Tuesday, October 12, 2021

மக்கள் பள்ளித் திட்டம் யாருக்கு?

மக்கள் பள்ளித் திட்டம் யாருக்கு?

மக்கள் பற்றி மற்றும் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா தொகுப்பு புத்தகம் வழங்கல் மற்றும் பயிற்சி என பள்ளிக் கல்வி ஒரே பரபரப்பாக உள்ளது.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க மக்கள் பள்ளி திட்டத்தை அமைச்சர் அறிவித்துள்ளார். தன்னார்வலர்களுக்கு அரசு ₹ 1000 ரூபாய் வழங்க உள்ளதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் எனக்குள்ள சந்தேகம், இத்திட்டம் யாருக்கானது. 

குழந்தைகளே இல்லாமல் எப்படிக் கற்றுக் கொடுப்பார்கள்.

தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம்  ஒரு சத வீதம் கூட பயனளிக்காது. 

ஏனெனில், தனியார் பள்ளி மாணவர்கள் யாரும், பள்ளி விட்டு வந்த பிறகு வீட்டில் இருக்க மாட்டார்கள். பாடங்களுக்கான தனிப்பயிற்சி செய்வார்கள். மேலும், நடனம், இசை, பாடல், சதுரங்கம், சிலம்பம், கராத்தே, தட்டச்சு, ஹிந்தி என ஏதேனும் இரண்டு பயிற்சிகளுக்கும் செல்வார்கள். பெற்றோர்களின் வசதிய பொறுத்து நீட் போன்ற நுழைவுத்தேர்வு பயிற்சிகளும் நடக்கும். குழந்தைகளை பயிற்சி மையத்தில் விடவும், அழைக்கவும் என பெற்றோர்களும் ஒரே பரபரப்பாக இருப்பார்கள். அதனால் இத்திட்டம் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பொருந்தாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குதான் இத்திட்டம் என்றால், இதை விட பிள்ளைகளுக்கு தண்டனை அளிக்கக்கூடிய ஒன்று இருக்காது. காரணம் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும், தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பண வசதி இல்லாத பெரும்பாலான பெற்றோர்களின் குழந்தைகள்தான் அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களிலும் கூட ஒன்றிரண்டு குழந்தைகள் தங்கள் தெருவிலோ, அடுத்த தெருவிலோ உள்ள ஏதேனும் ஒரு அக்காவிடம் மாலை தனிப்பயிற்சி செல்வார்கள். மேலும், பல குழந்தைகள் மாலை வேலை முடிந்து பெற்றோர்கள் வந்து சமைப்பதற்கு முன்பான பிற வீட்டுவேலைகள் செய்வார்கள்.

இந்நிலையில், பகல் முழுவதும் பள்ளியில் இருக்கும் குழந்தையை, பள்ளி முடித்து வீடு சென்றதும், மீண்டும் படிப்பு என  உட்கார வைப்பது பெரும் தண்டனையாக அமையும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில்தான், இந்த மக்கள் பள்ளி யாருக்காது, ஏதற்காக என்பது குறித்து விரிவாக அரசு பேச வேண்டும். 

(10.10.21 முகநூல் பதிவு)

No comments: