Thursday, August 27, 2015

சனி கிழமை மாலை தொடங்கியது. இன்றுதான் ஓரளவு முடிவுற்றது. தம்பி ஒருவரின் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வு, இருளர் வாழ்வியல் தொடர்பான தகவல்களும், உதவியும் கேட்டிருந்தார். அதனையொட்டியே இந்த 4 நாட்களும் தேடியெடுத்து தொகுத்தபோது இருளர் மக்களோடு வாழ்ந்தது போன்றே ஆகிவிட்டது. மனதிலும், மூளையிலும் இருளர் பற்றிய சிந்தனைகள் ஒட்டிக்கொண்டு வெளியேற மறுக்கின்றது. அவைகளிலிருந்து விடுப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை….
-----------------------------------------------------------------------------------------
இருளர் சமூகத்திடம் முன்பிருந்த
திருமண முறை.. தகவலுக்காக…


’’திருமணங்கள் பெரும்பாலும் ஆண், பெண் விருப்பப்படியே நடக்கின்றன. நெருங்கிய உறவு முறையான மாமன், அத்தை வாரிசுகளுக்கு இடையிலான காதல் திருமணங்களும் உண்டு.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கும்போது ’‘உங்கள் வீட்டில் கீரைத் தண்டு இருக்கிறதே அதைக் கொடுங்கள், நாங்கள் எடுத்துக்கொண்டு போகின்றோம்’’ என்று சொல்வார்கள். அதற்கு பெண் வீட்டார்கள் ‘’ஒன்னே ஒன்னு வாடாம வதங்காம வச்சிருக்கோம். உங்ககிட்ட வந்தா வதங்கிடும். நாளடைவில் பார்ப்போம். போய் வாங்க’’ என்று சொல்லுவார்கள்.
மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு அழைத்து ஓரிரு நாட்கள் தங்க வைத்து வேட்டையாடுவதில் அவரின் திறமையினை கண்டறிந்த பிறகே பெண் தருவது குறித்து முடிவு செய்வார்கள்.
இவர்களிடையே நடுவீட்டுத் திருமணம், உடன்போக்கு திருமணம், களவுத் திருமணம், விதவைத் திருமணம், குழந்தைத் திருமணம், முறைப்படி பெண் பார்த்து நடக்கும் திருமணம் என பல்வேறு முறையிலான திருமணங்கள் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனாலும் நடுவீட்டுத் திருமணம் மற்றும் களவுத் திருமணம் ஆகிய இரண்டுமே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

No comments: