Sunday, October 13, 2024

சட்டங்களை தவறாகப் எப்படி பயன்படுத்தலாம் என தமிழகப் போலீசாரிடம் பயிற்சி எடுக்கலாம்!!




போக்சோ சட்டத்தை எப்படி தவறாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு

தமிழப் போலீசாரிடம், பிற மாநில போலீசார் பயிற்சி எடுக்கலாம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது குற்றம்.

கொடுத்தால் பொய் வழக்கு - சிறை - சித்திரவதை என அணுகும் காவல்துறை.

—------------------------------
முன்னாள் முதல்வர் கலைஞர் ‘’தமிழக காவல் துறையின் ஈரல் அழுகிவிட்டது” என்றார். அவரின் மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு, ’’காவல் துறையின் சித்திரவதைகளை நானும் அனுபவித்துள்ளேன்” என்று கூறியவர்.
தமிழகப் போலீசார் போக்சோ சட்டத்தை மிக மிக மோசமாக கையாள்வதையும், பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவதையும், இச்சட்டத்தை போலீசார் லஞ்சம் பெற்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.
காவல் துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கொஞ்சமும் திருத்திக்கொள்ளவில்லை.
70 வயதான பழங்குடி இருளர் பொன்னுசாமி. 70% மாற்றுத் திறனாளி. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார்.
அனந்தபுரம் போலீசார், குற்றமிழைத்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். அதுவும் போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர்.
அனந்தபுரம் போலீசார் இப்படி குற்றமிழைப்பது முதல் முறையல்ல. பழங்குடியினருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
அத்தியூர் விஜயா எனும் 17 வயது பழங்குடி இருளர் பெண்ணை, புதுச்சேரி போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ய உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுப்பதை ஒரு குற்றமாக பார்ப்பதில் விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் போலீசாருக்கு முதலிடம் அளிக்கலாம்

Saturday, October 12, 2024

தலித் ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டி வன்கொடுமை - நடவடிக்கை எடுக்க மறுக்கம் கடலூர் மாவட்ட காவல் துறை

தலித் ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டிய கந்துவட்டிகாரர் – 2021 இல் கொரோனாவில் இறந்து போன மகன் கடன் வாங்கியதாக வன்கொடுமை. குற்றமிழைத்தோருக்கு ஆதரவாக செயல்படும் கருவேப்பிலங்குறிச்சி கா.நி மற்றும் விருத்தாசலம் DSP.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கணபதிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் மாணிக்கம் மனைவி சின்னப்பொண்ணு (60). இவர் ஆதிதிடாவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் பட்டதாரியான சக்திவேல் திருமனமாகி மனைவி, ஒருமகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இவர் உயிரோடிருக்கும் போது, தன்னிடம் கடன் வாங்கியதாகவும், அதனை உடனே திருப்பிக் கொடுங்கள் என்றும், மேற்படி வயதான ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பொண்ணு, அவரது மருமகளும் மறைந்த சக்திவேலின் மனைவியுமான பரமேஸ்வரியையும் அதே ஊரிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, லட்சுமணன், இவரது மனைவி அஞ்சலை, மகள் அருணா ஆகியோர், தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 27.09.2024 அன்று காலை 11.15 மணியளவில், தலைவர் சின்னப்பொண்ணு வீட்டிற்குச் சென்ற மேற்படி லட்சுமணன், வீட்டிலிருந்த தலைவரின் கணவர் மாணிக்கம், மகள் கேசம்மாள் ஆகியோரை வீட்டிலிருந்து விரட்டி வெளியே தள்ளிவிட்டு, ’’பணத்தை கொடுக்கலன்னா.. வீட்டைதான் பூட்டுவேன்’’ என்று கூறிவிட்டு, தலைவரின் வீட்டிற்கு இரண்டு பூட்டுகளைப் போட்டு பூட்டியுள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபொண்ணு அப்போது அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தில் அன்றாட விவசாயக் கூலி வேலையாக மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்துள்ளார். மகள் கேசம்மாள், நேரடியாகச் சென்று கூறியபிறகு, வேலை முடிந்து ஊருக்குத் திரும்பிய ஊ.ம.தலைவர், தனது உறவினர்களுடன் அன்று மாலை 6.00 மணியளவில் கருவேப்பலங்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் என்பவரிடம் எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், மேற்படி லட்சுமணனை தொடர்பு கொண்டு வீட்டை திறந்துவிடும்படி பேசியுள்ளார். சுமார் 6.40 மணியளவில் லட்சுமணன் மனைவி அஞ்சலை, தலைவரின் வீட்டிற்குச் சென்று வீட்டை திறந்து விட்டுள்ளார். காவல் துறையினரும் சம்பவ இடத்திற்குச் உடனே சென்று விசாரணை செய்துள்ளனர்.
புகார் அளித்து சுமார் 10 நாட்கள் வரை விசாரணை எதுவும் நடைபெறாத நிலையில், தலைவர் சின்னப்பொண்ணு விரிவான புகார் எழுதி கடந்த 04.10.2024 அன்று மாண்புமிகு. முதல்வர் தனிப்பிரிவு, காவல் துறை உயர் அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணையம், SC/ST ஆணையம் ஆகியவற்றிற்கு புகார் அனுப்பினார்.
அதன்பிறகு, கருவேப்பலங்குறிச்சி காவல் நிலைய போலீசார் அழைப்பாணை விடுத்து கடந்த 08.10.2024 அன்று கலை சுமார் 11.45 மணியளவில் மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் விசாரணை செய்துள்ளார். அப்போது லட்சுமணனுக்கு ஆதரவாக சுற்று வட்டத்தில் உள்ள அவரது சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சுமார் பத்து நபர்கள் காவல் நிலையம் சென்று, சமரசமாக போக வலியுறுத்தியுள்ளனர். தலைவர் சின்னப்பொண்ணு, சமாதானமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு, மேற்படி SSI முருகானந்தம் அவர்கள், ’’புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகுது… நான் மேல் அதிகாரிகளிடம் சொல்லவில்லை.. லட்சுமணன் மன்னிப்பு கேட்கிறார்.. இதோடு சமரசமா போங்க.. லட்சுமணன் இனிமேல் பிரச்சணைக்கு வரமாட்டார்.. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கேட்டுள்ளார்.

இதன்பிறகும் வழக்கும் பதியாமல், விசாரணையும் நடத்தாமல், சின்னப்பொண்ணு உள்ளிட்ட அனைவரையும் வீட்டிற்கும் அனுப்பாமல் சமாதானத்திற்காக பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு ஆய்வாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், தலைவரிடம் விசாரணையில் பங்கேற்றதாகவும், CSR பெற்றுக் கொண்டதாகவும் கையொப்பம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், தலைவரிடம் CSR நகல் அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 10.10.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மாலை சுமார் 5.30 தலைவர் சின்னப்பொண்ணு, அவரது கணவர் மாணிக்கம், மகள் கேசம்மாள், மருமகள் பரமேஸ்வரி ஆகியோர் காவல் நிலையம் சென்றனர். அவர்களுக்கு உதவியாக மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு அவர்களும் சென்றார். சின்னப்பொண்ணுவை விசாரிப்பதற்காக மேற்படி SSI முருகானந்தம், காவல் உதவி ஆய்வாளர் அறைக்கு அழைத்துச் சென்றார். அனைவரும் உடன் சென்றுள்ளனர். அப்போது அவ்வறையில் லட்சுமணனும், அவரது மனைவி அஞ்சலையும் இருந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சிவராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் இருவரும், பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக சென்ற இரா.பாபு அவர்களை ’’நீங்கள் வெளியே இருங்கள்” என்று கூறியுள்ளனர். அப்போது தலைவர் சின்னப்பொண்ணு மகள் கேசம்மாள் ’’சார் எங்களுக்கு உதவியாக அவரும் இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார். உடனே உதவி ஆய்வாளர் சிவராமன் நீயும் வெளியே போய் இரு எனக்கூறி, பாபு, கேசம்மாள் இருவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
பிறகு விசாரணையை முடிந்து சுமார் 7.25 மணியளவில் தலைவர் சின்னப்பொண்ணு அவரது கணவர், மருமகள் மூவரும் அழுதுக்கொண்டே வெளியே வந்ததைப் பார்த்து என்ன நடந்தது என இரா.பாபு கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு ’’வீட்டை பூட்டி.. எங்கள் அசிங்கப்படுத்தனது பத்தி விசாரிக்காமல்… சாதிய சொல்லி திட்டுனாங்களா.. என போலீஸ் திரும்ப, திரும்ப கேட்டங்க…. லட்சுமணனை பக்கதுல வச்சிகிட்டே என்னை கேட்கிறாங்க.. அவர நினைச்சு பயத்துல என்னால சரியா பேசமுடியல..” எனக் கூறிக் கொண்டே சின்னப்பொண்ணும், பரமேஸ்வரியும் தலையிலே அடித்துக்கொண்டு அழுதுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் 2015 ல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் உரிமைகள் என்ற பிரிவு 15(A) உட்பிரிவு (12) ‘’அரசு சாரா அமைப்புகள், சமூகப் பணியாளர்கள் அல்லது வழக்குறைஞர்களிடமிருந்து உதவி பெறுவது பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போரின் உரிமையாகும்” என்று கூறுகிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 வயது ஊராட்சி மன்றத் தலைவருக்கு உதவியாக வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் பிரிவு 15(A) உட்பிரிவு (12) இன் படி உதவிடச் சென்ற இரா.பாபு மற்றும் பாதிக்கப்பட்ட ஊ.ம.தலைவரின் மகளையும் விசாரணையின்போது உடனிருக்க அனுமதிக்காமல் - காவல் நிலையத்திலிருந்து உள்நோக்கத்துடன் வெளியேற்றிய – கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது – SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து – நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(12.10.24 முகநூல்)