Friday, January 2, 2026

இமையம் - கொரோனா அல்ல தனிமைதான் சாவு.

 கொரோனா அல்ல தனிமைதான் சாவு. 





“உப்புவண்டிக் காரன்” நாவல் கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சீர் புத்தக சேமிப்புத் திட்டத்தில் வாங்கியது.  சமூக அரசியல் மற்றும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தபின்பு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல் படிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் போனது. 


கோவிட் / கொரோனா காலத்தில் தீவிர அரசியல் புத்தகங்கள் படிப்பதிலிருந்து விலகி, நாவல்கள் படிக்கத் தொடங்கினேன். முகநூலில் பலரும் எழுதும் கருத்துகளுக்கு பின்பு அவ்வப்போது சில நாவல்களைப் படித்தேன். குறிப்பாக இமையத்தின் செல்லாக்காசு மற்றும் ஆடு ஜீவிதம், கொத்தாளி உள்ளிட்ட பல நாவல்கள் படித்த பிறகு கதை/நாவல்கள் படிப்பதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. 


படிக்காமல் இருக்கின்ற புத்தகங்களை படித்து முடித்துவிட வேண்டுமென கொஞ்சம் யோசித்து, தி.ஜானகிராமனின் 9 நாவல்களையும், 3 சிறுகதை தொகுப்புகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். 


தோழர் செஞ்சி தமிழினியன் அவர்களின் ஊத்தாம்பல்லா இன்னும் படிக்காமல் இருப்பது நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கின்றது. ஆனாலும், கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்களை படித்து முடித்துவிட வேண்டுமெனெ உப்புவண்டிக்காரன் எடுத்தேன். முந்தாள் தொடங்கியது. இடையில் கடற்கரை அவர்களின் புத்தகம் வந்தது.  


இமையம் நாவல் நாம் எவரும் எதிர்பார்க்காத களம். ஆனால், நாம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லோரும் இரண்டு ஆண்டுகள் அனுபவித்த களம். அந்த அனுபவங்கள் உப்புவண்டிக்காரன் நாவல். 


கொரோனா தொடங்கியதும், சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று, டெஸ்ட் எடுத்து, பாசிட்டிவ் ஆனவர்களை 16 நாள் தனி அறையில் தங்க வைத்து, வீட்டுக்கு அனுப்புவதுதான் கதை. 


விருத்தாசலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கவர்னர் என்பவர் (இந்தப் பெயருடன்தான் நாவல் ஆரம்பிக்கும். தமிழக அரசியல் சூழலி, கிண்டலுக்காக வைத்துள்ளாரோ என்றுதான் தொடர்ந்து படித்தேன். போக போகத்தான் உண்மையான பெயர் எனத் தெரிந்தது). 


கவர்னர், அவனது தந்தை, தாய் உள்ளிட்ட அந்தக் கிராமத்தை சேர்ந்த பலரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 நாட்கள்தான் கதை. 


அந்தகொரோனா நாட்களில் பெரும்பாலோனர் ஒரு சில நாட்களில் வீடுகளிலோ, மருத்துவமனையிலோ, அரசு தங்க வைத்து இடங்களிலோ தங்கியிருந்திருப்போம். 


கொரோனாவின் பாதிப்பைவிட, அதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கவோ, பேசவோ, தொடவோ முடியாமல் தனிமையில் இருந்ததுதான் பெரும் நோய் என்பதுதான் மையம். ஒரே வீட்டில் இருந்தாலும், மையங்களில் ஒரே அறையிலோ, அடுத்தடுத்த அறையிலோ இருந்தாலும் பேசிக்கொள்ள முடியாத தனிமையின் பாதிப்புதான் பெரும் மனநோயாகி உருவாகி மனிதர்களை பாதித்துள்ளது என்பதுதான் இந்த தாய், தந்தை, மகனுக்கு இடையேயான கதை. 


கொரோனாவிற்கு எவ்வித சிகிச்சையும் இல்லாத தொடங்கிய சில நாட்களில், மனிதர்கள் தனிமைப்பட்டதை, ஒரு தாய் தந்தை மகன் எனும் ஒரு குடும்பத்தை முன்னிறுத்தி இமையம், முந்தைய நாவல்களைப் போல் மனித உணர்வுகளை மையப்படுத்தி எழுதியுள்ளார். 


தலையிலும், மிதிவண்டியிலும் பிறகு மாட்டு வண்டியிலும் ஊர் ஊராக சென்று உப்புவிற்பது, கூடவே கருவாடு, கத்திரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவைகளை விற்று மகனை வளர்த்து, கொஞ்சம் நிலம் வாங்கி, வீடுகட்டி நல்ல நிலைமைக்கு வந்த தாய், தந்தையின் உழைப்பையும், விளம்பாவூர் எனும் கிராமத்திற்கே உரிய போக்குடன் கொண்டு சென்றது, கூடுதல் சிறப்பு. 


படிக்க படிக்க கொரோனா கால நினைவுகள் வந்து செல்வதை தவிர்க்கவே முடியாது. சிலநொடிகள் அந்த நாட்களின் வாழ்வது போன்றே நிழலாக தோன்றி மறைகிறது. 


(01.01.2026 முகநூல் பதிவு)


ஆண்டு இறுதியும் தொடக்கமும்


இரண்டு நாட்களாக படித்துக்கொண்டிருந்த இமையம் அவர்களின் “உப்புவண்டிக்காரன்” இன்று காலை முடித்துவிட்டு, நண்பர் கடற்கரை அவர்களின் பராசக்தி தொடங்கினேன். இருவரும் எங்களின் விருத்தாசலத்தை சேர்ந்தவர்கள். இரண்டும் இரு வேறு காலங்களின் பதிவுகள்.

01.01.2026 முகநூல் பதிவு

சீர் வாசகர் வட்டம் - திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளுக்கு

திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளுக்கு…



முன்பதிவு அறிவிப்பு. 5000 படிகள்.

  1. தெரிவு செய்யப்பட்ட புதுமைப்பித்தன் கததைகள்

  2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  3. கருந்துளை

ஆகிய மூன்று புத்தகங்களுக்கு. 

சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட முதல் நூல் 'புதுமைப்பித்தன் கதைகள்'. 100 ரூபாய்க்கு வெளியான அந்தப் பதிப்பை இன்றும் வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அக்குறையைப் போக்கும்வண்ணம் புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த 30 கதைகளை பேரா வீ.அரசு தெரிவு செய்துள்ளார். 320 பக்கங்கள் கொண்ட நூல் தரமான நூலாக்கத்தில் 50 ரூபாய்க்கு 49-வது சென்னை  புத்தகக் காட்சியில் கிடைக்கும். 

அதேபோல எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த படைப்பான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலை மக்கள் பதிப்பாக வெளியிடுகிறோம். 320 பக்கங்கள் கொண்ட நூல் 100 ரூபாய்.

எழுத்தாளர் கரன் கார்க்கியின் புதிய  நாவல் 'கருந்துளை'. 376 பக்கங்கள் 250 ரூபாய். மூன்று நூல்களும் சேர்த்து 400 ரூபாய். நூல்களைத் தனியாக பெற இயலாது. மூன்று நூல்களையும் தொகுப்பாக மட்டுமே பெற முடியும்.

இந்த மக்கள் பதிப்பு நூல்களை சென்னை புத்தகக் காட்சிக்கு வர இயலாத வெளி மாவட்ட வாசகர்கள் பெறும் வகையில் முன்பதிவு மையங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

#திண்டிவனம்_செஞ்சி  பகுதிகளுக்கு

கீழுள்ள வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.

பிப்ரவரி 7க்கு மேல் நூல்கள் கிடைக்கும்.

முன்பதிவுக்கு இறுதி நாள் ஜனவரி 5, 2026.