படித்தவர்கள் ஏன் வேலையின்றி இருக்கின்றனர்?
இந்தியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்களில் (15-29 வயது) 59.6 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை என சமீபத்திய புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டம் தொழில் துறைக்குப் பொருத்தமானவர்களை உருவாக்கும் அளவுக்கு இல்லை எனவும், தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்பப் பயிற்றுவிப்பதற்குத் தங்களைப் பேராசிரியர்கள் புதுப்பித்துக்கொள்வதில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் வேலையின்மை அதிகரித்திருப்பதற்குக் கல்வி நிறுவனங்களில் / கற்பித்தலில் உள்ள குறைபாடுகள்தான் முதன்மைக் காரணமா என்கிற கேள்விக்கு விடை காண்பது அவசியம். அதற்குச் சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது அவசியம்.
2000ஆம் ஆண்டு கணக்குப்படி உயர்கல்வி முடித்த இளைஞர்களில் 22.9% பேருக்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்த 20 ஆண்டுகளில் இது பல மடங்கு உயர்ந்து 59.63% ஆக உள்ளது என்கின்றன சமீபத்திய புள்ளிவிவரங்கள்.
10ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட தமிழக அரசின் குரூப்- 4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு முனைவர் பட்டம் பெற்ற 994 பேரும், எம்.ஃபில். பட்டம் பெற்ற 23,000 பேரும், முதுகலைப் பட்டம் பெற்ற 2.5 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டில் விண்ணப்பித்துள்ளனர்.
இறுதியாக... 75 ஆண்டு காலப் பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 40% பேர் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். படித்தவர்கள் பணியில் சேர வாய்ப்புள்ள இடமாகக் கருதப்பட்ட உற்பத்தித் துறையில் 11% பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
மேலும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 90% பேர் முறைசாராத் (informal) தொழிலாளர்களாகவே உள்ளனர். மேலே உள்ள புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் படித்தவர்கள் வேலையின்றி இருப்பதற்கும் திறன் பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்கிற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
கல்வியின் நோக்கம், நீதியான, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதுதான். பன்முக ஆற்றல் கொண்ட குடிமக்களைத் தயார்படுத்துவதுதான் கல்வி நிலையங்களின் முதன்மையான பணி. அதை நம் கல்வி நிலையங்கள் சரியாகச் செய்யவில்லை என்கிற விமர்சனத்தை வைப்பதுதான் சரியாக இருக்கும்.
- 09.07.25, இந்து தமிழ் திசையில் அ.ப.அருண் கண்ணன்
No comments:
Post a Comment