Tuesday, January 23, 2018

செல்லாத பணம் (நாவல்) - இமையம்








செல்லாத பணம் என்றதும் பண மதிப்பிழப்பு தொடர்பான நாவலாக இருக்கும் என்ற நினைத்தும், ஆனால் இமையம் ஏற்கனவே எழுதியுள்ள நாவல்கள் மனதில் வந்துபோனதில் வேறாகவும் இருக்கலாம் என்று படிக்கத் தொடங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. பொறியியல் படித்த பெண் ரேவதி. பர்மா அகதியான ரவி என்கிற படிக்காத ஆட்டோ டிரவரை விரும்புகின்றார். பெற்றோர் சம்மதிக்காத நிலையில், யாரிடமும் பேசாமல் பிடிவாதம். வேறு திருமண முயற்சிகளை தற்கொலைக்கு முயன்று ரேவதி தடுப்பதால் வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் விருப்பமின்றி ரவிக்கு திருமணம் செய்விக்கின்றனர். 6 வருடத்திற்கு பிறகு உடல் முழுவதும் நூலிழை அளவுக்கு கூட சதையில்லாமல் 80% மேல் தீயில் உடல் எரிந்து வெந்துபோன நிலையில் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது. அதன்பிறகு கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையாக விரிந்து செல்கிறது. அனைவரும் மனித குணங்களின் நுட்பமான உணர்வுகளை இயல்பாக போகிற போக்கில் வெளிப்படுத்துகின்றனர். 6 வருட திருமண வாழ்க்கையில் ரேவதி, கணவன் ரவியிடம் அனுபவிக்கும் சித்திரவதையை தாங்கி பொறுத்துக்கொள்கிறாள். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால் தானே பொறுப்பு எனத் தாங்கிக்கொள்கின்றாள். மகள் அனுபவிக்கும் கொடுமை தெரிந்தும் பெற்றோர்கள் தலையிடாமல் ஒதுங்கியே உள்ளனர். தாயார் மட்டும் பணம், மளிகை பொருள் என உதவி செய்கின்றார். மீறி கேட்கப்போனால் மகளை ரவி் மேலும் கொடுமை செய்வானோ என்று அமைதியாக இருப்பார்கள். இப்படி எல்லோரும் தங்களை ஒதுக்கி வைத்த கோவத்தில்தான் தன்னால் மாறமுடியாமல் ரேவதியை கொடுமை செய்ததாக ரவி கூறுகின்றான். தங்கள் மகள் ரேவதியை ரவிதான் தீ வைத்துக்கொளுத்தினான், அவனை விடக்கூடாது என பெற்றோர்கள் புலம்புவதும், கோவத்தில் திட்டுவதுமாக இருக்கின்றனர். வாக்குமூலத்தில் சமைக்கும்போது தீ பிடித்துவிட்டதாக ரேவதி கூறிவிடுகின்றாள். தற்கொலையா, ரவி கொளுத்தினானா எனவும் தெரியவில்லை. அது கதைக்கு முக்கியமானதாகவும் தெரியவில்லை. ஜிப்மர் மருத்துவமனையில் காத்திருக்கும்போது அங்குள்ள ஒவ்வொருவரும் தங்களின் கதைகளைப் பரிமாறிக்கொள்வதெல்லாம் இமையம் அவர்களின் படைப்பு உத்தியில் மிக முக்கியமானதாகும். கதையில் வரும் அனைவரும் அவரவர் போக்கில், அவரவர் நிலையிலிருந்து கதையை நகர்த்துகின்றனர். கதை முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அனுபவிக்கும் கொடுமையும், வலியும், வேதனையும் ஆழமான உணர்வுகளோடும், இயல்பாக பதிவாகியுள்ளன. முழுவதும் கதைதான் என்றும் கூறமுடியாமல், அனுபவங்களின் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு என்றும் ஏற்கமுடியாமல் கதையோடும், கதை மாந்தர்களோடும் நாமும் பயணிக்கின்றோம். திருமணமாகிச் சென்ற ரேவதியை ஆறு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, 80% வெந்துபோன தீக்காயங்களிலிருந்து காப்பாற்றச்சொல்லி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு எப்படியேனும் காப்பாற்றுங்கள் எனும்போது, மருத்துவர்கள் "இந்தப் பணமெல்லாம் இப்போது செல்லாத பணம்" என்கின்றனர். இதுதான் கதை. உயிரோடு இருக்கையில் நல்ல நிம்மதியான வாழ்கைக்கு பயன்படாத பணம் உயிரைக் காப்பாற்றவும் பயன்படவில்லை.

No comments: