Sunday, October 12, 2025

கூட்ட நெரிசல் விபத்துகள் உயிரிழப்புகள், தடுப்பதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

கூட்ட நெரிசல் விபத்துகள், உயிரிழப்புகள்.
தடுப்பதற்கான கொள்கை (Policy) உருவாக்கப்படவேண்டும்.
 

முருகப்பன் ராமசாமி

சுனாமியால்  2004 ஆம் ஆண்டு பெரும் பேரழிவு ஏற்பட்டது. உலகின் பல நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. உடமைகள் சேதமடைந்தன. சுற்றுச் சூழல் மற்றும் இயற்கையின் சுழற்சியிலும் பாதிப்புகள் உருவானது.

இந்தப் பெரும் பேரழிவிற்குப் பிறகுதான், 2005 ஆம் ஆண்டு நமது நாட்டில் பேரிடர் மேலாண்மைக் சட்டம் உருவானது. தமிழக அரசு 2023 ஆம் ஆண்டும் பேரிடர் மேலாண்மைக்கான கொள்கையை வெளியிட்டது.

இந்நிலையில் அண்மைக் காலமாக கூட்ட நெரிசல்களால் விபத்துகள் ஏற்படுவது, அதில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க ஒரு கொள்கை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இந்த கொள்கையானது ஏதேனும் ஒரு நிகழ்வில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் கூடும் மக்கள் கூட்டத்தில் எழும் விபத்துகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். மேலும், கூடுகின்றவர்களின் பாதுகாப்பதற்கான செயல்முறைகளை கொண்டிருக்கும்.

          கூட்ட நெரிசல்களில் நிகழும் விபத்துகள்.

கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளும் மரணமும் அடிக்கடி நிகழ்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் உடனடி மரணங்கள் ஏற்படுவதுடன், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, வலுவிழத்தல், உடல் காயங்கள், உடல் உறுப்பு இழப்பு மற்றும் சேதம், மன உளைச்சல், பதட்டம், மன நிலை சீர்குலைதல், அச்சம் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் உள்ளிட்டவைகள் நிகழ்கின்றன.

விபத்து நிகழ்ந்ததும் அதன் தன்மை, பாதிப்பு, மரணங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உடனடியாகப் பெரும் அதிர்வை உண்டாக்கினாலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டுகின்றது.

இதுபோன்ற கூட்டங்களை ஒழுங்குபடுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லாமல் நடத்த, மேலாண்மைக் கொள்கை அவசியம் தேவை என்பதை கரூர் விபத்து உணர்த்துகின்றது. இதுபோன்ற கொள்கைகள்தான் பிற்காலங்களில் சட்டமாக உருவாகவும் அடிப்படையாக உள்ளன. 

கூட்ட_நெரிசல்_ஏற்படும்_இடங்கள்.

மதம், கோவில் சார்ந்த திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்கள், பொது விழாக்கள், மரணம் மற்றும் நினைவுநாள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களாகவும், கூட்ட நெரிசல் ஏற்படும் நிகழ்வுகளாகவும் உள்ளன.

மேலும், கடைகள் திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளைக் காணவும், உணவு உடை உள்ளிட்டவைகளுக்கான விலை குறைப்பு அல்லது இலவச அறிவிப்புகளை நம்பியும் கூடுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. மகிழ்ச்சியான தெருக் கொண்டாட்டம் (Happy Street) எனும் அரசு நிகழ்சிகளிலும் பெருங்கூட்டங்கள் கூடுகின்றது. இளையராசா, ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சிகள் எண்ணிலடங்கா கூட்டம் வருகின்றது. கூட்டத்தை கட்டுப்படுத்தப் முடியாமல் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையும் கண்டுள்ளோம். இவைமட்டும் இல்லாமல், சமூக ஊடகங்களுங்களின் அழுத்தங்கள் காரணமாகவும் சில தனி நிகழ்ச்சிகளில் கூட்டங்கள் கூடுகின்றன.

 

விபத்துகளுக்கான_காரணங்கள்.

பாதுகாப்புக் குறைபாடுகள், அவசரமாக வெளியேற போதுமான வழிகள் இல்லாமல் இருப்பது, கூட்டங்களைக் கையாளுவதில் (crowd management) போதிய பயிற்சி இல்லாத பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திட்டமிடல் குறைபாடு போன்றவை விபத்துகளுக்கான காரணங்களாக உள்ளன.

ஆக, அரசு, நீதிமன்றம், காவல் துறை போன்றவைகள் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கூடுகின்ற மக்களுக்கு கூட்ட நெரிசல் ஆபத்து, மற்றும் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் விபத்துகள் அதிகம் நடைபெற காரணமாக உள்ளது.

 மக்கள்_ஏன்_அதிக_அளவில்_கூடுகின்றார்கள்?

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஏன் இப்படி திடீரென, கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்? ஒரு சிறிய நிகழ்விற்கு கூட மக்கள் பெரும் திரளாக அதுவும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் கூட்டிக்கொண்டு வருவது ஏன்? இதற்கு பின்னால் என்னவெல்லாம் உளவியல் காரணங்கள் இருக்கின்றன? என மருத்துவர் சிவபாலன் கடந்த ஆண்டு எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ’’ஊரடங்கிற்கு பிறகான மனநிலை சமூக கூடலின் மீது மக்களுக்கு ஒர் ஆர்வத்தை உருவாக்கியிருக்கலாம். பொருளாதார வசதி என்பதையெல்லாம் மீறி அத்தனை நிகழ்வுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற முனைப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கலாம் அதனால்தான் குழந்தைகளையும் கூட்டி செல்லுமளவிற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சமூக வலைதளங்களின் அங்கீகாரத்திற்கான ஏக்கம் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படும் போது, அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வெளிப்புற அழுத்தம் ஒன்று மக்களிடம் உருவாகிவிடுகிறது, கலந்து கொள்ள முடியாமல் போனால் எல்லோருக்கும் கிடைக்கும் அந்த அனுபவத்தை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்தின் விளைவாக கலந்துகொண்டே ஆக வேண்டும் என்ற முனைப்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. இந்த தனித்து விடுவதின் மீதான அச்சம் (Fear of Missing Out) தான் மக்கள் சிறு நிகழ்வுகளுக்கு கூட பெருமளவில் கூடுவதற்கு முதன்மையான காரணம்’’ என்கிறார்.

 

மேலும் அவர், ’’அன்றாட வாழ்க்கையில், எப்போதும் வேலை சார்ந்தே சிந்திக்கக்கூடிய, செயல்படக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. இதனால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து மீளும் தற்காலிக வழியாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள். எந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய இளைப்பாறுதலாக இப்படிப்பட்ட நிகழ்வுகளை மக்கள் பார்க்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் அதற்கான போக்குவரத்தும் அங்கு ஏற்படும் நெருக்கடிகளும் அவர்களின் மனவுளைச்சலை மேலும் மோசமாக்குகின்றன.

மக்களின் வாழ்க்கை முறைகளில் சமீபத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்களின் விளைவாக ஏதேனும் சமூக கூடலின் மீது பெரும்பாலானவர்களுக்கு நாட்டம் வந்திருக்கிறது. அதனால் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் மக்கள் ஒரு சாகச மனநிலையில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவு கலந்து கொள்கிறார்கள்” என்றும் கூறுகிறார்.

 

கூட்ட_நெரிசல்_மற்றும்_விபத்துகள்

பாதுகாப்பு_கொள்கை_2025_வரைவு

 

பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டம், பேரணிகள், திருவிழா, இசை நிகழ்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கின்ற கூட்டங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து கொள்கை.

 1. நோக்கம்

கூட்டநெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்பு, சொத்துகள் சேதம் போன்றவற்றை தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல் உள்ளிட்டவைகள் கொண்ட நடைமுறை செயல்பாடுகளை வரையறுத்தல்.

 2. இடம்.

பள்ளி, கல்லூரி, திரையரங்கங்களில் அதன் பரப்பளவின் அடிப்படையில்தான் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படுகிறது. இதே போன்று, பொது நிகழ்சிகள் கூட்டங்கள் கூடும் இடங்களின் பரப்பளவிற்கு ஏற்ற எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கான திட்டமிடல் உருவாக்கப்படவேண்டும்.

 3. பொறுப்புகள்

நிகழ்ச்சி அல்லது கூட்ட ஏற்பாட்டாளர்கள் அல்லது அந்த நிகழ்வுக்கு பொறுப்பான அமைப்பு, கட்சி, நிர்வாகம் இந்த கொள்கையினை பின்பற்றி செயல்படுத்தவேண்டும்.

 

4. திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு

·   மேடை அமைத்து நடைபெறும் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவைகளுக்கு பொதுமக்கள் கூடும் இடங்கள், பொதுப் போக்குவரத்து உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் அருகில் நடைபெறுவதை தவிர்க்கவேண்டும். பொதுப்போக்குவரத்து பாதிக்காத வகையில் தனியிடம் ஒதுக்கப்படவேண்டும்.

·       வாகனங்களின் மூலம் பரப்புரைப் பயணம் எனில், மேடை இல்லாமல், ஊருக்குள் மக்கள் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கூட்டங்கள் / பரைபுரை எனில், சரியான நேரம், இடத்திற்கு உரிய மக்கள் பங்கேற்பு உறுதி செய்துகொள்ளவேண்டும்.

·       உள்ளே, வெளியே செல்லும் பாதைகள், மக்கள் எண்ணிக்கைக்கு போதுமான வழிகள் அமைக்கப்படவேண்டும்.

·       அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள்.

·       காவல், தீயணைப்பு, சுகாதாரம் துறைகளுடனும், மாவட்ட மற்றும் உள்ளூர் அளவிலான அரசு நிர்வாகத்துடன் இணைந்து திட்டமிடல் ஒருங்கிணைப்பு.

·       முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவக் குழு.

 

5. ஆய்வு

·       ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் கட்டாயம் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

·       இடத்திற்கேற்ப பங்கேற்பாளர்களை மட்டும் எப்படி அனுமதிப்பது, கூடுதலாக வந்தால் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து விரிவான திட்டமிடல் வேண்டும்.

 

6. தன்னார்வளர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பயிற்சி

·       மக்கள் எண்ணிக்கைக்கேற்ப, குறைந்த பட்சம் 500 அல்லது 100 பேர் இருந்தாலும் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தும் மேலாண்மை பயிற்சி அவசியம்.

·       உள்ளே, வெளியே மற்றும் அவசர கால பாதைகள் குறித்த அறிவிப்புகள், அடையாளங்கள் வெளியிடப்படவேண்டும்.

·       அவசரக் கால வெளியேற்றம் குறித்து செயல்முறையினை செய்து பார்க்கலாம்.

·       நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு CCTV & நேரடி கண்காணிப்பு, முக்கிய இடங்களில் வீடியோ.

·       குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்த சிறப்புக் கண்னோட்டம்.

 மேலும் சில பரிந்துரைகள்.

·       கூட்டங்களில் குழந்தைகள், வயதானவர்கள், மூச்சுத் திணறல் போன்ற உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்றவர்கள் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது.

·       பங்கேற்பாளர் அனைவருக்குமான காற்றோட்டமுள்ள இடம், தண்ணீர், கழிவறை, இருக்கை, நடந்து செல்ல, வாகனங்கள் செல்ல மற்றும் அவசர காலத்தில் வெளியேறும் வழிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் முன்பே திட்டமிட வேண்டும்.

·       தீ, வெடிவிபத்து, வெள்ளம் போன்ற பேரிடர் ஆபத்துகளில் சிலநிமிடங்களில் வெளியேற்றப்படுவது போன்ற பயிற்சிகள் வேண்டும்.

·       பெரும் எண்ணிக்கையில் கூடும் கூட்டங்கள் முடிந்தபிறகு, அங்கு சிதறிக்கிடக்கும் காலியான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், உணவு பொட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவதை கண்டிருப்போம். ஆனால், விஜய் கூட்டும் கூட்டங்கள் முடிந்தபிறகு வெறும் செருப்புகள் மட்டுமே குவியல் குவியலாக கிடக்கின்றது. தண்ணீர் மற்றும் உணவுப் பொருள் குப்பைகள் காணப்படுவதில்லை.

·       கூட்டம் முடிந்தபிறகு அவ்விடத்தில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே திட்டமிடுதல்.

·       பொதுப்போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகள் அருகே கூட்டங்கள் / நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பொதுப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் இழப்பு, பாதிப்புகள் எங்கும் யாருடைய கவனத்திற்கும் வருவதில்லை. எங்கும் பதிவு ஆவதில்லை.

 

2008 முதல் 2025 வரை

இந்தியாவில்  கூட்ட நெரிசல் விபத்துகளும் உயிரிழப்புகளும்

 

·       2025 செப்டம்பர் 27 – கரூரில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் 10, பெண்கள் 17 உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். த.வெ.க நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டில் 5 பேரும், மதுரை மாநாட்டில் 3 பேரும் இறந்துள்ளனர். இதற்கு முன்பு இக்கட்சி நடத்திய கூட்டங்களில் மதுரையில் 14, விழுப்புரத்தில் 42, திருச்சியில் 12, அரியலூரில் 6, திருவாரூரில் 17, நாகையில் 5, நாமக்கல்லில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

·       மே 3, 2025 – கோவா, ஷிர்காவ், கோவில் திருவிழாவின்போது நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

·       பிப்ரவரி 15, 2025, புது டெல்லி ரயில் நிலையம். கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு. கும்பமேளா செல்ல ஒரே நேரத்தில் திரண்ட பயணிகள் கூட்டம்.

·       ஜன.29, 2025: உத்தரப் பிரதேசம், மகா கும்பமேளா, திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானோர் கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர்.

·       ஜன.8, 2025: ஆந்திரா, திருப்பதி கோவில், வைகுண்ட தரிசன டிக்கெட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம். பலர் காயம்.

·       டிச.4, 2024: தெலுங்கானா, ஹைதராபாத், சந்தியா திரையரங்கம், புஷ்பா-2 திரையிடலுக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

·       2024 அக்டோபர் 6, சென்னை மெரினா கடற்கரை. விமானப் படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

·       ஜூலை 2, 2024: உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் பாபா சாமியார் நடத்திய பிரார்த்தனைக் கூட்ட நெரிசலால் குழந்தைகள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.

·       மார்ச் 31, 2023: இந்தூர், ராமநவமி கோவில் திருவிழா, கிணற்றுக் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

·       ஜன.1, 2022: ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

·       செப்.29, 2017: மும்பையின் மேற்கு ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.

·       ஜூலை 14, 2015: ஆந்திரா, ராஜமுந்திரி, கோதாவரி நதிக்கரையில் புனித நீராட்ட நெரிசலில் 27 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

·       அக்.3, 2014: பிஹாரின் பாட்னா. தசரா கொண்டாட்டம் கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

·       அக்.13, 2013: மத்தியப்பிரதேசம், டாடியா மாவட்ட ரத்தன்கர் கோயில் நவராத்திரி திருவிழா கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

·       நவ.19, 2012: பீகார், பாட்னா, கங்கை நதிக்கரை சாத் பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

·       நவ.8, 2011: ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 20 பேர் உயிரிழந்தனர்.

·       ஜன.14, 2011: கேரளா, இடுக்கி மாவட்டம், புல்மேடு பகுதியில் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 104 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

·       மார்ச் 4, 2010: உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் மாவட்டம், கிருபாலு மகாராஜ் ராமர் ஜானகி கோயிலில் இலவச உணவு மற்றும் உடை வழங்கும் விழாவில் உண்டான கூட்ட நெரிசலால் 63 பேர் மரணம்.

·       செப்.30, 2008: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர், சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 250 பேர் மரணம்.

·       ஆக.3, 2008: இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், நைனா தேவி கோயிலில் பாறை சரிந்ததாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 162 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.

-----------------------

 


Wednesday, August 20, 2025

கொரோனா ஊரடங்குப் பேரிடரிலும் பாதிப்படையாத சாதியப் பாகுபாடுகள்

24.04.2020

 

கொரோனா ஊரடங்குப் பேரிடரிலும்

பாதிப்படையாத சாதியப் பாகுபாடுகள்

 

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க பிறநாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

முதல் கட்டமாக 2020 மார்ச் 22 ஆம் தேதி நாடு முழுவது ஒரு நாள் சுய ஊரடங்கு அறிவித்த மத்திய அரசு, மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரையிலான 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊரடங்கு தளர்த்தப்படாமல் மே 3 ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜுன் வரை தொடர்வ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக எதிர்பாராத நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே உள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல், நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறாமல் இருக்க Social Distancing சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது.

Social Distancing என்கிற இந்த சமூக இடைவெளி மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த நோக்கில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் ரு வேறு தாக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சுற்றுச் சூழல் தொடர்பாக நேர்மறையான விளைவு உருவாக்கியுள் நிலையில், தொடர்ந்து சாதிய பாகுபாடுகளின் அடிப்படையில் உருவாகின்ற எதிர்மறையான விளைவுகள் சமூகத்தை கவலைகொள்ளவே செய்கின்றன.

·       சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாசு சீரடைந்து, இயற்கை தாமாகவே தன்னை தகவமைத்து சுத்திகரித்துக்கொண்டுள்ளது.  

·       Social Distancing என்கிற இந்த சமூக இடைவெளி, நமது நாட்டில் நிலவும் சாதிய ரீதியான பாகுபாடுகளின் காரணமாக Social Exclusion சமூக விலக்காக மாறும் என்ற ஆபத்தும் உள்ளது.

·       பொருளாதார பாதிப்பால், வாழ்வாதாரம் வீழ்ச்சியில் உள்ளது. அன்றாட வேலையில் கிடைக்கும் வருமானத்தையும், மாதாந்திர ஊதியத்தையும் மட்டுமே நம்பி வாழும் சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரச் சிக்கல். அதனால் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, குடும்ப வன்முறைகள், அவல நம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற எண்ணங்களால் உருவாகும் மன அழுத்தம் / சோர்வு என்பது பெரும் சிக்கலான, சவாலான ஒன்றாக உள்ளது.

·       சமூக அக்கறை மற்றும் மனித நேய அடிப்படையிலான நல்லெண்ணத்துடன் ஏராளமான மனிதர்கள் பலருக்கும், பல்வேறு வகையான உதவிகளை செய்துகொண்டுள்ளனர். அதே நேரத்தில், இந்த நெருக்கடியான நிலையில் கடும் மனச்சுமைக்கும், பாதிப்பிற்கும் ஆளாகி அச்சத்தின் பிடியுள்ள மனிதர்களின் மனப்பான்மை இறுக்கமடைந்துள்ளது. தன்னுடைய பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்ற சுயநல மனப்பான்மை மேலோங்கியுள்ளதும் நிகழ்கின்றது.

 

ஊரடங்கின் எதிர்மறை விளைவுகள்

சமூக இடைவெளியா? சமூக விலக்கா?

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சாதி, இனம், பாலினம், வர்க்கம் மற்றும் மதம் அடிப்படையில் பிளவுபட்டிருக்கின்ற நாடாகும். குறிப்பாக மனுதர்ம அடிப்படையில் மனிதர்கள் மீது சாதி ரீதியாக  தீண்டாமை மற்றும் பாகுப்பாட்டினை இந்தியச் சமூகம் கடைபிடிக்கின்றது. இந்து  அடிப்படைவாதத்தின் மையமான சாதியத்தின் காரணமாக நாட்டில் ஏற்கனவே ஒதுக்குதல், ஒடுக்குதல் போன்றவைகளால் பெரும் சமூகப் பிளவுகள் உள்ளது.

இந்நிலையில் கொரோனா சமூக இடைவெளி, உலகின் பிற நாடுகளில் நிலவுவதைப் போல் இந்தியாவில் தனி மனித இடைவெளியாக இல்லாமல், சாதிய அடிப்படையில் நிலவும் சமூக விலகலை நியாயப்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், இந்து சமூகத்தில் ஒருவரை தொடக்கூடாது, பார்க்கக்கூடாது, தெருவில் நடமாடக்கூடாது என்பவை கடைபிடிக்கப்பட்டது என வலியுறுத்திம், மனுதர்மத்தின் அடிப்படையிலான தீண்டாமையை நியாயப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

சுகாதாரம்/மருத்துவம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட Social Distancing என்கிற இந்த சமூக இடைவெளி, நமது நாட்டில் நிலவும் சாதிய ரீதியான தீண்டாமை மற்றும் பாகுபாட்டின் காரணமாக Social Exclusion சமூக விலக்கின் நீட்டிப்பாக உள்ளது.  இந்த ஆபத்தினை சமூக நிறுவனங்களும், செயல்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து, மார்ச் 30 ஆம் தேதி  உலக சுகாதார நிறுவனம் ’’சமூக இடைவெளி என்பது சரியல்ல, தவறான சொல்லாகும். எனவே, Physical Distancing உடல் இடைவெளி என்ற வார்த்தையைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும்’’ எனக்கூறியுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனத்தின்  இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் மார்ச் 30 ஆம் தேதி மிகத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். ஆனாலும், இதற்கு பிறகும் நமது நாட்டின் பிரதமர் உட்பட அனைவரும் சமூக இடைவெளி என்றே கூறிவருகின்றனர்.

சமூக இடைவெளி என்ற இந்த வார்த்தையின் அடிப்படையில் ஏற்கனவே நாட்டில் உள்ள தீண்டாமை மற்றும் பாகுபாட்டினை நடைமுறைப்படுத்தி, சாதியப்படிநிலையை வலியுறுத்தும் இந்து வர்ணதர்மம் இப்போதும் நடைமுறையில் உள்ளது என்பதை கீழ்கண்ட மூன்றுசம்பவங்களும் உணர்த்துகின்றது.

 

சம்பவம்-1 :

அம்பேத்கர் படத்துடன் டி.சர்ட் அணிந்துகொண்டு

தெருவில் சென்றதற்காக தாக்குதலுக்கு ஆளான தலித் இளைஞர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கெளதமபிரியன் (20) என்ற தலித் இளைஞர், மார்ச் 31-ம் தேதி அன்று தன் தங்கையை இரு சக்கரவாகனத்தில் அழைத்துச் சென்று பக்கத்து ஊரான கிளையூர் கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் விட்டு விட்டுத் திரும்பியுள்ளார். வழியில், குப்பநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே தன் தங்கையின் தோழி ஒருவர் நடந்து 

ந்ததைப் பார்த்து,  அப்பெண்ணிடம் நலம் விசாரித்துள்ளார் கெளதமபிரியன்.


அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர் ஈஸ்வரன் கெளதம பிரியனிடம், ‘’யார் நீ, எதற்கு ஊர் தெருக்குள்ள வந்த... இந்த டி-சர்ட் போட்டுகிட்டு ஊர் தெருக்குள்ள வருவியா?, அந்த அளவிற்கு உனக்கு தைரியம் வந்துடுச்சாடா? எங்க சாதி பெண்ணிடம் உனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு’’என்று கேட்டு, கெளதம பிரியனை நடு ரோட்டில் முட்டி போட வைத்திருக்கிறார். மேலும், கேபிள் டிவி ஒயரால் கடுமையாகவும் தாக்கியுள்ளார். அதோடு, அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட்டைக் கிழித்து எறிந்துவிட்டு, அங்கிருந்து கெளதம பிரியனைத் துரத்தி அடித்துள்ளார். இந்த வன்கொடுமையினைச் செய்த ஈஸ்வரன் தமிழக அரசின் காவல் துறையைச் சேர்ந்தவர் ஆகும். செங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகின்றார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரின் இந்த சாதிய வன்கொடுமையினை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்ப்பதையும் நாம் இந்தப் படத்தில் காணமுடியும்.

பாதிக்கப்பட்ட இளைஞர் கெளதப்பிரியனை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்காமல் ஊசி மட்டும் போட்டு அனுப்பியுள்ளனர். புகார் அளித்தும் காவலர் ஈஸ்வரன் மீது வழக்குப் பதியப்படவில்லை. காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகளிடம் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்திய பிறகே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் அழுத்தம் காரணமாக காவல் ஈஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

 

சம்பவம் – 2:

தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த கொரோனா நோயாளிகள்.

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள குஷிநகரில் கொரோனா வைரஸ் தொற்று இருந்த 5 பேரையும் தனிமைப்படுத்தி, அக்கிராமத்தின் தொடக்கப் பள்ளியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்காக, லீலாவதிதேவி என்ற பெண் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் என்பதால், இப்பெண் சமைத்த உணவை சாப்பிடாமல், வைரஸ் தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் இவர்கள், அதே பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு நடந்தே சென்று சாப்பிட்டு மீண்டும் தங்குமிடத்திற்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் காவலுக்கு இருந்த போலீசாரும், நோய்த் தொற்றுள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்கவில்லை.  

வைரஸ் தொற்றுள்ளவர்கள் வெளியில் நடமாடுகின்றனர் என அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். அதன்பிறகே, ஊடகங்கள் வாயிலாக இந்த தீண்டாமைக் கொடுமை வெளியில் தெரிய வந்துள்ளது.

சமையலராக நியமிக்கப்பட்ட லீலாவதி, “மிகுந்த கவனத்துடனும் கைகளில் க்ளவுஸ், மாஸ்க் எனப் பாதுகாப்பாகவும்தான் சமையல் செய்து அவர்களிடத்தில் கொண்டுபோய் வைப்பேன். மாவட்ட நிர்வாகம் கேட்டதன் காரணமாகவே நான் இதைசெய்தேன். ஆனால் அவர்கள் நான் தயாரித்த உணவை உண்ண மறுத்து விட்டனர். இதனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்என்று கூறியுள்ளார்.

உயிரையே இழக்கும் நோய்த் தொற்று தனது குடும்பத்தாருக்கும் பிறருக்கும் பரவினாலும் பரவாயில்லை, தலித் பெண் சமைத்த உணவை சாப்பிடமாட்டோம் என, இந்தச் சூழலிலும் கூட தீண்டாமையை கடைபிடிக்கும் இச்சம்பவம், இந்தியாவில் சமூக இடைவெளி என்பது சாதிய அடிப்படையில்தான் இருக்கும் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.

 

சம்பவம் – 3.

சென்னையில் தூய்மைப் பணியாளர் மீதான இழிவு.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளிக் காட்சி வேகமாக பரவி வருகின்றது. சென்னையில் உள்ள ஒரு வசதியான வீட்டில் கார் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டு, பூணூல் அணிந்திருந்த ஒருவர், தூய்மைப் பணியாளர்களை இழிவாக பேசிக்கொண்டிருந்தார். ‘’எங்களோட பீயை எடுத்துதான் நீங்க சம்பாதித்து சாப்பிடுறீங்க.. நாங்க கொடுக்கலன்னா.. உங்களுக்கு ஏது வாழ்க்கை.” என்று மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தி கேவலமாகப் பேசுகிறார்.

துப்புரவுப் பணியாளர்கள்தான் இந்தக் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் முழு நேரமாக ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு உடைகளோ, கருவிகளோ கிடையாது. நேரங்காலம் பார்க்காமல் துப்புரவு பணிகளைச் செய்து வருகின்றனர். பிறருக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக தடுப்பு பணியில் ஈடுபடும் இவர்களுக்கு, நோய்த்தொற்று தாக்காமலிருக்க போதிய முன்னெச்சரிக்கை அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை அளிக்கப்படவில்லை. மேலும் பணியிடங்களில் ஏற்படும் இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்கவோ, கொடுமை இழைத்தோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ அதிகாரிகள் முன்வருவதில்லை. காரணம் அடிப்படையில் அவர்களும் சாதிய மனநிலையில் உள்ளதுதான்.  துப்புரவுப் பணியாளர்களை இழிவுபடுத்திப் பேசி, வன்கொடுமை இழைத்த சென்னை பள்ளிக்கரணை ஐ.ஐ.டி காலனியில் உள்ள சந்திரசேகரன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

பொருளாதார பாதிப்பு வாழ்வாதாரம் வீழ்ச்சி.

            இந்தியாவில் 45% பேர் அன்றாடம் கிடைக்கும் வேலையைச் செய்து வாழ்பவர்கள். இவர்களுக்கான ஊதியம் தினந்தோறும் வாரம் அல்லது மாதம் ஒருமுறையோ இருக்கும். இவர்களிடம் சேமிப்பு என எதுவும் இல்லை. இந்த ஒரு மாதம் எப்படியோ சமாளித்துள்ளனர். இன்னும் இரு மாதம் ஊரடங்கு தொடரும் என்ற நிலையில் இவர்களது குடும்ப வாழ்நிலை மிகக் கொடூரமானதாக மாறிவிடும்.

            வேலை வாய்ப்பு இல்லை எனும்போது, அந்த வருமானத்தை மட்டுமே நம்பி உள்ள கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலம் குறித்தோ, அவர்கள் பாதுகாப்பாக வாழ்வது குறித்தோ அரசு எவ்வித திட்டத்தையோ, கொள்கையையோ அறிவிக்கவில்லை. உருவாக்கவும் இல்லை. உலகின் பல நாடுகள் தமது ஆண்டு வருமானத்தில் 30% முதல் 40 % வரை கொரோனா பணிக்காக ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்தியா வெறும் 1.9% மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதிலும் கூட பெருபாலானவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொது விநியோகம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகும்.

            ’’இந்தியாவைப் பொருத்த மட்டில் பொது சுகாதாரம் என்பது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரை சதவீதத்தைக் கூட பொது சுகாதாரத்திற்கு இந்திய அரசு ஒதுக்குவதில்லை. கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர பொது சுகாதாரக் கட்டமைப்பு ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் மிக மோசமாகவே உள்ளன. இதனால், இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதில் இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக பின்பற்றிய தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே திக்கித் திணறிக் கொண்டிருந்த்து. இப்போது அது படு பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீட்பதற்கோ பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதற்கோ தற்போதைய ஆட்சியாளர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.

உலகில் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, செலவிடும் நாடுகளில் இந்தியா உள்ளது. 2020-21 பட்ஜெட்டில் பாதுகாப்புக்கென       ரூ. 4,71,378 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% ஆகும். மத்திய அரசின் செலவினங்களில் இது 15.5% ஆக இருக்கிறது, அதே நேரத்தில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு இதை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாகும். 2020-21 பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டது 67,112 கோடி மட்டுமே. இது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 0.5% கூட இல்லை. இவ்வளவு குறைந்த தொகையை வைத்துக்கொண்டு கொரோனா என்னும் தேசியப் பேரிடரை இந்திய சுகாதாரத்துறை எதிர்கொள்ள முடியாது" என நாடாளுமன்ற உறுப்பினர்                    திரு ரவிக்குமார் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

வீணாகும் விளைப் பொருட்கள்.

விவசாய விளைபொருட்கள் எதனையும் சந்தைக்கு கொண்டுவந்து விற்கமுடியாத நிலை உள்ளது. கொள்முதலும் இல்லை. இதனால், கீரை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் பறிக்கப்படாமல் அழுகி வீணாகின்றது. இதனை சந்தைப்படுத்தவோ அல்லது கொள்முதல் செய்து நிவாரணமாகக் கூட வழங்குவதற்கோ அரசிடம் எவ்வித முயற்சியும் இல்லை.

இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள உணவு, தானியங்களை எடுத்து தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளித்தால், அடுத்த ஒரு வருடத்திற்கு உணவளிக்க முடியும். ஒரு கட்டத்தில் உணவு தானியம் எவ்வளவு தேவைப்படுமோ அதைப் போல நான்கு மடங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்போது அறுவடை வேறு துவங்கிவிட்டது. நெல், கோதுமை உள்ளிட்டவைகளை கொள் முதல் செய்யாமல் விட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும் உணவுப் பற்றாங்குறை உருவாகும்.

 வேலை, வருமானம் இல்லாமல் ஏற்பட்ட உயிரிழப்புகள்.

வேலையில்லை. வருமானமில்லை. அரசின் பொருளாதார, உணவுப் பொருட்கள் உதவியில்லை. இதனால் மக்கள் பெரும் மனச் சோர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் குடும்ப வன்முறை அதிகரிக்கின்றது. குழந்தைகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு 500 கி.மீ தூரம்வரை கூட நடந்தே சென்றனர்.  போதிய உணவு இல்லாமல் சுமார் 170 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம் போதோகி மாவட்டத்திலுள்ள ஜெகன்கிராபாத் என்ற இடத்தில் ஓடும் கங்கை நதியில் தனது ஐந்து குழந்தைகளையும் ஒரு தாய் தூக்கி வீசியுள்ளார். கூலி வேலை செய்தே, குழந்தைகளைக் காப்பாற்றிய அந்தத் தாய், ஊரடங்கால் வருமானம் இன்றி, குழந்தைகளின் பசியைப் போக்கமுடியாத இயலாமையில் தூக்கி வீசியுள்ளார்.

 கொரோனா மற்றும்  பசி - இரு தொற்றுகள் :

தெலுங்கானாவில் கன்னைகுடா கிராமத்தின் மிளகாய் தோட்டங்களில் வேலை செய்த ஒரு குடும்பம் கடந்த 40 நாட்களாக வேலை ஏதும் இல்லாததால் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான பிஜாபூர் நோக்கி நடக்க தொடங்கி, 150 கிமீ கடுமையான வெயிலில் நடக்கிறார்கள். அவர்களின் 12 வயது மகள் ஜம்லோ மக்தம். கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தாருடன் நடந்தாள். வழி நெடுகிலும் போதுமான உணவு இல்லை. பசியில் நடக்கின்றனர். முழுமையாக சோர்வடைந்த ஜம்லோ மக்தம் இறந்து போகிறாள்.

அவளை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அவளது இறப்பிற்கு காரணத்தை ஆங்கிலத்தில் electrolyte imbalance, exhaustion or dehydration என்றார்கள். தமிழில் அதை தான் பசி / கிருமி தொற்று என்கிறோம். (https://www.facebook.com/Muthukrishnan)

கடந்த வாரம் முகேஷ் என்பவர் தன் கையில் இருந்த தொலைபேசியை ஒருவழியாக ரூ.2500க்கு விற்று, அந்தப் பணத்தில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் கொடுத்து சமையல் செய்ய சொல்லிவிட்டு, குழந்தைகளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு அடுத்த அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார்.  (https://www.facebook.com/Muthukrishnan)

"கொரோனாவால் இல்லை.. பசியால் இறந்து விடுவோமோ என்று பயமாக உள்ளது" என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கின்றனர்.

"நாங்கள் மனநோயாளியாகிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது சார்" என தள்ளுவண்டி மற்றும் நடைபாதைகளில் கடை வைத்திருக்கும், செய்யும் தமிழக தொழிலாளர்கள் கூறுவது கலங்க வைக்கின்றது. கொரோனா ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கி, கையில் உள்ள அல்லது கடன் வாங்கிய 1000 / 2000 ரூபாயும் செலவாகி, அடுத்து என்ன என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர். எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை மனச்சோர்வினை உருவாக்கியுள்ளது.

பசியின் தொற்று இந்தியா முழுவதும் மூன்றாம் நிலைக்கு பரவிவிட்டது, ஆனால் அதனால் ஏற்படும் மரணங்களை கணக்கு எடுக்க இந்திய அரசுக்கு விருப்பம் என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணியிலிருந்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்த மாதம் 16-ஆம் தேதியிலிருந்து, 30 ஆண்டு பணி முடித்தவர்கள் விருப்பதுடன் வெளியேறலாம் என ஒரு புதுத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஊரடங்கிற்கு பிறகு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் சூழல் உள்ளது. வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், மேம்படுத்தவும், மக்களின் வல்லுநர்களுடன் உருவாக்கவேண்டும். வாழ்வாதரத்தை கலந்தாலோசித்து, உரிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திட்டங்களை

 

சாதாரண மக்களை

சமூகப் பொறுப்பு / கடமையிலிருந்து விலக்கி வைக்கும் அச்சம் : கேள்விக்குறியாகும் மனித நேயம்.

சமூக இடைவெளி இந்தியாவில் நிரந்தரமாகி விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகின்றது. நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக சக மனிதர்களை, நண்பர்கள், உறவினர்களைளைக் கூட அவநம்பிக்கையோடு தூரத்தில் வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இச்சூழல் குழந்தைகள் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது எனக் கவலையாக உள்ளது.

மேலும், இந்த கொரோனா ஊரடங்கு, தனித்திரு, விழித்திரு, இடைவெளி என்கிற அனைத்துவித நடமுறைகளும் அடங்கிய பிறகு, ஏதாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு சாலை ஓரம் நாம் மயங்கிக் கிடந்தால், அவ்வழியே செல்பவர்கள் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் எழுவதை தடுக்கமுடியவில்லை. அப்படியே விட்டுவிட்டு, விலகிச் செல்வதுதான் social responsibility என கொரோனா கற்றுக்கொடுகிறதோ எனத் தோன்றுகிறது.

இறந்த நோயாளி, மருத்துவரின் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது எனத் தடுப்பது. கொரோனா கட்டுபாட்டு மையம், தனிமைப் படுத்தல் மையம் அமைப்பதை தூய்மைப்பணியாளர்களை வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றத் எதிர்ப்பது. மருத்துவர். துடிப்பது உள்ளிட்டவை எல்லாம் கொரோனா நோய்த் தொற்றான சுகாதார/மருத்துவ பாதிப்பினைவிட, இதனால் எழும் இதுபோன்ற சமூகச் சிக்கல்கள் இப்போதுள்ள Social distancing என்கிற சமூக இடைவெளி இந்திய நாட்டில் உள்ள மனிதருக்குள், மக்களுக்குள், மனதிற்குள் நிரந்தரமாகி விடுமோ என கவலையடையும் சூழல் உருவாகியுள்ளது.

 

துப்புரவுப் பணியாளர்கள்:

எங்களுக்கென்ன இதெல்லாம் புதுசா?

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கியுள்ளது. ஆனால், "இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்" என விதிக்கபட்ட நிலையில், துப்புரவுப் பணியாளர்கள் மட்டும் இயங்கிக்கொண்டே உள்ளார்கள்.

கரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க, "வீட்டில் இருங்கள். வீட்டிலே இருங்கள், வீட்டிலேயே இருங்கள்" என்றும் வலியுறுத்தப்படுகின்றது.

இந்நிலையில்தான், ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழு மூலமாக துப்புரவுப் பணி மேற்கொண்டு வரும் கோமதி (42), ஒட்டுமொத்த துப்புரவுப் பணியாளர்களின் குரலாகவும் கூறுகின்றார். கொரோனா தொற்றில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவரால் அப்படி இருக்க முடியவில்லை. முடியாது. அதைத்தான் இப்படி சொல்கிறார், "லீவு போட்டால் சம்பளம் போய்விடும். இனி வேலைக்கே வர வேண்டாம் எனச் சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் இருக்கிறது. பயத்தோடுதான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று வருகிறோம். வீடு, வீடாகச் சென்று குப்பைகளை வாங்க வேண்டும். அவற்றை மக்கும் குப்பைகள், மக்காத தப்பைகள் எனப் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை அரைக்கும் ஆலைகளுக்குக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நானும் இன்னொருவரும் சேர்ந்து எங்கள் வார்டில் உள்ள 2,000 வீடுகளுக்குச் சென்று குப்பைகளை வாங்க வேண்டும். காலை 6 மணிக்குத் தொடங்கினால்                               2 மணியாகிவிடும். வேலைக்குச் சென்றால்தான் எங்களுக்கு சம்பளம். போகாவிட்டால் ஒன்றும் இல்லை. சமூக இடைவெளியை எங்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை. ரெண்டு பேர் சேர்ந்துதான் குப்பைகளை வாங்குகிறோம். பிரித்து எடுக்கிறோம். அப்புறம் எப்படி இதனைக் கடைப்பிடிப்பது? ஆனால், பொதுமக்கள் சற்று தள்ளிதான் எங்களிடம் குப்பைகளை வழங்குவர். நாங்களும் 'கொஞ்சம் தள்ளியே நில்லுங்க' என்று அவர்களிடம் சொல்லிவிடுவோம். காலை 10 மணிக்குக் கை கழுவுவோம். அதன்பிறகு வேலை முடிந்தபிறகுதான் கழுவுவோம். வேலையே சரியாக இருக்கும், கைகழுவ நேரம் இருக்காது. எங்களுக்கு எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யவில்லை." என்றாகிறார் கோமதி.

சென்னை, செம்பாக்கத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் மோகன் (50), "ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் எனT உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அதைக் கொடுப்பதில்லை. கரோனாவுக்கு உலகமே பயந்துகொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரை வேலைக்குச் செல்கிறோம். அவசரப் பணி என்றாலே கூடுதல் சுமை இருக்கும். ஆனாலும், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். அதுதான் நாங்க. சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் நான் அவசரப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கென ஒதுக்கப்பட்டதெருக்களில் குப்பையை அகற்றுவது, பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் துப்புரவுப் பணியாளர்கள் தான். பயந்துகொண்டு வீடுகளையும், தெருக்களையும் சுத்தம் செய்யாமல் இருந்தால் என்னவாகும்? இது மக்கள் பணி. இதற்காக எங்களுக்கு விருது கூட தர மாட்டார்கள். அதையே தீண்டாமையாக நினைக்கிறேன்" என ஆதங்கப்படுகிறார்.

திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் பழனி, "எங்களுக்கு எங்கும் மரியாதை கிடையாது. இதையெல்லாம் பார்த்தால் பிழைக்க முடியுமா? கரோனா தொற்று என பயமுறுத்தும் வார்த்தைகளை சொல்கின்றனர். இதனை பத்தோடு பதினொன்னாதான் நான் பார்க்குறேன். குப்பைகளை அள்ளும்போது எத்தனையோ கூரான பொருட்கள் வந்து கையைக் கிழிக்கும். அடிக்கடி வயிற்றுவலி, தலைவலி வரும். இதென்ன எங்களுக்கு புதுசா?" என்றார். (நன்றி : நந்தினி, தமிழ் இந்து இணைய இதழ்)

 

ஊரடங்கின் விளைவுகள்

தமிழகத்தில் தலித் மக்கள் நிலமற்ற தினக்கூலி தொழிலாளர்களாக உள்ளனர். செய்கின்ற வேலைகளுக்கு தினமோ, ஒருமுறையோதான் கூலி கிடைக்கும். இந்தக் குறைந்த ஊதியத்தில்தான் குடும்ப நடத்தி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக வேலை வாய்ப்போ, வருமானமோ இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும். ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் ஊரடங்கில், குடும்பத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத உளவியல் சிக்கலில் பெண்கள் உள்ளனர்.

குடும்பம் நடத்துவதற்குரிய வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுகாதாரப் பணிகளில் 67% பெண்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியச் சூழலில் இதில் மட்டுமல்லாமல், அமைப்புச் சாரா தொழிலாளர்களிலும் பெண்கள் அதிகமுள்ளனர். ஒருவரின் பொது நடம்மாட்டத்தைக் கட்டுப்படுத்தும் இந்தக் கடுமையான ஊரடங்கில் பெண்கள் உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, உணர்வு ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகம் முழுவதுமே இந்த ஊரடங்கின் காலத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை 60% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்தபடியே உள்ளன. இதுபோன்று இதுவரையில் இல்லாத வகையில் பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளன.

இந்தச் சூழலில் இந்தியாவில் மகளிர் ஆணையமும், குழந்தைகள் ஆணையமும் பாதிப்புகளைத் தெரிவிக்கவும், தொடர்புகொள்ளவும் தனி தொலை பேசி எண்களை அறிவித்து, பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அதிலும் சிறப்பு கவனமெடுக்கவேண்டிய தனித்து வாழும் பெண்கள், முதியோர் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பிரச்சனைகள் எல்லாம் கவனிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக 8 மற்றும் 9 மாத கர்ப்பினிப் பெண்கள் மாதாந்திர சோதனைக்கும், தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வரவேண்டாம் எனவும், வலி எடுத்தபிறகு மருத்துவமனைக்கு வருமாறும் மருத்துவர்கள் கூறியுள்ள தகவல்கள் வெளியாகின்றன.

ஒன்றிரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குறிய ஒன்றாக உள்ளது. போதிய பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்திரவாதிமல்லாத பரிதாபத்துகுரியதாகும். அவர்களின் நிலைகள்

மேலும், தனியார் மருத்துவமனைகள் பெருமளவில் இயங்குவதில்லை. இயங்குகின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேறு எந்தவொரு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. சில மாதங்களுக்குப் பின் இது எந்தமாதிரியான விளைவுகளை உருவாக்கப்போகின்றது எனத் தெரியவில்லை.

நோய்த் தொற்று ஆபத்து ஒருபக்கம் என்றால், இந்தியாவில் அதைவிட பேராபத்தாக, சமத்துவமின்மையும், சமூகச் சிக்கல்களும் உருவாகி வருகின்றது. இந்த ஊரடங்கால் நிலவும் சமூக இடைவெளியைக் களைவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

ஊரடங்கின் ஒரே நல்ல விசயம் ; நேர்மறை விளைவு.

பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த உலகம், ஏதோ ஒரு சாவியின் முடுக்கத்தால் நிறுத்தப்பட்டது போன்று, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றது. இயந்திரங்களின் சத்தங்களின்றி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும்விட பெரு நிறுவனங்களின் தொழிற் கழிவுகள் சாக்கடையாக ஓடவில்லை. நதிகளில் கலக்கவில்லை. எள் நுழைய கூட இடமில்லாமல் நிற்கும் மனிதக் கூட்டங்கள் கிடையாது.

இந்நிலையில்தான், வாகனம் மற்றும் தொழிற் சாலைப் புகையினால் மறைக்கப்படும் மேகம் இப்போது வெளிச்சமாக தெரிகின்றது. மாசடைந்து வீசும் காற்று தூய்மையாக உள்ளதை அரசின் மாசுகட்டு வாரியத்தி ஆய்வில் தெரியவருவதுடன், நாம் சுவாசிப்பதும் உணரமுடியும். 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட இந்தியாவில் காற்று மாசு குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது என என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

காற்று மாசு விலகியதால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து பார்க்கும்போதே, இமயமலையின் ஒரு பகுதியான தால் ஆதர் மலையை காணமுடிவதாக மக்கள் கூறியுள்ளனர். டெல்லி நகரம் முழுவதும் தற்போது பச்சைக் கிளிகள் கூட்டம் கூட்டமாக கண்டுகளிக்கின்றனர். இதனைவிட, கங்கை, யமுனை நதிகள் கழிவுகள் சுற்றுவதாக நேரில் கலப்பின்றி தூய்மை அடைந்துள்ளன.

சுற்றுச் சூழலில் மாசு குறைந்து மேம்பாடு அடைந்தது ஒரு பக்கமெனில், காடுகளில் மனிதர்களின் இடையூறு இன்றி விலங்குகள் இயல்பாக தன்னிச்சையாக உலவுகின்றன. குறிப்பாக, காடு அழிக்கப்பட்டு, விலங்குகள் வாழிடங்கள் குடியிருப்புகளாக மாறிய பிறகு, விலங்குகள் அனைத்தும் தங்கள் சுதந்திரம் பறிபோன நிலையில் சுற்றித் திரிந்தன. தற்போதைய ஊரடங்கால், வாகனங்கள் மனிதர்கள் இல்லாமல், காட்டு விலங்குகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுதந்திரமாக விருப்பத்திற்கேற்றபடி நடமாடி உறவாடி வருகின்றன.


(24.04.2020 அன்று அப்போதைய நிலையில் எழுதப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் பணியிடம் குறித்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில்,  முக்கியத்துவம் கருதி இப்போது பதிவிடுகின்றேன்.)

-------------------------

.