Wednesday, March 28, 2018

உச்சநீதி மன்றத்தின் சாதிய தீர்ப்பு : பாதுக்காக்கவேண்டும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை.




சட்டத்தின் நோக்கம்.

குற்றங்களைக் தடுக்கவும் உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவர்கள் நீதி மற்றும் உரிய நிவாரணம் பெறவும், குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை அளிக்கும் நோக்கில்தான் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மீறல் சம்பவத்தினை எப்போதும் பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்கவேண்டும், அணுகவேண்டும். இது மனித உரிமைகளின் மீதான அக்கறை என்பது ஒருபக்கம் என்றாலும் இதுதான் ஜனநாயகமும் கூட. அதுவும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதிதுறையும் நீதிமன்றங்களும் பொறுப்போடும் அக்கறையோடும் இருக்கவேண்டும். பாதிக்கப்படும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை  மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள்தான் உள்ளது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இத்தீர்ப்பு தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை அதிகரிக்கச் செய்யும் என்கிற அச்சத்தினை உருவாக்கியுள்ளது.  

வன்கொடுமை தடுப்புச் சட்டம்
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் 1976 ஆகியவைகளின் போதாமையைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 விதிகள் 1995; வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 உருவானது. “பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து அதன்மூலம் விரைவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதி, நிவாரணத்தை வழங்குவதுடன் மறுவாழ்வு அளிப்பதற்கும் வழிவகை செய்யவது” என்ற நோக்கத்துடன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 63 ஆண்டுகள் ஆகியும் வன்கொடுமைகள் குறையவில்லை. சட்டமும் முழுமையாக் நடைமுறை படுத்தப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் சாதிய தீர்ப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரசு மருந்தியல் கல்லூரி பொருட்கள் அறைப் பாதுகாவலர் (Store keeper) ஒருவர் தன்னை சாதி இழிவு செய்த அரசு தொழில் நுட்பக் கல்லூரி இயக்குர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடுகின்றார். விசாரித்த மகாராஷ்டிரா உயர்நீதி மன்றம் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிடுகிறது. இதனை எதிர்த்து இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டோர் செய்த இந்த மேல்முறையீட்டு இந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் ஒரு அநீதியான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் அதில் எவரையும் கைது செய்யக்கூடாது, குற்றம் சாட்டப்படவருக்கு முன் ஜாமீன் வழங்கவேண்டும், அரசு பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவரை பணி நியமனம் செய்த அதிகாரியின் ஒப்புதல் பெற்றுதான் வழக்கு பதிவு, வன்கொடுமை செய்த ஆதிக்கச் சாதியினரை காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் பெற்றே கைது செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது இந்த சட்டத்தையே முடக்குவதாக உள்ளதுடன்,  இந்தியா முழுவதும் பல்வேறு சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பல ஆண்டுகள் போராடி நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகவும் உள்ளது. மேலும்  இதனால் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது

இந்த ஆபாத்தான தீர்ப்பினை காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எதிர்த்துள்ளன. மேலும் ஜனநாயகத்தில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை பாதுகாக்கவேண்டியுள்ளது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளையும், சாதிய இழிவுகளையும் இச்சட்டம் முழுமையாக தடுக்கவில்லை என்றாலும் கூட குறைந்த பட்ச பாதுகாப்பினை அளிப்பதாக உள்ளது. 

நீதிமன்றங்கள் வழக்கினை பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் அணுகியே வழிகாட்டுதல்களையு, தீர்ப்புகளையும் வழங்கவேண்டும். மாறாக இப்படி குற்றஞ்சாட்டப்பட்டோரை பாதுக்காக்கின்ற நோக்கில், காப்பாற்றுகின்ற எண்ணத்தில் தீர்ப்புகளை வழங்குவது என்பது நாடு ஜனநாயகத்தன்மையிலிருந்து விலகி பெரும் ஆபத்தினை எதிர்கொள்ளப்போகின்றது என்பதையே காட்டுகின்றது. மக்கள் நல அரசு என்பதிலிருந்து மாறி சட்டத்தின் கீழான அரசு / நாடு என்கிற பெரும் ஆபத்துக்கான வாய்ப்பும் உள்ளதையே இத்தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது.

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

தமிழகத்தில் 2017 ல் 1519; 2016 ல் 1304; 2015 ல் 1752 வழக்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் வழக்குகளில் தண்டனை விகிதம் இந்திய அளவில் 47% உள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தண்டனை விகிதம் இந்திய அளவில் 25% உள்ளது. ஆனால் தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் வெறும் 7% உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி தேசிய அளவில் தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக தேசிய அளவில் 2015 ஆம் ஆண்டு 38,670 (4.7%) வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.   ஆனால் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைவிட 4080 (5.5%) அதிகமாக நிகழ்ந்துள்ளதை இதன்மூலம் அறியவலாம். மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினர் அளித்த 46119 புகார்கள் வழக்குப் பதியாமல் காவல் நிலையத்திலேயே முடித்து வைக்கப்பட்டுளது. இன்னொன்றும் முக்கியமாக பார்க்கவேண்டியுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 2014 ல் 89423; 2015 ல் 94172; 2016 ல் 106958 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகள் எத்தனை என்பது தெரியவில்லை.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தபடவில்லை என்பதை இதுபோன்ற நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்கள் மூலம் அறிந்துகொள்ளமுடியும். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து நாம் நடத்துகின்ற இந்தப் போராட்டங்களின் மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் காப்பாற்றப்படும்.

No comments: