Wednesday, November 30, 2011

நான்கு பேரை கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நாள் 26.11.2011
அனுப்புதல்
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்

பெறுநர்

காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்

ஐயா,

பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி

Thursday, November 10, 2011

நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் சார்பில் 09.11.11 அன்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் ப.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் மு.பூபால், அ.கணேஷ், ஆ.வெங்கடேசன் மற்றும் இரா.முருகப்பன், கோ.வடிவேல், ஜி.சிவக்குமார், மு.சண்முகம், அ.சங்கர், த.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




தீர்மானங்கள் :

1. கூடங்குளம் அணு உலை ஏன் மூடப்படவேண்டும்? விவாத அரங்கம்.


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அணு உலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர்கள் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர் ப.சிவக்குமார், மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரையும் அழைத்து, எதிர்வரும் 13.11.11 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திண்டிவனத்தில் விவாத அரங்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.



2. தேர்வு முறைகேடுகளை கண்டறிய நீதி விசாரணை தேவை.

அண்மையில் திண்டிவனத்தில் தாகூர் பள்ளியில் புதுவை கல்வி அமைச்சர் எழுதிய தேர்வின் மூலம், தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளினால், நன்றாக படிக்கின்ற மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. எனவே அரசு உடனடியாக, பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, தேர்வு எழுதியதில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அதற்கு உடந்தையாய் இருந்தவர்கள், ஆதரவளித்த கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய பரிந்துரைகளையும் குழுவிடம் இருந்து பெற்று, உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.

தற்போது தேர்வு முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளுக்கான தேர்வு மையத்தை எதிர் வரும் தேர்வுகளில் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



3. புதிய பேருந்து நிலையம் உடனடித் தேவை

தென் தமிழகத்தின் நுழைவு வாயில் எனக்கூறப்படுகின்ற திண்டிவனத்திற்கு பேருந்து நிலையம் இல்லாதது பெருங்குறையாகவும், போக்குவரத்திற்கு நெருக்கடியாகவும் உள்ளது. மேம்பாலம் அருகிலுள்ள திருவள்ளுவர் விரைவுப் பேருந்து நிலையம், வீராணம் இல்லம், பெரியார் போக்குவரத்து பணிமனை, பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவேண்டும். அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் திண்டிவனம் நகரம் சந்திக்கின்ற பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலை மாறும். மேலும், மழை, வெயில் மற்றும் இரவுகளில் பேருந்துகளுக்காக மக்கள் படுகின்ற அவதியும், அலைச்சலும் நீங்கும்.

Sunday, February 13, 2011

கடலூர் புனிதவளனார் பள்ளியில் மாணவன் மர்ம மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர் புனித வளனார் பள்ளி
மாணவன் ஜாய்ஸ்
மர்ம மரணம்
உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர்

08.02.2011

கடலூர் புனித வளனார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஜாய்ஸ் ஆல்வின் போஸ் (13) சென்ற 31.01.2011 அன்று திடீர் மரணம் அடைந்ததையட்டி, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெறுகிறது. இந்த மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாக மாணவனின் பெற்றோரும், சில அரசியல் இயக்கங்களும் குற்றம்சாட்டுகின்ற நிலையில் இதுகுறித்த உண்மைகளை அறிந்து வெளியிட கீழ்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.

1. பேராசிரியர் அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை.

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.

4. ஆ. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், கடலூர்.

5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

6. இரா. பாபு, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், கடலூர்.

இக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 8) சின்னமாரனோடை (விழுப்புரம் மாவட்டம்) கிராமத்தில் வசிக்கும், இறந்த மாணவனின் பெற்றோர்களான ஆரோக்கியதாஸ் -விண்ணரசிராணி மற்றும் உறவினர்கள், கடலூர் புனித வளனார் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆக்னல், விடுதிப் பொறுப்பாளர் அருட்தந்தை மரிய அந்தோணி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நா.ராமச்சந்திரன், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஆர்.சரவணன், புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆரோக்கியராஜ் மற்றும் ஜாய்ஸ் உடன் விடுதியில் இருந்த 30&க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து விசாரித்தது. இவற்றின் அடிப்படையில் கீழ்கண்ட எமது பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

சம்பவம்:

சென்ற ஞாயிறு 30.01.2011 அன்று மாலை மாணவன் ஜாய்ஸ் உடல் நலமற்று இருப்பதாக, விடுதியில் இருந்து மாணவர் தலைவன் மைக்கேல் மூலம் பெற்றோருக்கு செல்பேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த நாள் மதியம் மாணவனைப் பார்க்க பெற்றோர் விரைந்துள்ளனர். மாலை நான்கரை மணியளவில் அவர்கள் கடலூரை வந்தடைந்தபொழுது, மீண்டும் தொலைபேசியில் மாணவன் கவலைக்கிடமாக கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்ததையடுத்து, மருத்துவமனையில் செயற்கை சுவாசம், குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் மாணவன் ஜாய்ஸ் கிடந்துள்ளான். உடனடியாக அவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதன் அடிப்படையில் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்து, சவக்கிடங்கிற்கு உடலை அனுப்பியுள்ளனர். பிரேதப் பரிசோதனையின்பின்பு உடல் மாணவனின் சொந்த கிராமத்திற்று கொண்டுசெல்லப்பட்டு, காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்தை நடத்தப்பட்டு ஜாய்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சுதந்திரமான விசாரணை நடப்பதற்கு ஏதுவாக பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆக்னல், விடுதிக் காப்பாளர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட 4 விடுதிக் காப்பாளர்கள் அனைவரும் பள்ளிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், மாணவன் மரணம் குறித்த விசாரணையில் பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பது எனவும், இழப்பீட்டுத் தொகையாக இறந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கொடுப்பது என்கிற கோரிக்கை கனிவுடன் பரிசீலிப்பது எனவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தரப்பின் குற்றச்சாட்டுகள்:

சென்ற 2010 சூன் மாதம் முதல் இப்பள்ளியில் படித்துவரும் மாணவன் ஜாய்சை விடுதிக் காப்பாளர் ஒருவர் தொடர்ந்து அடித்தும், பிறவகையில் துன்புறுத்தியும் வந்துள்ளார். ஜாய்சை பெற்றோர் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் அவன் காதுகளில் அடிபட்ட காயம் இருந்தது எனவும் பெற்றோர் குறிப்பிட்டனர். விடுதிக் கப்பாளர் கிறிஸ்துதாஸ் என்பவர் தொடர்ச்சியாக சாதிக் காழ்ப்புடன் ஜாய்சை தாக்கி வந்ததே மரணத்திற்கு காரணம், அடித்தனாலேயே அவன் இறந்துள்ளான் என உறுதியாக கூறுகின்றனர்.

பள்ளித் தரப்பின் வாதம்:

விடுதிக் காப்பாளரால் அடிபட்டதன் விளைவாகவே மரணம் சம்பவித்தது என்பது தவறு. ஜாய்சுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் இருந்து வந்துள்ளது. ஞாயிறு மாலை அவனுக்கு காய்ச்சல் இருந்ததைக் கண்டு, வீட்டுக்கு தகவல் சொன்னதோடு அரசு பொது மருத்துமனைக்கு அழைத்துச் சென்று காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கியும் கொடுத்தோம். விடுதி நோயாளிகளுக்கான அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஜாய்சின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மாணவர்கள் சொன்னதை அறிந்து, அடுத்த நாள் மாலை கண்ணன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். மாணவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் சொன்னதின் பேரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாணவர்களை அடிக்கும் வழக்கம் எங்கள் பள்ளியில் கிடையாது. சம்பவத்திற்கு முந்தைய நாட்களில் ஒரு நாள் தவிற பிறநாட்களில் காப்பாளர் கிறிஸ்துதாஸ் விடுப்பில் இருந்துள்ளார்.

எமது பார்வைகள்:

1. நாங்கள், மாணவர்கள் மத்தியில் விசாரித்த வகையில் கடலூர் புனித வளனார் பள்ளி விடுதி மாணவர்களை காப்பாளர்கள் கடுமையாக அடிப்பதும், மைதானத்தில் சுற்றி ஓடவிடுவதும் போன்ற தண்டனைகளை அளிப்பது நடைபெற்று வந்துள்ளது. இதுதவிர மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவது என்பதை விடுதியின் பொறுப்புத் தந்தையும் செய்து வந்துள்ளார். தங்கள் மகன் இறந்த வருத்தத்தில் பெற்றோர்கள் இத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றார்களோ என்கிற அய்யம் மாணவர்களிடம் பேசும்போது எங்களுக்கு நீங்கியது.



முதலில் தயங்கிய மாணவர்கள் பிறகு தொடர்ச்சியாக அங்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி எங்களிடம் குமுறினர். அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எல்லா மாணவர்களும் மூன்று விடுதிக் காப்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களே கடுமையாக தண்டனைகள் வழங்குவதாக குறிப்பிட்டனர். அவ்விடுதிக் காப்பாளர்ளின் பெயர்கள்: கிறிஸ்துதாஸ், மகிமை, என்.பீட்டர். இதில் கிறிஸ்துதாஸ் என்கிற காப்பாளர் மாணவன் ஜாய்சை குறிவைத்து தொடர்ந்து கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்ததை மாணவர்களின் கூற்றிலிருந்து அறிய முடிந்தது. குறிப்பாக கிறிஸ்துதாஸ் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் கிறிஸ்துவர் என்பதும், ஜாய்ஸ் ஒரு தலித் கிறித்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பின்னணியிலேயே அவர் ஜாய்சை அடித்து வந்துள்ளார் என இக்குழு கருதுகிறது.



2. மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் பள்ளி நிர்வாகம் மிகவும் கவனக் குறைவுடன் நடந்துள்ளது. உடனடியாக பெற்றோர்களை அழைத்துவர எந்தவொரு ஏற்பாடும் செய்யாததோடு மருத்துமனையிலிருந்து திரும்பி வந்தபின்பு, அடுத்த நாள் மாலைவரை அந்த மாணவனின் உடல்நிலையை கவனிப்பதற்கு எந்தவொரு சிரத்தையையும் நிர்வாகம் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் விளைவாகவே மாணவன் ஜாய்சின் அகால மரணம்.



3. கிறித்துவ மாணவர்களுக்கான உள்விடுதியில் மொத்தம் சுமார் 391 பேர் உள்ளனர். இதில் சுமார் 240 பேர் தலித் மாணவர்களாகும். ஆனால், இங்கு நியமிக்கப்பட்டுள்ள 4 விடுதிக் காப்பாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. தலித் மாணவர்கள் அதிகம் பயிலக் கூடிய பள்ளியில் தற்போது ஒரு தலித் பாதிரியார் கூட நிர்வாகத்தில் இல்லை.



4. காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் நிறைவேற்றபட்ட ஒப்பந்த தீர்மானங்களை மறை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுவதில் சிரத்தை காட்டவில்லை. 4 விடுதிக் காப்பாளர்கள் மட்டும் விடுப்பில் செல்ல பணிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி பள்ளி முதல்வர் பணி விடுப்பு செய்யப்படவில்லை. 10 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்கின்ற கோரிக்கையை நிர்வாகம் தட்டிக்கழித்து வருகின்றது. இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மறைமாவட்ட உயர்பொறுப்பில் உள்ள பாதிரிமார்கள், ‘‘நல்லடக்கத்திற்கு நீங்கள் ஒத்துக் கொள்வதற்காகத்தான் நாங்கள் அப்படி சொன்னோம். இதை நிறைவேற்ற முடியாது’’ என கூறியதாக மாணவனின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.



5. 2010 சூலை 20-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வகுப்பறை வன்முறைக்கு எதிரான நெறிமுறைகளை வகுத்து அறிவித்துள்ளது. இதன்படி வகுப்பறை வன்முறை தடைசெய்யப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.50,000/- அபராதமும் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ விதிக்கலாம். மறுமுறை செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கொடுக்கலாம். கல்வி உரிமை சட்டத்தின்படி துறை ரீதியான நடவடிக்கையை ஆசிரியர்கள் மீது எடுக்கலாம். மேலும், இவ்வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தை உரிமை பாதுகாப்புப் பிரிவு (சிலீவீறீபீ க்ஷீவீரீலீt சிமீறீறீ) ஒன்று உருவாக்கப்பட்டு, மாணவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

இது தவிர 2000-ம் ஆண்டு ‘‘இளைஞர் நீதிச் சட்டம் 2006’’  திருத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி வகுப்பறை வன்முறையை மேற்கொள்வோர் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

எமது பரிந்துரைகள்:

1. கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை (கா.நி.கு. எண் 63/11 நாள்: 01.02.2011 பிரிவு 174 சி.ஆர்.பி.சி விரைவாக விசாரித்து மாணவனின் மரணம் குறித்து துப்புதுலக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.



2. மாணவர்களை அடித்துத் தண்டிக்கும் வழக்கம் விடுதியில் இருந்து வந்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள், 2010-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், இளைஞர் நீதிச் சட்டம் 2006 ஆகியவற்றின்படி இது ஒரு கடுமையான குற்றமாகும். 2000&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பள்ளிகளில் நிலவும் வகுப்பறை வன்முறையை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்குற்றங்களின் கீழ் இப்பள்ளியின் முதல்வர், விடுதிப்பொறுப்பாளர், காப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாணவர்களை தொடர்ந்து அடித்து வந்த விடுதிக்காப்பாளர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.



3. அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இறந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.



4. வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஆசிரியர், பெற்றோர், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டும். மேலும், கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள் முறையாக நிறைவேற்றப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளதை முதன்மை கல்வி அலுவலருக்கு இக்குழு சுட்டிக்காட்டுகின்றது.



5. சுமார் 400 மாணவர்கள் இருக்கக் கூடிய ஒரு விடுதியில் மாணவர்கள் தங்குமிடம் போதுமானதாக இருத்தல் அவசியம். மேலும், 400 மாணவர்களை பாதுகாக்க 4 காப்பாளர்கள் போதாது. தவிரவும் விடுதி பொறுப்புத் தந்தையும், காப்பாளர்களும் மாணவர்களை கண்காணிக்கப்படவேண்டிய குற்றவாளியாக கருதாமல், பாதுகாத்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய மனநிலை உடையவர்களாக இருத்தல் அவசியம். இதுதொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு தரப்படவேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 மருத்துவர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை உள்பட விடுமுறை நாட்களில் கூட விடுதிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.





6. தலித் மாணவர்கள் அதிக அளவில் இருக்கக் கூடிய விடுதியில் பொறுப்புத் தந்தையும், பெரும்பான்மையான விடுதிக் காப்பாளர்களும் தலித்துகளாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திலும் போதிய அளவில் தலித் பாதிரியார்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். பாரம்பரியம்மிக்க புனித வளனார் பள்ளியின் நற்பெயரை தக்க வைக்க இந்த நடவடிக்கைகளை மறை மாவட்டம் மேற்கொள்ள வேண்டும்.



7. கடலூர்&புதுச்சேரி மறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக தலித் கிறித்துவர்கள் மீதான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் செயல்படுவதை மறைமாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். சாதி வெறியுடன் செயல்படக்கூடிய மறைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போதிய அளவு தலித் கிறித்துவர்கள் பல்வேறு மட்டங்களிலும் மறை மாவட்டப் பணிகளில் நியமிக்கப்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதையும் மறை மாவட்டத் தலைமைக்கு இக்குழு சுட்டிக்காட்டுகின்றது.





----------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 20.

செல்: 9444120582.

Saturday, January 29, 2011

இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைதான 10 பேர் ஜாமீனில் விடுதலை


இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைதான 10 பேர் ஜாமீனில் விடுதலை




கடலூர்,  ஜன. 28: இந்திய இறையண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக, கடலூரில் கைதான 10 பேர், வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை போரில் இறந்த தமிழர்களின் நினைவாகக் கடலூரில் கடந்த சனிக்கிழமை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ் மாணவர், இளைஞர் பேரவை என்ற அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதையொட்டி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பேசியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தமிழ் மாணவர், இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாலகுரு, திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி, நகைமுகன், திருமாறன், கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்ட 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களைக் கைது செய்ததைக் கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் உடல் நிலை மோசமான, பேராசிரியர் பிரபா கல்விமணி உள்ளிட்ட 3 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சகந்தி, 10 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளிவந்த அவர்களை, மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுவை சுகுமாறன், கடலூர் ஆல்பேட்டை பாபு, திண்டிவனம் முருகப்பன், வழக்கறிஞர் பூபாலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
First Published : 29 Jan 2011 09:50:21 AM IST dinamani

Thursday, January 27, 2011

இந்திய இறையாண்மையும், சட்ட விரோதக் கைதும்

 உயர்நீதி மன்றத்தின் அனுமதியோடு, கடலூர் மணிக்கூண்டு திடலில் 22.01.11 அன்று நடந்த மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் பிரபா.கல்விமணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர் மு.பாலகுரு உள்ளிட்ட 10 பேரை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, கூட்டம் முடியும்முன்னரே போலீசார் கைது கடலூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையில் கொண்டுசெல்லப்பட்டது முதலே, தங்கள் சட்டவிரோதக்காவலைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கினர்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல் சோர்ந்த நிலையில் 26.01.11 அன்று மாலை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 25.01.11 மாலை கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து 31-ஆம் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தொடர்ந்து மாநில அளவில் பலதலைவர்களையும் ஒருங்கிணைத்து பிப்ரவரி 6-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.