Saturday, June 30, 2012


அனுப்புனர்
பூவரசன்(19) த/பெ ஏழுமலை,
55,மாரியம்மன் கோயில் தெரு,
மானூர் கிராமம்,
ஆத்தூர்&அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

பெறுநர்,
1. காவல் கண்காணிப்பாளர்,
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.
2. மாவட்ட ஆட்சியர்,
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.
3. காவல் துணைக்கண்காணிப்பாளர்
திண்டிவனம் உட்கோட்டம், திண்டிவனம்.

அய்யா,
பொருள் :  தலித் அல்லாத பெண்ண காதலித்தற்காக தாக்குதலுக்கு ஆளாகி & செல்பேசி வழியாக மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வரும் எனக்கு & பாதுகாப்பு கோருதல் 

வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் என் பெற்றோருடன் நிரந்தரமாக வசித்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்தவன் ஆகும்.  நான் எண்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  12&ம் வகுப்பு, ‘‘பி’’ பிரிவில் கணிணி படித்து, தற்போது தேர்வு எழுதியுள்ளேன்.
அதே பள்ளியில் கட்டளையைச் சேர்ந்த சிவரஞ்சினி(18) என்பவரும் ‘‘பி’’ பிரிவில் அறிவியல் பாடம் படித்தார். இருவரும் ஒரே வகுப்பு என்பதாலும், அருகருகே உள்ள ஊர் என்பதாலும் பேசிப்பழகினோம். நாளடைவில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். நாங்கள் இருவரும் விரும்பி காதலிப்பது எங்களது நண்பர்கள், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் எனது உறவினர்கள் சிலருக்கும் தெரியும். மேலும், அப்போது சிவரஞ்சனி எனது வீட்டிற்கும் சில முறை வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் எங்கள் இருவருக்கும் பொதுதேர்வு நடைபெற்றது.  அப்போது சிவரஞ்சனியின் வீட்டிற்கு எங்களது காதல் தெரிந்ததால், சிவரஞ்சனியை வேதியியல், விலங்கியல் ஆகிய இரண்டு தேர்வு எழுத அனுமதிக்காமல், சென்னையில் அவர்களது வீட்டிலேயே அடைத்து வைத்தனர். 22.03.12 அன்று நான் வேதியியல் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, எனது அறை கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ‘‘யாரப்பா இது புவியரசன். உனக்கு தெரிஞ்சபொண்ணு சென்னயில் இருந்து வரும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சாமே’’ என்றார். சென்னையில் இருந்து தேர்வு எழுதுவதற்காக வரும்போது சிவரஞ்சினிக்குதான் விபத்து நடந்துள்ளது என நினைத்து நான் வெளியே செல்ல அனுமதி கேட்டேன். கிடைக்கவில்லை. ஆனால் என்னால் தேர்வும் ஒழுங்காக எழுதமுடியவில்லை. தேர்வு முடிந்து மதியம்  வெளியில் வந்து எனது செல்பேசியை ஆன் செய்ததும், சிவரஞ்சினியின் செல்பேசியில் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வந்தது. அதில், அடிபட்டு சேகர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் இருந்தது.  அதனால் நான் உடனே மேற்படி மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு மேற்படி சிவரஞ்சினி இல்லை. ஆனால், சிவரஞ்சனியின் தாய்மாமனும், திண்டிவனம் ரோசனை காவல் நிலையக் காவலரான  திருஞானசம்பந்தம், மற்றும் பிரம்மதேச காவல் நிலையக் காவலர் தேவநாதன் அவரது நண்பர் பைனான்ஸ் பாஸ்கர் அவர்கள் அங்கிருந்தனர்.  மூவரும் என்னைப் பிடித்து அடித்து, மருத்துவமனைக்கு எதிரில் உள்ள செல்போன் & நகை அடகு கடைக்கு (சரஸ்வதி கேஸ் நிறுவனத்திற்கு அருகில்) இழுத்துச்சென்றனர். அங்கு வைத்தும் என்னை அடித்தனர் அப்போது  எனது  மார்பில் நான் சிவரஞ்சினியின் பெயர் பச்சை குத்தியிருந்ததை பார்த்துவிட்டு, ‘‘பறையனுக்கு கவுண்டர் பொண்ணு கேட்குதா’’ என்று சாதி சொல்லி இழிவுப் படுத்தி திட்டி மேலும் அடித்தார்கள். அத்துடன் மார்பில் சிவரஞ்சனியின் பெயரை பச்சைகுத்தியிருந்த எழுத்துகளை பிளேடால் சுரண்டி, குத்தி, கிழித்து அழித்தார்கள். வலிதாங்க முடியாமல் கத்தினேன். அப்போது மேற்படி இரு போலீசார் உள்ளிட்ட மூவரும் என்னிடம் ‘‘இனிமேல் அந்த பெண்ணைப் பார்க்கவோ, பேசவோ கூடாது’’ என்று என்னிடத்தில் எழுதி வாங்கினார்கள். என்னுடைய செல்பேசியையும் பிடுங்கிக்கொண்டார்கள்.
அதன்பிறகு நான் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் கூறியவுடன் அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ மனையில் என்னை உள்நோயாளியாக சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டு, எனது தந்தை திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் மருத்துவமனையில் இருந்தபோது, அன்று இரவு டி.எஸ்.பி அவர்கள் மேற்படி காவலர்களையும், எனது பெற்றோர்களையும் அழைத்து விசாரித்துள்ளார். அதன்பிறகு மேற்படி போலீசார் எனது பெற்றோரிடம் நடந்தவைகளுக்கு வருத்தம் மன்னிப்புக் கேட்டும், ‘‘இனிமேல் பூவரசன் வழக்கு தொடர்பாக எதுவும் தலையிடமாட்டேன்’’ என்றும் டி.எஸ்.பி முன்னிலையில் எழுதிக்கொடுத்தனர்.  இதனால் மேற்கொண்டு எனது மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தனர்.
அதன்பின்பு சிலநாட்கள் கழித்து எனது செல்பேசிக்கு 9751295967 என்கிற செல்பேசியிலிருந்து தொடர்ந்து அடிக்கடி என்னை அசிங்கமாகவும், கேவலமாகவும் திட்டி குறுஞ்செய்திகள் வந்தது. சிலநேரங்களில் தொலைபேசி செய்தும் கேவலமாகவும், அசிங்கமாகவும் வெளியில் சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார்கள். ‘‘நீ எப்ப இருந்தாலும் என் கையில மாட்டுவடா, திண்டிவனம் வந்துதானே ஆவனும், அப்ப உன்னப்பாத்துகிறேன்’’ என்றும் மிரட்டினார்கள். மேலும் ‘‘நான் யார் தெரியுமாடா எம்.பி,சிடா. என்ன ஒன்னும் செய்யமுடியாதுடா’’ என்றும் மிரட்டல் குறுஞ்செய்தி வந்தது. அதனால் கடந்த 04.05.2012 அன்று, திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து என்னை தொலைபேசியில் மிரட்டுவது, எஸ்.எம்.எஸ் அனுப்பி சித்திரவதை செய்வதைக் குறிப்பிட்டேன். முன்பு ஒருமுறை நான் சிவரஞ்சனியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு டூவீலரில் வந்த மூன்று பேரி என்னை அடித்து, மிரட்டிச் சென்றார்கள். அவர்கள்தான் இதுபோன்று செல்பேசியில் மிரட்டுகின்றார்களோ என்ற சந்தேகத்தையும் நான் டி.எஸ்.பி அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் செல்பேசி எண் 9751295967 மற்றும் டூ வீலர் எண் ஜிழி -25 வி 2498 இரண்டையும் கேட்டு வாங்கினார். நானும் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு சில நாட்கள் தொல்லையில்லாமல் இருந்தது.
இந்நிலையில் 16.05.12 நேற்று இரவு 11.28 மணிக்கு மீண்டும் மேற்படி 9751295967 என்ற செல்பேசியிலிருந்து அழைத்து வந்தது.  நான் யார் என்று கேட்டதும்,  ‘‘டேய் பறைத்தேவிடியா பையா எங்கடா இருக்கா சிவரஞ்சினியை என்னிடம் அனுப்பி வையுடா? உனக்கு ரொம்ப திமிறாடா? மரியாதையாக ஊரைவிட்டு ஒடிவிடு? இல்லையனா நீ ஆம்பளையா இருந்த திண்டிவனம் வாடா உன்னை விடமாட்டேன். என்னக்கி இருந்தாலும் நீ என் கையில மாட்டுவ இல்ல. அப்ப பாத்துகிறேன்’’ என்னை மிரட்டினார்.  அப்போது நான் ‘‘ஏற்கனவே நான் டி.எஸ்.பி கிட்ட புகார் கொடுத்திருக்கின்றேன். போலீஸ் ரெண்டு நாளில் உன்ன கண்டுபிடிச்சிடுவாங்க’’ என்று நான் கூறினேன். அதற்கு அவர் ‘‘நீ எங்கவேணாலும் புகார் கொடு. என்ன ஒன்னும் பிடுங்கமுடியாது’’ என்று கூறி தொலைபேசியை நிறுத்திவிட்டார். அதன்பிறகு நான் உடனடியாக தொடர்புகொண்டேன் ‘‘ஸ்விட்ச் ஆஃப்’’ என்று வந்தது.
இவ்வாறு தொடர்ந்து என்னை தொலைபேசியில் மிரட்டி,  தொல்லைகொடுத்து, அச்சுறுத்தி வருகின்றவர்களால் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ பாதுகாப்பாற்ற சூழ் நிலை உள்ளது. எனது கிராமத்தைச் சேர்ந்தவரும் எனது உறவினருமான ராஜா த/பெ ஏழுமலை என்பவர், காலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா த/பெ கோவிந்தராஜ் என்கிற வன்னியர் பெண்ணை 2007&ஆம் ஆண்டு காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டதால், மேற்படி சுதாவின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ராஜாவை கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இவ்வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நானும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிவரஞ்சனியும் சாதி வித்தியாசம் பார்க்காமல் இருவரும் ஒருவரையருவர் விரும்பி வருகிறோம். இரண்டொரு வருடங்களில் ஒரு வேலைக்குச் சென்று நிரந்த வருமானம் உருவானதும் திருமணம் செய்துகொள்வதாக திட்டமிருந்தோம். ஆனால் இந்நிலையில் எதிர்பாராமல் சிவரஞ்சினியின் வீட்டிற்குத் தெரிந்து இவ்வளவு சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டது. போலீசாரே என்னை திட்டமிட்டு பொய்சொல்லி வரவழைத்து, மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்ற  திண்டிவனம் கடைத்தெருவில், ஒரு கடையில் வைத்து தாக்கி சித்திரவதை செய்தனர். இவ்வளவு செல்வாக்கு மிக்கவர்கள் இருக்கின்ற நிலையில், தொடர்ந்து எனது செல்பேசிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் வருவதுடன், அசிங்கமாகவும் கேவலமாகவும் வருகின்ற குறுஞ்செய்திகளால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றேன். இவ்வாறு செல்பேசி மூலம் தொல்லை கொடுப்பவரைக் கண்டறிந்தால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உள்ள ஆபத்துகள் குறித்தும் கண்டறிய முடியும் என நம்புகின்றேன்.
அய்யா அவர்கள் இம்மனு மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். எனக்கு செல்பேசி மூலம் தொல்லை கொடுப்பவரைக் கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
   இவண்,


இணைப்பு : 
1. 22.3.12 அன்று காவல் நிலையத்தில் எனது தந்தை அளித்த புகார் மனு.
2. மேற்படி திருஞானசம்பந்தம் மற்றும் ராஜேஷ்
ஆகிய இருகாவலர்கள் மற்றும் பாஸ்கர்
ஆகியோர் எழுதிக்கொடுத்த மன்னிப்புக்கடிதம்.


Friday, February 10, 2012

மனித மலத்தை மனிதனையே தின்னவைத்தக் கொடுமை!


மனித மலத்தை மனிதனையே தின்னவைத்தக் கொடுமை!

மாவட்ட காவல் மற்றும் நிர்வாகத் துறைகளின் அலட்சியம்!




விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை, எம்.ஜி.ஆர் நகரில் கல்உடைக்கும் தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இக்குடும்பத்தினர் அனைவரும் அப்பகுதிகளில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர்களில் கல் உடைப்பது, லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். வெள்ளையன்(40), பூபதியம்மாள்(36) தம்பதியினர் சிறுவயதிலிருந்தே அவர்களது பெற்றோர்கள் காலத்திலிருந்தே இப்பகுதிகளில் குவாரிகளில் வேலை செய்துவருகின்றனர்.

கடந்த 31-01-12 அன்று காலை திருவக்கரையைச் சேர்ந்த துரை புளு மெட்டல் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பழனியாண்டி (எ) துரை மேற்படி வெள்ளையனின் மாமியார் சின்னப்பொன்னு வீட்டிற்குச் சென்று அங்கிருந்த வெள்ளையனை அடித்து வெளியில் இழுத்து வந்து தொடர்ந்து அடித்துள்ளார். மேலும், தொலைபேசி மூலம் கார் வரவழைத்து 3 டி.வி, ஒரு டி.வி.டி பிளேயர், ஒரு டி.வி.எஸ். ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளார். மேலும், வெள்ளையனையும் ஒரு வண்டியில் இழுத்துக்கொண்டு அவரது கல்குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்தும் வெள்ளையனை ‘‘சம்மட்டிய ஏண்டா திருடின’’ என்று கூறி கடுமையாக அடித்துள்ளார். அதற்கு வெள்ளையன் ‘‘நான் திருடல. தாம்பரத்துகாரர்தான், தன்னோட சம்மட்டிதான் குவாரில கூலி கொடுக்கல. உடம்பு சரியில்ல அவசரமா ஊருக்கு போகனும் விக்கனும்னு சொன்னான். அதானல எங்க பகுதில இருந்தவங்க வாங்கினாங்க’’ என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த தாம்பரத்துக்காரர் என்பவரையும் வரவழைத்து இருவரையும் கடுமையாக தடியால் அடித்துள்ளார் துரை. இதில் வெள்ளையன் மயக்கமானார். இவரின் மனைவி, மாமியார், மைத்துனர் உள்ளிட்டோர் எவ்வளவோ தடுத்தும் துரை தொடர்ந்து அடித்ததுடன், குவாரியில் இருந்த இரு சிறுவர்களை அழைத்து மலம் கழிக்கச் சொல்லியுள்ளார். அவர்களிருவரும் உட்கார்ந்து மலம் வரவில்லை என சென்றுள்ளனர்.

அதன்பிறகு மேற்படி துரையே அருகில் பள்ளத்தில் இறங்கி மலங்கழித்துவிட்டு, அருகிலுள்ள குட்டையில் கழுவிக்கொண்டு வந்து, ஆட்களை அழைத்து சட்டி கொண்டுவரச்சொல்லியுள்ளார். சட்டி வந்ததும் தாம்பரத்துக்காரர் என்பவரிடம் கொடுத்து மலத்தை சட்டியில் அள்ளிவரச் செய்துள்ளார். மறுத்து தயங்கியவரை கடுமையாக துரை அடித்துள்ளார். அடிதாங்க முடியாமல் அவர் சட்டியில் மலத்தை அள்ளி வந்துள்ளார். அதன்பிறகு மயக்கத்தில் கிடந்த வெள்ளையனையும் தடியால் அடித்து எழுப்பி ‘‘இருவரும் இந்தப் பீயைத் தின்னுங்கடா. எவ்வளவு திமிறு இருந்தா திருடிவீங்க’’ என்று கூறியுள்ளார். அங்கிருந்த பூபதியம்மாள், அவரது தாய்மாமன் மாரிமுத்து உள்ளிட்டோர் ‘‘அவன் திருடிலங்க ஓனர். ஏன் இப்படி பன்றீங்க. அந்த சமிட்டியும்தான் நீங்க எடுத்துகிட்டு வந்துட்டீங்களே. வேணும்னா போலீசுல கூட கொண்டுபோய் விடுங்க’’ கூறியுள்ளார். ஆனாலும் துரை எதையும் காதில் வாங்காமல் இருவரையும் அடித்து மலத்தை திண்ணும்படி சித்திரவதை செய்துள்ளார். அடிக்குப் பயந்து இருவரும் மலத்தை அள்ளி தின்றுள்ளனர். அப்போது துரை ஒரு கையில் செல்போனில் அவர்கள் மலம் திண்ணும் காட்சியினை படம் எடுத்தபடி, ஒரு கையில் தடியை வைத்துக்கொண்டு அடித்துக்கொண்டே இருந்துள்ளார். குவாரியில் இருந்த அனைவரையும் கட்டாயப்படுத்தி வரவழைத்து இச்சம்பவத்தை காணும்படி செய்துள்ளார்.

அதன்பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். கோயிலில்படுத்திருந்த வெள்ளையனை அன்று மாலையிலிருந்தே காணவில்லை. வெளியில் சொன்னாலோ, புகார் கொடுத்தாலோ மீண்டும் மலம் திண்ண செய்துவிடுவாரோ என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளனர் வெள்ளையன் குடும்பத்தினர். 3 நாட்களாகியும் வெள்ளையன் காணாத நிலையில், 03.02.12 அன்று அப்பகுதியின் சி.பி.ஐ.(எம்) கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் ரவிச்சந்திரனிடம் மேற்படி மாரிமுத்து நடந்ததைக் கூறியுள்ளார். அவர்மூலம் புகார் எழுதிக்கொண்டு மறுநாள் 04.02.12 அன்று காலை பூபதியம்மாள் வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் துரையை வரவழைத்துள்ளனர். அவர் போலீசாரிடம் ‘‘தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்’’ என்று கூறியுள்ளார். அவரது செல்போனை வாங்கிப்பார்த்த போலீசார் இரு செல்போனையும் அவர்களே வைத்துக்கொண்டு துரையை அனுப்பியுள்ளனர். அதன்பிறகு பூபதியம்மாள் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் அளித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
மனம் வெறுத்து கொடுமை நடந்த இடத்தைவிட்டு எங்கே செல்கிறோம் எனத் தெரியாமல் மனம்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த வெள்ளையன் 8&ஆம் தேதி மாலை விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்தபோது உறவினர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு போலீசர் அவசர அவசரமாக குற்றமிழைத்த பழனியாண்டியை கைது செய்யாமல், நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்கள் என்ற நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.

அதே நேரத்தில் காணாமல் போயுள்ள தாம்பரத்துக்காரர் என்கிற வீரப்பனை இதுவரை போலீசார் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, மனித மலத்தை மனிதனையே திண்ணச்செய்த இந்த மாபெரும் கொடுமையினைச் செய்த துரை என்கிற பழனியாண்டியை காவல் நிலையம் வரவழைத்து உடனடியாக விடுவித்த வானூர் காவல் நிலைய காவலதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் சட்டத்தின் மீதிருக்கின்ற நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்கின்ற செயலாகும். பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவும், குற்றமிழைத்தவருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட இக்காவல் நிலைய காவலதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரனைக்கு உத்திரவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேற்படி துரை இதே போன்று குவாரியில் தொடர்ந்து பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை தொழிலாளர்களிடம் பேசியதிலிருந்து அறியமுடிந்தது. தொழிலாளர்களுக்குள் ஏற்படும் குடும்பச் சண்டைகளில் கூட மேற்படி துரை தலையிட்டு கட்டப்பஞ்சாயது செய்து, அபராதம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளார். எதிர்ப்பவர்களை கரன்ட் வைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் குவாரிகளில் பணிபுரியும் பெண்களிடம் முறைகேடாகவும் நடந்துள்ளார். இதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் பரவலாக கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்ற இதுபோன்ற கல்குவாரிகள், செங்கற்சூளைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஏழை, எளிய மக்களின் கொடுமைகள் சொல்லமுடியாத நிலையில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற கொத்தடிமைத் தொழிலில் உள்ளவர்கள் மீது நிகழ்கின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் எளிதில் சமூகத்தின் கவனத்தைப் பெறுவதில்லை. அதிகாரிகளும் உரிய நடவடிக்களை மேற்கொள்வதில்லை. எனவே, தமிழக அரசு இதுபோன்று கொத்தடிமைத் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவோரின் வாழ்நிலை, பணியிடம் போன்றவைகளை ஆய்வு செய்து, தொழிளார்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, பணிக்கேற்ற ஊதியம், பணி நேரம், குடியிருப்பு போன்றவைகளை அரசு முறைபடுத்தி சீரமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும்.