Tuesday, December 30, 2008

காதல் கல்யாணமா... குடும்ப அட்டை கிடையாது


விழுப்புரம் அருகே உள்ள அனந்தபுரத்தை அடுத்துள்ள பனைமலை மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவர் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் அன்னியூர் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 01.02.2007 அன்று பனைமலைபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்கிறவரை சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார். இது ஒரு காதல் திருமணமாகும்.


கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப அட்டைக்காக தொடர்ந்து அலைந்துகொண்டிருகிறார்கள். குடிமைப் பொருள் வட்டாட்சியரை 32 முறை நேரில் சந்தித்து இருவரும் அனைத்து ஆதாரங்களையும் தந்தபின்பும் குடும்ப அட்டை தர மறுத்துள்ளார்கள். பெற்றோரின் குடும்ப அட்டையில் உள்ள ரேகாவின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். காதல் திருமணத்தில் பெண்ணின் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்துள்ளார்கள்.


இந்நிலையில்தான் கணவன், மனைவி இருவருக்கும் கலப்புத் திருமண தம்பதிகள் என்பதற்காக அரசு தந்துள்ள பாராட்டு பத்திரம், தங்களின் திருமண பதிவுச் சான்று, அரசின் உதவித் தொகையின் வைப்பு நிதிச்சான்று ஆகியவைகளை, ‘‘தங்களுக்கு குடும்ப தர மறுக்கின்ற நிலையில் அரசின் இந்த அங்கிகாரப்பத்திரங்களும் தேவையில்லை’’ என நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி தந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்து சமாதானப்படுத்தி, 15 நாட்களில் குடும்ப அட்டை தருவதாக வாக்களித்துள்ளார்.
பழங்குடி இருளர்கள் சாதி சான்றுக்கு மட்டுமில்லாமல், குடும்ப அட்டைக்கும் கூட கால காலமாய் போராட வேண்டியுள்ளது.

Tuesday, December 2, 2008

ஈழம் : நடை பயணம்


ஈழப்பிரச்சனை தமிழகத்தில் 1983 போன்று எழுந்து வருகின்றது. மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று பிரதமரை சந்தித்த தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போரை நிறுத்த உறுதியளித்துள்ளதாக செய்தி வருகிறது. என்ன உறுதி என்பதுதான் புரியவில்லை.


இந்நிலையில் திரு.ஆனந்தகுமார் என்ற இளைஞர் தனக்கிருந்த ஆர்வம், உணர்வின் வெளிப்பாடாக, இந்தியா தலையிட்டு தமிழர்கள் மீதான போரை நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை முதல் இராமேசுவரம் வரை 1000 கி.மீ தூரத்திற்கு, படத்தில் உள்ள கைவண்டியை இழுத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 26&ஆம் தேதி சென்னையில் டி.எஸ்.எஸ்.மணி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். தனியருவராக பயணத்தை தொடர்ந்துள்ளார் ஆனந்த முருகன்.


சில நாட்களுக்குப் பின் கூடுவாஞ்சேரியில் இவரின் இந்த பயணத்தைப் பார்த்த அமீது, அரி ஆகிய இருவரும் தாங்களும் இராமேசுவரம் வரை உடன் வருவதாக இப்பயணத்தில் இணைந்துள்ளார்கள்.


நேற்று இரவு திண்டிவனம் வந்த இக்குழுவினரை இரவு தங்க வைத்து. காலையில் திண்டிவனம் நகரில் இரு வரவேற்பு கூட்டங்கள் நடத்தி, குழுவினரை வாழ்த்தி பேசி வழியனுப்பி வைத்தோம். கூட்டத்தில் பேராசியர் கல்யாணி, தோழர் நசீர் அகமது, வழக்கறிஞர் பூபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திண்டிவனத்திற்கு அடுத்து 10 கீ.மீ தூரத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் குழுவினருக்கு அடுத்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான், பேராசியர் கல்யாணி, தோழர்கள் நசீர் அகமது, விஸ்வதாஸ், எழிலரசன் ஆகிய ஐவரும் குழுவினருடன் கூட்டேரிப்பட்டு நடந்து சென்று அங்கு ஏற்பாடு செய்திருந்த தோழர்களிடம் இவர்களை அறிமுகப்படுத்தி வந்தோம்.


தோழர் ஆனந்த முருகன் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின், மாநில இளைஞரணிச் செயலாளராக உள்ளார். கட்சி இவரின் இந்த பயணத்தை வேண்டாம் என்று கூறியுள்ளது. ஆனாலும் இவரின் ஆர்வம் மீறி பயணத்தை தொடர்ந்துகொண்டுள்ளார்.

Saturday, November 29, 2008

மண்டல் நாயகன்



1971 தேர்தலில் வெற்றிபெற்ற விஸ்வநாத் பிரதாப் சிங், அப்போது வி.பி.என்.சிங் என்று குறிப்பிடப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை மண்டா ராஜா என்று அழைத்தார்கள். அலகாபாத் அருகில் இருந்த மண்டா என்ற ஒரு பகுதியில் ராஜாராம் கோபால் சிங் என்பவரின் தத்துப்பிள்ளையாக சென்றதால் மன்னர் பரம்பரையில் சேர்ந்தார்.




முதலில் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் இணை அமைச்சராக உயர்ந்தார். சில குழுக்களில் அவருடன் இருந்தபோது, அவர் அடக்கமாகவும், தெளிவாகவும், அனைவரும் பாராட்டும் வகையிலும் பணிபுரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தூய்மையான அமைச்சராக விளங்கினார். 1997-க்குப் பிறகு அவர் உத்திரப்பிரதேச அரசியலில் ஈடுபட்டு 1980-ல் அம்மாநில முதலமைச்சரானார்.




பின்னர் 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராவின் மரணத்துக்குப் பிறகு, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தொழிதுறை அமைச்சராக இருந்து பின்னர் நிதியமைச்சரானார். வரி கொடுக்காமல் ஏமாற்றிய பெரிய முதலாளிகளின் வருமான விவரங்களை ஆராய தனி கவனம் செலுத்தி ஊழல் பெருச்சாளிகளை அடக்க அவர் முற்பட்டார். அதில் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் சிக்கினார்கள். அதனால் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. அதிலும் வி.பி.சிங் சிறிதும் தளர்ச்சியடையாமல் அதன் விவரங்களை கடுமையாக கவனிக்கத் தொடங்கினார். இதில் உண்டான மோதலில் அவர் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத நிலைமையில் 1987-ல் ஏப்ரல் 12-ல் தமது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஊழலை ஒழிக்க முற்பட்ட உயர்தர அரசியல்வாதி என அவரை மக்கள் போற்றினார்கள். போபர்ஸ் பிரச்சனை மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.




அதைத்தொடர்ந்து பிரிந்து இருந்த ஜனதா அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு பெங்களூரில் 1988 அக்டோபர் 11-ல் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினர். போபர்ஸ் ஊழலை எதிர்த்தும், அரசாங்கத்தின் அலங்கோலங்களைக் கண்டித்தும் எதிர்கட்டிகளின் உறுப்பினர்கள் 1989 ஜூலை மாதத்தில் தத்தம் மக்களவை உறுப்பினர் பதவிகளை விட்டு விலகினார்கள். அதுவரை ராஜீவ் காந்தியின் தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு சிதைந்து 1989 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்த தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி அமைச்சரவை இந்திய அரசியலில் முதன்முறையாக தலைமையில் அமைந்தது. பிரதமர் வி.பி.சிங் காலத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட பிரதிநிதித்துவங்களைத் தரும் மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் அரசானை பிறப்பிக்கப்பட்டது. இதனால் பிற்பட்ட வகுப்பினர் பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய்வர்களாக இருந்த நிலைமையை நீக்க அரசியல் முறையில் தீர்வு காணப்பட்டது.




இந்த முடிவுக்கு பலமான கண்டனமும், கிளர்சியும் எழுந்தன. அத்துடன் அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் அத்வானி எடுத்த ரத யாத்திரை மீது வி.பி.சிங் காட்டிய எதிர்ப்பினால் அமைச்சரவைக்கு ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை நீக்கிக் கொண்டது.




மக்களவையில் உள்ள ஆதரவை நிரூபிக்க 1990 நவம்பர் 9-ஆம் தேதிக்குள் நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் வி.பி.சிங் கொண்டுவர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட காரணத்தால் வி.பி.சிங் முன்கூட்டியே பதவி விலகி விடுவது நல்லது என்று சிலர் அவரிடம் கூறினார்கள். இதற்குமுன் பெரும்பான்மை பலத்தை இழந்த பிரதமர் அவையில் வந்து தோல்விபெறாமல் அதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து விலகுவது வழக்கம். ஆனால் அவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோற்கடிக்கப்படுவதாக இருந்தாலும், தாம் எடுத்த சமுதாய நீதி பற்றிய குறிக்கோளுக்காக கடைசிவரை போராட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்து மிகவும் உறுதிப்பாட்டுடன் வி.பி.சிங் பேசினார். அவையில் காங்கிரஸ் கட்சி, பாஜக உட்பட எதிர்த்தரப்பினர் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டனர்.




மண்டல் குழுவின் பரிந்துரையை வி.பி.சிங் நிறைவேற்றியதற்காக அவருடைய அமைச்சரவை வீழ்த்தப்பட்ட பிறகும், அந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திரா ஷானி பெயரில் வந்த அந்த வழக்கு ஒன்பது உச்சநீதிமன்ற நீத்பதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இரண்டாண்டு காலம் நடைபெற்றது. கடைசியாக 16-11-1992 -ல் வி.பி.சிங் போட்ட அரசாணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.




வி.பி.சிங் பிரதமராக இருந்தது 2-12-1989 முதல் 10-11-1990 வரையிலான காலம் மட்டுமே. இது கால அளவில் குறுகியது என்றாலும், இந்திய நாட்டின் சமுதாய அரசியல் வரலாற்றில் நீடித்து நிற்கும் மகத்தான சாதனையை உண்டாக்கினார். இந்த மண்டல் நாயகனின் மற்றொரு மகத்தான பணி. இலங்கையில் இருந்த இந்தியாவின் அமைதிப் படையை திரும்ப அழைத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்றிய பெரும்பணியாகும்.

Friday, November 28, 2008



திட்டுக்காட்டூர்:

ஜாதித் தீவில் தலித்துகளின் வாழ்க்கை


திட்டுக்காட்டூர் - கடலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் 19 தலித் குடும்பங்களுக்கு 1965 இல் அரசு பட்டா வழங்கியுள்ளது. 1 ஏக்கர் 32 சென்ட் நிலப்பரப்பில் 19 தலித் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். குடிசை வீட்டைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். தலித் மக்கள் குடியிருப்பின் நான்கு பக்கங்களும் வன்னியர் சமூகத்தவர்களின் வயல்களும், தோப்புகளும், நிலங்களும், வீடுகளும் சூழ்ந்துள்ளன. 19 தலித் குடும்பத்தினரும் குடியிருப்பில் இருந்து வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ அன்றாடம் பெரும் போராட்டத்தையே நிகழ்த்தி வருகிறார்கள். பொது வழியின்றி ஒரு தனித் தீவாக சிறை வாழ்க்கையை அய்ந்து தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள்.


அவசரத்தின் பொருட்டு செல்கின்ற ஓர் ஒற்றையடிப் பாதைகூட, சாதி இந்து ஒருவருக்கு சொந்தமானது. யாரேனும் ஒரு தலித் அந்த வழியாகச் சென்றால், உடனடியாக அந்த வழி வேலி போட்டு அடைக்கப்படுகிறது; பாதை மறுக்கப்படுகிறது. வயல் வரப்புகளின் வழியே நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மிக அவசரத்தின் பொருட்டு அவ்வழியே செல்கின்ற தலித் மக்கள் சாதியின் பெயரால் இழிவு செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தலித்தும் எப்படி வெளியே செல்வது, உள்ளே வருவது எனத் தெரியாமல், நாள்தோறும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தை சந்தித்து வருகிறார்கள். தங்களின் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதைக்கூட சாதி இந்துக்கள் தடை செய்துள்ளனர்.சாதி ஆதிக்கத்தால் இப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலித் குழந்தைகள் படிக்க இயலாமல்,அருகில் இருக்கும் கீழகுண்டலவாடி கிராமத்தில் உள்ள ராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் அவலநிலை நிலவுகிறது. அதுவும் சாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியே செல்ல முடியாமல் வெகுதூரம் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த அய்ந்து தலைமுறைகளாக வசித்து வரும் இம்மக்களில் வெறும் 5 பேர் மட்டுமே மிக அதிகபட்ச படிப்பாக 10 ஆம் வகுப்பு படித்துள்ளனர்.


வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற தேநீர் மற்றும் உணவுக்கடைகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது. முருகன், தம்பிசாமி, கலியபெருமாள், துரைக்கண்ணு ஆகிய வன்னியர்கள் நடத்துகின்ற தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. உணவுக்கடைகளில் தலித்துகள் செருப்பினை வெளியே தெருவில் கழற்றிவிட்டு, கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிடும் இழிநிலை தொடர்கிறது. கோவிலில் சென்று கடவுளை வழிபடவும் கூட, தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திட்டுக்காட்டூர் தலித்துகள், பேருந்தில் சாதி இந்துக்களுடன் சமமாக அமர்ந்து செல்லமுடியாத நிலையே இன்று வரை நடைமுறையில் உள்ளது.


தலித் மக்கள் மீது, சாதி இந்துக்கள் தீண்டாமை பாகுபாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வன்கொடுமைத் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலரால், தலித் சமூகத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.தேர்தலின்போது தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தலித் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். சென்ற ஆண்டு, "எப்படி எங்கள் நிலத்தின் வழியே செல்லலாம்?' என தலித்துகளை தாக்க வந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பாசுபாதம் என்பவர், தன்னுடைய துணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் சென்று, தலித் பெண்களிடம் ஆபாசமாக சண்டையிட்டுள்ளார்.


தங்களுக்கு நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளையும் தாக்குதல்களையும் யாரிடமும் சொல்லவே பயந்து, அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளக் கூட தலித் மக்கள் தயங்குகின்றனர். பேசியதும், பேசுவதும் தெரிந்தால் எந்த நேரத்திலும் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களால் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.29.6.08 அன்று இரவு 6 மணியளவில் வன்னியர் சாதியைச் சேர்ந்த குமரவேல், அப்பு, நாகராஜ், பாசுபாதம், உரி, குமரகுரு, பாஸ்கரன், ராஜயோகம், சகுந்தலா ஆகிய 9 பேரும் தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 8 தலித்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரைப் பெற்ற போலிசார், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பிணையில் வந்துள்ள தலித் மக்கள், சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.


விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலித் மனித உரிமைக்காக செயல்படுகின்ற ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்' இக்கிராமத்தை ஆய்வு செய்து, திட்டுக்காட்டூர் தலித் மக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து மீட்டெடுக்க அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. அதன் இயக்குநர் வே. அ. ரமேஷ்நாதனிடம் இது குறித்து கேட்டபோது, “திட்டுக்காட்டூர் தலித் மக்கள் மனித மாண்புடன் அச்சமின்றி வாழ, இங்குள்ள 19 குடும்பத்தினரையும், தலித்துகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வேறு பகுதியில் குடியமர்த்தி, அரசு தனது பொறுப்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், தலித் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராம தலித் மக்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.தலித் குழந்தைகளை அரசு தனது பொறுப்பில் படிக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீது நிகழ்கின்ற வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை களைவதற்கான சீரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றி வரும் சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, அத்தேநீர்க் கடைகளை நிரந்தரமாக முடக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்பவர்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 17இன் கீழ் கூட்டு அபராதம் விதிப்பதோடு, இக்கிராமத்தை தீண்டாமை கிராமமாக அறிவிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு வாக்குரிமையை மட்டும் அளித்துள்ள அரசு, அவர்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.


தலித் மனித உரிமைக் கண்காணிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் இப்பிரச்சனை குறித்துப் பேசும் போது, “நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அடுத்த நூற்றாண்டில் நிலாவில் மனிதன் குடியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பூமியில் தலித் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. திட்டுக்காட்டூர் போன்று எத்தனையோ தலித் கிராமங்கள் உள்ளன. இவை பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. இதை உணர்ந்துதான் அம்பேத்கர், இது போன்ற நிலையை சந்திக்கும் தலித் மக்களை, அதே மாவட்டத்தில் தலித்துகள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


வட இந்தியாவில் அவ்வாறு செய்துள்ளார்கள். தமிழக அரசு இவ்வாறு செய்ய முன்வருமா? விசாரிக்கின்றோம் என்றோ, அமைதிக் குழு அமைக்கின்றோம் என்றோ தலித்துகளின் வாழ்க்கையை அது தள்ளி வைக்கும். தேர்தல் பேரம் தொடங்கிவிட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் போகவும் வாய்ப்புள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள்தான் இது குறித்து அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் திட்டுக்காட்டூர் தலித்துகளுக்கு தீர்வு கிடைக்கும்'' என்றார்.தலித் மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்று நான்கு மாதங்களுக்குமேலாகியும், இதுவரை அரசுஎத்தகைய உதவியையும் செய்யவில்லை. இலங்கைத் தீவில் அல்லலுறும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள், ஜாதித் தீவில் அல்லலுறும் சேரித் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவார்களா?

நன்றி : தலித்முரசு, அக்டோபர் 2008

Saturday, November 22, 2008

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)
தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.
20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.
இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.

பின்னணி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.

எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.

நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.

இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.

சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.
இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.

எமது பார்வைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.
2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.
3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.
4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.
5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.
6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.
8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.
2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.
3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.
4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.
5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.
6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.
8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.
9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.
நன்றி - சத்தியக்கடுதாசி

Sunday, October 19, 2008

கடத்தல் கற்பழிப்பு


திண்டிவனம் அருகே உள்ள வானூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் தனது தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் கட்டிடவேலைக்கும் சில நேரங்களில் செல்வார். அவ்வாறு செல்லும்போது செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இவர்களின் இந்த உறவை லட்சுமணனின் அண்ணன் ராமன் விரும்பவில்லை. கடந்த ஞாயிறு 12.10.2008 இரவு ஏழு மணியளவில் செஞ்சி பேருந்துநிலைய கூட்டுசாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சாந்தியை, ராமன், இன்னொருவரை துணைக்கு சேர்ந்துக்கொண்டு கடத்திச் சென்று, அடர்ந்த பாறையருகே வைத்து மிரட்டி முழுநிர்வாணப்படுத்தியுள்ளார். சாந்தியின் செல்பேசி, வெள்ளிகொலுசு, அரைபவுன் கம்மல், ஒன்றரை பவுன் சங்கிலி ஆகியவற்றை ராமன் பறித்துக்கொண்டுள்ளார். பின்பு ''இதுதான் என் தம்பி கட்டிய தாலி கயிறா?" எனக்கூறி சாந்தியின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை அறுத்துள்ளார். ‘‘என் தம்பி கூட படுத்த இல்ல, இப்ப என்கூடவும் படு’’ என்று கூறி அடித்து, உதைத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். பின்பு ராமனுடன் இருந்தவனும் நீளமான வீச்சரிவாளை காட்டி, படுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அருகே உள்ள சவுக்குத்தோப்பிற்கு இழுத்துச்சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். ராமன் ‘‘மாப்ள எங்கடா இருக்க வாடா’’ என்று கூப்பிட்ட பின்பு அந்த நபர் சாந்தியை விட்டு சென்றுள்ளார். அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சாந்தி அந்த இடத்திலிருந்து எழுந்து தப்பித்து ஓடியுள்ளார். கொஞ்ச தூரம் போனபிறகுதான் சாந்திக்கு இவ்வளவுநேரம் தன் உடம்பில் துணியே இல்லாமல் நிர்வாணமாக ஓடி வந்தது தெரிந்துள்ளது. அதன்பிறகும் உடம்பில் துணியில்லாமலேயே சிறிது தூரம் சென்று ஒரு வீட்டின் அருகே சென்றுள்ளார். அந்த வீட்டில் ஆண் ஒருவரும் படுத்திருக்கவே, அருகில் உள்ள வீட்டின் வெளியே கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு பாவாடையை எடுத்து உடுத்திக்கொண்டு அந்த வீட்டின் வெளியே படுத்திருந்த பெண்ணை எழுப்பியுள்ளார். அவர்கள் உதவியுடன் அன்றிரவு அங்கு தங்கியிருந்துள்ளார். விடிந்த பிறகு 13.10.08 அன்று அங்கிருந்து சாந்தி அவரது ஊருக்கு சென்றுள்ளார். அன்று இரவுதான் தனது தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார் சாந்தி. வெளியில் சொல்ல இரண்டு நாட்கள் தயங்கிய பின்பு, பிறர்மூலம் கேள்விபட்டு 16-10-08 அன்று திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கத்தை சாந்தியும், அவரது தாயாரும் அனுகினார்கள். அதன்பின்பு புகார் தயாரிக்கப்படு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் தந்தார். கடத்தல் சம்பவம் நிகழ்ந்த செஞ்சி காவல் நிலையத்தில் நேற்று சாந்தியின் புகாரின் பேரில் மேற்படி ராமன் அவரது கூட்டாளி ஆகியோர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, September 10, 2008

இரட்டணை : தடியடி, துப்பாக்கிச்சூடு









விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ளது இரட்டணை கிராமம். சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கடுத்தும், பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்தவர்கள் உள்ளிட்ட, பிற சாதி இந்து சமூகத்தவர்களும் என சுமார் 10,000 குடும்பத்தினர் வசிக்கின்ற மிகப்பெரும் ஊராட்சியாகும். மொத்தம் 5 வார்டுகளைக் கொண்ட இக்கிராமத்திற்கு பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.















  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் நடைபெறும் வேலைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டைச் சேர்ந்தவர்கள் செய்து வந்துள்ளனர். தொடக்கத்தில், திட்டத்தில் கூறியுள்ளபடி நாளன்றுக்கு ரூ.80 கூலியாக வழங்கியுள்ளனர். அதன்பின்பு படிப்படியாக ரூ. 70, ரூ.60, ரூ.50 எனக் குறைத்துக் கொடுத்துள்ளனர். மக்கள் நலப் பணியாளர் நந்தகோபால், மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வனை கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளனர்.




  • கடந்த 16.08.08 அன்று ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலித் மக்கள் இரண்டு குழுவாக சுமார் 500 பேரும், தலித் அல்லாத சாதி இந்துக்கள் ஒரு குழுவாக சுமார் 250 பேரும் என மொத்தம் சுமார் 750 பேர் இரட்டணையில் உள்ள புதுக்குளம், தலைவாழைப்பட்டு கால்வாய் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகளைச் செய்து வந்துள்ளனர். காலை 10 மணியளவில் மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் வேலை செய்துகொண்டிருந்த மக்களிடம் வழக்கமாக செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்யவேண்டும் என்றும், கூலியாக ரூ.40 அல்லது 45&தான் தருவோம், அதுவும் கூட பி.டி.ஓ தந்தால்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார்.• தினசரி செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்ய வேண்டியிருப்பதுடன், வழக்கமான கூலியையும் குறைத்து கொடுப்பது ஏன் என்று வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு மேற்படி மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால், ‘‘இதெல்லாம் எனக்குத்தெரியாது இஷ்டம் இருந்தா செய்ங்க. இல்லன்னா போங்க. அதிகாரிய வேணா போய் கேளுங்க’’ என்று கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் அதிகாரியிடம் விவரம் கேட்கலாம் என வேலைசெய்து கொண்டிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஊருக்குள் வந்து மேம்பாலத்தில் நின்றுள்ளனர்.• தகவலறிந்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம், மயிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ ஆகியோர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். மேலும், வட்டாட்சியர் அக்கிராமத்திற்கு செல்லும்போது பெரியதச்சூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை வரவழைத்துள்ளார். காலை 11&00 மணி முதல் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கூட்டம் கலையாமல் மேலும் மேலும் கூடியுள்ளது. பேச்சு வார்த்தையின் போது தற்போதைய தலைவர் கலைச்செல்வன், முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோரும் இருந்துள்ளனர்.• பெரியதச்சூர் போலீசார் தகவல் தந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திலிருந்தும் காவலர்களை வரவழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2&00 மணியளவில் அதிரடிப்படைபோலீசார் வண்டி வந்துள்ளது. வண்டி வந்து நின்றதும் வண்டியில் இருந்து இறங்கிய அதிரடிப்படை போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்கு நின்றிருந்த மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.• வந்ததும் தாக்கத்தொடங்கிய அதிரடிபடை போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்காத மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அவ்வாறு ஓடிய மக்களை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர் போலீசார். அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் மக்களை தாக்காதீர்கள் என தடுக்கமுயன்ற ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் மீதும், அவருடன் இருந்த அவரது தம்பியும், சட்டக்கல்லூரி மாணவருமான தமிழரசனையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். • தன்னைத் தாக்கியவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் என்றும், தன்னை அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும், மேலும் தான் ஊராட்சி மன்றத் தலைவர் என்று கூறிய பின்பும் போலீசார் தன்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று நேரில் சந்தித்தபோது ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் கூறியுள்ளார். போலீசாரின் தாக்குதலில் தலைவர் கலைச்செல்வனுக்கு தலையிலும், இடது கையிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளது. அவரது தம்பி தமிழரசனுக்கு இடது கை, முதுகு, தலை ஆகிய இடங்களில் கடுமையாக அடிபட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.• ஊராட்சி மன்றத் தலைவரும், அவரது தம்பியும் அடிபட்டு இரத்த காயத்தில் கீழே விழுந்ததை கண்ட மக்கள் பீதியில் அங்கும், இங்கும் கலைந்து ஓடியுள்ளனர். இந்நிலையில் அதிரடிப்படைபோலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.• போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலித் இளைஞரான மூர்த்தி முதுகில் குண்டடிபட்டு காயமடைந்தார்.• மறுநாள் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் இரட்டனை மக்கள் பயந்து ஓடுவதும், போலீசார் தடியடி நடத்துவதும், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசனையும் போலீசார் கூடி நின்று தாக்குவதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.• முன்னறிவிப்பின்றி நடத்திய தடியடி தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். முதலில் சென்ற சிலருக்கு மட்டும் இரட்டனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்துள்ளனர். குறிப்பாக தடியடியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இதுவரை எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.• அதிரடிப்படை போலீசார் நடத்திய தடியடிக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் தான் உத்திடவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அமுல்ராஜ் எமது கள ஆய்வுக்குழுவினரிடம் கூறினார்.• திண்டிவனம் வட்டாட்சியர் திரு.கல்யாணம் அவர்களை சந்தித்தபோது அவர் எம்மிடம், ‘‘மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து கிராமத்திற்கு சென்றேன். ஊராட்சி ஒன்றிய அலுவலரையும் வரவழைத்து நான் ஒருபக்கமும், அவர் ஒருபக்கமுமாக மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, சமாதானப்படுத்திக்கொண்டிருந்தோம். எங்களுடன் பெரியத்தச்சூர் போலீசார் நின்றிருந்தனர். இந்நிலையில் அதிரடிப்படை போலீசார் கிராமத்திற்கு வந்தபோது, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம், எங்கள் ஊருக்கு எதுக்கு போலீசை வரவழைத்தாய் என்று கேட்டு எங்களிடம் வாக்கு வாதம் செய்தார். அப்போது அவர் குடித்திருந்தார். என்னுடன் இருந்த போலீசார் அவரை தள்ளி நிற்கச்சொல்லி கைவைத்து தள்ளினார். அதில் அவர் கிழே விழுந்துவிட்டார். இதனைக் கண்டதும் மக்கள் தலைவரை அடிச்சிட்டாங்க என்று கூறி எங்களை தாக்க முயன்றார்கள். எங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள தடியடி நடத்த உத்திரவிட்டேன். மேலும் மக்கள் கைகளில் கட்டை, தடிகளுடன் எங்களைத் தாக்க வந்தார்கள். அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவிட்டேன். அதன் பின்பு அக்கிராமத்தை விட்டு வெளியேறி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன்.’’ என்று கூறினார்.




  • மேலும் இக்கிராமத்தில், தலித் மக்கள் மீது தீண்டாமை பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிய முடிந்தது. கிராமத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், வெண்ணியம்மன் போன்ற கோயில்களில் தலித் மக்கள் வழிபாடு நடத்த சாதி இந்துக்கள் தடைசெய்துள்ளனர். கடந்த ஆண்டு இக்கிராமத்தில் உள்ள தலித் ஒருவர் திருமணம் நடத்துவதற்கு சாதி இந்துக்கள் திருமண மண்டபத்தை தருவதற்கு மறுத்துள்ளனர். மேலும், சாதி இந்துக்கள் வீட்டில் தலித் மக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. இதுபோன்ற தீண்டாமைகளை தலித் மக்கள் மீது, இக்கிராமத்தின் சாதி இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர்.




பரிந்துரைகள் :








  • வேலை அதிகரிக்கப்பட்டு, கூலி குறைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்க கூடியிருந்த மக்கள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி அத்துமீறலில் ஈடுப்பட்ட பெரியத்தச்சூர், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் ஆகிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான விசாரனைக்கு தமிழக அரசு உத்திரவிடவேண்டும். மேலும், தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கவேண்டும்.




  • துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட தலித் இளைஞன் மூர்த்திக்கு அரசு தனது பொறுப்பில் சென்னையில் உயர்மருத்துவ சிகிசைக்கு ஏற்பாடு செய்து, பத்தாம் வகுப்பு முடித்துள்ள மூர்த்திக்கு அரசு தனது செலவில் மேல்நிலை மற்றும் உயர்கல்வியை வழங்கவேண்டும்.




  • போலீசாரின் தடியடியில் காயம்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசன் ஆகியோருக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதுடன், தடியடியில் காயம்பட்ட அனைவருக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்




  • கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுள்ள அனைத்து பணிகளையும் மறு ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ள ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன், மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் ஆகியோரை உடனடியாக பணிநீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்திரவிடவேண்டும்




  • உயரதிகாரிகளிடம் தகவல் அளிக்காமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கூடியிருந்த மக்கள் மீது தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம் உத்தரவிட்டுள்ளார். ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ இரட்டனையில் இத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இவர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், காவல் மற்றும் வருவாய்த் துறையின் அத்துமீறலை, வருவாய்த் துறை அதிகாரிகளே விசாரிப்பதன் மூலம், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இரட்டனையில் நடந்த தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அத்துமீறல் சம்பவத்தை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்திரவிடவேண்டும்.




  • இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளைக்களைய அரசு உரிய முன்முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டதின் கீழ் வழங்கப்படவேண்டிய கூலியை வழங்குமாறு கேட்ட மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய வருவாய் துறை மற்றும் காவல் துறையின் இந்த அத்துமீறல் சம்பவம் குறித்தும், இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகள் குறித்தும், தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் மட்டுமில்லாமல், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரித்து, அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி, நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும்.




  • மக்கள் தங்கள் பிரசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான குறைந்தபட்ச வழிமுறையாக சாலைமறியில் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசு அதிகாரிகள் பேசியபின்பு ஆறுதலடைந்த மக்கள் கலைந்துசெல்வார்கள். இதுதான் இம்மாவட்டத்திலும் நடைமுறையாக உள்ளது. ஆனால், மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக திரு. அமுல்ராஜ் பொறுபேற்ற பின்பு, போராட்டடம் நடத்துகின்ற மக்கள் மீது தடியடி நடத்துவது, பெண்கள் என்று கூட பார்க்காமல் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைப்பது, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற அத்துமீறல்கள் அனைத்தும் நடந்தேறி வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தைரியம் பெற்று மாவட்டத்தில் உள்ள பிற காவல் அதிகாரிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். சரவணபாக்கம், இறையூர், பேரங்கியூர், சொரத்தூர் போன்ற பல்வேறு சம்பங்களை உதாரணமாகச் சொல்லலாம். மாவட்டத்தில் எண்ணிலடங்காத வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள நிலையில், எலவனாசூர்கோட்டை மலையிலிருந்த பீரங்கியை கொண்டுவந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுவியதன் மூலம் காவல் கண்காணிப்பாளரின் ஆயுதங்களின் மீதான ஈடுபாடும், ஆதிக்க மனோபாவத்தை அறியலாம்.




  • மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.அமுல்ராஜ் பொறுபேற்றதிலிருந்து மாவட்டத்தில் நடைபெற்ற காவல் துறையின் அத்துமீறல் சம்பவங்கள் அனைத்தையும் விசாரனை கமிஷன் அமைத்து அரசு விசாரிக்கவேண்டும். மாவட்டத்தில் காவல் துறை தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்ற தன்மைக்கு முழுமையான காரணமாக உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அமுல்ராஜை அரசு உடனடியாக இம்மாவட்டத்திலிருந்து நீக்கவேண்டும்.

Monday, September 8, 2008

முதன்முதலாக ரயிலைப் பார்த்த மாணவர்கள்

என்ன படிப்பது? எப்படிப் படிப்பது? எப்படித் தேர்வெழுதுவது? என்ன படித்தால் எந்த வேலைக்குப் போகலாம்? போன்றவை பற்றி தெரியாமல் கிராமப்புறங்களில் எத்தனையோ மாணவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும் என்பதே "வாழை'யின் நோக்கம். மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கித் தருவது, ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித் தருவது போன்ற உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவது என்பதுதான் எல்லாராலும் முடியாது. எனவே திவ்யா தனது மாணவியுடன், அமுதரசன், ரமேஷ், "இன்று வாழ்க்கையில் இவ்வளவு துன்பப்படுவதற்குக் காரணம், சிறிய வயதில் எனக்கு வழிகாட்ட சரியான ஆள் யாரும் இல்லை' என்று புலம்புபவரா நீங்கள்? பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் சரியான வழிகாட்டியிருந்திருந்தால் நான் என்னவெல்லாமோ படித்து எங்கேயோ இருந்திருப்பேன் என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவரா நீங்கள்? உங்களுடைய ஏக்கமும் பெருமூச்சும் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதற்காக இப்போது புலம்புவதால் என்ன பயன்? உங்களைப் போலவே வழிகாட்டியில்லாமல் திசைமாறிப் போகும் இன்றைய இளந்தலைமுறையினருக்கு நீங்கள் வழிகாட்டலாமே? வருங்காலத்தில் அவர்களாவது நன்றாக இருப்பார்களே? இந்த எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதோ, இல்லையோ ஐடி தொழிலகங்களில் கைநிறையச் சம்பாதிக்கும் சில இளைஞர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அவர்கள் எல்லாரும் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாக பட்டப் படிப்பு முடித்தவர்கள். இந்த நல்ல நிலைக்கு வருவதற்கு "யாம் பட்ட துன்பம் இவ்வையகம் படக்கூடாது' என்ற உயர்ந்த எண்ணத்துடன் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். "வாழை' என்கிற பெயரில் அவர்கள் நடத்தும் அமைப்பு இத்தகைய வழிகாட்டுதலை அளித்துக் கொண்டிருக்கிறது.
வாழை அமைப்பைச் சேர்ந்த இளைஞர் பாரதிராஜனிடம் அவர்களுடைய அரிய பணியைப் பற்றி பேசினோம்.
""எனது சொந்த ஊர் திண்டிவனம். எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. நான் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்தேன். அங்குள்ள எனது நண்பர்கள் மூலமாக ஞானவேல் நாங்கள் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழகி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் எல்லாரும் சென்னை, பெங்களூர், கரூர் போன்ற நகரங்களில் வேலை செய்பவர்கள். எப்படி கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது? என்ற கேள்வி எழுந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் தாலுகாவில் உள்ள நெருப்பூர், சின்ன வத்தலாபுரம், செல்லமுடி ஆகிய மூன்று கிராமப் பள்ளிகளிலிருந்து முதன் முதலாக 15 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டுவது என்று "வாழை' முடிவு செய்தது. இப்போது 60 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு ஒரு வழிகாட்டி வீதம் எங்களை நாங்கள் நியமித்துக் கொண்டோம். அந்த மாணவருடன் 15 நாளுக்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம். வாரத்திற்கு ஒருமுறை கடிதத் தொடர்பு கொள்வோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை சனி, ஞாயிறுகளில் இரண்டுநாள் பயிற்சிப் பட்டறைகளை அவர்களுடைய கிராமத்திற்குச் சென்று நடத்துவோம்.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். முதலில் அந்த மாணவர் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாகப் படிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பதற்கும், வழிநடத்துவதற்கும் யாரும் இருக்கக் கூடாது. தூரத்து உறவினர் கூட இருக்கக் கூடாது.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் மாணவிகளின் எண்ணிக்கையும் சம அளவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி. மாணவிக்கு பெண் வழிகாட்டி என்றெல்லாம் முடிவு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதன்முதலில் ஒரு மாணவனை ஒரு வழிகாட்டி சந்திக்கும் போது ஆசிரியர் - மாணவர் உறவுதான் இருக்கும். மாணவனுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். இடைவெளி இருக்கும். ஆனால் இரண்டு மாதங்களுக்குள்ளேயே அண்ணன் - தம்பி உறவு ஏற்பட்டுவிடும்.
நாங்கள் தேர்ந்தெடுத்த கிராமப் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதேயில்லை. அவர்களின் பெற்றோர் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட பெரும்பாலும் பிள்ளைகளும் முதியவர்களும்தான் வீட்டில் இருக்கிறார்கள். இதனால் பெண் பிள்ளைகள் என்றால் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். மாணவர்கள் பெரும்பாலும் எட்டாவது வகுப்பைத் தாண்டுவதில்லை. ஆடு மேய்க்கப் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை உள்ள கிராமங்களில் எட்டாவது படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய பத்தாவது வகுப்பு வரையிலும் அதற்குப் பின்பு என்ன படிப்பது என்பதற்கும் வழிகாட்டுகிறோம். அவர்களுடைய பல்வேறு திறன்களை வளர்ப்பது, அவர்கள் பிறருடன் சிறந்த முறையில் தகவல் தொடர்பு கொள்ளும் திறனை வளர்ப்பது, தமிழ், ஆங்கில மொழித் திறனை வளர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம். இதற்காக நாங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளைப் பயன்படுத்துகிறோம். அதில் நாடகப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றைத் தருகிறோம். மாணவர்களுக்காக மருத்துவ முகாம்களையும் நடத்துகிறோம். கடந்த ஆண்டு வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 3 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். அங்கே வந்திருந்த மாணவர்களில் சிலர் அப்போதுதான் முதன்முறையாக ரயிலைப் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நகர்ப்புறங்களிலேயே செஸ் விளையாட்டு இன்று பரவலாக அறிமுகமாகவில்லை. நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக "டென்த் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் நான், கவிதா, பிரவீணா, விஸ்வேஸ்வரன், அம்பலவாணன், பொன்ராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவை உருவாக்கினோம். அந்தக் குழு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் சிறப்புக் கவனம் செலுத்தியது. அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களை மாணவர்கள் எளிதாகப் பயில வழிகாட்டியது. கணக்கு என்றால் பயப்படும் மாணவர்களுக்குக் கணக்கில் ஆர்வத்தை ஊட்டியது. இதன் விளைவாக பின்தங்கிய அந்தக் கிராமப்புற மாணவர்களில் சிலர் ஐந்நூறுக்கு 421 என்றும் 417... 391... 386... என்றும் மதிப்பெண்கள் எடுத்தனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனை சொன்னோம். அதில் இரண்டு மாணவர்களை கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில் சேர்த்து ட்ரிபிள் இ படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளை எங்கள் "வாழை'யே ஏற்றுக் கொள்கிறது. இதற்கான தொகையை நன்கொடை மூலமாகவே பெறுகிறோம். "இவ்வாறு மாணவர்களைப் படிக்க வைக்க நிதி தேவைப்படுகிறது. முடிந்த நண்பர்கள் உதவுங்கள்' என்று இ மெயில் அனுப்பினோம். பல நண்பர்கள் மாதந்தோறும் நிதியளிக்க ஒப்புக் கொண்டார்கள்.
வாழை ஆரம்பித்தது முதலே எங்களுடைய ஆலோசகர்களாக பத்திரிகையாளர் ஞாநி, மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், மாஃபா பாண்டியராஜன், ஜெகத் கஸ்பார், நம்பி ஆருரன் போன்றவர்கள் உள்ளனர்.
நாங்கள் நடத்திய மருத்துவமுகாமிற்கு டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர் குழு வந்து உதவுகின்றனர். வரும் ஆண்டில் விழுப்புரத்துக்கு அருகே உள்ள அன்னியூரில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறோம். எட்டாம் வகுப்பிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.
எங்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கு முடிந்தவிதத்தில் உதவ முடியும். நிதி தர முடிந்தவர்கள் நிதி தரலாம். எங்களுடன் இணைந்து வழிகாட்டியாகச் செயல்படலாம். குறிப்பாக மாணவிகளுக்கு வழிகாட்ட பெண் வழிகாட்டிகள் கிடைப்பது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. இவை தவிர, "வாழை'யின் அன்றாட செயற்பாடுகளில் தன்னால் முடிந்த வேலைகளை ஒருவர் செய்து தரலாம்.'' இது ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா?
(நன்றி : ந.ஜீவா, தினமணிக்கதிர்)

Tuesday, August 26, 2008

ரூ.54.28 கோடியை தமிழக அரசு செலவிடவில்லை






மனித மலத்தை அள்ளும் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் ரூ. 54.28 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடவில்லை என்று தேசிய துப்பரவு பணியாளர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.


ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்திரி, செயலாளர் கல்பனா அமர் உள்ளிட்ட ஆணைய குழுவினர், தமிழகத்தில் துப்பரவு தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனையட்டி வெள்ளி 22&08&08 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.


துப்பரவுப்பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்டப்பூர்வமான ஊதியம் மறுக்கப்படுகிறது என்றும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கபடும் துப்பரவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் கூறினர்.


தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வு செய்தபோது, கூலி, பணி முறைகள் ஆகியவற்றில் பாகுபாடு நிலவியதும், மலம் அள்ளும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது தடையின்றி தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.


துப்பரவு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவதற்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. ஆனால், இன்னும் தமிழகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் துப்பரவு தொழிலாளர்கள் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வருத்ததிற்குரியது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.


தமிழகத்தில் 83 நகரங்களில் மட்டுமே மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. மலம் அள்ளுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறையை படிபடியாக ஒழிக்க மத்திய அரசு ரூ 57.80 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் ரூ 24.52 கோடி மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. 33.28 கோடி ரூபாய செலவிடப்படாமல் உள்ளது.


கையால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் தமிழகத்தில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 54.28 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


துப்பரவு தொழிலாளர்களுக்கான கடன்களை மத்திய - மாநில அரசுகளும், வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.

Friday, June 6, 2008

100% தேர்ச்சி நான்காவது வருடமாக -











விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், மயிலம் அருகே உள்ளது எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100% தேர்ச்சி விகிதம் பெற்று வருகிறது. அதற்கு காரணமான பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும், பள்ளிக்குச் நேரில் சென்று சந்தித்து பாராட்டியும், மாணவர்களை வாழ்த்தியும் கௌரவித்தது நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு.


திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே அரசு பள்ளி, அதுவும் கிராமப்புற பள்ளியாக இருந்து, கடந்த 4 வருடமாக 100% தேர்ச்சியை எடுத்துவருவதையும், கிராமப்புற கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளியில் 02-06-08 அன்று பிற்பகல் 4-00 மணியளவில், பள்ளி தலைமை ஆசிரியர் அ.சையத்நிஜாமுதீன், மற்றுமுள்ள 10 ஆசிரியர்களையும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசிய விழா நடைபெற்றது.



நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தலைமையாசிரியர் அ.சையத்நிஜாமுதீன் மற்றுமுள்ள 9 ஆசிரியர்களும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். அதன்பின்பு ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் பேராசிரியர் பிரபா.கல்விமணி (எ) கல்யாணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய


இயக்குநர் வே.அ.இரமேசுநாதன், திராவிடர் கழக மாவட்டத்தலைவர் க.மு.தாஸ், ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன், வழக்கறிஞர்கள் இராஜகணபதி, பன்னீர் செல்வம், நகரமன்ற உறுப்பினர் மு.பூபால், ஆசிரியர் பொன்முத்து.திருமால், த.மு.மு.க நகரப் பொருளாளர் டி.சி.எம்.உசேன், நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு செயலாளர் தி.அ.நசீர்அகமது, மாவட்ட மனித உரிமைக் கண்காணிப்பாளர் இரா.முருகப்பன் ஆகியோர் பேசினார்கள். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 52 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 26 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்க்ள், 20 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆகும். இதில் பாதிக்கும்மேற்பட்ட மாணவர்க்ள் உள்ளூரைச் சேர்ந்த தாழ்த்தபட்ட ஆதிதிராவிட மாணவர்கள் ஆகும். அதிலும், குறிப்பாக சேலம் பகுதியில் இருந்து வந்துள்ள கல் உடைக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளாகும். இவ்வாறு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அரிய சாதனையிலும், சாதனையாகும்.

மாணவர்களின் இந்தச் சாதனைகளையும், கிராமப்புறத்தில் இதை நிகழ்த்தக்காரணமாக இருந்த தலையமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வளவு பாராடினாலும் தகும். அரசின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு இப்பள்ளிக்கும், தலைமையாசிரியருக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக சாதனைபடைத்து வரும் இப்பள்ளியை அரசு முன்மாதிரியாக பள்ளியாக அறிவித்து, பிற அரசு பள்ளிகளும் இதுபோன்று தேர்ச்சியினை பெறுவதற்கான முன்முயற்சியினை எடுக்கவேண்டும்..

Thursday, June 5, 2008

திண்டிவனத்தில் ஒரு உத்தபுரம்










‘‘நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை&எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.’’ -அறிஞர் அம்பேத்கர்.


மதுரை உத்தபுரம், சேலம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருப்பது அறிந்து, உரோசனைப்பகுதியில் உள்ள அந்த தீண்டாமை சுவரை பார்வையிட்டோம்.




அப்பகுதியின் நகர மன்ற உறுப்பினரான வழக்கறிஞர் மு.பூபால் அவர்களிடம் இந்த சுற்று சுவர் குறித்து கேட்டபோது, ‘‘திண்டிவனம் நகராட்சியின் 3&வது வார்டு உரோசனை. இது தனி ரிசர்வ் வார்டு. இங்க இருக்கின்ற துரைசாமி ஆசிரியர் தன்னோட 2 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தார். அதை வாங்கியவர்கள் வழிகளை உருவாக்கி பிளாட் போட்டிருந்தார்கள். ரோசனையில் இருந்து அரசு மருத்துவனைக்கு, முருங்கம்பாக்கம் பள்ளிக்கும், முருங்கம்பாக்கத்திலிருந்து சோலார் பள்ளிக்கும் செல்பவர்கள் ஆண்டுகணக்கில் இந்த வழிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பாண்டிச்சேரிய சேர்ந்த பாஸ்கர் என்பவர் இந்த இடத்தை வாங்கினாரு. அவர் உடனடியாக இந்த 2 ஏக்கர் நிலத்தை சுத்தி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பினாரு பாஸ்கர். அப்துல்கலாம் நகர்னு பெயர் பலகை வைச்சி, நகர் திறப்பு விழாவும் நடத்தினார். அந்த இடம் இருக்கிறது எங்களோட 3&வது வார்டு. திறப்பு விழாவிற்கு வார்டு உறுப்பினர்ங்கிற முறையில என்னை கூப்பிடாமல், தலித் அல்லாத 4&வது வார்டு உறுப்பினர கூப்பிட்டுள்ளார்கள். எங்க ஆளுகிட்ட இருந்து வாங்கின இடம். ஆனா இப்ப அந்த இடத்த நாங்க பாக்கறதுக்கு கூட வழியில்லாமல் உள்ளது. அவ்வளவு பெரிய சுவர், 4 பக்கமும் கட்டியிருக்காங்க. உரோசனையில் உள்ள 4 தெருவின் பின்பக்க வழியை மறைத்து ஆளுயரச் சுவர் எழுப்பியுள்ளார்கள். அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு இருந்த வழிகள் மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கள் வார்டிலிருந்து துண்டிக்கப்பட்ட தனிதொகுதியாக உள்ளது. அந்த புதிய நகருக்கு, குடிநீர் மற்றும் மின் வசதி போன்றவைகளை எங்களுடைய 3 வார்டிலிருந்துதான் செல்லவேண்டும். ஆனால் அதற்கெல்லாம் வழியில்லாமல் நான்குபக்கமும் சுவர் உள்ளது. ஒருவேளை திண்டிவனத்தின் 34 வது வார்டாக இந்த நகரை மாற்ற உள்ளார்களோ என்னவோ புரியவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கூறியுள்ளேன். நகர் மன்றக் கூட்டத்திலும் இப்பிரச்சனைனையை எழுப்ப உள்ளோம்.’’ என்று கூறினார்.


தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞரான வடிவேல் நம்மிடம், ‘‘எங்க காலனி ஆளுகிட்ட இருந்து சென்ட் ரூ 15 ஆயிரம்னு வாங்கி, இப்ப நாலு பக்கமும் சுவர் கட்டி சென்ட் 60 ஆயிரம்னு விக்கிறாங்க. அதுக்கு இந்த இடம் காலனி இல்ல, தனி இடம்தான்னு காட்டறதுக்காக இந்த இடத்திலிருந்து காலனிய மறைச்சி சுவர் கட்டியிருக்காங்க. உரோசன காலனிக்கு இந்த இடத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லன்னு காட்ட சுவர் கட்டினது மட்டும் இல்லாம, திறப்பு விழாவிற்கு எங்க வார்டு உறுப்பினர கூப்பிடாம, பக்கத்துல இருக்கிற எஸ்.சி இல்லாத வேற உறுப்பினர கூப்பிடுறாங்க. எங்க காலனிய சேர்ந்த இடத்த, அதிக விலைக்கு விக்கினும்ங்கிறதுக்காக, காலனி இடம் இல்லன்னு காட்ட நாலுபக்கமும் சுவர் கட்டியிருக்காங்க. எந்த காலத்தில் வாழ்கிறோம்னு தெரியல. அந்த காலத்திலதான் எங்கள பாத்தாலே தீட்டு, நாங்க தெருவில நடந்தாலே தீட்டுனு எங்கள அடிமையா வச்சிருந்தாங்க. இப்ப எங்க காலனி இடத்திலேயே எங்கள தீண்டப்படாதவங்களா ஒதுக்கிவச்சிருக்காங்க.’’ என்று கூறினார்.

தலித் இடமிருந்து வாங்கிய நிலத்தை விற்கவேண்டும் என்பதற்காக, தலித் குடியிருப்பிற்கும் அந்த இடத்திற்கும் உள்ள தொடர்புகளை தடுத்து, நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து, கள ஆய்வு செய்து, தலையீட்டுப் பணிகளையும் செய்து வருகின்ற திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் திட்ட மேலாளர் மோகன் அவர்களை சந்தித்து கேட்டபோது, அவர் நம்மிடம். ‘‘சமூக ஓட்டத்தில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமலிருப்பது தீண்டாமை ஒன்றுதான். உலகம் நவீன மயமாகி வருகின்ற நிலையில் தீண்டாமையும் நவீன வடிவம் எடுக்கிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், வெளிப்படையாக தெரியாதவண்ணம் எங்கும் நிகழ்ந்து வருகிறது. அதன் அடையாளம்தான் இது போன்ற தீண்டமைச் சுவர்கள். இப்போது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இது தீண்டாமமைச் சுவர் கிடையாது, புதிய நகர் உருவாக்கத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய நகரை உருவாக்குகின்றோம், அதன் ஒரு அங்கம்தான் இந்தச் சுவர் என்பார்கள். ஆனால் தலித் மக்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து, அவர்களைப் பிரித்து, தனிமைப்படுத்தி, தலித் குடியிருப்பில் இருந்து அந்த இடத்தை பிரித்துக்காட்ட சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பது என்பது தீண்டாமை இல்லாமல் வேறென்ன என்பது புரியவில்லை. தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் பறிபோனது. இப்போது, தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள இடங்கள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் திருடப்பட்டு வருவதுடன், அந்தப் பகுதிகளில் இருந்தெல்லாம் தலித்துகள் வெளியேற்றப்படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சுவரை இடித்து, வழி ஏற்படுத்தி, தீண்டாமை சுவர் கட்டிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி தமிழக அரசுக்கு புகார் அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. தற்போது தலித் மக்கள் மீது நிகழும் வன்கொடுமைகள், தீண்டாமை வடிவங்கள் எல்லாம நவீனமயமாகி வருகின்றது என முன்பெ சொல்லியுள்ளேன். இந்நிலையில், இந்திய அரசாங்கம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக குழு அமைத்துள்ளார்களாம். அக்குழுவினர் நடத்த உள்ள கருத்தறியும் கூட்டங்களில் நாம் பங்கேற்று, இந்த தீண்டாமை சுற்றுச் சுவர் போன்ற நவீன தீண்டாமை வடிவங்கள் குறித்தும் ஆய்வு செய்து, தடுப்பதற்கான புதிய சட்ட விதிகளை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளை குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதிய சட்ட விதிகளின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டிய முக்கிய பொறுப்பும், கடமையும் நம்மைப்போன்றோருக்கு உள்ளது.’’ என்று கூறினார்.






புதிய உருவாக்கம், வளர்ச்சி என்பதெல்லாம் முன்னேற்றத்தையும், நாகரிகத்தையும் அடிப்படையாகக்கொண்டிருக்கவேண்டும். சமூகத்தின் பெரும்பகுதியாக உள்ள ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத மாற்றம் நிகழ்ந்துவருகிறது. அதன் வெளிப்பாடுகள்தான் இதுபோன்ற தீண்டாமைச் சுவர்கள். நாகரிகமடையவேண்டிய சமூகம் மீண்டும் கற்காலத்தைவிட மோசமான சூழலுக்கு செல்வதையே காட்டுகிறது.

Wednesday, May 28, 2008

மத்தவங்களோட ரத்தமும் சதையும்......





13 வருசமா ஆஸ்பத்திரியில மத்தவங்களோட


ரத்தமும், சதையுமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் : முனியம்மா




சந்திப்பு : ரா. முருகப்பன்
நன்றி : தலித்முரசு, மார்ச் 2008



("கை இல்லாத அவனுக்கு உன் கையைக் குடுடா" என்று அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் கையை தூக்கத்தில் வெட்டத் தொடங்கிய விபரீதத்தில் தெரிந்தது, வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று. அரசு ஊதியம் பெறுபவர்கள் செய்யத் தயங்கிய வேலையை, வெறும் 50 ரூபாய்க்காக செய்ய வேண்டிய நிர்பந்தம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் வேலை. கடந்த 13 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் அதிகமான பிணங்களை அறுத்து, தைத்துள்ள 35 வயதான, கணவனை இழந்த தலித் முனியம்மா, திண்டிவனம் உரோசனையில் வசித்து வருகிறார். பிணம் பிணம் என வாழ்நாளில் வேறெதுவும் தெரியாமல், அறியாமல் வாழ்கிறார். அழுகை, கவலை, சோகம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என மனித வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளுடனும் 'தலித் முரசு'க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...)








உங்கள் பிறப்பு, பெற்றோர் குறித்து தெரிந்து கொள்ளலாமா?




என்னோட அப்பா, அம்மா இதே ஊர்தான். அப்பா ராமகிருஷ்ணன், ரிக்ஷா ஓட்டினார். அம்மா நகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக வேலை செஞ்சாங்க. நான்தான் கடைசி. எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணன் இப்போது இல்லை. இறந்து விட்டார். இரண்டு அக்காவும் சென்னையில இருக்காங்க. நான் 3-ஆவது வரை படிச்சி நின்னுட்டேன். ரிக்ஷா ஓட்டுனதால அப்பா நிறைய குடிப்பார். அதனாலயே அவருக்கு உடம்பு சரியில்லாம போனது. அம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணன், அக்கா எல்லாம் கல்யாணம் ஆயிபோயிட்டாங்க. 3ஆவது வர படிச்சிட்டு வீட்ல சும்மா இருந்த நான், என்னோட அப்பாவ காப்பாத்தறதுக்காக கட்டடம் கட்டறதுக்கு சித்தாள் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.






உங்களோட திருமணம், குடும்பம் பற்றி சொல்லுங்கள்...




எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனோகரன் அவரோட பேரு. அவரும் ரிக்ஷாதான் ஓட்டுனாரு. எங்க அப்பா மாதிரியே குடிச்சி, உடம்பு சரியில்லாம இருந்து செத்துட்டாரு. அதுக்கப்புறம் சித்தாள் வேலைக்குதான் போயிக்ச்கிட்டு இருந்தேன். அதுல கிடைக்கிறத வச்சிதான் என் பொண்ணு, பையன் ரெண்டு பேரையும் வச்சிகிட்டு வாழ்ந்தேன். இப்ப என்னோட பொண்ணு வள்ளிக்கு வயது 18, மகன் மணிமாறனுக்கு 13 வயது ஆவுது, 8ஆவது படிக்கிறான்.




கட்டட வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நீங்க, இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க?




என்னோட வீட்டுகிட்ட இருந்து மரகதம்னு ஒருத்தவங்க, ஆஸ்பத்திரில பெருக்கி, கூட்ற வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு தடவ உடம்பு சரியில்லாம போனப்ப, என்ன கூப்பிட்டு, உனக்குதான் அடிக்கடி வேலை கிடைக்கலையே, பசங்கள வேற வச்சிகிட்டு கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்கிற, எனக்கும் உடம்புக்கு சரியில்லாம இருக்கு. ஆஸ்பத்திரிக்கு கூடமாட வந்து ஒத்தாசை செஞ்சீன்னா, உனக்கும் ஏதோ வருமானம் வந்த மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அப்ப அவங்க கூட ஆஸ்பத்திரிக்குப் போக ஆரம்பிச்சேன்.அவங்களோட சேர்ந்து பிரசவ வார்டெல்லாம் சேர்த்துப் பெருக்குவேன். அதுக்கு அவங்க எப்பவாது 5 இல்ல 10 ரூபா தருவாங்க. இது 13 வருசத்துக்கு முன்னாடி. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தினமும் போக ஆரம்பிச்சேன். அப்ப என்னோட பெரியப்பா மகன் துளசியண்ணன்தான் ஆஸ்பத்திரியில பிணம் அறுக்குற வேலையை செஞ்சிகிட்டு இருந்திச்சி. இப்படி ஆஸ்பத்திரியில பெருக்கி, கூட்டுறது, அப்புறம் யாராவது டாக்டர், நர்ஸ் சொல்ற வேலைகளை செஞ்சிகிட்டு இருந்தேன்.ஒரு இரண்டு வருசம் இப்படிப் போச்சு, அப்புறம் எங்க அண்ணன் துளசி இறந்து போயிட்டாரு. அப்பதான் எங்க அண்ணன் கூட வேலை செஞ்ச நடராஜன்கிறவரு என்ன உதவிக்கு கூப்பிட்டாரு. நானும் அண்ணன் செஞ்ச வேலைதானேன்னு போனேன். அறுத்து, போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சி, தைச்சி வச்சிருக்கிற பாடிய நல்லா துணி சுத்தி, எடுத்துக்கிட்டு போற மாதிரி பேக் பண்ற வேலையைத்தான் முதல்ல செஞ்சேன். இப்படி ஒரு மூணு மாசம் அறுக்கறதையும், தைக்கறதையும் கூடவே இருந்து பார்த்தேன். கொஞ்சம், கொஞ்சமா பாடிகிட்ட போய் அறுக்கும்போதும் கூடவே நின்னு, அறுக்கறதுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். அந்த மாதிரி பாடிய அறுத்து, தைக்கும்போது மனசு பாதிச்சு வேலை பாதியில நின்னுடாம இருக்கறதுக்காக, பாடிய அறுக்கும்போது குடிச்சிட்டா ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிப் பழக்கப்படுத்தினாங்க.அதுக்கப்புறம் நான் தனியாவே நின்னு, அறுத்து, டாக்டர் சொல்றத எடுத்துக் கொடுத்திட்டு, தைக்கறது, பேக் பண்றதுன்னு எல்லா வேலையும் நானே செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல பாடிய அறுக்கும் போது மட்டும் குடிக்க ஆரம்பிச்ச நான், கொஞ்ச நாளைக்கப்புறம் நிறைய பாடி வர, வர ரொம்ப மனச பாதிக்க ஆரம்பிச்சதும், ஆஸ்பத்திரிக்கு வரும்போதே குடிக்க ஆரம்பிச்சேன்.




ஒரு உடலை அறுக்கும்போது உங்களுக்கு மனசுல எத்தகைய உணர்வுகள் தோன்றும்?




எனக்கு எதுவும் தோணாது. ஏன்னா, அந்த மாதிரி எதுவும் தோணக்கூடாதுன்னுதான் குடிச்சிட்டுப் போறது. இதுவரைக்கும் ஒரு பாடிய கூட நான் குடிக்காம தொட்டதே கிடையாது. குடிக்காம போனா தொடவே முடியாது. அதையும் மீறி சில நேரத்தில் மனசு சங்கடமா, அருவருப்பா தோணும். எதுன்னா, தண்ணில ஒரு வாரம், இல்ல 10 நாளுன்னு ஊறுன பாடி எல்லாம் ஊதிப்போய், அழுகிப்போய் பாக்கவே அருவருப்பா வரும். அந்த நேரத்தில் கூட கொஞ்சம் தண்ணிய போட்டுக்கிட்டு போய் செஞ்சிடுவேன். பாத்து, பாத்து மனசு ரொம்ப மரத்துப் போச்சி, எதிலயும் பிடிப்பே இல்லாம ஆயிடுச்சி.




அந்த மாதிரி அதிகம் கெட்டுப்போன உடலை அறுக்கும்போது மருத்துவர் உடன் இருப்பார்களா? தொற்று ஏற்படாம இருக்க என்ன செய்வீங்க?




எல்லா பாடிக்கும் டாக்டர் இருப்பாங்க. ஒரு 10 அடி தள்ளி நிப்பாங்க. பாடிய அறுத்ததும், அவங்க சொல்றத, கேக்குறத எடுத்துக் கொடுத்திட்டு தச்சிடுவேன். ஒரு வாரம், 10 நாளுன்னு தண்ணில ஊறியும், எங்கயாவது காடு, கீடுன்னு கண்காணாத இடத்துல வெட்டிப்போட்டு அழுகிப்போயும் வர்ற பாடிய செய்யும் போது, ரூம்ல நிறைய டெட்டால், ஸ்பிரே அடிச்சி விட்ட பிறகு டாக்டர் வருவாங்க. நான் அந்த மாதிரி பாடி வரும்போது வழக்கமா குடிக்கிறத விட, கூட கொஞ்சம் குடிச்சிடுவேன். எப்பவுமே கையில் கிளவ்ஸ் போட்டுகிட்டு, முகத்துல துணி கட்டிக்குவேன். எதுவும் பிரச்சனை இல்லாத பாடியா இருந்தா 10 நிமிஷத்தல அறுத்து, தைச்சி முடிச்சிடுவேன். ஆக்சிடெண்ட் ஆன பாடியும், கொலை செய்யப்பட்டு வர்ற பாடியும்தான் செய்யறதுக்கு கூட கொஞ்சம் நேரம் ஆகும். ஏன்னா அந்த பாடியெல்லாம் சரியா இல்லாம சிதைஞ்சி போயி வரும். இந்த மாதிரி பாடியயெல்லாம் பெரிசா ஒண்ணும் டெஸ்டுக்கு எடுக்க மாட்டாங்க. சிதைஞ்சி போயி வர்ரத சரியா வச்சி, தச்சி, பேக் பண்ணி கொடுக்கணும். ஆனா, பாய்சன் கேஸ் வந்தாதான் விஸ்ரா எடுக்கனும். விஸ்ரானா, பொணத்தோட கிட்னி, ஈரல், உணவுக்குழல், குடல். இந்த நாலிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தனித்தனியா 4 பாட்டிலிலும், உப்புத்தண்ணி 1 பாட்டிலும் என மொத்தம் ஒரு பொணத்துக்கு 5 பாட்டில்ல எல்லாம் எடுத்ததும் தச்சி கொடுத்துடுவோம். இந்த விஸ்ராவ செங்கல்பட்டுக்கு டெஸ்ட்டுக்கு கொடுத்தனுப்புவாங்க.




ஒரு நாளில் எத்தனை உடல்கள் வரும், எத்தனை செய்வீர்கள்?




இதுக்கெல்லாம் கணக்கு கிடையாது. முன்னாடி சொன்ன மாதிரிதான் 10 நிமிஷத்தில இருந்து 20 நிமிஷத்தில ஒரு பாடிய அறுத்து முடிச்சுடுவேன். பெரும்பாலும் ராத்திரியில செய்றது இல்ல. சாயங்காலம் 6 மணிக்குமேல செய்ய மாட்டாங்க. ஆனா, எப்பவாது, ஏதாவது எம்.எல்.ஏ., மந்திரின்னு யாராவது சொன்னாங்கன்னா ராத்திரியில செய்யச் சொல்வாங்க. அந்த மாதிரி நேரத்துல மட்டும் ராத்திரியில செய்வோம். இத்தனைதான்னு கணக்கெல்லாம் இல்ல. எத்தனை இருக்கோ செய்வேன். ஒரே நாள்ல அதிகமா செஞ்சது போன வருசம், இங்க திண்டிவனம் பக்கத்துல செண்டூர் ஊர்ல குண்டுவெடிச்சு செத்துப் போனவங்கள கொண்டு வந்தாக. அதுலதான் ஒரே நாளில் அதிகமா 14 உடம்ப செஞ்சிருக்கேன்.அறுத்து முடிச்ச பிறகு எப்படி உணர்வீர்கள்? அதை என்னான்னு சொல்றது? யாருகிட்டயும் எதுவும் பேசவோ, சொல்லவோ தோணாது. எனக்குள்ள நானே அமைதியா ஆயிடுவேன். வெறுமையா இருக்கும். அறுத்து முடிச்சிட்டு நேரா வீட்டுக்குள்ள போக மாட்டேன். குளிச்சிட்டு, துணி மாத்திட்டுதான் வீட்டுக்குள்ளே போவேன். முடியல்லன்னா வீட்டுக்கு வெளிய மரத்தடியில் படுத்திருந்திட்டு, அப்புறம் எப்ப எழுந்திருக்கிறனோ அப்ப குளிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள போவேன். பாடி அறுக்க ஆரம்பிச்ச இந்த 13 வருசமா கறி எதுவுமே சாப்பிடத் தோணல. இதுமட்டுமில்லாம சாதாரண சாப்பாடே சரியா உள்ள போகமாட்டேங்குது. சாப்பிடணும்னு தோணமாட்டேங்குது.ஏதாவது உடலைப் பார்க்கும்போது உங்களுக்கு சங்கடமா இருந்திருக்குமே?அப்படி ஒண்ணும் பெரிசா தோணாது. ஆனாலும் சின்ன சின்ன குழந்தைங்க பாடிய பாக்கும் போதெல்லாம் மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். எவ்வளவுதான் குடிச்சிருந்தாலும் என்னையும் அறியாம கண்ணுல தண்ணி கலங்கும். அதே மாதிரி கல்யாணம் ஆவாத பொண்ணு, பையங்க பாடிய பாத்தாலும் இந்த வயசில இப்படி ஆச்சே என்று சங்கடப்படும் மனசு.




அப்படி ஏதாவது உங்கள ரொம்ப பாதிச்சிருக்கா?




கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கை இல்லாம ஒரு பாடி வந்திருந்தது. அதை முடிச்சி கொடுத்தேன். அன்னிக்கு ராத்திரி தூக்கத்துல என்னோட மகன் மணிமாறன் கையைப் பிடித்து இழுத்து, “அந்த பாடிக்கு கை இல்ல உன்னோட கையை குடுடா'' ன்னு கத்திக்கொண்டே அறுக்குற மாதிரி செஞ்சிருக்கிறேன். சத்தம் கேட்டு என்னோட மகனும், மகளும் எழுந்திருச்சி என்ன எழுப்பினாங்க. கனவுதான்னாலும் எல்லாரும் பயந்துட்டோம். அதிலிருந்து நான் வீட்டுல பசங்க கூட படுக்கறது இல்ல. வெளியில தனியா படுக்குறேன்.உங்களுக்கு வருமானம் எப்படி? எங்க கூட இருக்கிற நடராஜன் சார்கிட்டதான் சொந்தக்காரங்க கொடுப்பாங்க. செத்துப்போனவங்க கொஞ்சம் நல்ல வசதியா இருந்தா 600 இல்ல, 700 ரூபாய் தருவாங்க. அதுல நடராஜன் எனக்கு 60 இல்ல 70 ரூபாய் தருவாரு. என்ன மாதிரி இல்லாதப்பட்டவங்களா இருந்தா 300 இல்ல 400 ரூபாய் தருவாங்க, அதுல எனக்கு 30 இல்ல 40 ரூபாய் தருவாறு நடராஜன் சார். இதான் எனக்கு வருமானம். வேற வருமானம் எதுவும் இல்ல. இப்படி அடிக்கடி எனக்கு உடம்புக்கு முடியாம ஆவறதால, முன்ன மாதிரி தினமும் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியல. அதனால இப்ப என் பொண்ணு லெதர் கம்பெனிக்கு வேலைக்குப் போவுது, மாசம் 800 ரூபா சம்பளம். இத வச்சிதான் எங்க குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.




உங்கள் உடலில் என்ன பிரச்சனை?




பொணத்த அறுத்து, பாத்துப் பாத்து மனசு மரத்துப்போச்சு. அறுக்கும்போது எதுவும் தோணாம இருக்க குடிக்க ஆரம்பிச்சது; பாடி கெடாம இருக்க ஆசிட், பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் போடறது, நாள் பட்ட அழுகிய பொணத்த அறுக்க அதிக கெமிக்கல் பயன்படுத்தினது. இது எல்லாம் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சாப்பாடு சாப்பிட முடியாம போனது. சத்து இல்லாம, ரத்தம் இல்லாம ஆச்சி. ரெண்டு கையும் முழங்கை வரையில் வெளுத்துப்போய் வேற வீட்டு வேலை எதுவும் செய்ய முடியாம பாதிக்கப்பட்டிருச்சி. இப்ப கொஞ்ச நாளா துணைக்கு என்னோட பையனையும் நான் கூட்டிக்கிட்டு போய் செய்றேன். கூட வந்த பழக்கத்துல இப்ப 8ஆவது படிக்கிற என்னோட பையன் மணி மாறன் தனியாவே பாடிய அறுத்து, தைக்கிற வேலையை செய்றான். என்னால முடியாத நேரத்துல அவன்தான் போய் செய்றான்.




உங்களோட மகனும் இதே வேலையை செய்வது கஷ்டமா இல்லியா?




8 வது படிக்கிற பையன் இந்த வேலையை செய்றது கஷ்டம்தான். ஆனா வேற வழியில்லையே என்னா செய்றது? பள்ளிக் கூடமும் ஆஸ்பத்திரியுமா அவன் வாழ்க்கை போகுது. இப்ப அவன் படிக்கிற பள்ளிக்கூடம் 8ஆவது வரைக்கும் தான். வர வருசம் என்னா செய்றதுன்னு தெரியில. இந்த 13 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதுவரைக்கும் 1000க்கும் மேலான பாடிய அறுத்திருக்கேன். பாடிய அறுத்தத மட்டுமே வேலையா பாக்கல. இந்த ஆஸ்பத்திரியில 13 வருசமா நான் பாத்தது எல்லாம் ரத்தமும், சதையும்தான். முதல்ல ஆஸ்பத்திரிய கூட்டி பெருக்கிட்டு இருந்தப்போ பிரசவ வார்டுல விழுற அவ்வளவு உதிரத் துணியையும் வெறுங்கையால அள்ளிக்கிட்டு போய் வெளியில் கொட்டியிருக்கேன். தூமத்துணியை அலசிப் போட்டிருக்கேன். அதுக்கப்புறம் பொணம் அறுக்க ஆரம்பிச்ச பிறகு, ஆக்சிடெண்ட் ஆகி தொடக்கூட முடியாம ரத்தக்குவியலா வர்றத எல்லாம் தூக்கியிருக்கேன். மத்தவங்க பாக்கக்கூட முடியாத அழுகி, நாத்தம் அடிக்கிற சதையை எல்லாம் அறுத்து தைச்சிருக்கேன். 13 வருசமா ஆஸ்பத்திரியில மத்தவங்களோட ரத்தமும், சதையுமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும். ஆனா, இப்ப எனக்கு ரத்தம் இல்லாம போச்சி. உடம்பு சதையெல்லாம் உருகிக்கிட்டே போகுது. இந்த 13 வருசமா தெனம் தெனம் நான் எத்தனையோ பேரோட வாழ்க்கையின் கடைசி கட்டத்த நல்லபடியா முடிச்சி வச்சிருக்கேன். எனக்கு எப்படின்னு தெரியல. இதையே நம்பி இருந்து வாழ்ந்துட்ட நான், என் பிள்ளைகளோட வாழ்க்கை எப்படியாகுமோன்னு இப்பத்தான் நினைக்கிறேன்.

Tuesday, April 8, 2008

ஒகேனக்கல்

தமிழகத்தில் காவிரி நுழையும் பில்லிகுண்டுவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. நீர் பரந்து விரிந்து வரும் கரையான வனநீர்பரப்பு பகுதி தமிழக & கர்நாடக மாநிலங்களுக்கு சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு பகுதியின் கரைகளுக்கும் இடையிலான 50 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்பரப்பு 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரை அகலமுள்ளதாகும். இதற்கிடையில்தான் காவிரி நீரின் பெரிய நீர்வீழ்ச்சியான, பிரச்சனைக்குறிய சிறுமலை உள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு படேல் தலைமையிலான கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர்த்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கேள்வி எழுப்பியது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரகம் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, குடிநீருக்காக அவரவர் பங்கிற்கான காவிரி நீரை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என அறிவித்து, இது தொடர்பாக 21.09.1998 அன்று ஒரு ஆணையும் வெளியிட்டது. இதையடுத்து கர்நாடகம் பெங்களூர் குடிநீர் திட்டத்தை மேற்கொண்டது.



இந்நிலையில் தமிழக அரசு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கொண்டுவந்ததது. ஜப்பான் நிதியுதவியுடன் 1998-99 ஆம் ஆண்டிலேய இத்திட்டத்தை தொடங்க முயற்சித்தது தமிழக அரசு. ஆனால் அப்போதைய மத்திய பா.ஜ.க அரசு பொக்ரானில் அணுவெடி சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.



மீண்டும், தற்போதைய தி.மு.க அரசு, ஜப்பான் நாட்டின் 1330 கோடி நிதி உதவியுடன் இந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திற்காக கடந்த 26.03.08 அன்று அடிக்கல் நாட்டியது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 18 ஒன்றியங்கள், 17 பேருராட்சிகள், 3 நகராட்சிகள் ஆகியவைகளும், இப்பகுதிகளில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் பயனடைய உள்ளார்கள். இந்நிலையில்தான் கர்நாடகத்தில் உள்ள கன்னட சலுவாலி அமைப்பு, கன்னட ரக்ஷனவேதிகே, ஒகேனக்கல் உரிமை மீட்புக்குழு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கல் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியதோடு, ‘‘ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தமானது’’ என்றும் பேசினர். வருகிற மே மாதம் கர்நாடக மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்குள்ள மாநில மற்றும் தேசியக் கட்சிகள் ஓட்டு வங்கியை குறிவைத்து இத்திட்டத்தை எதித்து களத்தில் குதித்தன. அதில் முதலில் கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைபடங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முதலில் தாக்கபட்டன. பின்பு தமிழ் மக்களும், தமிழர்களின் சொத்துகளும், தமிழ்த் தினசரியான தினத்தந்தி அலுவலுகமும், தமிழகப் பேருந்துகளும் கடும் தாக்குதலுக்கு ஆளாகின.



இந்நிலையில்தான் கடந்த மாதம் 27&ஆம் தேதி, நிதிநிலை கூட்டத்தொடரில் நடந்துகொண்டிருந்த தமிழக சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார். தமிழகத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் தமிழக அரசின் இத்தீர்மானத்தை ஆதரித்தன.



கடந்த 2005 ஆண்டு இதே போன்று பிரச்சனை எழுந்துபோது அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக, கர்நாடக அதிகாரிகள் அனைவரும் ஒன்றினைந்து, எல்லை வரைபடத்தை வைத்துக்கொண்டு, ஒகேனக்கல் இடைத்திட்டுப் பகுதி, சிற்றருவி போன்றவை தமிழகத்திற்கு சொந்தாமானவை என்று உறுதிபடத் தெரிவித்தார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, கர்நாடகத்தில் முதல்வர் வாய்ப்பை இழந்த எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜீனே கார்கே, முன்னாள் அமைச்சர் நஞ்ச கவுடே போன்றோர் ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி பித்தலாட்ட அரசியல் நடத்தி வருகிறார்கள்.



தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்கட்சிகளான அ.தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்டவைகளும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஓரணியில் நின்றன. அனைத்து கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின, நடத்தி வருகின்றன.



தமிழக அரசு கடந்த 01.04.08 அன்று சட்டசபையில், ‘‘இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்பாறும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க மைய அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்’’ என்று மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் தமிழகத்திலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் தன்னெழுச்சியாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றினார்கள். கர்நாடகத்தில் முதலில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தமிழ்த் திரையுலகினர் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து, இத்திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது.



இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் மே 10,16, 22 ஆகிய தேதிகளில் கட்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிராவின் ஆளுனருமான எஸ்.எம் கிருஷ்ணா, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை ஒத்தி வைக்கும்படி மத்திய அரசை கேட்கப்போவதாக அறிவித்ததுடன், டெல்லி சென்று பிரதமரையும், சோனியாவையும் நேரில் சந்தித்துப் பேசினார். பின்பு தி.மு.க வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமர், சோனியா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.



இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது தமிழக அரசு. ஆனால் கடந்த 05.04.08 அன்று ‘‘கர்நாடகத்தில் தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறப்போகிற ஆட்சியா வந்துவிடப்போகிறது.பயிர் வாழத்தான் தண்ணீர் இல்லை என்றார்கள், உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்? நியாயம் வெல்லும். கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் கலந்துபேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்’’ என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.



காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில், தமிழகத்திற்கு உரிமையுள்ள 14 டி.எம்.சி நீரை எடுப்பதற்கு மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு திடீரென கர்நாடக சாதகமான முடிவேடுத்ததில் தேர்தலைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் உண்மை.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் வாழ்வாதாரத் திட்டமான இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.