Wednesday, January 9, 2008

புகாருக்குப் புகார் - திருந்துவார்களா அதிகாரிகள்?

09.01.08


அனுப்புதல்

இரா.முருகப்பன்,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
56/52, விவேகானந்தா நகர்,
மரக்காணம்சாலை,
திண்டிவனம் - 604 002.

பெறுதல்

1.மேதகு தமிழக ஆளுநர் அவர்கள்,
கிண்டி, சென்னை.

2.மாண்புமிகு.முதல்வர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.

3.தலைமைச் செயலர்,
தலைமைச் செயலகம், சென்னை.

ஐயா,
பொருள் : தொலைநகலில் அனுப்பிய புகாரைப் பெற மறுத்த உள்துறைச் செயலக அலுவலர்கள் மீது நடவடிக்கை கோருதல் தொடர்பு

வணக்கம்.

நான் மேற்கண்ட முகவரியில் செயல்படும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணரவு மையம் என்கிற மனித உரிமை அமைப்பின், விழுப்புரம் மாவட்ட மனித உரிமைக் காப்பாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, நெல்லை, தூத்துகுடி ஆகிய 6 மாவட்டங்களில் வன்கொடுமைகளில் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து, ஆதரவாக இருந்து நீதியும் நியாயமும் கிடைப்பதறகான முன்முயற்சிகளை செய்துவருகிறோம்.

2) தூத்துகுடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்புரம் பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என அப்பஞ்சாயத்தில் உள்ள 13 கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் 100 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்துவந்துள்ளனர். நேற்று 08.01.08 காலை திடீரென்று போலீசார், மீட்சி மக்கள் இயக்கத் தலைவர் ஜீவன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்த மக்களிடம் அத்துமீறி போலீசர் நடந்த கொண்டவிதம் மனித உரிமை மீறலாகும்.

3) போலீசாரின் இந்த மனித உரிமை மீறல் குறித்தும், கைது செய்யப்படிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், இன்று பகல் 2.00 மணியளவில் எங்களது அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தமிழக முதல்வர் தனிப்பிரிவு, அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் ஆகிய அனைத்துக்கும் தொலை நகல் அனுப்பினேன்.

4) தொலைநகலைப் பெறுவதற்கு முன்பு விவரம் கேட்கும் அதிகாரிகளுக்கு சம்பவத்தைக் கூறினேன். தொலைநகலைப் பெற்றுக்கொண்டார்கள். அதே போன்று உள்துறைச் செயலருக்கு 044&25670596 என்ற எண்ணிற்கு தொலைநகல் அனுப்பினேன். அப்போது எதிர்முனையில் என்ன தொலைநகல் என்ற விவரம் கேட்டார்கள். நான் சொன்னேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கு எதுக்கு சார் அனுப்பறீங்க. கலெக்டருக்கே அனுப்புங்கள்’‘ என்றார். அதற்கு நான், ‘‘உள்துறைச் செயலர் அவர்கள் இவ்வழக்கில் தலையீடு செய்யவேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் கவனத்திற்கு இப்பிரச்சனையை தெரிவிக்க தொலைநகல் அனுப்புகிறோம்.’’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கு அனுப்பறது வேஸ்ட் சார். நாங்க ஒன்னும் பண்ணமுடியாது. கலெக்டருக்குதான் அனுப்புவோம்’’ என்று மிகவும் அலட்சியத்துடன் கூறினார். அதன்பின்பு நான், ‘‘செயலருக்கு குறிப்பாவது வைக்கலாம் சார்’’ என்றேன். அதற்கும் மேற்படி நபர், ‘‘நீங்கள் கலெக்டருக்கே அனுப்புங்கள்’’ என்று கூறி போனை வைத்துவிட்டார்.

5) பொறுப்பற்ற முறையில் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதுடன், மனித உரிமை அமைபில் இருந்து அனுப்புகிறோம் என்று கூறிய பின்பும், புகார் அனுப்புவது வேஸ்ட் என்றும், ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறிய, உள்துறைச் செயலக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

6) இனி தொடர்ந்து இதுபோன்று தொலைநகலில் வருகின்ற புகார்களைப் பெறுவதற்கு மறுக்காமல், பெற்று நடவடிக்கை எடுக்க தக்க ஆவனசெய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
இரா.முருகப்பன்.

Tuesday, January 8, 2008

மீண்டும்..மீண்டும்..போலீஸ்

போலீசாரின் அத்துமீறல்
உண்ணாவிரதமிருந்த தலித்துகள் கைது!

தூத்துகுடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்புரம் பஞ்சாயத்து 13 கிராமங்களை உள்ளடக்கியதாகும். இக்கிராமங்களில் 90% சதவீதம் தலித் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மையினராக உள்ள பிற சாதியினர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை எனக்கூறி, இக்கிராம தலித் மக்கள், இப்பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக (ரிசர்வ் பஞ்சாயத்து) அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பி வந்துள்ளனர். நீண்ட காலமாக தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பியும் அரசு எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இக்கோரிக்கையை வலியுறுத்தி 100 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்துள்ளனர். இருவப்புரம் பஞ்சாயத்தை தனிபஞ்சாயத்தாக அறிவிக்கவேண்டும் என்ற தலித் மக்களின் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நாளை 100&வது நாளை நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் இன்று (08.01.08) அதிகாலை 4.00 மணியில் இருந்து போலீசார் இருவப்புரம் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமங்களில் நுழைந்து, உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமானவர்களைக் கைது செய்யத்தொடங்கியுள்ளனர். மீட்சி மக்கள் இயக்கத் தலைவர் ஜீவன்குமார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவப்புரம் மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர். நாளை போராட்டம் இறுதி நாளை எட்ட உள்ள நிலையில் போலீசாரின் இந்த அத்துமீறிய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் இச்செயல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். கடந்த 2001 ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் என்ற ஊரில் போலீசார் நிகழ்த்திய அத்துமீறல்களினால் தமிழகம் முழுவதும் சாதிக்கலவரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு இவைகளை கருத்தில்கொண்டு கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றக்கோருகிறோம்.

•கைது செய்யபட்டுள்ள அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

•போலீசாரின் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுஅமைத்து நீதி விசாரனைக்கு உத்திரவிட வேண்டும்.

•மக்கள் தொகையில் 90% தலித் மக்கள் வாழ்கின்ற நிலையில் 1964ஆம் ஆண்டுக்குப் முன்பு இருந்ததைப்போன்று,, இருவப்புரம் பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும்.

Saturday, January 5, 2008

தாழ்த்தப்பட்டவர் சமைக்க வேண்டாம்

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி வட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முத்துசாமியாபுரம், காலனித்தெருவில் ஆறுமுகத்தாய் என்பவர் சுபா, அமுதா என்கிற இரு பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் வெள்ளைப்பாண்டி சில வருடங்களுக்கு இறந்துவிட்டார். விதவை என்கிற கருணை அடிப்படையில், கடந்த 2007 செப்படம்பர் 7 ஆம் தேதியன்று நெல்லை மாவட்ட ஆட்சியரால் ந.க.ங 9/8744/2007 நாள் 09.07.07 என்ற உத்தரவின்படி, முத்துசாமியாபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் யாதவா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆறுமுகத்தாய் பணியில் சேரச்சென்றபோது, பள்ளி நிர்வாகி இராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர், மற்றும் சத்துனவு அமைப்பாளர் இராமதாசு, மற்றும் பள்ளி நிர்வாகியின் உறவினர்களும், நண்பர்களுமான எல்.ஐ.சி முகவர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் இராஜேந்திரன் ஆகியோர் மேற்படி ஆறுமுகத்தாயின் பணி நியமன ஆணையை வாங்க மறுத்துள்ளார்கள். ‘‘தாழ்த்தப்பட்ட சாதியான நீ சமைச்சி எங்க பிள்ளைகள் சாப்பிட வேண்டாம். உனக்கு இங்க வேலை இல்லை.’’ என்று கூறி அவரை பணியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இதனிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்படி ஆறுமுகத்தாயை பணி நீக்கம் செய்யவேண்டும் என மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி கே.சந்துரு, பள்ளி நிர்வாகியை கண்டித்து, பணி நியமன ஆணையை ரத்து செய்ய மறுத்து, உடனடியாக பணியில் சேர்க்குமாறு உத்தரவிட்டார். ஆனாலும் அதன்பின்பும் பள்ளி நிர்வாகத்தினர் அவரை பணியில் சேர்க்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக உயரதிகாரிகள் அனைவருக்கும் மேற்படி ஆறுமுகதாய் புகார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 28.12.07 அன்று மேற்படி பள்ளி நிர்வாகத்தினர் மேற்படி ஆறுமுகத்தாயை அழைத்து, ‘‘தினமும் பள்ளிக்கு வந்து, பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஓரமாக உட்கர்ந்திரு. நீ சமைக்க வேண்டாம். யாரும் வந்தால் எதுவும் சொல்லக்கூடாது’’ என்று கூறி பதிவேடுகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள். அதன்பின்பு, மேற்படி சத்துணவு அமைப்பாளர் தினமும் ஆறுமுகத்தாயின் வீட்டிற்குச்சென்று பதிவேட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஆறுமுகத்தாயை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து வருகிறார்.

மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவுக்குப் பின்பும், தாழ்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆறுமுகத்தாய் என்பவரை வேலையில் சேர்க்க மறுத்துவருபவர்கள் மீது இதுவரை அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

1.உயர்நீதிமன்ற உத்திரவை நடைமுறைபடுத்தாத பள்ளி நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சமூக அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் திட்டமிடுகின்றன.

2.ஆறுமுகத்தாய் அவர்கள் உடனடியாக பணியில் சேர்க்கப்பட்டு, 5 மாத ஊதியமும் வழங்கப்படவேண்டும்.

3.அரசு ஆணை மற்றும் நீதி மன்ற உத்திரவுகளை பின்பற்ற மறுக்கும் யாதவா தொடக்கப்பள்ளியின் அங்கிகாரத்தை ரத்து செய்து, அரசு வழங்கி வரும் உதவித் தொகைகள் உடனே நிறுத்தப்படவேண்டும்.

Wednesday, January 2, 2008

மீண்டும்....ஒரிசா....

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்
56/52,விவேகானந்தா நகர், மரக்காணம் சாலை,
திண்டிவனம்-604 002

29.12.07

ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின

சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் கண்டன அறிக்கை



ஒரிசாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது. புயலால் பாதிக்கப்பட்டபோது மட்டுமல்ல, மனித நேயமில்லாத இந்துத்துவ அமைப்புகளால் பாதிரியார் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்களும் உயிரோடு ஜீப்பில் வைத்து கொளுத்தப்பட்ட கொடூர சம்பவத்தின் போதும்தான். இப்போது மீண்டும் அதே போன்று சம்பவங்களை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற மதவெறி அமைப்பினர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்கிறது. இந்நிலையில் மதவெறியர்களின் கொடூரங்களை கட்டுபடுத்த ஒரிசாவிற்கு ராணுவம் சென்றுள்ளது.

ஒரிசாவில் உள்ள கந்தமால் மாவட்டம் பழங்குடியினர் அதிகமாக வசிக்கின்ற மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் உள்ள 6.50 லட்சம் பேரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிறித்துவர்களாகும். அதானல் இம்மாவட்டத்தை பழங்குடியினர் மாவட்டம் என்றும் அழைக்கின்றனர். பழங்குடியினரில் பெரும்பான்மையோர் கிறித்துவர்களாகும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக பிரம்மனிகோன் பஜார் என்ற இடத்தில் பெரிய வரவேற்பு(ஆர்ச்) வைத்துள்ளனர். அந்தப்பகுதியில் இருந்து இதனை எதிர்த்த விஸ்வ ஹிந்து பரிஷத்தினர், தங்களது அமைப்பில் உள்ள மதமாற்ற எதிர்ப்புக் குழுவின் தலைவர் லஷ்மனாணந்தா சரஸ்வதியை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளனர். இதற்கு அங்குள்ள கிறித்துவ பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து விஸ்வ ஹிந்தி பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்ற 25.12.07 அன்று கந்தமால் மாவட்டத்தில் கடை அடைப்பு நடத்தி பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பந்தின்போது இந்துத்துவ அமைப்பினர் கந்தமால் மாவட்டத்தில் 19 சர்சுகளை தீவைத்து கொளுத்தியுள்ளனர். பல்வேறு பிரார்த்தனைக் கூடங்களையும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகளையும், கிறித்துவர்கள் வீடுகளையும் திட்டமிட்டு தாக்கி, அழித்து, சேதப்படுத்தியும் தீ வைத்தும் எரித்துள்ளனர். இதில் காங்கிரஸ் எம்.பி ராதாகாந்தி நாயக் என்பவர் வீடும் தாக்கப்பட்டுள்ளது. மினியா பகுதியில் உள்ள பாதிரியார் பசந்திக்கால் என்பவரை தாக்கி, அவரது வாகனைத்தைக் கொளுத்தியுள்ளனர். பல்வேறு தொண்டு நிறுவனங்களின் அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளது. ஜலேஸ்பதா பகுதியில் 6 வீடுகளைத் தாக்கி, அங்கிருந்த மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மாநில சுரங்கத்துறை அமைச்சர் பத்மநாபா பெகராவுக்கு சொந்தமான வீடு, கடைகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பிரிங்கியா பகுதியில் உள்ள 2 காவல் நிலையங்களும், ஒரு போலீஸ் வாகனமும் இந்துமதவெறி அமைப்பினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டு சேந்தமடைந்துள்ளன. மதவெறியர்களின் இந்தக் கலவரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர் ஒருவர் கொள்ளப்பட்டுள்ளார்.

தாழ்தப்பட்ட, பழங்குடியின கிறித்துவ சிறுபான்மை மக்கள் மீது கிறிஸ்துமஸ் தினத்தன்று இதுபோன்று தாக்குதல்களை நடத்துவதற்காக திட்டமிட்டே விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கதள் போன்ற இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பினர் பந்த் அறிவித்துள்ளனர். பந்த் அன்று மாவட்டட்தின் முக்கியமான பகுதிகளில் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும், குழிகளை ஏற்படுத்தியும், கட்டாக், புவனேஸ்வபத்ராஆகிய பகுகளில் உள்ள ரயில் தண்டவாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் கலவரப்பகுதிகளுக்கு போலீசார் வருவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கலவரக்காரர்கள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களின் விளைவால் மாவட்டத்தின் பாலிகுடா, தாரிங்கிபா, பிரம்மனிகோன், புல்பானி ஆகிய பகுதிகளி கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதன் விளைவால், இப்பகுதிகளில் ஊரங்ங்கு உத்தரவு அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதிகளில் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து நடத்துகின்ற கலவரங்களை அடக்குவதற்காக டெல்லியில் இருந்து மத்திய துணை ராணுவப் படை விரைந்துள்ளனர்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாதிரியார் ஸ்டெயின்ஸ், அவரது இரு மகன்கள் மூவரும் ஜீப்பில் உயிரோடு வைத்து கொளுத்தி கொலை செய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த தாராசிங்க் என்பவருக்கு, அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்பும் அதே ஒரிசாவில் சிறுபான்மை மக்கள் மீது, திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தி வீடுகளை தாக்கியும், சர்ச்சுகளையும், வாகனங்களையும், காவல் நிலையங்களையும் தீ வைத்து எரித்து வருகின்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்றதின் விளைவே சிறுபான்மை மக்கள் மீது இந்த வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக மற்றும் மனித உரிமைக்கான அமைப்பின் தேசிய ஒருங்கினைப்பாளர் பால் திவாகர் தலைமையில் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார், பத்திரிக்கையாளர் தமன்போஸ் உள்ளிட்ட உண்மையறியும் குழுவினர் சென்றுள்ளனர். மேலும், டெல்லி தேசிய சிறுபான்மை கமிஷனும், ‘‘ஒரிசாவில் தொடர்ந்து சிறுபான்மையோர் மீது இதுபோன்று தாக்குதல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மாநில அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை கேட்டுள்ளோம். எங்கள் ஆணையத்திலிருந்து ஒரு குழுவினர் ஒரிசாவிற்கு செல்ல உள்ளனர்’’ என்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஒரிசாவிற்கு ராணுவத்தை அனுப்பி கலவரத்தை அடக்கியுள்ளது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடிக்காமல் போனதன் காரணமாகவே இது போன்று சம்பவங்கள் நிகழ்கின்றன. சட்ட, ஒழுங்கு பிரச்சனைக்களாகக் கருதி மட்டுமே இதுபோன்ற கலவரங்களை அடக்கிவிடமுடியாது. சமூக மற்றும் பொருளாதார ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்து மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். மேலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். அப்படி தவறியதன் காரணமாகவே குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தோலிவிகள் என்பதை உணரவேண்டும்.

நடந்த வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 20 பேரை மட்டுமே ஒரிசா அரசு கைதுசெய்துள்ளது. எந்தவித பாகுபாடுமில்லாமல் கலவரக்காரர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு கைது செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்யவேண்டும். மத்திய அரசும் இதை வலியுறுத்த வேண்டும். மேலும் கலவரத்தில் வீடிழந்து, வாகனம் எரிந்து, காயமடைந்து, பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த குடும்பத்தினர் அனைவருக்கு உரிய நட்ட ஈடுகள் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழன்புடன்,
வே.அ.இரமேசுநாதன்
இயக்குநர்.