Saturday, November 29, 2008

மண்டல் நாயகன்



1971 தேர்தலில் வெற்றிபெற்ற விஸ்வநாத் பிரதாப் சிங், அப்போது வி.பி.என்.சிங் என்று குறிப்பிடப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை மண்டா ராஜா என்று அழைத்தார்கள். அலகாபாத் அருகில் இருந்த மண்டா என்ற ஒரு பகுதியில் ராஜாராம் கோபால் சிங் என்பவரின் தத்துப்பிள்ளையாக சென்றதால் மன்னர் பரம்பரையில் சேர்ந்தார்.




முதலில் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் இணை அமைச்சராக உயர்ந்தார். சில குழுக்களில் அவருடன் இருந்தபோது, அவர் அடக்கமாகவும், தெளிவாகவும், அனைவரும் பாராட்டும் வகையிலும் பணிபுரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தூய்மையான அமைச்சராக விளங்கினார். 1997-க்குப் பிறகு அவர் உத்திரப்பிரதேச அரசியலில் ஈடுபட்டு 1980-ல் அம்மாநில முதலமைச்சரானார்.




பின்னர் 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராவின் மரணத்துக்குப் பிறகு, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தொழிதுறை அமைச்சராக இருந்து பின்னர் நிதியமைச்சரானார். வரி கொடுக்காமல் ஏமாற்றிய பெரிய முதலாளிகளின் வருமான விவரங்களை ஆராய தனி கவனம் செலுத்தி ஊழல் பெருச்சாளிகளை அடக்க அவர் முற்பட்டார். அதில் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் சிக்கினார்கள். அதனால் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. அதிலும் வி.பி.சிங் சிறிதும் தளர்ச்சியடையாமல் அதன் விவரங்களை கடுமையாக கவனிக்கத் தொடங்கினார். இதில் உண்டான மோதலில் அவர் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத நிலைமையில் 1987-ல் ஏப்ரல் 12-ல் தமது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஊழலை ஒழிக்க முற்பட்ட உயர்தர அரசியல்வாதி என அவரை மக்கள் போற்றினார்கள். போபர்ஸ் பிரச்சனை மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.




அதைத்தொடர்ந்து பிரிந்து இருந்த ஜனதா அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு பெங்களூரில் 1988 அக்டோபர் 11-ல் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினர். போபர்ஸ் ஊழலை எதிர்த்தும், அரசாங்கத்தின் அலங்கோலங்களைக் கண்டித்தும் எதிர்கட்டிகளின் உறுப்பினர்கள் 1989 ஜூலை மாதத்தில் தத்தம் மக்களவை உறுப்பினர் பதவிகளை விட்டு விலகினார்கள். அதுவரை ராஜீவ் காந்தியின் தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு சிதைந்து 1989 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்த தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி அமைச்சரவை இந்திய அரசியலில் முதன்முறையாக தலைமையில் அமைந்தது. பிரதமர் வி.பி.சிங் காலத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட பிரதிநிதித்துவங்களைத் தரும் மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் அரசானை பிறப்பிக்கப்பட்டது. இதனால் பிற்பட்ட வகுப்பினர் பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய்வர்களாக இருந்த நிலைமையை நீக்க அரசியல் முறையில் தீர்வு காணப்பட்டது.




இந்த முடிவுக்கு பலமான கண்டனமும், கிளர்சியும் எழுந்தன. அத்துடன் அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் அத்வானி எடுத்த ரத யாத்திரை மீது வி.பி.சிங் காட்டிய எதிர்ப்பினால் அமைச்சரவைக்கு ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை நீக்கிக் கொண்டது.




மக்களவையில் உள்ள ஆதரவை நிரூபிக்க 1990 நவம்பர் 9-ஆம் தேதிக்குள் நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் வி.பி.சிங் கொண்டுவர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட காரணத்தால் வி.பி.சிங் முன்கூட்டியே பதவி விலகி விடுவது நல்லது என்று சிலர் அவரிடம் கூறினார்கள். இதற்குமுன் பெரும்பான்மை பலத்தை இழந்த பிரதமர் அவையில் வந்து தோல்விபெறாமல் அதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து விலகுவது வழக்கம். ஆனால் அவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோற்கடிக்கப்படுவதாக இருந்தாலும், தாம் எடுத்த சமுதாய நீதி பற்றிய குறிக்கோளுக்காக கடைசிவரை போராட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்து மிகவும் உறுதிப்பாட்டுடன் வி.பி.சிங் பேசினார். அவையில் காங்கிரஸ் கட்சி, பாஜக உட்பட எதிர்த்தரப்பினர் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டனர்.




மண்டல் குழுவின் பரிந்துரையை வி.பி.சிங் நிறைவேற்றியதற்காக அவருடைய அமைச்சரவை வீழ்த்தப்பட்ட பிறகும், அந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திரா ஷானி பெயரில் வந்த அந்த வழக்கு ஒன்பது உச்சநீதிமன்ற நீத்பதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இரண்டாண்டு காலம் நடைபெற்றது. கடைசியாக 16-11-1992 -ல் வி.பி.சிங் போட்ட அரசாணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.




வி.பி.சிங் பிரதமராக இருந்தது 2-12-1989 முதல் 10-11-1990 வரையிலான காலம் மட்டுமே. இது கால அளவில் குறுகியது என்றாலும், இந்திய நாட்டின் சமுதாய அரசியல் வரலாற்றில் நீடித்து நிற்கும் மகத்தான சாதனையை உண்டாக்கினார். இந்த மண்டல் நாயகனின் மற்றொரு மகத்தான பணி. இலங்கையில் இருந்த இந்தியாவின் அமைதிப் படையை திரும்ப அழைத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்றிய பெரும்பணியாகும்.

Friday, November 28, 2008



திட்டுக்காட்டூர்:

ஜாதித் தீவில் தலித்துகளின் வாழ்க்கை


திட்டுக்காட்டூர் - கடலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் 19 தலித் குடும்பங்களுக்கு 1965 இல் அரசு பட்டா வழங்கியுள்ளது. 1 ஏக்கர் 32 சென்ட் நிலப்பரப்பில் 19 தலித் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். குடிசை வீட்டைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். தலித் மக்கள் குடியிருப்பின் நான்கு பக்கங்களும் வன்னியர் சமூகத்தவர்களின் வயல்களும், தோப்புகளும், நிலங்களும், வீடுகளும் சூழ்ந்துள்ளன. 19 தலித் குடும்பத்தினரும் குடியிருப்பில் இருந்து வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ அன்றாடம் பெரும் போராட்டத்தையே நிகழ்த்தி வருகிறார்கள். பொது வழியின்றி ஒரு தனித் தீவாக சிறை வாழ்க்கையை அய்ந்து தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள்.


அவசரத்தின் பொருட்டு செல்கின்ற ஓர் ஒற்றையடிப் பாதைகூட, சாதி இந்து ஒருவருக்கு சொந்தமானது. யாரேனும் ஒரு தலித் அந்த வழியாகச் சென்றால், உடனடியாக அந்த வழி வேலி போட்டு அடைக்கப்படுகிறது; பாதை மறுக்கப்படுகிறது. வயல் வரப்புகளின் வழியே நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மிக அவசரத்தின் பொருட்டு அவ்வழியே செல்கின்ற தலித் மக்கள் சாதியின் பெயரால் இழிவு செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தலித்தும் எப்படி வெளியே செல்வது, உள்ளே வருவது எனத் தெரியாமல், நாள்தோறும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தை சந்தித்து வருகிறார்கள். தங்களின் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதைக்கூட சாதி இந்துக்கள் தடை செய்துள்ளனர்.சாதி ஆதிக்கத்தால் இப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலித் குழந்தைகள் படிக்க இயலாமல்,அருகில் இருக்கும் கீழகுண்டலவாடி கிராமத்தில் உள்ள ராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் அவலநிலை நிலவுகிறது. அதுவும் சாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியே செல்ல முடியாமல் வெகுதூரம் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த அய்ந்து தலைமுறைகளாக வசித்து வரும் இம்மக்களில் வெறும் 5 பேர் மட்டுமே மிக அதிகபட்ச படிப்பாக 10 ஆம் வகுப்பு படித்துள்ளனர்.


வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற தேநீர் மற்றும் உணவுக்கடைகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது. முருகன், தம்பிசாமி, கலியபெருமாள், துரைக்கண்ணு ஆகிய வன்னியர்கள் நடத்துகின்ற தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. உணவுக்கடைகளில் தலித்துகள் செருப்பினை வெளியே தெருவில் கழற்றிவிட்டு, கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிடும் இழிநிலை தொடர்கிறது. கோவிலில் சென்று கடவுளை வழிபடவும் கூட, தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திட்டுக்காட்டூர் தலித்துகள், பேருந்தில் சாதி இந்துக்களுடன் சமமாக அமர்ந்து செல்லமுடியாத நிலையே இன்று வரை நடைமுறையில் உள்ளது.


தலித் மக்கள் மீது, சாதி இந்துக்கள் தீண்டாமை பாகுபாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வன்கொடுமைத் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலரால், தலித் சமூகத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.தேர்தலின்போது தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தலித் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். சென்ற ஆண்டு, "எப்படி எங்கள் நிலத்தின் வழியே செல்லலாம்?' என தலித்துகளை தாக்க வந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பாசுபாதம் என்பவர், தன்னுடைய துணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் சென்று, தலித் பெண்களிடம் ஆபாசமாக சண்டையிட்டுள்ளார்.


தங்களுக்கு நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளையும் தாக்குதல்களையும் யாரிடமும் சொல்லவே பயந்து, அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளக் கூட தலித் மக்கள் தயங்குகின்றனர். பேசியதும், பேசுவதும் தெரிந்தால் எந்த நேரத்திலும் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களால் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.29.6.08 அன்று இரவு 6 மணியளவில் வன்னியர் சாதியைச் சேர்ந்த குமரவேல், அப்பு, நாகராஜ், பாசுபாதம், உரி, குமரகுரு, பாஸ்கரன், ராஜயோகம், சகுந்தலா ஆகிய 9 பேரும் தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 8 தலித்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரைப் பெற்ற போலிசார், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பிணையில் வந்துள்ள தலித் மக்கள், சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.


விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலித் மனித உரிமைக்காக செயல்படுகின்ற ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்' இக்கிராமத்தை ஆய்வு செய்து, திட்டுக்காட்டூர் தலித் மக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து மீட்டெடுக்க அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. அதன் இயக்குநர் வே. அ. ரமேஷ்நாதனிடம் இது குறித்து கேட்டபோது, “திட்டுக்காட்டூர் தலித் மக்கள் மனித மாண்புடன் அச்சமின்றி வாழ, இங்குள்ள 19 குடும்பத்தினரையும், தலித்துகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வேறு பகுதியில் குடியமர்த்தி, அரசு தனது பொறுப்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், தலித் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராம தலித் மக்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.தலித் குழந்தைகளை அரசு தனது பொறுப்பில் படிக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீது நிகழ்கின்ற வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை களைவதற்கான சீரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றி வரும் சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, அத்தேநீர்க் கடைகளை நிரந்தரமாக முடக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்பவர்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 17இன் கீழ் கூட்டு அபராதம் விதிப்பதோடு, இக்கிராமத்தை தீண்டாமை கிராமமாக அறிவிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு வாக்குரிமையை மட்டும் அளித்துள்ள அரசு, அவர்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.


தலித் மனித உரிமைக் கண்காணிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் இப்பிரச்சனை குறித்துப் பேசும் போது, “நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அடுத்த நூற்றாண்டில் நிலாவில் மனிதன் குடியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பூமியில் தலித் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. திட்டுக்காட்டூர் போன்று எத்தனையோ தலித் கிராமங்கள் உள்ளன. இவை பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. இதை உணர்ந்துதான் அம்பேத்கர், இது போன்ற நிலையை சந்திக்கும் தலித் மக்களை, அதே மாவட்டத்தில் தலித்துகள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


வட இந்தியாவில் அவ்வாறு செய்துள்ளார்கள். தமிழக அரசு இவ்வாறு செய்ய முன்வருமா? விசாரிக்கின்றோம் என்றோ, அமைதிக் குழு அமைக்கின்றோம் என்றோ தலித்துகளின் வாழ்க்கையை அது தள்ளி வைக்கும். தேர்தல் பேரம் தொடங்கிவிட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் போகவும் வாய்ப்புள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள்தான் இது குறித்து அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் திட்டுக்காட்டூர் தலித்துகளுக்கு தீர்வு கிடைக்கும்'' என்றார்.தலித் மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்று நான்கு மாதங்களுக்குமேலாகியும், இதுவரை அரசுஎத்தகைய உதவியையும் செய்யவில்லை. இலங்கைத் தீவில் அல்லலுறும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள், ஜாதித் தீவில் அல்லலுறும் சேரித் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவார்களா?

நன்றி : தலித்முரசு, அக்டோபர் 2008