Monday, May 27, 2019

செம்புலம் - இரா.முருகவேள்

கொலையான ஒரு இளைஞனின் உடல். காவல் துறை விசாரணையில் மூன்றாவது நாள்தான் தெரிகின்றது அது தலித் இளைஞன் என்பது. தொடரும் போலீஸ் விசாரணை ஒரு துப்பறியும் நாவலாக விரிகின்றது.
ஒரு மில்லில் வேலை செய்யும் அமுதா என்ற பெண்ணை பாஸ்கரன் காதலிப்பதாகவும், அமுதாவும் காதலிப்பதாகவும், அமுதா காதலிக்கவில்லை என்றும், பாஸ்கரன் தொல்லைக் கொடுப்பதாகவும், சந்தையில் பின் தொடர்வதாகவும், கையைப் பிடித்து இழுத்ததாகவும், அமுதாவின் அம்மாவிற்கும், பாஸ்கருக்கும் தொடர்பு என்றும், பாஸ்கரனைக் கண்டித்த சாதிச் சங்கத் தலைவரை பாஸ்கர் தாக்கியதால் சாதிச் சங்கத்தினர் பாஸ்கரனை கொலை செய்ததாகவும் முதல் கட்டவிசாரணை வழக்கு. கொலைக்கு காரணம் இது கிடையாது, வேறு உள்ளது எனத்தெரிந்தாலும் போலீஸ் இதோடு முடித்துக்கொள்கிறது.
இதன்பிறகு நாவல் வேறு களத்திற்குச் செல்கிறது. கொலையுண்ட தலித் இளைஞன் ஒரு கலகக் காரணாக இருக்கின்றான்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மில்களில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளவயது பெண்கள் மீதும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக செயல்படும் தலித் இளைஞர் பாஸ்கர்.
மில் உரிமையாளர்கள் அனைவரும் சாதி சங்கத்தில் உள்ளனர. சாதி சங்கத்தை அடியாட்களாகவும், கூலிப்படையாகவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாதி ஆதிக்கத்தையும், தலித்துகள் மில்களில் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பதுடன், மில்லில் உள்ள பெண்களைக் காப்பாற்றி, மில்லில் பெண்கள் மீது நிகழும் கொடுமைகளை வெளிக்கொணரவும் முயற்சித்த பாஸ்கரன் கொலை செய்யப்படுகின்றான்.
அமுதாவுடன் என்ன நடந்தது என்பதும்,
அதன் உண்மை என்ன என்பதும் நாவலின் கடைசியில் நாம் அறியும்போது,
இதுபோன்று உண்மை காரணம் வெளிவராமல் எத்தனை தலித் இளைஞர்களின் கொலையும், மரணமும் சாதாரணமாக பெண் தொடர்பு, குடிபோதை மோதல், விபத்து என முடித்துவைக்கப்படுகிறது என நினைக்கும்போது பெருங்கவலை சூழ்கிறது.
திண்டிவனம் மானூர் ராஜா, வண்டிப்பாளையம் ராஜா மற்றும் இளவரசன், கோகுல்ராஜ் போன்றோரின் கொலைகளுக்குப் பின்னால் இதுபோன்று மறைக்கப்பட்டுள்ள ஏராளமான கதைகள் இருக்கும். சிசிடிவி காட்சிகள் இல்லை என்றால் சங்கர் கொலையில் கெளசல்யா குற்றவாளியாக்கப்பட்டிருப்பார்.
ஒவ்வொரு தலித் இளைஞனின் கொலை மற்றும் சந்தேக மரணத்திற்குப் பின்னால் சாதியும், சாதிய சங்கமும் உள்ளது என்பதை இந்நாவல் ஆவணப்படுத்தியுள்ளது.
நாவலில் மேலும் தலித் மனித உரிமை, உண்மை அறியும் குழு, அறிக்கை, பத்திரிகை செய்தி, வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு சாரா நிறுவனங்கள் எல்லாம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும்
தோழர் READ Karuppu Samy நாவலில் அவரின் பணி சார்ந்து கே சாமியாக முக்கிய சூழலில் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
தோழர் இரா. முருகவேள் அவர்கள் தமிழகத்தின் மிக முக்கியமான சிக்கலை நாவலாக்கியுள்ளார். இந்நாவல் முற்போக்கு வட்டத்தில் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் உள்ள சாதிச் சங்கள், மில் உரிமையாளர்கள் மத்தியில் செல்லவேண்டும். அவர்கள் இதனை படித்துவிட்டு பேசவேண்டும். தோழர் முருகவேள் அவர்களின் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு (இரண்டும் மொழி பெயர்ப்பு என்றாலும்), மிளிர்கல், முகிலினி ஆகியவை ஒவ்வொன்றும் அடிப்படையில் வேறு வேறானவை. இந்த செம்புலம் முற்றிலும் வேறு.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சாமதானம், பஞ்சாயத்துக் கூடாது என்பதை நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். நாம் இப்படி செயல்பட்டுக்கொண்டிருப்பதால் இதனைப் படிக்கும் போது மகிழ்வாக உள்ளது.
தலித் இளைஞனின் கொலைக்குப்
பின்னால் உள்ள சமூகக் காரணங்களையும், சிக்கல்களையும் கண்டுபிடிக்கவேண்டும், பேசவேண்டும், வெளிக்கொண்டுவரவேண்டும், வழக்காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த நாவல் உருவாக்குகின்றது.
மீள் 2018

No comments: