Tuesday, January 23, 2018

பெத்தவன் - (நெடுங்கதை) - இமையம்




திவ்யாவின் தந்தை மரணமும், கண்ணகி உயிரோடு கொளுத்தப்பட்டதும் எப்படி நடந்திருக்கும் என்பதை உணரவேண்டுமானால் இந்தக் கதையை படிக்கவேண்டும். 
படித்ததிலிருந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மனதை விட்டு அகல மறுக்கின்றனர் முருகேசன், கண்ணகி, இளவரசன் எல்லாம். 
கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் தலித் இளைஞரும், வன்னியர் பெண்ணும் காதலிக்கின்றனர். வாழ்வதற்காக ஊரை விட்டு ஓடும் நான்கு முறையும் பிடிபடுகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காதலை ஏற்காத சாதிய சமூகம் பெண்ணை கொல்ல நினைக்கின்றது. அதுவும் தந்தையிடம் நீ கொல்கிறாயா நாங்கள் கொல்லட்டுமா என அச்சுறுத்துகின்றது. இதில் வேதனையடைந்த தந்தை பெண்ணை அவள் காதலித்தவனோடு சேர்ந்து வாழ யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். 
முருகேசனும் கண்ணகியும் கொலை செய்யப்பட்ட பிறகு, முருகேசனின் பெற்றோர் மற்றும் தம்பியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளேன். வழக்கறிஞர் ரத்தினம், தோழர் சுகுமாறன் உள்ளிட்டோருடன் கிராமத்திற்கும் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் எழாத உணர்வுகள் இந்த பெத்தவன் கதை மனதை உலுக்குகின்றது.
வாக்குமூலம் வழக்கில் இருக்கின்றது. படைப்புதான் வாழ்க்கையில் வருகின்றது. எங்களின் வாக்குமூலங்களைவிட இந்த படைப்புதான் பெரும் அதிர்வை உருவாக்குகின்றது. முருகேசனும் கண்ணகியும் வாழ்வதற்காக எப்படி போராடினார்காளோ அதைவிட அதிகமாக அவர்களின் கொலை வழக்கு பெரும் போராட்டங்களை சந்திக்கின்றது. முருகேசனையும் கண்ணகியையும் உயிரோடு கொளுத்தியது போன்று வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கின்றனர்.

No comments: