Wednesday, September 26, 2007

அனலாகும் மண் - அகதியாகும் மக்கள்

கடலூர் மாவட்டம் தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 13 கிராமங்களையும் காலி செய்து 1270 ஏக்கர் நிலப்பரப்பில், கடலூர் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி, 1320 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. 6004 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப் பட உள்ள இந்த அனல்மின் நிலையத்திற்கான 70% நிதியை இந்திய நிதி நிறுவனங்களின் உதவியால் திரட்டுவது என அறிவித்துள்ளார்கள். இதற்காக முந்திரி தோப்புகள் அடங்கிய 400 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தனியார் நிலத்தைக் கையகப்படுத்வதற்கான வேலயை தொடங்கியது நிர்வாகம்.

அதற்கான முதல் கட்டமாக மக்களின் கருத்து கேட்புக் கூட்டத்தினை 07-09-07 அன்று பிற்பகல் 3-30 மணிக்கு, கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள வள்ளி விலாஸ் வி.சி. சுப மகாலில், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, மாசு கட்டுபாட்டு வாரிய பொறியாளர் ராமசுப்பு மற்றும் அதிகாரிகள் நடத்தினார்கள். கூட்டத்திற்கு தியாகவல்லி பஞ்சாயத்ட்தைச் சேர்ந்த லெனின் நகர்,. பெரியார் நகர், அம்பேத்கர் நகர், நந்தன் நகர், வள்ளலார் நகர் ஆகிய கிராமங்களில் இருந்து 5 லாரிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அது மட்டுமில்லாமல் நொச்சிக்காடு, சித்திரப்பேட்டை, தியாக வல்லி, நடுத்திட்டு போன்ற கிராமங்களில் இருந்தும் 100 கணக்கான மக்கள் மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் ஆட்சியர், அனல் மின் நிலயத்தின் பயன் குறித்து பேசி படம் ஒன்றப் போடுவதற்கு முயற்சித்தார். அப்போ தியாகவல்லியச் சேர்ந்த சாமிகச்சிராயர் என்ற இளைஞர் ஒருவர் எழுந்து ‘‘முதலில் ம க்களின் கருத்தைக் கேளுங்கள், பிறகு படம் போடுங்கள்’’ என்றார். அதற்கு ஆட்சியர் அந்த இளைஞரைப் பார்த்து ‘‘நீங்கள் ஒன்றும் பேசவேண்டாம், உட்காருங்கள்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதனால் கோபமடைந்த மக்கள் ஆட்சியரிடம் முதலில் எங்கள் கருத்தைக் கேளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சியர் மக்களிடம் மீன்டும் மீன்டும் தனது கருத்களை கூறுவதற்கு முயன்றார். இதனால் மக்கள் ஆட்சியர் அவர்களை நெருங்கி நேரிடையாக இத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதைக் கூறினார்கள். அப்போது பெண்களும் ஆட்சியரிடம் நேரில் சென்று தங்களுடய கோரிக்கையை முறையிட்டனர். பல பெண்கள் ஆட்சியர் மற்றும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் ஆகியோரின் கால்களில் விழுந்து கெஞ்சி, ‘‘இந்த திட்டத்தைக் கொண்டு வராதீர்கள், எங்களை ஊரை விட்டு காலி செய்யாதீர்கள்’’ அழுது புலம்பினார்கள். ஒரு சிலமக்கள் மேடையில் ஏறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.அதனால் ஆட்சியரால் பேசமுடியாமல்போனது.ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ‘‘இத்திட்டம் வேண்டாம்’’ என்று முழக்கமிட்டனர்.

அப்போது உள்ளே நுழைந்த அதிரடிப்படை ஆண் போலீசார்,ஆட்சியரிடம் முறையிட்டுக் கொண்டிருந்த பெண்களை கையை பிடித்து கீழே தள்ளினார்கள். அத்துடன் அப்பெண்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் பெண்கள் அலறியடித்து பயந்து கீழே விழுந்து எழுந்து மண்டபதை விட்டு கோபத்துடன் வெளியேறி சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் செய்தனர். அதிரடிப்படை ஆண்போலீசார் பெண்களை அடிப்பதைப்பார்த்த இளைஞர்கள்சிலர் ஆவேசப்பட்டு நாற்காலிகளை தூக்கி வீசினார்கள். அதிரடிப்படை போலீசார் உள்ளே நுழைவதைப் பார்ததுமே அதிகாரிகள் கூட்டதை நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியரை அழைதுக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.

போலீசார் அடித்ததால் மண்டபத்தை விட்டு வெளியேறிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மேலும் மேலும் அதிரடிப்படைப் போலீசாரை வரவழைத்த படியே இருந்தனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ராவாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதன் பிறகு ஆர்.டி.ஓ பிருந்தாதேவி அவர்கள் வந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு என மண்டபத்தின் உள்ளே அழைத்துச் சென்று, மைக் தயார் செய்து மக்கள் ஒவ்வொருவரையும் பேசச்சொல்லி அதைப் பதிவு செய்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பின்புதான், ஆட்சியரால் நடத்த முடியாமல்போன கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஆர்.டி.ஓ நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வந்து மக்கள் அக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.

‘‘இத்திட்டத்திற்காக காலம் காலமாக நாங்கள் வாழ்ந்து, அனுபவித்த இடத்திலிருந்து, எங்களை கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எங்களை உயிரோடு கொலை செய்வதற்கு சமமான செயலாகும்’’ என மக்கள் அழுது புலம்பினார்கள். மேலும் மக்கள் ‘‘இதன் காரணமாக எங்கள் பகுதி நிலம், நீர், காற்று, கடல் வளம் மாசுபடுத்தப்பட்டு, இயற்க பேரழிவுகளுக்கு ஆளாக நேரிடும். இதுமட்டுமில்லாமல் எங்களின் வாழ்வாதரங்கள் முழுவம் பாதிக்கப்படும். இதனால்தான் இத்திட்டம் வேண்டாம் என்கிறோம்’’ என்று கூறினார்கள்.

இது தொடர்பாக மக்கள் கீழ்கண்ட கோரிக்ககளை முன்வைத்து போராடத்தொடங்கியுள்ளனர்.

1. மக்களின் வாழிடங்களையும், விளை நிலங்களையும், மீன் பிடி தொழிலையும் முழுமையாக பாதிக்கின்ற இந்த அனல் மின் நிலயம் அமக்கும் திட்டத்தினை அரசு கைவிடவேண்டும்.

2.மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற பெண்களை கையப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதுடன், அப்பெண்கள் மீது தடியடி செய்து அடித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.இத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிவதற்காக அறிஞர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கவேண்டும்.

4.போலீசார் அடித்ததால் ஆவேசப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெறவேண்டும்.

5. இப் பகுதியில் நிலத்தை வாங்கவோ, விற்கவோ பதிவு அலுவலகத்தில் இருக்கின்ற தடையை நீக்கவேண்டும்.

Thursday, September 13, 2007

ஜனநாயகம் (?)

கீழுள்ள
எழுத்துக்களெல்லாம் வார்த்தைகளல்ல
திருமதி. ராணி அவர்களின் வாழ்க்கை.



கீழ்க்கூடலூர் ஊராட்சி. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஈச்சேரி மற்றும் கீழ்க்கூடலூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. தலித் பெண்களுக்கான இந்த ஊராட்சிக்கு ஈச்சேரியைச் சேர்ந்த ராணி தலைவியாக இருக்கிறார். அவர் நமக்கு அளித்த வாக்குமூலம்.

நான் மேற்கண்ட ஊரில் என் கணவர் செல்வராஜ், மற்றும் மகன்கள் சீனுவாசன்(27), பிரபு (25) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமயாசிரியராக பணியாற்றி வருகிறார். நான் கடந்த முறை ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தேன். இந்த முறை எங்கள் பஞ்சாயத்தினை தலித் பெண்களுக்கு என ஒதுக்கியதால் நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தற்போது தலைவராக இருந்து வருகிறேன்.

எங்கள் கிராமத்திற்கு தினகரன் என்கிற நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் 10 வருடங்களும், ஆறுமுகம் என்கிற வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் 5 வருடங்களும் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்கள். எங்கள் ஈச்சேரி கிராமத்தில் மொத்தம் 20 தலித் குடும்பங்களே உள்ளன. 150 க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் உள்ளன. ஒரு சில வேறு சாதி குடும்பங்களும் உள்ளன. முதன் முறையாக கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலித் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில் நான் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றேன். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றுளார். இந்த செல்வத்தின் மகன் கஜேந்திரன, கடந்த 2003-ஆம் வருடம் ஊர்ப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக சாதி இந்துக்கள் அடித்தனர். இதற்காக அப்போது புகார் கொடுக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரனையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற்றால்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று தேர்தலின் போது சாதி இந்துக்கள் மிரட்டினர். ஆனால் நாங்கள் வழக்கை வாபஸ் பெறாமல் தேர்தல் வேலைகள் செய்தோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

இந்நிலையில்தான், கடந்த பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமலிருந்த தலித் குடியிருப்பிற்கும், சுடுகாட்டிற்கும் செல்கின்ற பாதையை அடைத்துக்கொண்டு, வழியை மறைத்துக் கொண்டு, போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்த முட்களை 01-09-07 அன்று காலை முதல் ஜே.சி.பி இயந்திரம் வைத்து பிடுங்க ஏற்பாடு செய்தேன். உறுப்பினர் செல்வம் உடனிருந்து உதவினார். தெருவில் ஒரு மின் கம்பத்தில் ஒட்டி வளர்ந்திருந்த முட்களை, மின் கம்பத்தில் ஏறுவதற்கு வசதியாக பிடுங்கினார்கள். அப்போது, அந்த மின் கம்பத்திற்கு அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கின்ற ராஜீ என்பவர், தன் வீட்டிற்கு வருகின்ற கேபிளை தடுக்கின்ற முட்களை வெட்டுமாறு செல்வத்திடம் கூறியுள்ளார். அதற்கு செல்வம், ‘‘அது பட்டா இடத்தில் உள்ளது. அதை நாங்கள் எப்படி வெட்டுவது’’ என்று கூறியுளார். அதற்கு ராஜீ ‘‘அது என் பங்காளி இடம்தான். நான் சொல்லிக்கொள்கிறேன். ஒன்றும் சொல்லமாட்டார்.’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். அதனால் அந்த ஒரு முள்ள மட்டும் வெட்டியுள்ளனர்.

அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த வன்னியரான மோகன் என்பவர் வந்து, ‘‘என்னுடய இடத்த நீங்க எப்படிடா சரி பண்ணலாம். பற நாய்களுக்கு தலவரானதும் ரொம்பதான் திமிர் ஏறிப்போச்சு’’ என்று மிரட்டிப் பேசியதுடன் இல்லாமல், தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தை அடித்து அவரது சட்டயை கிழித்து அங்கிருந்து விரட்டினார். அவர் பயத்தில் ஓடி வந்து என்னிடத்தில் நடந்ததைக் கூறினார். நான் உடனடியாக ஊர்ப்பெரியவர்களிடம் முறையிடுவதற்காக சென்றேன். ஆனால் மேற்படி மோகன் வழியிலேயே நின்றுகொண்டு, என்னை பெண் என்றும் பாராமல் மிகவும் இழிவுபடுத்தியும், அசிங்கமாகவும், மீண்டும் சொல்லக் கூட முடியாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார். அவருக்கு பதில் சொன்னால் பிரச்சனையாகும் என்பதால் ஊர் நாட்டாமை முனுசாமியிடம் முறையிட்டேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கும் அவன் கட்டுப்படவில்ல. நீங்க என்னா செய்யுனுமோ, செய்யுங்க’’ என்று கூறினார். வீட்டிற்கு திரும்பிய என்ன மேற்படி மோகன் மற்றும் அவருடைய உறவினார்களான நாகேந்திரன், கன்னியப்பன், ராமலிங்கம், ரவிக்குமார் ஆகியோர் வழிமறித்து அடித்து, இழுத்து, புடவயை உருவினார்கள். அப்போது மோகன், ‘‘நீ என்னாடி பரத்தேவிடியா நாயி, பெரிய மயிராட்டம் பேசுற’’ என்று கூறி, என்னுடைய தோளில் கை வைத்து ஜாக்கெடடைட கிழித்தார்.

அவமானம் தாங்க முடியாமல் நான் அங்கிருந்து என் வீட்டிற்கு வந்து பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஒலக்கூர் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தேன். புகாரைப் பெற்ற காவல் துறையினர் மனு ஏற்பு சான்று கூட வழங்கவில்லை. மேலும் நானும், உறுப்பினர் செல்வமும் உள்நோயாளியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றோம். மறுநாள் 2-ஆம் தேதி மாலை நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.

சிகிச்சையிலிருந்த செல்வம் 3-ஆம் தேதி காலை சாப்பிடுவதற்காக வெளியில் வந்த போது, ஒலக்கூர் காவல் துறையினர் பிடித்துச் சென்று கைது செய்தனர். மாலை வரை இவரைக் கைது செய்த செய்தியைக் கூட அவரது வீட்டிற்கு சொல்லாமல் மறைத்தனர். இத்தகவல் தெரியாத இவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சையில் இருந்தவரைக் காணோம் என்று தேடி அலைந்தனர்.

இந்நிலையில்தான், வன்கொடுமைக்கு ஆளாகி, பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவியான நான் மற்றும் என் கணவரும், தலைமயாசிரியருமான செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எங்கள் 7 பேர் மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளது தெரியவந்தது. ஒரு ஊராட்சி மன்றத் தலைவராகிய நான் பாதிக்கப்பட்டது தொடர்பாக கொடுத்த உண்மயான புகாரில் இரண்டு நாட்களாக வழக்கு பதிவு செய்யாத போலீசார், சாதி இந்துக்கள் கொடுத்த பொய்ப்புகாரில் உடனே வழக்கு பதிவு செய்து தலித் ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வத்தைக் கைது செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர்.

Tuesday, September 4, 2007

''கொலைகள் அதிகரிக்கக் காரணம்...."

சமூக பொறுப்பற்ற தன்மைதான்’’

0 ரா.முருகப்பன்

தமிழகத்தில் தற்போது ‘நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் காவல்துறையினர் பெரும் பரபரப்பை உருவாகி மக்களை பீதியூட்டி வருகின்றனர். இதன் இறுதியில் யாரையோ மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொலை செய்யப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில்தான் கடந்த 21.07.07 அன்று சென்னையில் போலிமோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்த & போலிமோதல் படுகொலை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ், பொ.ரத்தினம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், பிரபஞ்சன், சரஸ்வதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.


பேராசிரியர் அ.மார்க்ஸ் :‘‘இன்று உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்டவிரோதமான கொலைப் படகளை நடத்துகின்றன. சட்டம் ஒழுங்கை நிலநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்டவிரோதக் கொலைகளைச் செய்கிறது.

போராட்டப் பகுதிகளின் பாகாப்பைக் காரணம்காட்டி, குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும், அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் மாறிவிட்டன. நெருக்கடி நிலையில் மக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறிய்தையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது. 1996 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984&95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவம் இதுநடள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக்கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துகளையும் போலீசார் சூறையாடினர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெரும்தொகைகள் பறிக்கப்பட்டன.’’


பிரபஞ்சன் : ‘‘ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்வது குற்றம் என்றால், அது அரசாங்கம் செய்தாலும் குற்றம்தான், இன்று ஊடகங்களில் கொலைசெய்யப்படுவதை ஆதிரிப்பதாக காட்சிகள் அமக்கப்படுகிறது. ‘வேட்டையாடு விளையாடு’ என்றொரு படம். வேட்டையாடு என்றால் சுட்டுவிடு என்று அர்த்தம். இப்படத்தின் ஒரு பாடலில் ஏறக்குறய 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

திருச்சி அருகே நடந்த உண்மை சம்பவம் ஒன்று. சந்தேக வழக்கில் செருப்பு தைக்கும் தொழிலாளியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தன் கணவனக் காண காவல் நிலையம் சென்ற மனைவி காவல் ஆய்வாளரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். இந்தப் பாதிப்பினால் சுயநினைவு திரும்பாமல் 4 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதன்பின்புதான் கருவுற்றிருப்பது தெரிகிறது. குழந்தை பிறந்து, 5 ஆண்டுகள் கழித்து பத்திரிக்கயாளர்கள் அந்தத் தொழிலாளியிடமும், மனவியிடமும், ‘‘‘நீங்கள் இந்தக் குழந்தயை மனப்பூர்வமாக ஏற்று வளர்க்கிறீர்களா?’’ என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘‘யாரோ ஒருவர் செய்த பாவத்துக்கு இந்தக் குழந்ததை என்னங்க செய்யும். குழநதை குழந்தைதானே.’’ என்று பதில் சொல்லியுள்ளனர். இத்தகைய போலீசார்களைத்தான் ‘மக்களின் நண்பர்கள்’ என்று சொல்கிறது அரசாங்கம். நண்பர்கள் என்றால் மனிதர்களாக இருக்கவேண்டும். போலீசார்கள் மனிதர்களாக ஆகாத வரை அவர்களை நண்பர்களாக ஏற்க இயலாது.’’

கோ.சுகுமாறன் : ‘‘இந்தியா முழுவம் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரனை என்ற பெயரில் அவர்களுடய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது. ஆனால் இன்று குஜராத்திலும், மும்பயிலும் ‘தாதா’க்களை கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு ‘தாதா’ குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு ‘தாதா’ குழுவில் உள்ளவர்களை சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்குகளை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 27 பேர் ‘போலிமோதல்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.


இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடந்து முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரிக்ககளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்துகள் உருவாக்கப்படுகிறது. இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்கொண்டிருக்கின்றது.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைது செய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்படுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்வதுதில்லை. நீதித்துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.’’


பேராசிரியர் சரஸ்வதி : ‘‘இத்தனையாண்டு கால சுதந்திரம் நமக்கு எதை தந்திருக்கிறது என்று சொன்னால், அனவரும் மறுப்பில்லாமல் ஒரே குரலில் சொல்வீர்கள், போலீசார் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுட்டுக்கொல்வதற்கு உரிய ஜனநாயக்த்ட்தை தந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு தொல்லை தருபவர்களாக இருப்பதாக நினைப்பவர்களை சுட்டுக் கொலை செய்வதுதான் - இன்றைக்கு போலீசாரின் பணியாக இருக்கின்றது. போலீசாரின் இந்த ‘போலி மோதல்’ என்கிற படுகொலையின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு ‘சிவில் சொசைட்டி’ என்கிற இந்தக் குடிமைச் சமுதாயத்தின் மெத்தனப்போக்குதான் காரணம்.’’


சுரேஷ் : ‘‘இதே சூலை மாதம் 11 ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு, மும்பயில் ரமாபாய் குடியிருப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சிலையருகில் கூடுகிறார்கள். அங்கு வந்த மும்பை போலீசார் கண்மூடித்தனமாக சுட்டு 10 தலித்துகள் கொலைசெய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அரசாங்கம் அந்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இத்துடன் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அந்த வழக்கு விசாரனக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.

போலி மோதலுக்கு எந்தச் சட்டத்திலும் இல்லை ஆனாலும் காவல்துறை மோதல் கொலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் தன்னைப் பாதுக்காப்பதற்காக கொலை செய்யலாம் என ஒரு பிரிவு உள்ளது. அப்படி செய்தாலும் கூட அது சரியா? தவறா? என்பதை நீதிமன்றம்தான் சொல்லவேண்டும். தற்போது போலீசாரிடிமிருந்த விசாரனைத் திறமைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே விசாரனை சித்திரவதைதான். விசாரனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை ஒழித்துவிடுகின்றனர்.போலீசாரின் இந்த மோதல் படுகொலைகள் அதிகமாகி வருவதற்கு முக்கியக் காரணம், சட்டத்தின் ஆட்சியைப் போலீசார் நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக, தாங்கள் செய்கிற தவறுகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி தப்பித்ட்துக்கொள்ள நினைக்கிறார்கள்.’‘

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : ‘‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளில் தொடர்புடைய காவல் துறையினர் அனைவர் மீதும் - உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். போலி மோதல் கொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு, வெகுமதி போன்றவற்றை உடனே திரும்பப் பெறவேண்டும். போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். போலி மோதல் கொலையை தடுக்க, அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து மனித உரிமகளை காத்திட வேண்டும்.’’

நன்றி : தலித்முரசு ஆகஸ்ட் 2007