Tuesday, April 8, 2008

ஒகேனக்கல்

தமிழகத்தில் காவிரி நுழையும் பில்லிகுண்டுவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. நீர் பரந்து விரிந்து வரும் கரையான வனநீர்பரப்பு பகுதி தமிழக & கர்நாடக மாநிலங்களுக்கு சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு பகுதியின் கரைகளுக்கும் இடையிலான 50 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்பரப்பு 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரை அகலமுள்ளதாகும். இதற்கிடையில்தான் காவிரி நீரின் பெரிய நீர்வீழ்ச்சியான, பிரச்சனைக்குறிய சிறுமலை உள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு படேல் தலைமையிலான கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர்த்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கேள்வி எழுப்பியது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரகம் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, குடிநீருக்காக அவரவர் பங்கிற்கான காவிரி நீரை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என அறிவித்து, இது தொடர்பாக 21.09.1998 அன்று ஒரு ஆணையும் வெளியிட்டது. இதையடுத்து கர்நாடகம் பெங்களூர் குடிநீர் திட்டத்தை மேற்கொண்டது.



இந்நிலையில் தமிழக அரசு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கொண்டுவந்ததது. ஜப்பான் நிதியுதவியுடன் 1998-99 ஆம் ஆண்டிலேய இத்திட்டத்தை தொடங்க முயற்சித்தது தமிழக அரசு. ஆனால் அப்போதைய மத்திய பா.ஜ.க அரசு பொக்ரானில் அணுவெடி சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.



மீண்டும், தற்போதைய தி.மு.க அரசு, ஜப்பான் நாட்டின் 1330 கோடி நிதி உதவியுடன் இந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திற்காக கடந்த 26.03.08 அன்று அடிக்கல் நாட்டியது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 18 ஒன்றியங்கள், 17 பேருராட்சிகள், 3 நகராட்சிகள் ஆகியவைகளும், இப்பகுதிகளில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் பயனடைய உள்ளார்கள். இந்நிலையில்தான் கர்நாடகத்தில் உள்ள கன்னட சலுவாலி அமைப்பு, கன்னட ரக்ஷனவேதிகே, ஒகேனக்கல் உரிமை மீட்புக்குழு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கல் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியதோடு, ‘‘ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தமானது’’ என்றும் பேசினர். வருகிற மே மாதம் கர்நாடக மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்குள்ள மாநில மற்றும் தேசியக் கட்சிகள் ஓட்டு வங்கியை குறிவைத்து இத்திட்டத்தை எதித்து களத்தில் குதித்தன. அதில் முதலில் கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைபடங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முதலில் தாக்கபட்டன. பின்பு தமிழ் மக்களும், தமிழர்களின் சொத்துகளும், தமிழ்த் தினசரியான தினத்தந்தி அலுவலுகமும், தமிழகப் பேருந்துகளும் கடும் தாக்குதலுக்கு ஆளாகின.



இந்நிலையில்தான் கடந்த மாதம் 27&ஆம் தேதி, நிதிநிலை கூட்டத்தொடரில் நடந்துகொண்டிருந்த தமிழக சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார். தமிழகத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் தமிழக அரசின் இத்தீர்மானத்தை ஆதரித்தன.



கடந்த 2005 ஆண்டு இதே போன்று பிரச்சனை எழுந்துபோது அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக, கர்நாடக அதிகாரிகள் அனைவரும் ஒன்றினைந்து, எல்லை வரைபடத்தை வைத்துக்கொண்டு, ஒகேனக்கல் இடைத்திட்டுப் பகுதி, சிற்றருவி போன்றவை தமிழகத்திற்கு சொந்தாமானவை என்று உறுதிபடத் தெரிவித்தார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, கர்நாடகத்தில் முதல்வர் வாய்ப்பை இழந்த எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜீனே கார்கே, முன்னாள் அமைச்சர் நஞ்ச கவுடே போன்றோர் ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி பித்தலாட்ட அரசியல் நடத்தி வருகிறார்கள்.



தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்கட்சிகளான அ.தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்டவைகளும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஓரணியில் நின்றன. அனைத்து கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின, நடத்தி வருகின்றன.



தமிழக அரசு கடந்த 01.04.08 அன்று சட்டசபையில், ‘‘இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்பாறும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க மைய அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்’’ என்று மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் தமிழகத்திலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் தன்னெழுச்சியாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றினார்கள். கர்நாடகத்தில் முதலில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தமிழ்த் திரையுலகினர் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து, இத்திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது.



இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் மே 10,16, 22 ஆகிய தேதிகளில் கட்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிராவின் ஆளுனருமான எஸ்.எம் கிருஷ்ணா, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை ஒத்தி வைக்கும்படி மத்திய அரசை கேட்கப்போவதாக அறிவித்ததுடன், டெல்லி சென்று பிரதமரையும், சோனியாவையும் நேரில் சந்தித்துப் பேசினார். பின்பு தி.மு.க வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமர், சோனியா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.



இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது தமிழக அரசு. ஆனால் கடந்த 05.04.08 அன்று ‘‘கர்நாடகத்தில் தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறப்போகிற ஆட்சியா வந்துவிடப்போகிறது.பயிர் வாழத்தான் தண்ணீர் இல்லை என்றார்கள், உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்? நியாயம் வெல்லும். கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் கலந்துபேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்’’ என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.



காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில், தமிழகத்திற்கு உரிமையுள்ள 14 டி.எம்.சி நீரை எடுப்பதற்கு மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு திடீரென கர்நாடக சாதகமான முடிவேடுத்ததில் தேர்தலைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் உண்மை.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் வாழ்வாதாரத் திட்டமான இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

Thursday, March 27, 2008

காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்











13.03.08
அனுப்புதல்
இரா.முருகப்பன்,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
56/52 விவேகானந்தா நகர்,
மரக்காணம் சாலை,
திண்டிவனம் - 604 002.

பெறுதல்
தலைவர்,
மாநில மனித உரிமை ஆணையம்,
திருவரங்கம் மளிகை,
143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
கிரின்வேஸ் ரோடு,
சென்னை - 28.

ஐயா,
பொருள் : உளுந்தூர்பேட்டை வட்டம், எரையூர் கிராமத்தில், தலித் கிறித்துவர்கள் மீதும், வீடுகள் மீதும் தாக்குதல் - போலீசார் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி - சம்பவம் தொடர்பான கள ஆய்வின்போது, வழக்கு தொடர்பான விவரம் அறியச் சென்ற என்னை காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றி ; அவமானப்படுத்தி ; தாக்க முயற்சித்த எலவனாசூர்கோட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பு-



வணக்கம்.

நான் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் என்கிற மனித உரிமை அமைப்பின் விழுப்புரம் மாவட்ட மனித உரிமைக்காப்பாளராக பணியாற்றி வருகிறேன். தலித் மக்கள் மீதான வன்கொடுமை, தீண்டாமை, சமூகப் புறக்கணிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக சட்ட ரீதியான செயல்பாடுகளை செய்துவருகிறது.
2) கடந்த 09.03.08 ஞாயிறு காலை, உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் வன்னியர் கிறித்துவர்களால், தலித் கிறித்துவர்களூம், அவர்களது வீடுகளும் தாக்கப்பட்டும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து, நொறுக்கப்பட்டும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தலித் மக்கள் மீதான வன்னியர் கிறித்துவர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றபோது நடந்த காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு வன்னியர் கிறித்துவர்கள் இறந்துள்ளனர். மேற்படி சம்பவத் தகவல் கிடைக்கப்பெற்று, எங்களுடைய இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பில், சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்படி கிராமத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினரையும், மற்றும் பிற பொதுமக்களையும் பார்த்து, பேசி, ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்தோம். 3) மறுநாள் 10.03.08 திங்கள் அன்று மீண்டும் மேற்படி கிராமத்திற்கு சென்று, கள ஆய்வு செய்தோம். அப்போது என்னுடன் எமது அமைப்பின் கடலூர் மாவட்ட மனித உரிமைக் காப்பாளர் சரவணக்குமார், தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளரான விழுப்புரத்தை சேர்ந்த ஜோதிநரசிம்மன் ஆகியோர் வந்திருந்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் தெரிந்துகொள்வதற்காக, மேற்படி எறையூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு 10.03.08 அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் சென்றோம்.

4) நான், சரவணகுமார் ஆகிய இருவரும் காவல் நிலையம் சென்றோம். காவல் நிலையத்தின் கிரில் கதவுகள் சாத்தப்பட்டிருந்த நிலையில், கதவருகில் நின்றுகொண்டிருந்த காவலர் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வழக்கு எண், பிரிவுகள் ஆகிய தகவல்களை அறிய வந்திருப்பதை சொன்னேன். அவர் என்னிடம் அடையாள அட்டை கேட்டார். நான் தந்ததும், அவர் உள்ளே உட்கார்ந்திருந்த காவலதிகாரிகளிடம் அடையாள அட்டையைக் காட்டி விபரத்தைச் சொன்னார். அதற்கு அங்கிருந்த காவலதிகாரி ஒரு அரமணி நேரம் கழித்து சொல்வதாகச் சொல்லுங்கள் என்றார். இதைக் மேற்படிக் காவலர் என்னிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே, உள்ளிருந்த வேறு காவலதிகாரி அவர்கள் கேட்கும் தகவலை சொல்லி அனுப்புங்கள் என்றார். அப்போது வெளியில் வந்த வேறு ஒரு காவலதிகாரி, ‘‘ ஒரு 10 நிமிடம் இருங்க சார், இந்த கைதிகளையெல்லாம் வண்டி ஏத்திட்டு, உங்களுக்கு அனைத்தையும் சொல்கிறோம்’’ என்றார். நாங்கள் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் காத்திருந்தோம்.

சில நிமிடங்களில் காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியில் வந்த ஆய்வாளர் ராஜேந்திரன், ‘‘உங்களுக்கு என்ன வேணும், இங்க எதுக்கு நிக்கிறீஙக, போங்க’’ என்றார். அப்போது நான், மேற்படி எறையூர் சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்கின் எண், பிரிவுகள் தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளேன் என்பதைக்கூறினேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘அதெல்லாம் தர முடியாது, வெளிய போ’’ என்றார். நான், மீண்டும் மனித உரிமை அமைப்பில் இருந்து வந்திருப்பதைக் கூறினேன். அதற்கும் அவர், ‘‘ஒரு தடவ சொன்னா புரியாதா முதல்ல ஸ்டேஷன விட்டு வெளிய போ’’ என்றார். அதற்கு நான், ‘‘சார் தருவதாக சொல்லியுளார். அதற்காக நிற்கிறேன்’’ என்றேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘அதெல்லாம் எந்த சாரும் தரமாட்டாங்க, வெளிய போ என்று’’ என் மீது கைவைத்து என்னை நிலைய வளாகத்திலிருந்து வெளியே தள்ளினார். ‘‘எதுக்கு சார் வெளியில் போகச் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டேன். அதற்கு ஆய்வாளர் ‘‘ஏய்... இது என்னோட ஸ்டேஷன் வெளியில போ’’ என்றார். அப்போது காவல் நிலையத்தின் உள்ளிருந்து சீருடையணியாத, அடையாளம் தெரிந்த ஒரு காவலதிகாரியும், மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களுடன் சேர்ந்து என்னை நெட்டித்தள்ளியும், சட்டையை பிடித்து இழுத்தும், மெயின் ரோட்டில் தள்ளினார்கள். என்னுடன் வந்திருந்த சரவணகுமார் தடுப்பதற்கு முயன்றார். காவல்நிலையத்தில் இருந்த 20&க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாதுகாப்பிற்கு வந்திருந்த சுமார் 35 ஆண், பெண் காவலர்களும் இச்சம்பவத்தை பார்த்தனர். சத்தம் கேட்டு, என்னுடன் வந்திருந்த மேற்படி ஜோதி நரசிம்மன் என்னிடம் வந்தார். நான் நடந்ததைச் சொன்னேன்.

5) அப்போது, அங்கு நின்றிருந்த காவல் வண்டியில் காவல் நிலையத்தின் உள்ளிருந்த சிலரை ஏற்றினார்கள். அதை மேற்படி தமிழன் தொலைக்காட்சி செய்தியாளரான ஜோதி நரசிம்மன் படம் எடுத்தார். நான் அருகில் நின்றிருந்தேன். அப்போது மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன் எங்களிடம் வந்து, ‘‘உள்ள வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அப்புறம் என்னா வந்து படம் எடுக்கறீங்க’’ என்று மிரட்டிக்கொண்டே அருகில் வந்து, மேற்படி ஜோதி நரசிம்மன் கையிலிருந்த கேமராவை பிடுங்கினார். அப்போது நான், ‘‘என்னாங்க சார் கையில் இருக்கிற கேமராவ எல்லாம் பிடுக்கிறீங்க’’ என்றேன். அதற்கு மேற்படி ஆய்வாளர், ‘‘ஏய் இது என் ஸ்டேசன்யா’’ என்று கையை ஓங்கிக்கொண்டு அருகே வந்தார். அப்போது வேறு காவலர்கள் வந்து அவரைத் தடுத்தார்கள்.

மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவன் என்று தெரிந்தும், கேட்ட தகவலை தரமுடியாது என்று மறுத்தும், காவல் நிலைய வளாகத்தின் மரத்தடியில் கூட நிற்கவிடாமல், வெளியே தள்ளி, தாக்க முயற்சித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட மேற்படி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. ராஜேந்திரனையும், அவருடன் சீருடை அணியாமலிருந்த, அடையாளாம் தெரிந்த காவலதிகாரியையும், உடனடியாக பணிநீக்கம் செய்து, மேற்படி இரு காவலதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவன்,

(இரா.முருகப்பன்)

இணைப்பு : மேற்படி சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, மற்றும் மேற்படி ஆய்வாளர் ராஜேந்திரன், வேறொடு கிராமத்தில் பொதுமக்களை மிக மோசமாக விரட்டி, விரட்டி லத்தியால் அடித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சம்பவத்தின் புகைப்படங்கள் அடங்கிய சி.டி.