நிலையினை சொல்லவே வேண்டாம். புதுச்சேரிக்கு இச்சட்டம் செல்லாது என விவரமில்லாமல் காவல் அதிகாரி கூறுவதிலிருந்துதான் இந்நூலே தொடங்குகின்றது. காவல் துறை சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த நிலையில், நீதிமன்றமும் வன்கொடுமைச் தடுப்புச் சட்ட வழக்குகளில் எப்படி அக்கறையில்லாமல் செயல்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். குறிப்பாக இங்கு மேடையில் உள்ள மூத்த வழக்கறிஞர் .பா.மோகன் போன்றோருக்கு நன்கு தெரியும். மதுரை&மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தில் கோயில் நிலத்தில் குத்தகை பங்கு கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்களை ராமர் என்கிற சாதி இந்து தலைமையிலான குழுவினர் வெட்டி படுகொலை செய்கின்றனர். இவ்வழக்கில் போதிய நடவடிக்கை இல்லாத நிலையில், இதே ஆதிக்க ஜாதி வெறி கும்பல் மேலவளவு தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர். இறுதியில் இந்தக் கொலை வழக்கிலும் ராமர் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. வழக்கறிஞர் ரத்தினம் போன்றோர் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ராமர் உள்ளிட்டோருக்கு தண்டனைப் பெற்றுத் தந்தனர். மேலும், இதே வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வழக்கறிஞர் .பா.மோகனை மாவட்ட ஆட்சியரின் கடிதம் இல்லை என்பதற்காக சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இச்சட்டத்தினை நடமுறைப்படுத்துவதில் நீதிமன்றம் & நீதித்துறை மூலமாக இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் உள்ளன. இவைகளையும் கவனத்திகொண்டு அவசரச் சட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும். குறைபாடுகளைக் கண்டறிய இந்த நூல் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’’

தேசிய ஆதிவாசிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் முனைவர் கா.கிருஷ்ணன் அவர்கள் ஆய்வு நூல் குறித்து மதிப்புரையாக கூறியது..
‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் என்கிற இந்த நூல் இப்போதைய தமிழகத்தின் சமூக சூழலில் மிகமிக அவசியமான ஒன்று. தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அத்தனை அம்சங்களும் நடைமுறைபடுத்தப்பட்ட விதம் குறித்தும் எந்தவொரு தகவலும் விடுபட்டுப் போகாமல் அனைத்தையும் கவனத்தில் வைத்து சிறப்புற  தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு நூல் தலித் முரசு குழுவினரால் நன்றாக வடிவமைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மிக முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது. பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் மட்டுமல்லாமல், அவர்களின் சமூகப் பின்ணணியும் சுருக்கமாக அளிக்கப்பட்டிருந்தாலும் சரியான வகையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பழங்குடியினரின் முக்கிய பிரச்சனையான கொத்தடிமை குறித்த தகவல்களும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழே அவை கொண்டுவரப்படுவதில்லை என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது’’ என்றார்.
.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுவது குறித்து தொகுக்கப்பட்டுள்ள ‘‘நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்’’ ஆய்வு நூலின் முக்கிய அம்சங்களும்அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளும்

தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் சட்டமும் அதன் விதிகளும் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் நிகழ்ந்த 531 வன்கொடுமைச் சம்பவங்களில் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதே முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டதுகுறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டமும் அதன் விதிகளும் இந்த 531 வழக்குகளில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், பாதிப்புற்றோர் அளிக்கின்ற புகார்களில் முறையாக வழக்குப் பதியப்படுவதில்லை; குற்றமிழைத்தோருக்கு சட்டத்தை மீறி முன்பிணைகள் அளிக்கப்படுகின்றது; விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகைகளில் வேண்டுமென்றே நீண்ட காலம் தாமதம் செய்து வழக்கினை நீர்த்துப்போகச் செய்வது; நீதிமன்றத்திலும் உரிய காலத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், சுமார் 96% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவது; பாதிப்புற்றோருக்கு உரிய நிவாரணம், தீருதவி, மறுவாழ்வுப் பணிகள் போன்றவை குறித்த எவ்வித திட்டமிடலும் இல்லாதது; சட்டத்தின் நடைமுறைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசி விவாதிக்காமல், டி.எஸ்.பி தள்ளுபடி செய்கின்ற வழக்குகளுக்கு ஒப்புதல் மட்டுமே அளிக்கின்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு; வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் நடத்தப்படவேண்டிய நிலையில், கடந்த 10 வருடத்தில் 2 முறை மட்டுமே (அதுவும் துணை முதல்வர், நிதியமைச்சர் தலைமையில்) நடந்துள்ள முதல்வர் தலைமையிலான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்; வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித்&பழங்குடி மக்களுக்கு நீதியினை வழங்காத சிறப்பு நீதிமன்றங்கள், பெரும்பாலும் குற்றமிழைத்தோருக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு வழக்கறிஞர்கள்; மொத்தம் 22 குற்றப் பிரிவுகளைக் கொண்டுள்ள இச்சட்டத்தில் 16 குற்றப்பிரிவுகள் இதுவரை பயன்படுத்தப்படாத நிலை; வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிப்புற்றோருக்கு ஆதரவான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத மனித உரிமை ஆணையங்கள்; பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்துகள் இறந்துபோனது, சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, தாமிரபரணியில் போலீசார் தாக்குதலில் 17 பேர் இறந்துபோனது மற்றும் கொடியங்குளம் போன்ற வன்கொடுமைச் சம்பங்களில் அரசு அமைக்கின்ற விசாரணைக் கமிஷன்கள் அரசுக்கு ஆதரவாக இறுதி அறிக்கை அளிக்கின்ற போக்கு ஆகியவை குறித்து ஆய்வு நூலில் விரிவாக பல்வேறு ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலில் இறுதியாக, இதுபோன்று சட்டங்கள் முழுமையாக நடைமுறைபடுத்தப்படாத நிலையில் அரசுக்கு சில பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அவைகளில் சில புதிய சட்டத்திருத்த மசோதா உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டாமாக்கப்பட வேண்டும்; அரசு அதிகாரிகளுக்கு சமத்துவக் கண்ணோட்டத்தினை வளர்த்துக்கொள்கிற வகையிலான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்; டெங்கு, போலியோ, எய்ட்ஸ் போன்றவைகளுக்காக செய்யப்படுவது போன்று சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி போன்றவைகளுக்கும் பெருமளவில் பரவலான வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போது தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது என உள்ளது இதனை சாதி ஒழிக்கப்பட்டுள்ளது என திருத்தம் செய்யவேண்டும்; தலித் மற்றும் பழங்குடியின கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை விரிவுபடுத்தவேண்டும்; சாதி மீறிய திருமணம் செய்வோருக்கு உரிய சட்டப்பாதுகாப்புகள், சமூக உதவிகள் அளிக்கப்பட வேண்டும்; கௌரவக் கொலைகள் என்கிற பெயரிலான படுகொலைகள் தடுக்கப்படவேண்டும்; குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டும்; தலித்துகளுக்கு எதிரான அனைத்து சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு மீது நடவடிக்கை வேண்டும்; பழங்குடியினரைப் பாதுகாக்க புதிய அணுகுமுறை வேண்டும்; தலித் மற்றும் பழங்குடியினர் மீதான காவல் நிலைய சித்திரவதை, பொய் வழக்குகள், காவல் நிலைய மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும், நீதி விசாரணை வேண்டும்; பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பாகுபாடுகள் இல்லாத நிலை உருவாக வேண்டும்; புதுச்சேரியிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் சமூக நீதி மற்றும்  சமத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலு முன் வைக்கப்பட்டுள்ளது.


No comments: