Monday, January 4, 2021

நாற்காலிகள் நகைக்கும் ஒலி

 நாற்காலிகள் நகைக்கும் ஒலி

- உமா மோகன்
-------------------------------------------------------
பள்ளிகளில் கிடைத்த
பெஞ்சுகள் வீட்டில் கிடைக்க
வெகுகாலமானது
பெண்களுக்கு.
தனக்கென்று
ஒரு நாற்காலி கிடைத்த மகிழ்ச்சியில் தனம் மச்சர்
சிந்திய கண்ணீரைப்
பிள்ளைகள்
சாக்பீஸ் தூள் விழுந்துருச்சு
புது மச்சர் கண்ணுல
என மொழிபெயர்த்தார்கள்.
நாற்காலி பழக்கியதே திரையரங்குகள்தான் மணற்குவியலையும் பேக்பெஞ்சையும் விட்டு
ஒரு ரூபாய் செலவில் சமத்துவத்துக்கு முன்னேறிய தலம்.
மற்றபடி
நாற்காலிகளுக்காகவே நாணங்கெடுவோர் பற்றிச் சொல்வதை
நாற்காலிகளே விரும்புவதில்லை. தான் மட்டுமே நிரந்தரம்,
அமர்வோர் அல்ல
என்பதை நினைவூட்ட
சட்டென நொடித்துக்காட்டி
நகைக்கும் ஒலி கேட்கிறதா?
- உமா மோகன்,

செம்மலர் டிசம்பர் 2020 இதழில்


(28.12.20 முகநூல் பதிவு)



No comments: