Saturday, December 15, 2007

பத்திரிகைச் செய்தி

பத்திரிகைச் செய்தி

05.12.07

திண்டிவனத்தில் 04.12.07 அன்று மாலை மனித உரிமை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும், வழக்கறிஞர்களும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 56 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ‘‘திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கம்’’ என்ற பெயரில் மனித உரிமை இயக்கம் தொடங்கி செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த மனித உரிமை இயக்கத்திற்கு தலைவராக வழக்கறிஞர் அ.ராஜகணபதி, செயலாளராக இரா.முருகப்பன், பொருளாளராக கோ.லட்சுமி, துணைத் தலைவராக ச.செந்தாமரைக்கண்ணன், துணைச் செயலாளர்களாக து.சாரதா, ஆ.வெங்கடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக ஆசிரியர் மு.கந்தசாமி, பேராசிரியர் பிரபா.கல்விமணி, தி.அ.நசீர் அகமது, ஆசிரியர் நவா.ஏழுமலை, வழக்கறிஞர் மு.பூபால், வழக்கறிஞர் ஜெ.கலா, வே.மீனா, க.தனம், து.பாலு, வை.கருணாநிதி, சீ.ரேணுகா, ஆசிரியர். ரெஜினா, க.முனியம்மாள், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பின்பு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டது.

• திண்டிவனம் பூதேரியில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்ட கலாவின் வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றம் செய்யப்படவேண்டுமென்றும், குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும் என்றும், தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திண்டிவனம் நகர காவலதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடவேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட கலா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கியும், சாட்சிகளுக்கு பாதுக்காப்பு வழங்கப்படவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

• காந்திசிலை ஆட்டோ சங்கத்தலைவர் மோ.கணேசனை நிர்வாணமாக்கி, அடித்து, சித்தரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ரோசனை காவலர் மச்சப்பாண்டி என்பவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

• ஆதனப்பட்டு கிராமத்தில் பழங்குடி இருளர்களை கட்டிவைத்து சித்தரவதை செய்தவர்களை உடனே கைது செய்து, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத்தொகை வழங்கப்படவேண்டும்.

• கீழ்மாவிலங்கை நடத்துனர் ஏழுமலை கிரையம் வாங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும், ஏழுமலையை தாக்கிய ம.தி.மு.க பிரமுகர் தங்கமணி, மிரட்டிய தி.மு.க பிரமுகர் எம்.டி.முத்து ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

• குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தி.மு.க பிரமுகர் முரளிதரன், எம்.டி.முத்து, ம.தி.மு.க பிரமுகர் தங்கமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சித்தலைமைகு புகார் அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டது.


• மேற்கண்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி , உலக மனித உரிமை தினமான வரும் டிசம்பர் 10 &ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திண்டிவனம் வட்ட மனித உரிமைகள் இயக்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கபட்டது.

1 comment:

மாசிலா said...

"திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கம்’’ என்ற பெயரில் மனித உரிமை இயக்கம்" முழு மூச்சுடன் செயல்பட, தைரியத்துடன் செயல்பட, விழிப்புடன் செயல்பட்டு மக்களுக்கு, ஏழை எளியவர்கள், நலிந்தவர்களுக்கு ஆதரவாக பல நல்ல காரியங்கள் செய்து பணியாற்ற வாழ்த்துகிறேன்.