Wednesday, April 29, 2020

இரு நாட்கள் - 712 குடும்பங்கள்

27, 28 – 04.2020 இரு நாட்களில்
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம்.
-------------------------------------------------------------------------------------------------
விக்கிரவாண்டி வட்டம் 196 குடும்பங்கள்
கண்டாச்சிபுரம் வட்டம் 129
திண்டிவனம் வட்டம் – 83
வானூர் வட்டம் – 99
செஞ்சி, மேல்மலையனூர் வட்டம் – 205 குடும்பங்கள் என இரு நாட்களில்
மொத்தம் 712 குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை எவ்வித உதவிகளும் கிடைத்திராத நரிக்குறவர்கள் மற்றும் ஒட்டர்கள் சமூகத்தைச் சேர்ந்த 21 குடும்பத்திற்கும்
நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்த ஊரடங்கின் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளுடன்..
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் - திண்டிவனம்
புனித அன்னாள் கல்விச் சுடர் (சென்னை) –விழுப்புரம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை - அனந்தபுரம்
கவசம் அமைப்பு கக்கனூர்.
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு- செஞ்சி.
தொடர்புக்கு :
9442622970 / 9047222970 –
பேராசிரியர் பா.கல்யாணி.
தகலுக்கு 9894207407 – முருகப்பன்.








Sunday, April 26, 2020

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்.
--------------------------------------------------------------------
தீவிரமான வாசிப்பாக குறைந்த வருவதாக கூறப்படுகின்ற அதே நேரத்தில் கிண்டில் போன்ற டிஜிட்டல் வடிவில் வாசிப்பு கூடியிருக்கிறது என்பதையும், அதிக நூல்கள் வெளியாகின்றது என்பதையும் மறுக்கமுடியாது. இப்படி டிஜிட்டல் வடிவில் வேகமாக படிப்பதற்கேற்ற வகையில் புரட்சியாளர் அம்பேத்கரை அறிமுகப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.

கிண்டிலில் தோழர் ரவிக்குமார் இந்த நூலை வெளியிட்டுள்ளார். அம்பேத்கர் அவர்களின் அடிப்படையாக அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

இந்த நூலில், தோழர் ரவிக்குமார் எழுதியுள்ள சில முக்கியக் கருத்துக்களை அப்படியே கீழே அளித்துள்ளேன்.

ஜனநாயகம் தழைக்க 6 முக்கியமான காரணிகளை அடையாளப்படுத்தினார். சமூக ஜனநாயகம் பரவலாக்க இந்த ஆறையும் முன்நிபந்தனையாக முன்வைக்கின்றார்.

1. ஏற்றத்தாழ்வை ஒழித்தல்.
2. எதிர்கட்சிகள் தேவை.
3.தடம் மாறாத நிர்வாகத்தின் சமத்துவம்
4. அரசியலமைப்பு சட்ட ஒழுக்கம்
5. சமூக ஒழுங்கு
6. பொது மனசாட்சி.

‘’ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு தாவரம் அல்ல. அது முதலில் முளைவிட்ட இடங்களில்கூட பின்னர் அழிந்து போனது. எனவே அதை வளர்த்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்ற அம்பேத்கரின் கூற்று முக்கியமானதாகும்.

சட்டங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தி விடலாம் என்பதே ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த சமூகத்திலிருந்து எந்த மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும் என்று அம்பேத்கர் வற்புறுத்தினாரோ அந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலாவது இப்போதும் பொருத்தமாக இருக்கின்ற அம்பேத்கரின் சிந்தனைகளை இங்குள்ளோர் பரிசீலிக்க வேண்டும். அம்பேத்கரின் மேதமையைப் புரிந்து கொள்வதற்காக அல்ல, இந்த நாட்டை ஜனநாயக நாடாக மாற்றுவதன் மூலம் தமது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவேனும் அதைச் செய்ய வேண்டும்.

“வரலாற்றை எழுதுகிறவர் கடந்த காலத்தின் சாட்சியாகவும் எதிர்காலத்தின் இயக்குனராகவும் இருக்கவேண்டும்" என்றார் அம்பேத்கர்.  இந்த வரையறை சாதி ஒழிக்கப்படவேண்டும் என விரும்புகிற ஒவ்வொரு தலித்துக்கும் பொருந்தும். இழிவுகளும், வலிகளும் நிரம்பிக்கிடக்கும் கடந்த காலத்துக்கு சாட்சியமாக இருப்பது மிகவும் துயரமானது. அதனால்தான் பெரும்பாலான தலித்துகள் கடந்த காலத்தை மறக்க விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் 1949 நவம்பர் 25 ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட அவையில் பேசும்போது, ”அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நேரத்தில் அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், ஆனால் சமூக பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமற்ற நிலையிலேயே இருப்போம்’’ எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நதிநீர்க் கொள் கையை, மின்னுற்பத்திக் கொள் கையை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்து அதை வழிநடத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் நேர்ந்தால் அதைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறையை அதில் அவர்தான் ஏற்படுத்தினார். அவர் கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262 உருவாக்கப்பட்டது. அதுதான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956 உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. புரட்சியாளர் அம்பேத்கரால் உருவான அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நாம் இப்போது காவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடுகிறோம். முல் லைப்பெரியாறு விவகாரத்தில் வாதிடுகிறோம்; பாலாறு, பவானி, சிறுவாணி பிரச்சனைகளில் நம் உரிமையைக் கேட்கிறோம்.  நதிநீர் சிக்கல் மட்டுமல்ல மேலும் பல்வேறு தளங்களில் அம்பேத்கர் முன் வைத்துள்ள சிந்தனைகளைத் தொகுத்து அவற்றை நமது சமகால சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவாறு பயன்படுத்துவது என்று ஆராயவேண்டியதுஆராயவேண்டியது தலித் அறிவுஜீவிகளின் கடமையாகும்.

பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத, ஒழுக்கம் செயல்பட இடம் கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையும் நிராகரிக்குமாறு மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். பழங்காலத்தின் விதிகளாலான மதத்தை நிராகரித்து அந்த இடத்தில் தத்துவங்களாலான மதம் ஒன் றை வைக்கவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

பாலியல் குற்றங்கள் - பாலியல் கல்வி தேவை


பாலியல் குற்றங்கள் - பாலியல் கல்வி தேவை

தற்போது பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோரும், பெண் குழந்தைகளை பள்ளி கல்லூரிக்கு படிக்க அனுப்பும் பெற்றோர்களும், வேலைக்குச் செல்லும் இளம்பெண்களின் பெற்றோர்களும் தங்கள் மகள் வீடு திரும்பும்வரை ஒரு பதட்டத்துடன் இருப்பதான பேச்சு பரவலாக உள்ளது. பெற்றோர்களின் இந்தப் பதட்டத்திற்கான காரணம் சமீப காலங்களாக பெண்கள் அதுவும் பெண் குழந்தைகள், மாணவிகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது இப்போது மட்டும் நிகழ்வது அல்ல. காலங்காலமாய் நிகழ்ந்துவருகின்றது. அதுவும் புராண காலந்தொடங்கி நடைபெறுகின்றது. இதைத்தான் மத்தியபிரதேச சாமியார் ஆசாராம் சொல்கிறார்சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அந்த சாமியார்  தண்டிக்கப்பட்டார். கடவுள் கிருஷ்ணர் என்மீது இறங்கி இந்த லீலைகளைச் செய்தார் எனக்கூறி, பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தினார். பெண்கள் தலைமையேற்று வழிநடத்திய தாய் வழிச்சமூகத்தை, இன்று அடிமை சமூகமாக மாற்றிவிட்டோம். இதில் மதமும், சாதியும் பெரும் பங்கு வகிக்கின்றது..

நாகரீகம் வளர்ந்து, அறிவியல் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் பெண்கள் மீதான அதுவும் பெண் குழந்தைகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான நிகழ்வுகளாக நடந்தேறி வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எப்படி பாதுக்காத்துக்கொள்வது என எச்சரித்துக்கொண்டே உள்ளோம். மேலும், எல்லா ஒழுக்க விதிகளையும் பெண்களுக்கானது மட்டுமே எனக்கூறி நிகழ்ந்த கொடூரங்களுக்கு பெண்ணும் ஒரு காரணம் எனச்சொல்லி சமன் செய்கின்ற அல்லது சமாதானம்  அடைகின்றமாக சமூகமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளோம்.  
இல்லையென்றால் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்தோ, தூக்கிலிட்டோ கொலை செய்வேண்டும் என்றும், ஆணுறுப்பை அறுக்கவேண்டும் எனக்கூறி கடுமையான தண்டனை அளித்தால் குற்றங்கள் நடக்காது எனப் பொதுப்புத்தியிலிருந்து பேசுகின்றோம்.

சட்டத்திலுள்ள அனைத்து தண்டனைகளும் மரண தண்டனை உட்பட அனைத்தும் ஏன் போலிமோதல் சாவு என்கிற என்கவுண்டர் கொலையும் கூட வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் குற்றங்கள் குறையாமல் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் குற்றங்களை குறைப்பது அல்லது தடுப்பது என்பது வெறும் சட்டத்தின் மூலமாக மட்டும் நிகழாது, சமூகரீதியாக அணுகவேண்டியுள்ளது என்பதை உணரவேண்டிய தருணமாக இதனை நாம் பார்க்கவேண்டும்.

பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்குள், பொள்ளாச்சியிலியே மீண்டும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் கொலை. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே 9-ஆம் வகுப்பு சிறுமி காதலன் எனக் கூறப்பட்டவனால் கடத்திச் செல்லப்பட்டு, மூன்று பேரால் கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இவைகளில் மட்டுமல்லாமல், நாட்டில் பெண்களுக்கெதிராக நிகழும் பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள், தொல்லைகள் அனைத்தும் தெரிந்தவர்களாலும், அறிமுகமானவர்களாலும், உறவினர்களாலுமே நிகழ்த்தப்படுகின்றது. இவையனைத்திலும் பெண்ணுடன் காதலன், நண்பன் என்ற பழகிய ஆணே பாலியல் வன்கொடுமைகளைச் செய்துள்ளான்.

தெரிந்த, பழகிய பெண்ணுக்கு, குழந்தைக்கு, சிறுமிக்கு, மாணவிக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகளை இழைக்கின்றோம் என்ற மன உறுத்தல் இல்லாமல் இந்தக் குற்றச் சம்பவங்களில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். எனவே முதலில் ஆண்களுக்குதான் பாலியல் விழிப்புணர்வும், பாலியல் கல்வியும் அவசியமாக உள்ளது.

நமது இந்தியச் சமூகம் ஆணையும், பெண்ணையும் சமமாக, இயல்பாக நடத்தவில்லை. பெண் குறித்தும், பாலியல் உறவு குறித்தும் பேச முடியாத, ஏன் பள்ளி கல்லூரி பாடங்களில் உள்ள உடலுறுப்புகளைக் கூட வெளிப்படையாக  பாடமாக நடத்தமுடியாத, சொல்லமுடியாத நிலையில், ரகசியமான ஒன்றாக, பேசக்கூடாத ஒன்றாக வைத்துள்ளோம்.

இப்போதேனும் அனைவரும் இந்தப் பாலியல் விழிப்புணர்வு கல்வி குறித்து பேசவேண்டும். பாடங்களில் பாலியல் கல்வி குறித்த பாடங்கள் சேர்க்கப்படவேண்டும். இப்பாடங்களை தயக்கமின்றி இவையெல்லாம் உடல் அறிவியல் என்ற கருத்தில் வெளிப்படையாக பாடமாக நடத்தப்படவேண்டும்.

குறிப்பாக, தற்போதைய சூழலில் மிகவும் புத்திக்கூர்மையுடன் குழந்தைகள் வளர்கின்றன. நிறைய கேள்விகள் தோன்றும், மனதில் எழும். பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் கேட்டும், பேசியும் பலவற்றிற்கும் விடைகளையும், தெளிவினையும் பெறுவார்கள். சிலவற்றிற்கு அவர்களும் கண்டுபிடிப்பார்கள்.

ஆனால், பாலியல் தொடர்பாக அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களையும், கேள்விகளையும் யாரிடமும் கேட்கமாட்டார்கள், பேசமாட்டார்கள். மீறி தயக்கத்துடன் குழந்தைகள் கேட்டாலும், ‘’அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், இப்ப ஒன்னும் தெரிஞ்சிக்க வேணாம், பெரியவளா ஆனபிறகு, பெரியவனா பிறகு நீயே தெரிஞ்சுக்குவ” எனக்கூறி வாயைமூடி அமைதியாக்கிவிடுகின்றோம்.  இந்தத் தடை சுவற்றினை உடைக்கவேண்டிய நேரம் இதுதான்.

ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பருவ வயதில் எழும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தயக்கமின்றி பெற்றோர்களிடம், சகோதரர்களிடம், சகோதரிகளிடம், ஆசிரியர்களிடம் பேசுகின்ற சூழலை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கு பாலியல் கல்வியை உடனடியாக பாடத்திட்டங்களில் இணைத்து, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வை உருவாக்கவேண்டியுள்ளது. இந்த விழிப்புணர்வுதான் ஒரு ஆணை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்.   
08.04.2019 தமிழினி youtube channel ல் பேசியது. 

வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கு வழிகாண்போம்!!


வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கு வழிகாண்போம்!!
பத்திரிகைச் செய்தி
-----------------------------------------------------
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. த.பாலு அவர்கள், மாணவனின் காலில் மண்டியிட்டு ‘ஒழுங்கா படிப்பா” என வேண்டிக்கொண்டார். வகுப்பறை தண்டனை ஒழிப்பில் இது ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்டது, இவரின் இச்செயலைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். அதே நேரத்தில் தலைமை ஆசிரியர் தன் நிலையை மறந்து கீழிறங்கி செயல்பட்டுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் இதனையொட்டி திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியின் முன்முயற்சியில் தமிழகப் பள்ளிகளில் நிலவும் வகுப்பறைத் தண்டனைகளைத் தவிர்ப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் 04-02-18 விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், சென்னை மற்றும் குழந்தை நேயப் பள்ளித் திட்டம்-த.நா சார்பில் ஆசிரியர் ஏ.ஸ்ரீதர்; நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் இரா.உஷா; நெய்வேலி தமிழ்ச் சங்கம் சார்பில் ஆசிரியர் வே.சுபச்சந்திரன்;  வாழை அமைப்பு விழுப்புரம் சார்பில் முகுந்தன்;  புனித அன்னாள் சபை சார்பில் சகோதரி பவுலி; திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளி சார்பில் முருகப்பன்;  விழுப்புரம் காமராஜர் மேனிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர் த.பாலு:  நூறு பூக்கள் அறக்கட்டளை, விழுப்புரம் பேராசிரியர் த.பழமலை; மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம் சார்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
·
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.பாலு அவர்கள் தனது பணிக்காலத்தில் வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கும் மாணவர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார். அதற்காக அவரை நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். 

வகுப்பறைத் தண்டனைக்கு எதிராக உள்ள ஆசிரியர்களை அடையாளங்கண்டு, அவர்கள் மூலம் வகுப்பறைத் தண்டனைக்கான சூழல்களையும், அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாநில அளவில் இதுபோன்று முயற்சிகள் மேற்கொண்டுவரும் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்கள் அனைவரின் அனுபவங்களை ஒரு தொகுப்பாக வெளிக்கொணர்வது எனத் தீர்மானிக்கப்பட்டத

       வகுப்பறைத் தண்டனையை ஒழிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைத் தொகுப்பது எனவும், இதற்காக மாவட்டந்தோறும் கருத்தறியும் கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
· 
தொடக்க நிலை, இடைநிலை, மேல் நிலை மற்றும் கல்லூரி அளவில் வகுப்பறைத் தண்டனையை முற்றிலும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு குறிப்பாகக் கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும். அதற்கு முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

06.02.2018



நூல் அறிமுகம் : உடல் ஆயுதம் – புலியூர் முருகேசன்


உடல் ஆயுதம் – புலியூர் முருகேசன்
                                   -----------------------------------------------------

புலியூர் முருகேசன் என்பவர் எழுதியுள்ள இந்த உடல் ஆயுதம் என்கிற நாவல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சிபிஐ (எம்.எல்) கட்சியின் செயல்பாடுகளை, குறிப்பாக மாடக்கோட்டை தோழர் சுப்பு அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களும், அவர் கொலை செய்யப்பட்டப்பிறகு, அவருடைய தோழரும் தமிழாசிரியருமான பாலமுத்து போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்படுவது என குறிப்பிட்ட காலத்தின் போராட்டப் பதிவுகளாக உள்ளது. பெரும் ஆவணம் என்றாலும், பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து விறுவிறுப்பான நடையில் இந்த நாவலை, வாய்ப்புள்ள அனைவரும் படிக்கவேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புலியூர் முருகேசன்,  ஒரு சிறுகதை எழுதியதற்காக ஆதிக்க சாதியினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி அச்சுறுத்தப்படுகிறார். அதனால் புலியூரில் வசிக்க முடியாத நிலையில், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.
இவர் முன்னுரையில் சொல்லியுள்ளது போல, சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சி, குறிப்பிட்ட காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் செயல்பாடுகளின் அனுபவங்கள்தான் நாவலாக உள்ளது.
இரண்டு பகுதியாக இந்த நாவலை எழுதியுள்ளார். முதல் பகுதியில், கட்டடங்களுக்கு வண்ணமடிக்கும் பணி செய்யும் குமார் என்கிற ஒரு இளைஞன்,  தந்தை கிடையாது. தாய் மட்டுமே. தினமும் வேலை முடிந்தும், சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் டாஸ்மாக் கடையில் குடிப்பதையே தன்னுடைய வாடிக்கையாக வைத்துள்ளான்.  அங்கு டாஸ்மாக் கடையில் பணியாற்றுகின்ற ஒருவர் போகிறபோக்கில், விரைவில் உன்னுடைய வேரைத்தேடி  செல்வாய் என்று சொல்கிறார்.
ஒருநாள் குடிப்பதற்கு காசில்லாத நிலையில் தாய் வைத்திருந்த ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று, பணம் எடுத்து குடித்து விட்டு, வீட்டிற்கு வருகின்றான். பீரோவில் ஏடிஎம் அட்டையை வைக்கும்போது நிறைய கடிதங்களை இருந்ததைப் பார்க்கின்றார். அவைகளை எடுத்துப் படிக்கின்றார். மிகவும் பழையதாகி, ஆனால் நினைவுகளுக்காக வைத்திருந்ததைப் போன்று இருந்ததை உணர்ந்தான். தோழர் பாலமுத்து அவர்களுக்கு எனத் தொடங்கி எழுத்தப்பட்டிருந்த அனைத்துக் கடிதங்களின் கீழேயும் மாடக்கோட்டை சுப்பு என்றிருந்தது. கடிதங்களைப் படிக்கபடிக்க தன் தந்தை எவ்வளவு முக்கியமானவராக இருந்துள்ளார் என்பதையும், பிறரால் எவ்வளவு மதிகப்பட்டுள்ளார் என்பதையும், மக்களுக்காக எவ்வளவு உழைத்துள்ளார் என்பதையும் அறிந்து, இவருடைய மகனா நான், இவ்வளவு கேவலமாக இருந்துள்ளோமே என்று வருந்துகிறான். கண்கள் கலங்குகின்றது. அப்போது நுழைந்த அம்மாவிடம், இதையெல்லாம் ஏம்மா இவ்வளவு நாள் சொல்லவில்லை என்று கேட்கிறான். இதற்காக காத்திருந்தது போன்று அவனது தாயார் கதறி அழுது, கதையாகச் சொல்கிறார். சொல்லி முடித்தபிறகுதான் அவரது மனம் இலகுவானதை உணர்ந்தார். மகன் மீது நம்பிக்கையும் உருவானது. உன்னுடைய தந்தையை கொலை செய்துவிட்டனர் என்று தாயார் கூறுவதுடன் முதல் பாகமாக முடிகின்றது.
இரண்டாம் பாகம் குமாரின் தந்தை பாலமுத்து தமிழாசிரியராக பணியாற்றுவதில் தொடங்குகின்றது. பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை வகுப்பறையில் கூறியதற்காக, அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து நிர்வாகத்தால் வெளியேற்றப் படுகின்றார்.
அச்சகம் நடத்துகின்ற மனோகரன் என்ற ஒரு தோழரிடம் மனவருத்தத்துடன் கூறும்போது, கவலைப்படாதீர்கள் உங்களுக்கு விரைவில் அரசு வேலையே வந்துவிடும், அதுவரை எங்களுடன் இருங்கள் என்று ஆறுதல் கூறுகின்றார். மனோகரன் சிபிஐ(எம்.எல்) கட்சியின் தொழிற்சங்கவாதியாக இருக்கின்றார். ஆசிரியர் பாலமுத்துவிற்கு நன்றாக பாட்டு எழுதி, மெட்டுக்கட்டி பாடவும் தெரிந்ததால் கிராமங்களுக்கு பிரச்சாரப் பணிகளுக்கு மனோகருடன் செல்கிறார். சில மாதங்களில் அரசு வேலையும் கிடைக்கின்றது.
தோழர் மனோகரன் மூலமாக மாடக்கோட்டை தோழர் சுப்புவின் அறிமுகம் கிடைக்கின்றது.  பள்ளி முடிந்து மாலை மற்றும் விடுமுறை நாட்களில் சுப்புவுடன் இணைந்து முழுமையான பொதுவாழ்க்கைப் பணியை செய்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே சுப்பு முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் உதவியாக பின்னிருந்து செயல்படுகின்றார்.  குறிப்பாக கிராமப் புறங்களிலும் நடைபெறுகின்ற பிரச்சாரப் பணிக்கான அனைத்து பாடல்களையும் எழுதி மெட்டமைத்து பாடுகின்றார்.
இது கட்சிக்கு பெரும் உதவியாக உள்ளது. பிரச்சனைகளை பாடல்கள் மூலமாக வெளிப்படுத்துவதால் கிராம மக்கள் எளிதில் புரிந்து கொண்டு கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். கட்சி வளர்வதை பொறுக்க முடியாத சாதி ஆதிக்கவாதிகள் காவல்துறையுடன் இணைந்து தோழர் சுப்புவை படுகொலை செய்கின்றனர்.
இதனால் மிகவும் மனம் உடைந்த பாலமுத்து பல மாதங்கள் எதிலும் ஈடுபட முடியாமல் இருந்தார். இதனை தொடர்ந்து மீதமுள்ள தோழர்களுடன் சில பணிகளை தொடங்கும்போது காவல்துறை வேண்டும் என்றே பொய் வழக்கில் இவரைக் கைது செய்து, புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்று, கடுமையாக அடித்து சித்ரவதை செய்தனர்.  உள்ளுறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஊருக்கு திரும்பிய இவர் மூன்று நாட்களில் இறந்து விடுகிறார். அப்போது இவருடைய மனைவி 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இருமாதத்தில் குமார் பிறக்கின்றான்.
அப்பொழுதுதான் குமாருக்கு, தன்னுடைய தந்தை இறந்தபோது உடல் தானம் செய்துள்ளார் என்பது தெரிகின்றது. தந்தையின் உடல் உறுப்புகள் யாருக்கேனும் பொருத்தப்பட்டிருக்கும் அதனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டால் தன் தந்தையையே மீண்டும் பார்ப்பது போன்று உணர முடியும் என்பதற்காக வீட்டில் இருந்து கிளம்புகின்றான். அப்போது, டாஸ்மாக்கில் ஒருவர், விரைவில் வேரைத் தேடிச் செல்வாய் என்று கூறியது நினைவு வருகின்றது குமாருக்கு.
முதலில் கருதூர் மருத்துவமனைக்குச் செல்கிறான். அது ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால் அங்கு போதிய தகவல்கள் இருக்காது என்றும் தஞ்சை மருத்துவகல்லூரி செல்லுமாறு கூறுகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பிறகும், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைகயில்தான் முழு விவரம் கிடைக்கும் என்று அனுப்பி வைக்கின்றனர்.
அங்கிருந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்கிறான். ஒரு இஸ்லாமிய மருத்துவர் குமாருக்கு உதவியாக இருந்து அனைத்து விவரங்களையும் தேடித் தருகிறேன் ஐந்து நாட்களாகும் என்று கூறுகிறார். இந்த ஐந்து நாட்களும் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றும் வயதான கிழவருடன் தங்கிக்கொண்டு அருகே உள்ள கட்டங்களில் வேலை செய்கிறான். கிழவருடன் நன்றாகப் பேசி, உதவியாகவும் இருக்கின்றான்.  
அப்பொழுது பிணவறையில் நடிகை சில்க் ஸ்மிதா இறந்த நிலையில் உடல் கொண்டு வரப்பட்டது அறிந்து இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நீங்கள் நடிகையாக ஆகவில்லையெனில் என்னவாகி இருப்பீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டபோது, நான் நக்சலைட்டாக இருந்திருப்பேன் என சில்க் கூறியதாக எல்லாம் கதை போகின்றது.  
இது மட்டுமல்ல சாதி மாறி காதலித்ததால் படுகொலை செய்யப்பட்ட ஒரு தலித் இளைஞரின் உடல் அடுத்த இரு நாட்களில் வருவதாக ஒரு சம்பவமும்  வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இளவரசனை நினைவுபடுத்துவதாக உள்ளது.
ஐந்தாம் நாள் அந்த மருத்துவரை குமார் சென்று பார்க்கின்றார். உன்னுடை தேடல் வீண்போகவில்லை. உன் தந்தை இறந்தும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். பலருக்கும் பயன் அளிக்கின்றார் என்று கூறி, குமாருடைய தந்தையின் எலும்புக்கூடு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான எலும்புக்கூடாக இருந்து பாடம் நடத்தி வருகின்றார் என்றுக்கூறி, அந்தக் கூண்டினை காட்டுகிறார்.
குமார் நீண்ட நேரம் அந்த எலும்புகூட்டினையும், பாதி செல்லரித்துபோன தந்தையின் புகைப்படத்தை வைத்துகொண்டு இரண்டையும் மாறி மாறி பார்த்து கண்கலங்கி உட்கார்ந்திருக்கின்றான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு வெளியேறி, பிணவறையில் உள்ள கிழவரிடம் சொல்லிவிட்டு ஊருக்குக் போகலாம் என கிழவரிடம் செல்கிறான். கிழவர் பிணவறையில் உள்ளார். அந்த உடல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த, இந்திய மக்கள் முன்னணி என்கிற ஐ.பி.எஃப் அமைப்பைச் சேர்ந்த தோழர் செல்வராஜ் என்பவரது உடலாகும். அந்த முகத்தைப் பார்க்கும்போது தனது தந்தையின் முகத்தைப்பார்ப்பது போல் உள்ளது எனக்கூறி அங்கேயே நிற்கின்றான். இத்தோடு கதை முடிகின்றது.
விடுதலைக்கான போராட்டத்தில் போராளிகள் தங்கள் உயிரையும் உடலையும் தியாகம் செய்கின்றனர். மக்களுக்கான இந்த பொதுவாழ்வுப் பணிக்கு தங்களின் உடலையே ஆயுதங்களாகவும், கேடயங்களாகவும் பயன்படுத்துகின்றனர். தேவக்கோட்டை சுப்பு படுகொலை, குமாரின் தந்தை படுகொலை, மேலும் மணலூர் சந்திரமோகன், சந்திரகுமார் என்ற இளைஞர்கள் படுகொலைகள் அனைத்தும் இந்நாவலில் போராட்டப்பாதைகளின் ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டப்பதிவுகள் அனைத்தும் வரலாறாகவும் பதிவாக வேண்டும்.  

09.10.2019