Thursday, September 13, 2007

ஜனநாயகம் (?)

கீழுள்ள
எழுத்துக்களெல்லாம் வார்த்தைகளல்ல
திருமதி. ராணி அவர்களின் வாழ்க்கை.



கீழ்க்கூடலூர் ஊராட்சி. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஈச்சேரி மற்றும் கீழ்க்கூடலூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. தலித் பெண்களுக்கான இந்த ஊராட்சிக்கு ஈச்சேரியைச் சேர்ந்த ராணி தலைவியாக இருக்கிறார். அவர் நமக்கு அளித்த வாக்குமூலம்.

நான் மேற்கண்ட ஊரில் என் கணவர் செல்வராஜ், மற்றும் மகன்கள் சீனுவாசன்(27), பிரபு (25) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமயாசிரியராக பணியாற்றி வருகிறார். நான் கடந்த முறை ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தேன். இந்த முறை எங்கள் பஞ்சாயத்தினை தலித் பெண்களுக்கு என ஒதுக்கியதால் நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தற்போது தலைவராக இருந்து வருகிறேன்.

எங்கள் கிராமத்திற்கு தினகரன் என்கிற நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் 10 வருடங்களும், ஆறுமுகம் என்கிற வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் 5 வருடங்களும் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்கள். எங்கள் ஈச்சேரி கிராமத்தில் மொத்தம் 20 தலித் குடும்பங்களே உள்ளன. 150 க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் உள்ளன. ஒரு சில வேறு சாதி குடும்பங்களும் உள்ளன. முதன் முறையாக கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலித் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில் நான் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றேன். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றுளார். இந்த செல்வத்தின் மகன் கஜேந்திரன, கடந்த 2003-ஆம் வருடம் ஊர்ப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக சாதி இந்துக்கள் அடித்தனர். இதற்காக அப்போது புகார் கொடுக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற்றால்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று தேர்தலின் போது சாதி இந்துக்கள் மிரட்டினர். ஆனால் நாங்கள் வழக்கை வாபஸ் பெறாமல் தேர்தல் வேலைகள் செய்தோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

இந்நிலையில்தான், கடந்த பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமலிருந்த தலித் குடியிருப்பிற்கும், சுடுகாட்டிற்கும் செல்கின்ற பாதையை அடைத்துக்கொண்டு, வழியை மறைத்துக் கொண்டு, போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்த முட்களை 01-09-07 அன்று காலை முதல் ஜே.சி.பி இயந்திரம் வைத்து பிடுங்க ஏற்பாடு செய்தேன். உறுப்பினர் செல்வம் உடனிருந்து உதவினார். தெருவில் ஒரு மின் கம்பத்தில் ஒட்டி வளர்ந்திருந்த முட்களை, மின் கம்பத்தில் ஏறுவதற்கு வசதியாக பிடுங்கினார்கள். அப்போது, அந்த மின் கம்பத்திற்கு அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கின்ற ராஜீ என்பவர், தன் வீட்டிற்கு வருகின்ற கேபிளை தடுக்கின்ற முட்களை வெட்டுமாறு செல்வத்திடம் கூறியுள்ளார். அதற்கு செல்வம், ‘‘அது பட்டா இடத்தில் உள்ளது. அதை நாங்கள் எப்படி வெட்டுவது’’ என்று கூறியுளார். அதற்கு ராஜீ ‘‘அது என் பங்காளி இடம்தான். நான் சொல்லிக்கொள்கிறேன். ஒன்றும் சொல்லமாட்டார்.’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். அதனால் அந்த ஒரு முள்ள மட்டும் வெட்டியுள்ளனர்.

அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த வன்னியரான மோகன் என்பவர் வந்து, ‘‘என்னுடய இடத்த நீங்க எப்படிடா சரி பண்ணலாம். பற நாய்களுக்கு தலவரானதும் ரொம்பதான் திமிர் ஏறிப்போச்சு’’ என்று மிரட்டிப் பேசியதுடன் இல்லாமல், தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தை அடித்து அவரது சட்டயை கிழித்து அங்கிருந்து விரட்டினார். அவர் பயத்தில் ஓடி வந்து என்னிடத்தில் நடந்ததைக் கூறினார். நான் உடனடியாக ஊர்ப்பெரியவர்களிடம் முறையிடுவதற்காக சென்றேன். ஆனால் மேற்படி மோகன் வழியிலேயே நின்றுகொண்டு, என்னை பெண் என்றும் பாராமல் மிகவும் இழிவுபடுத்தியும், அசிங்கமாகவும், மீண்டும் சொல்லக் கூட முடியாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார். அவருக்கு பதில் சொன்னால் பிரச்சனையாகும் என்பதால் ஊர் நாட்டாமை முனுசாமியிடம் முறையிட்டேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கும் அவன் கட்டுப்படவில்ல. நீங்க என்னா செய்யுனுமோ, செய்யுங்க’’ என்று கூறினார். வீட்டிற்கு திரும்பிய என்ன மேற்படி மோகன் மற்றும் அவருடைய உறவினார்களான நாகேந்திரன், கன்னியப்பன், ராமலிங்கம், ரவிக்குமார் ஆகியோர் வழிமறித்து அடித்து, இழுத்து, புடவயை உருவினார்கள். அப்போது மோகன், ‘‘நீ என்னாடி பரத்தேவிடியா நாயி, பெரிய மயிராட்டம் பேசுற’’ என்று கூறி, என்னுடைய தோளில் கை வைத்து ஜாக்கெடடைட கிழித்தார்.

அவமானம் தாங்க முடியாமல் நான் அங்கிருந்து என் வீட்டிற்கு வந்து பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஒலக்கூர் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தேன். புகாரைப் பெற்ற காவல் துறையினர் மனு ஏற்பு சான்று கூட வழங்கவில்லை. மேலும் நானும், உறுப்பினர் செல்வமும் உள்நோயாளியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றோம். மறுநாள் 2-ஆம் தேதி மாலை நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.

சிகிச்சையிலிருந்த செல்வம் 3-ஆம் தேதி காலை சாப்பிடுவதற்காக வெளியில் வந்த போது, ஒலக்கூர் காவல் துறையினர் பிடித்துச் சென்று கைது செய்தனர். மாலை வரை இவரைக் கைது செய்த செய்தியைக் கூட அவரது வீட்டிற்கு சொல்லாமல் மறைத்தனர். இத்தகவல் தெரியாத இவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சையில் இருந்தவரைக் காணோம் என்று தேடி அலைந்தனர்.

இந்நிலையில்தான், வன்கொடுமைக்கு ஆளாகி, பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவியான நான் மற்றும் என் கணவரும், தலைமயாசிரியருமான செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எங்கள் 7 பேர் மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளது தெரியவந்தது. ஒரு ஊராட்சி மன்றத் தலைவராகிய நான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த உண்மயான புகாரில் இரண்டு நாட்களாக வழக்கு பதிவு செய்யாத போலீசார், சாதி இந்துக்கள் கொடுத்த பொய்ப்புகாரில் உடனே வழக்கு பதிவு செய்து தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தைக் கைது செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர்.

No comments: