Tuesday, June 23, 2020

மணல் உரையாடல் - இசாக் கவிதை நூல்

மணல் உரையாடல் - இசாக்
-----------------------------------------------
வெளிநாடு சென்றவர்கள் பணம் சம்பாதித்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் மிக வசதியுடன் வாழ்வார்கள் என்று நினைப்பதுதான் எல்லோருக்குமான பொதுப்புத்தி.
ஆனால் அதற்குப் பின்னால் வலிமிகுந்த வாழ்க்கை உள்ளது என்பதை கவிதைகள் மூலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர் இசாக் Ishaq

துணையிழந்தவளின் துயரம் என்ற தலைப்பில் அச்சிட்டப் புத்தகமாக வெளியாகி கவனம் பெற்ற இந்தக்
கவிதை நூலை 2018 ல் மணல் உரையாடல் என்ற தலைப்பில் மறு மதிப்பு செய்தார்.

அண்ணன் அறிவுமதி, இன்குலாப் ஐயா, கவிஞர்கள் இந்திரன், பழமலய் ஆகியோர் வாழ்த்துரை எழுதியுள்ளனர்.
நூல் குறித்த இசாக்கின் அறிமுகம்.
"வாழ்வின் பொருளாதார சுமைகளைச் சரிசெய்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கான தமிழர்களின் வளைகுடா உள்ளிட்ட பிற நாட்டுப் பயணங்கள், பலருக்குள் புதிய மனச்சுமைகளைத் தந்து, உளவியல் ரீதியான வலிகளை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தச் சுமைகளும் வலிகளும் உலகின் கவனத்திற்கு வராமலே போளிணிவிடுகின்றன. அதன் இன்மையை இட்டு நிரப்பும் முயற்சியே இத்தொகுதி. இத்தொகுப்பில் பொருள்தேட வேண்டி குடும்பம் பிரிந்தோரின் வலிகளில் சிலவற்றைத் தமிழ்ச் சமுதாயத்தின் பார்வைக்கு ஈரம் காயாமல் கவுச்சி குறையாமல் அப்படியே கொடுக்க முனைந்துள்ளேன்" என்று கூறுகிறார்.

ஒன்றிரண்டு வார்த்தைகளில்
வலிமிகுந்த அந்த வாழ்க்கையைக் அழுத்தமாகக் காட்டும் சில கவிதைகள்.
"எப்படிச் சொல்ல
கணவன்
மனைவி
உறவென்பது
வெறும் கடிதத்தில்
நடத்துவதன்று என்று
இன்னும்
பிரிந்தே வாழும்
நம் பெற்றோர்களிடம்"
"துபாய்க்காரன் மனைவி
கட்டியிருக்கும்
சேலையில்
மின்னும் கம்பிகளில்
முகத்தில்
பூசியுள்ள
யாளி பவுடர்
மினுமினுப்பில்
தெளித்துள்ள
ப்ளூ ஃபார் லேடி
வாசனைத் துளிகளில் தூரதூரமாகிவிடுகின்றன
கடல் கடந்தவனின் துயரம்"
"பேரீச்சம்
பழத்தோட்டப்
பராமரிப்புப்
பணிக்குச் சென்று
கவனிப்பாரற்று
இறந்து கிடந்தவன்
அருகில் படபடத்தது...
‘நான் இங்கு மிக்க நலம்’ என்று
எழுதிய மடல்
முடிக்கப்படாமல்"
"என்னை நீயும்
உன்னை நானும்
தீவிரமாக
நேசிக்கத் தொடங்கி
பிரிய நேர்ந்த
கணங்களிலிருந்து
தொடங்கிவிட்டது
அவரவர் மீதான
அதிகப்படியான கவனம்"
“வாழ்க்கையில்
விடுமுறை நாள்கள்
வரும் போகும்
அனைவருக்கும்.
விடுமுறை
நாள்களில்தான்
வந்து போகிறது
வாழ்க்கை நமக்கு”
"உழைப்பாளிகளில்
வெளியில்
இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே கனவு''
"நினைவிருக்கிறதா
உனக்கு
நம்
சிரிப்புகளையெல்லாம்
அடமானம் வைத்து நெடுநாள்களாகிவிட்டன
நம் வீடுகளில் காந்தி சிரிக்க வேண்டுமென்று"
"எனக்கும் எவருமில்லை
இந்த அந்நிய மண்ணில்
இருந்தும்
வெட்கமற்றுச்
சொல்லிக்கொள்கிறேன்
“நான் குடும்பக்காரன்”"

No comments: