Sunday, July 15, 2012


சூன் மாத ஆலோசனைக் கூட்ட அறிக்கை
2012-2013 கல்வியாண்டின் முதல் மாதமான இந்த சூன் மாதத்திற்கான ஆலோசனைக் கூட்டம் 08.07.12 அன்று மாலை பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் பிரபா.கல்விமணி, அறக்கட்டளைத் துணைத் தலைவர் தி.அ.நசீர் அகமது, மதிய உணவுத் திட்டத் தலைவர் மு.பூபால், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.கிள்ளிவளவன், மேலாளர் இரா.முருகப்பன், உதவி ஆசிரியர் மு.சண்முகம், அறங்காவலர்கள் ஆசிரியர் சே.பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் அ.இராஜகணபதி, கோ.வடிவேல், செ.விஸ்வதாஸ், த.பாலகிருஷ்ணன், மதிய உணவுத் திட்ட ஆலோசகர் மருத்துவர் வே.மணி ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டம் 3.30 முதல் 6.00 வரை நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கட்டிட நிதி ரூ ஒன்றரை லட்சம் நிதி அளித்த அகரம் கல்வி அறக்கட்டளைக்கு நன்றி
  • அகரம் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து நமது பள்ளிக்கு உதவி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆசிரியர்கள் ஊதியத்திற்கு என ரூ 1,80,000/& ரூபாயும், கட்டிட நிதியாக 5,00,000/& அளித்துள்ளது. இந்த ஆண்டு கட்டிட நிதியாக தற்போது 06.07.12 அன்று அளித்த 1,50,000/& லட்சம் ரூபாய் என மொத்தம் இதுவரை 8,30,000/& நன்கொடை அளித்த அகரம் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கற்றல் கற்பித்தல் - ஆதாரவல்லுனர் குழு
  • பள்ளியின் அனைத்து வகுப்பிலும் கற்றல்&கற்பித்தல் நிலை குறித்த ஆய்வு செய்யவும், பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் கல்வியில் முன்னேற்ற சிறப்புக் கவனம் & பயிற்சி அளிப்பது தொடர்பானைவகளை செயல்படுத்தவும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களான அ.வரதராஜலு, ஓ.வி.பலராமன், கே.கோவிந்தராஜன், ஸ்ரீமந்திரம், கே.பொன்னன் ஆகிய 5 ஆசிரியர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு அமைப்பது என்றும், இக்குழுவினை மாதம் ஒருமுறை அனைத்து வகுப்பிலும் ஆய்வு செய்யக்கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
உதவி ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் - ஊதியம் 
  • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கு உடனடியாக மேற்கண்ட வல்லுநர் குழுவிலிருந்து இருவரைக்கொண்டு நேர்காணல் செய்து உரிய ஆசிரியரை தேர்ந்தெடுப்பது என்றும், விரைவில் இரவுக்காவலர் நியமனம் செய்ய உரிய முயற்சிகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
  • ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தி அளிப்பதற்கு, இப்போதுள்ள மாதாந்திர நன்கொடையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எனவும், கூடுதல் நன்கொடை திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
கல்வி வளர்ச்சி நாள் விழா
  • காமாரசர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக 28.07.2012 அன்று பள்ளியில் கொண்டாடுவது என்றும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அலுவர் திருமதி. இரா.பிருந்தாதேவி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ராமசாமி ஆகியோரை அழைப்பது என்றும்; பள்ளி வளர்சிக்கும், மாணவர் முன்னேற்றதிற்கும் தொடர்ந்து உதவியளித்து வருகின்ற ஆதரவாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியில் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.   
  • ஒலக்கூர் ஒன்றியத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று முதல் மூன்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்குவது என்றும், ஒரு பள்ளிக்கு ரூ. 1000/& மதிப்பில் பரிசளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒரு பள்ளிக்கு ஒருவர் என பரிசு வழங்குவதற்கான ஆதரவாளர்களை / நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு ஆதரவு கேட்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
  • ஏற்கனவே உள்ள சமையலறைக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் சமையலறையைத் திறப்பது. 
  • பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதி இளைஞர்கள் படிப்பார்வத்தினை வளர்த்தெடுக்க ‘‘காமராசர் படிப்பகம்’’ தொடங்குவது. இதற்கான படிப்பு மேசைகளை நன்கொடையாகப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
  • திண்டிவனம் பி.ஆர்.எஸ் துணிக்கடை அமைத்துக்கொடுக்கும் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கான ‘‘விளையாட்டுப் பூங்கா’’ தொடங்கி வைத்தல். 
  • மாணவர்களுக்கு இலவய சீருடை வழங்குது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
  • தாய்த்தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று 10&ஆம் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களையும்,  பள்ளியில் நடத்தப்பட்ட இலவயப்பயிற்சியில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
  • இந்த ஆண்டிற்கான 10-வகுப்பு இலவயப் பயிற்சியினைத் தொடங்குவது. 
  • இவைகளை நிறைவேற்ற அறங்காவலர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர், பொதுமக்கள் உள்ளிட்டோரின் ஆதரவினைக் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. உங்களால் இயன்ற ஆதரவினை, உதவியினை அளிக்க வேண்டுகின்றோம். 


No comments: