Wednesday, December 17, 2025

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்_பணியிடை_நீக்கம்! ரத்து_செய்ய_நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்_பணியிடை_நீக்கம்!
காவல், நீதித் துறையின் பழிவாங்கும் நடவடிக்கையினை கண்டிக்கின்றோம்.
தமிழக அரசும், நீதித்துறையும் பணியிடை நீக்கத்தை
ரத்து_செய்ய_நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீதிபதி செம்மல்களைத் தவறவிட்டால் நீதியின் இடத்தை யார் நிரப்புவார்கள்?

                                                                                             14.12.2025

ஊடகக்_கூட்டறிக்கை




 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் நடத்தும், டீ மற்றும் பேக்கரி கடைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகுமாரும் அவரது மருமகனும், காவலருமான லோகேஸ்வரன் ரவி (32) இருவரும் சேர்ந்து முருகனை தாக்கி, மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி சென்ற 25.07.2025 அன்று, தனது கணவரைத் தாக்கிய மேற்படி சிவகுமார், காவலர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

புகார் கொடுத்த 27 நாட்களுக்குப் பிறகு 20.08.2025 அன்று எஸ்.சி/எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

08.09.2025 அன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் ஆஜராகியுள்ளார். அவர் இந்த வழக்கில், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சரியாக நடவடிக்கை எடுக்காததை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்தது,  குற்றஞ்சாட்டப்பவர்களைக் கைது செய்யாதது, பாதிக்கப்பட்டோருக்கு நகல் வழங்காதது உள்ளிட்டவைகள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 18-A(B) மற்றும் 10(2) ஆகியவைபடி சட்ட மீறலாகும். இப்பிரிவுகளை டி.எஸ்.பி சங்கர்கணேஷ் முறையாக செயல்படுத்த தவறியுள்ளார்.
  • இச்சட்டப் பிரிவு 4-இல் உள்ளபடி டி.எஸ்.பி செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்யாமல், கடமையில் இருந்து தவறியுள்ளார். இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(G) கீழ் தண்டனைக்கு உரியது.

இதனடிப்படையில் டி.எஸ்.பியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் உத்தரவிட்டார்.

உடனடியாக ஒட்டுமொத்தக் காவல்துறை மற்றும் தமிழக அரசின் உதவியுடன் உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வழக்குத் தொடுத்தார்.

இவவழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அவர்கள்,  நீதிபதி ப.உ.செம்மல் பிறப்பித்த கைது உத்திரவை ரத்துசெய்து, டி.எஸ்.பியை விடுவித்து உத்திரவிட்டார். மேலும், நீதிபதி ப.உ.செம்மல் மீது உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் மீண்டும் ஒரு உத்திரவுப் பிறப்பித்தார். அதில் நீதிபதி ப.உ.செம்மல் இடமாற்றம் செய்யப்பட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் இரண்டு உத்திரவுகளைப் பிறப்பித்தபோது நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கவில்லை.

உச்சநீதிமன்றம் K, A Judicial Officer In re (2001) என்ற தீர்ப்பில் மாவட்ட நீதிபதிகள் குறித்த வழக்குகளில் அந்நீதிபதிகளிடம் கருத்துக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது, அவர்கள் பெயர்களைக்கூட வெளியிட கூடாது என்பது கடைபிடிக்கவில்லை.

மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 15A(3), 15A(5) படியும், உச்சநீதிமன்றம் Hariram Bhambhi vs Satyanarayan and Anr என்ற தீர்ப்பின்படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படவில்லை.

மேலும், விஜிலன்ஸ் பிரிவு விசாரணையின் போதும் நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கப்படவில்லை. அதாவது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நீதிபதிக்கு உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல், பழிவாங்கும் நோக்கோடு ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர். இது இயற்கை நீதிக்கு (Natural Justice) எதிரானது.

அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் கேட்டும் வழங்கப்படவில்லை. மேலும், விஜிலன்ஸ் அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கேட்டும் வழங்கப்படவில்லை.

நேர்மையாக_செயல்படுவதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்படுகிறார்.

நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர். மேலும், பணியாற்றிய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும்  பாதிக்கப்பட்டோருக்கான நீதியினை சட்டத்தின் அடிப்படையில் வழங்கியவர். பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நீதியின் பக்கம் நின்று, சட்டத்தின்படி நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல தீர்ப்புகளை வழங்கியவர்.

காவல்துறை மட்டுமல்லாமல் தவறு செய்த அனைத்துத் துறை அதிகாரிகளையும் கண்டிக்கத் தயங்காதவர். அதிகாரிகளை சட்டத்தின்படி  செயல்பட வைத்தவர்.   இதனால், நீதிபதி செம்மல் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரை நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் போலீசார் அடித்துக் கொன்ற வழக்கில், நீதிபதி ப.உ.செம்மல் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்தபோது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து உத்திரவிட்டார்.

இதுதொடர்பாக நடந்த மேல்முறையீட்டில், இதனை சென்ற 10.12.2025 அன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்று மனித உரிமைகள் சார்ந்து பல்வேறு தீர்ப்புகள் வழங்கி எஸ்.சி/எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடித்தள மக்களின் உரிமைகளைக் காத்தவர்.

நீதிபதி செம்மல் அவர்களுக்கு இப்போது நாம் ஆதரவு அளிப்பது என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு அளிக்கின்ற ஆதரவாகும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை தமிழக அரசு சரியாக அமுல்படுத்தவில்லை என்று பரவலாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அச்சட்டத்தினை நடைமுறைபடுத்தும் நீதிபதியின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்பது,  இச்சட்டட்தின் அமுலாக்கத்திற்காக செயல்படுவோருக்கான அச்சுறுத்தலாகும்.

இந்தச் சூழலில் நீதிபதி செம்மல் அவர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவு, தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோருக்கும், அவர்களுக்கு ஆதரவான சட்ட நடவடிக்கைகளுக்கான உறுதியான ஆதரவாகும். 

எனவே, நேர்மையான, திறமையான நீதிபதியான ப.உ.செம்மல் அவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பணியிடை நீக்க உத்திரவைத் திரும்பப் வேண்டும்.

தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவர் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 1. எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்

2. வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.

3. வழக்கறிஞர் சுதா இராமலிங்கம், சென்னை.

4. வழக்கறிஞர் ப.பா.மோகன், ஈரோடு

5. எழுத்தாளர் வ.கீதா, சென்னை

6. வழக்கறிஞர் பி.எஸ்.அஜீதா, சென்னை

7. வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை

8. பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்

9. பேராசிரியர் பிரபா கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்

10. பேராசிரியர் வீ.அரசு, சென்னை

11. சி.துரைக்கண்ணு, அம்பேத்கர் சமூக மையம்.

12. டாக்டர் வே.அ.இரமேசுநாதன், முன்னாள் தேசிய அமைப்பாளர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு.

13. புனிதப் பாண்டியன், ஆசிரியர், 'தலித் முரசு’

14. எழுத்தாளர் கவின்மலர், சென்னை

15. கா.வேணி, சமூக செயல்பாட்டாளர், சென்னை

16. வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை

17. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

18. பா.அசோக், இணைத் தலைவர், பார்கவுன்சில் தமிழ்நாடு & புதுச்சேர்

19. வழக்கறிஞர், எழுத்தாளர்  ச.பாலமுருகன், ஈரோடு

20. வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மதுரை

21. வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை.

22. வழக்கறிஞர் கி.நடராஜன், சென்னை

23. வழக்கறிஞர் பாவேந்தன், சென்னை

24. வழக்கறிஞர் இல.திருமேணி, கடலூர்

25. வழக்கறிஞர் பி.புருஷோத்தமன், கடலூர்

26. வழக்கறிஞர் கா.கணேசன், மனித உரிமை செயற்பாட்டாளர் மதுரை

27. பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை மாவட்டம்.

28. கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

29. அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம்.காரைக்குடி.

30. பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ் நாடு

31. பேராசிரியர் சங்கரலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சென்னை.

32. காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்

33. பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், காரைக்குடி,  சிவகங்கை

34. உறவு கா.சே.பாலசுப்பிரமணியம், மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி

35. அ.தேவநேயன், குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை

36. ஆ.இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.

37. கவிஞர் இசாக், சென்னை

38. கவிஞர் பால்கி, த.மு.எ.க.ச, கடலூர்

39. கவிஞர் ஜோசப் ராஜா, சென்னை

40. ஆசிரியர் த.பாலு, விழுப்புரம்

41. பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்

42. பழனிச்சாமி கருப்பன், மனித் உரிமை செயல்பாட்டாளர், ஈரோடு

43. இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்

44. பா.ஜோதிநரசிம்மன், ஊடகவியலாளர், விழுப்புரம்.

45. எழுத்தாளர் முருகப்பன் ராமசாமி, திண்டிவனம்.

மேலும், தங்கள் பெயரை இணைத்து ஆதரவளிப்பவர்கள்.

46.முனைவர் ரத்தின புகழேந்தி, கானல்வரி கலை இலக்கிய இயக்கம், விருத்தாசலம்.

47.எழுத்தாளர் அன்பாதவன், விழுப்புரம்.

48.டி.என்.கோபாலன், ஊடகவியலாளர்,

49.மனிதி செல்வி, சென்னை.

50.எவிடன்ஸ் கதிர், மதுரை.

51.யா.அருள், எழுத்தாளர், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, சென்னை.

52. வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.

53. வேடியப்பன், சமூக செயற்பாட்டாளர், அரூர்.

54.எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.(எம்), சிதம்பரம்.

55. இராம்குமார்.BA.LLB, த.நா & புதுவை சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

------------------------------

தொடர்புக்கு :

கோ.சுகுமாரன் – 9894054640, 

முருகப்பன் – 9894207407

குறிப்பு : ஆதரவளிக்க விரும்புகின்றவவர்கள் தங்கள் பெயரை இணைத்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Friday, December 12, 2025

சிறப்பு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் - அரசின்மீது எப்படி நம்பிக்கை வரும்!




அரசின் மிக மோசமான நடவடிக்கைகளில் இது ஒன்று.

இந்த அரசின் மீது எங்களைப் போன்றோருக்கு எப்படி நம்பிக்கை வரும்?.
நீதிபதி செம்மல் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர். பணியாற்றிய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கான நீதியினை வழங்கியவர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்யவும், தண்டனை வழங்கவும், பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் உருவாக்கப்பட்டது பிரிவு 4. இதன் அடிப்படையில்தான் நீதிபதி செம்மல், டி.எஸ்.பி சங்கரை கைது செய்ய உத்திரவிட்டுள்ளார்.
இச்சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டது, அனேகமாக இந்தியாவிலேயே இதுதான் முதலாவதாக இருக்கலாம்.
இப்படி சமூக நீதியினைக் காப்பாற்ற சட்டத்தினை சரியாக நடைமுறைபடுத்திய நீதிபதி செம்மல் அவர்களுக்கு, உண்மையிலியே சமூக நீதி அரசு பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். மாறாக இரவோடு இரவாக உயர்நீதிமன்றம் மூலமாக டி.எஸ்.பி சங்கரை பாதுகாத்து, நீதிபதி செம்மல் அளித்த உத்திரவினை ரத்து செய்தது மட்டுமல்லாமல்,
சட்டத்தின்படி செயல்பட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
இந்தியாவிலியே வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் முதல் 10 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மலக்குழி மரணங்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளில், ஒரு வழக்கில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
நீதிபதி செம்மல் அவர்களை பணி நீக்கம் செய்திருப்பது என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் சரியாக செயல்படும் நீதிபதிகளுக்கு, இனி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்ற மறைமுக எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது.
பல்பிடுங்கி பல்பீர் சிங் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை இல்லை. மாநில SC/ST ஆணையம் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்திரவிட்ட சுமார் 20 தீர்ப்புகளுக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள தடைகளை நீக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வெள்ளைத்துறை மீதான சட்ட நடவடிக்கையை தண்டனையை ஒரே நாளில் மாற்றி காப்பாற்றி, வழி அனுப்பியது தமிழக அரசு. தூத்துகுடி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது ஆணையம் பரிந்துரை செய்தும் நடவடிகை இல்லை.
குற்றமிழைக்கும் காவலதிகாரிகளை காப்பாற்றுவதால் தமிழக அரசுக்கு என்ன கிடைக்கப்போகின்றது?
குற்றமிழைப்போரையும், ஊழல் செய்வோரையும் காப்பாற்றி, நேர்மையாக சட்டத்தின்படி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் கடமையா?
காவல் துறையா? நீதித்துறையா? என்றால், அரசு சட்டத்தின்படியான நீதியின் பக்கத்தில்தான் நிற்கவேண்டும்.

Monday, December 1, 2025

தண்டகாரண்யம் - தவிர்க்க முடியாத அரசியல் படம்.

 தண்டகாரண்யம் - தவிர்க்க முடியாத அரசியல் படம். 





  1. யாரும் உள்ளே நுழையமுடியாமல் கண்ணுக்குத் தெரியாத கதவு பூட்டுகளால் அனைத்துப் பக்கமும் மூடப்பட்டுள்ள ஒரு உலகம் திரைப்படம் உலகம். உள்ளே நுழைந்தவர்களும் கண்ணுக்குத் தெரியாத நூல்களால் கட்டப்பட்டார்கள். கட்டுப்படுத்தப்பட்டார்கள். அந்த நூலால் உருவாக்கப்பட்ட கோடுகளை தாண்டவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். எல்லை தாண்டியவர் பா.ரஞ்சித். மூடியிருந்த கதவுகளை திறந்து, நூல்களை அறுத்து கோடுகளை அழித்து, அதியனையும் மாரி செல்வராஜ் போன்ற பலரை உடன் அழைத்துச் சென்றார்கள். கடலூர் ஷான், தற்போது செம்மலர் அன்னம் போன்றோர்களுக்கான வழிகளையும் திறந்துவிட்டுள்ளார். 

கதவுகளை உடைத்து, நூல்கோடுகளை அழித்து உள்ளே சென்றவர்கள், வெளியிடும் திரைப்படங்களைப் பார்த்து, பூட்டி வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். 

இவர்களின் படங்கள் சாதிப் பெருமைகளைப் பேசவில்லை. ஆதிக்கத்தை நிறுவவில்லை. சமத்துவத்தைச் சொல்கிறது. அதிகாரத்தின் பெயரிலான ஆதிக்கத்தை உடைக்கிறது. 

ஜி தமிழில் ஒளிபரப்பான அம்பேத்கர் தொடரில், குட்டி அம்பேத்கர், ‘’ஒரு நாள் வானத்தைப் போல உலகம் முழுவதையும் நீல நிறத்தில் மாற்றுவேன்’ என்பார். நீலம் என்பது சமத்துவம். இதைத்தான் ரஞ்சித், அதியன், மாரி சொல்கிறார்கள். சமத்துவம் கூடாது என்பவர்கள்தான் இவர்களையும், இவர்களின் படங்களையும் எதிர்க்கின்றனர். 


  1. தண்டகாரன்யம் படத்தைப் பற்றிய நான்கு பார்வை பார்வை. 

  • காடு, பழங்குடியினர், வாழ்வாதாரம் இல்லை, சொத்தை விற்றுப் படிப்பு, காக்கி உடை அணிந்தால் அரசு வேலை, அதிகாரம், மரியாதை, காதல், குடும்பம்

  • வனத்துறை அதிகாரிகளின் அத்துமீறல், காட்டு வளங்களை அழித்தல் கடத்தல் + கஞ்சா + பழங்குடி மக்களையே பயன்படுத்துவது. 

  • பழங்குடியினர் மீதான அதிகாரத்தின் தாக்குதல் - பழங்குடி இனத்தை அழிப்பது, காட்டினை கைபற்றுவது. 

  • மலிந்துவிட்ட ஊழல். போலியான பயிற்சி மையம். அதற்கான நிதி ஊழல் செய்து எடுப்பது. அப்பாவி பழங்குடியினரை நக்சல் எனச் சொல்லி கொலை செய்து, பணம், பதவி, பட்டம், புகழ். 

இப்படியான நான்கு பார்வைக்கும் அடிப்படையாக இருப்பது, நாளேடுகளில் வந்த இரண்டு  செய்திகள்தான். 


நக்சல்கள் சரண், நக்சல்கள் கொலை எனும் அந்த இரு செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்கள்தான் இந்த தண்டகாரண்யம் படம். 


தற்போதைய ஒன்றிய அரசுக்கு போலிகளை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. சிரமமும் அல்ல. வட மாநிலங்களில் போலியான சுங்கச் சாவடி, காவல் நிலையம், நீதிமன்றம், வேலை வாய்ப்பு அலுவலகம், ஏன் போலியான வெளி நாட்டு தூதரங்கள் கூட நடத்தியுள்ளனர். இந்த ஒன்றிய அரசு கூட போலிதான். RSS தான் உண்மையான அரசு. பாஜக, மோடி எல்லாம் போலிகள்தான். 

இப்படி பேசும் நம்மைப் போன்றோர்களை எல்லாம் அர்பன் நக்சல் என சொல்லி ஒடுக்குகின்றனர். ஸ்டான் சாமி, பேராசியர் சாய்பா போன்றோரை கைது செய்து, சிறையில் வைத்து கொலை செய்து, இயற்கை மரணம் என்றனர். 

ஒவ்வொரு நாடாளுமன்ற தொடரிலும், தேர்தல்களிலும், தீபாவளிகளிலும் நக்சல்கள் தேசவிரோதிகள் என்றும், நக்சல் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்றும் பிரதமர் பேசி வெறியூட்டுகிறார்.  போலியான தேசபக்தியை உருவாக்க முயற்சிகின்றார். 

இந்த மாதிரியான சூழலில், அவர்களின் கருத்துகளை எல்லாம பொய் என்றும், அவர்கள் செயல்கள் எல்லாம் போலியானது என்றும், அவர்கள் அழிக்க நினைக்கின்ற தண்டகாரணயம் என்ற பெயரிலியே அதியன் படைப்பாக்கி இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. 

நக்சல் மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில், பழங்குடியினரை ஒடுக்க, அழிக்க, பழங்குடி இளைஞர்களைக் கொண்டே போலியான பயிற்சி மையம் கேம்ப் நடத்துவது, அவர்களின் அக்னிபாத் எனும் திட்டத்தை நினைவூட்டுகின்றது. 


படத்தில் தோழர் அதியன், போகிற போக்கில் நுணுக்கமான சில விஷயங்களைப் பதிவு செய்துகொண்டே போகின்றார். 

  • அவர்கள் மொழியிலியே பேசுகின்றனர் என மொழி அரசியல் பேசுகிறார். 

  • காடுங்கிறது வெறும் செடி கொடி மரம் மட்டும் இல்லை. மனிதர்கள் உட்பட எல்லாம்தான். காடு புதுசு புதுசா கத்துகொடுக்கும்.

  • மத்தவங்கள் காட்டை பாதுகாக்கலாம். ஆனா பழங்குடியினர் தவிர வேறு யாரும் காட்டை வளர்க்கமுடியாது, உருவாக்கமுடியாது. 

  • காட்டில் இருக்கும் வரைதான் மனிதர்கள். காட்டை விட்டு ஊருக்குள் போனால்  சாதி, மதம், கெளரம் என பல்வேறு சட்டைகளை அணிந்துகொள்கிறார்கள். 

  • வனத்துறை, காவல், இராணுவம் போன்றோர் அணியும் உடையும் அதன் அதிகாரத்தையும் ஒடுக்குமுறைகளையும் பார்த்து அச்சப்படுகிறார்கள். அதே சீருடையை நமது பிள்ளைகள் போட்டுக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தால் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை மாறும், இருக்காது என நம்புகிறார்கள். 

  • ஒரு மாநில அரசு நக்சல்கள் என சரணடைய வைத்து, வேலை கொடுப்பதாக கணக்கு காட்டுகின்றது. இன்னொரு மாநில அரசு பொய் வழக்குப் போட்டு குடும்பத்தை சிதைக்கின்றது. 

  • கடைசி அணுகுண்டு படத்தில் லாரிகளும் பாத்திரங்களாகவே கேரக்டர்களாகவே இருக்கும். அப்படி இந்தப் படத்தில் இடை இடையே லாரிகள் போய் கொண்டே இருக்கும். 


இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும், பொருளுக்கும் பின்னாலும் அரசியல் உள்ளது. பத்திரிகளைகளில் வருகின்ற ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் பெரும் அரசியல் உள்ளது. தற்போதைய செய்திகளில் ஒரு பெரும் சதி உள்ளது என்றே சொல்லாம். 

அப்படித்தான் இந்தப் படத்தில் காட்டப்படும் இரு செய்தி துணுக்குகளுக்குப் பின்னால் உள்ள சதி, வாழ்க்கை, மக்கள், ஒடுக்குமுறை, அரசியல், ஊழல்கள்தான் இந்தப் படம். 


கடைசியாக ஒரு கருத்து. விசாரணை, ஜெய்பீம் வரிசையில், அதையும் தாண்டி வந்திருக்கவேண்டிய படம்.  

இந்திய அளவில் துணை இராணுவப் படையில் நிலவும் ஊழல், அரசியல், போலி பயிற்சி மையங்கள் போன்வைகளை வெளியுலகின் பார்வைக்கு கொண்டுவந்து பேசுபொருளாக்கிய தோழர் அதியன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


எப்போதும்போல், இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டும், பேசிக்கொண்டிருக்கும் அண்ணன் இரவி கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.  


(26.10.2025 அன்று விழுப்புரத்தில், இயக்குநர் அதியன் ஆதிரை அவர்களுகு நடந்த பாராட்டு விழாவில் பேசியது).