Monday, December 31, 2007

மரணம் - கொலை - இறப்பு (?)



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியம் பாலப்பட்டு கிராமம், குப்பன் என்பவரின் மகனும், இறந்த பொம்மியின் கணவருமான பரமசிவம் என்பவரின் வாக்குமூலம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாலப்பட்டு கிராமத்தில் வசித்துவரும் குப்பன் மகன் பரமசிவம் ஆகிய நான் அளிக்கின்ற வாக்குமூலம் யாதெனில் :

நான் மேற்படி பாலப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கும், கன்னியம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் & மங்கவர்த்தாள் தம்பதியரின் மகள் பொம்மிக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு சோதிப்பிரகாசம் (தற்போது வயது 18), மும்மூர்த்தி (15), கிருஷ்ணவேணி (13), ஆண்டாள் (8), ஆஞ்சநேயன்(5), வெங்கடாஜலபதி
(2 மாத கைக்குழந்தை) ஆகிய குழந்தைகள் உள்ளன. நான் எங்கள் ஊரான பாலப்பட்டு மற்றும் பேரணி ஆகிய ஊர்களின் கிராம உதவியாளராக பணியாற்றுகிறேன். நாங்கள் தாழ்த்தபட்ட பறையர் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆகும்.

என் மனைவி பொம்மிக்கு பிரசவத்திற்கான வலி எடுத்து கடந்த 18.10.07 அன்று இரவு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தேன். மறுநாள் 19.10.07 அன்று காலை 7.00 மணியளவில் என் மனைவிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு வெங்கடாஜலபதி என்று மருத்துவமனையிலேயே பெயர் வைத்தோம். சுகப்பிரசவம் என்பதால் காலை சுமார் 10.30 மணியளவில் என் மனைவியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். அப்போது நான், இது 6&வது குழந்தை என்பதால், இனிமேல் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவிக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், வியாழக்கிழமை 25.10.07 அன்று காலை வருமாறு சொல்லி டிஸ்சார்ஜ் செய்தார்கள். நாங்களும் அன்றே எங்கள் ஊரான பாலப்பட்டிற்கு சென்றோம்.

அதன்பின்பு, மருத்துவர்கள் சொன்னபடி 25.10.07 வியாழன் அன்று காலை 9.00 மணிக்கு மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைக்காக என் மனைவி பொம்மியை, பிறந்த 6 நாட்களான கைக்குழந்தையுடன் சேர்த்தேன். என் உடன் எனது மாமியாரும், மனைவியின் தாயாருமான மங்கவர்த்தாள் வந்திருந்தார். மேலும் எங்கள் ஊரிலிருந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்த மலர் க/பெ ஜெயமூர்த்தி, அவருக்கு உதவியாக வந்திருந்த அவரது உறவினர் அல்லி க/பெ சோமு என்பவரும் உடனிருந்தார்கள். காலை 9 மணிக்கு சென்ற நிலையில், முதலில் என் மனைவிக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்து 10.30 மணிக்கு படுக்கைக்கு கொண்டு வந்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு ஒரு வாரம் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று கூறி, உள் நோயாளியாக வைத்து சிகிச்சை தந்து கொண்டிருந்தார்கள்.

அறுவை சிகிச்சை செய்த மூன்றாவது நாளான 29.10.07 அன்று அதிகாலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட என் மனைவி அவதிப்பட்டப்படியே இருந்தார். நான் உடனடியாக போய் கம்பவுன்டரை எழுப்பி, வயிற்று வலியால் என் மனைவி கடும் அவதிப்படுவதைக் கூறி, உடனடியாக வந்து கவனிக்கும்படி வேண்டினேன். அவர் எழுந்து சென்று, நர்ஸை அழைத்து வந்தார். நர்ஸ் வந்து, வலியால் கத்திக்கொண்டிருந்த என் மனைவியை பார்த்துவிட்டு உடனடியாக அவசர அவசரமாக வெளியில் சென்றார். அப்போது என் மனைவி வலியால் கத்திக்கொண்டிருந்த சத்தம் குறைந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் மேற்படி நர்ஸ் மருத்துவருடன் வந்தார். பின்பு மேற்படி மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் மூவரும் என் மனைவியை சோதனை செய்தனர்.

சில நிமிடங்கள் என் மனைவியை பரிசோதித்தவர்கள், எதுவும் செய்யாமல், சொல்லாமல் அமைதியாக வெளியில் சென்றார்கள். நான் அவர்களிடம் என் மனைவிக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களை தொடர்ந்து, சென்று அழுது, புலம்பி, மன்றாடிக்கேட்டேன். அப்போது மேற்படி மருத்துவர் என் மனைவி இறந்து விட்டதாக சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன செய்வது எனத்தெரியாமல் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு அப்போதுதான் பிறந்து 10 நாட்களே ஆன கைகுழந்தையின் நினைவு வந்தது. அங்கு சென்று பார்த்தபோது இறந்துபோய் கிடந்த என் மனைவியின் உடலருகில் அவளின் தாயார் கீழே விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தாயை இழந்த கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அதற்கு பால் வாங்க வெளியில் சென்றேன், அப்போது நெற்குணத்தைச் சேர்ந்தவர் பால் வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு பால் கொடுத்ததும் மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் மூவரும் சேர்ந்து என் மனைவியின் உடலை, மருத்துவமனையின் ஆம்புலன்சில் ஏற்றி, என்னையும், அடிபட்டு கீழே கிடந்த எனது மாமியாரையும் கட்டாயபடுத்தி ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். அப்போது வண்டியில், என் மனைவி இறக்கும் போது உடனிருந்த நர்ஸ் இல்லாமல் வேறு ஒரு நர்ஸ், மேற்படி கம்பவுன்டர் ஆகியோர் இருந்தனர். மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த மலர் என்பவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்த மேற்படி அல்லி என்பவர், பிறந்து 10 நாட்களான கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருந்தார். நேராக ஆம்புலன்ஸ் எங்கள் உருக்குச் சென்றது. விடிவதற்குள் எங்கள் ஊருக்குச் சென்று, மக்கள் யாரும் எழுந்து வெளிவருவதற்குள் அவசர அவசரமாக மேற்படி கம்பவுன்டரும், ஆம்புலன்ஸ் டிரைவரும் என் மனைவியின் உடலை இறக்கிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஊரார்களுடன் சேர்ந்து அன்று மாலை என் மனைவியின் உடலை அடக்கம் செய்வதாக இருந்தோம். இந்நிலையில் தகவலறிந்து வந்த எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும், எங்களது உறவினர்களுமான குணா, பிச்சைமுத்து போன்றோர் மூலம், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் என் மனைவி இறந்தார் என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும் என்பதறிந்தேன். அதன்பின்பு உடனடியாக மேற்படி என் உறவினர்களுடன் புகார் கொடுப்பது தொடர்பாக, எங்கள் ஊர் எல்லைக்குட்டபட்ட பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தோம். அதற்கு பெரியதச்சூர் போலீசார் சம்பவம் நடந்த இடம் மயிலம் என்பதால், மயிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்றார்கள். அதன்பின்பு மேற்படி என் உறவினர்களுடன் மயிலம் கிளம்பிச் சென்று காவல் நிலையத்தில் புகார் தந்தேன். அப்போது மாலை சுமார் 4.30 மணி இருக்கும். என் புகாரைப் பெற்ற போலீசார், என் மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக இரவு 9.00 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மறுநாள் காலை பிரேத பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொளுமாறு என்னிடம் கையெழுத்து கேட்டார்கள். அப்போது மேற்படி என் உறவினர்களும், நண்பர்களும் வழக்கு விபரம் பற்றி போலீசாரிடம் கேட்டனர். அப்போது மயிலம் போலீசார் சி.ஆர்.பி.சி 174 என்கிற சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்போவதாக கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத என் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்ததால் அதற்குரிய பிரிவில் வழக்கு போடவேண்டும் என்று போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இத்தகவல் அறிந்த திண்டிவனம் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனைக்கு வந்து, எனக்கு ஆதரவாக மருத்துவர்களிடமும், போலீசாரிடமும் பேசினார்கள். போலீசார் சரியான பதில் சொல்லாத காரணத்தால், உரிய வழக்கு பதிவு செய்யும்வரை உடலை வாங்கவேண்டாம் எனக்கூறி போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் தாசில்தார் உட்பட சில அதிகாரிகள் வந்தார்கள். அதன்பின்பு உரிய வழக்கு பதிவு செய்வதாக போலீசாரும், தாசில்தாரும் உறுதியளித்தனர்.

அதன் பின்பு நாங்கள் மருத்துவமனையில் இருந்த என் மனைவியின் உடலைப் பெற்றுக்கொண்டு மதியம் 2.00 மணியளவில் ஊருக்கு வந்து அடக்கம் செய்தோம். பின்பு மாலை மேற்படி என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மயிலம் காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை நகல் பெற்றுவந்தேன்.

அதன் பின்பு என் மனைவிக்கு தவறான சிகிச்சையளித்து, அவள் சாவுக்கு காரணமான மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மேற்படி மருத்துவர், நர்ஸ், கம்பவுன்டர் உள்ளிட்டோர் மீது போலீசாரோ அல்லது அரசு அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையோ அல்லது விசாரனையோ கூட செயாமலிருந்தனர். இது தொடர்பாகவும், 6 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் என் மனைவியின் மரணத்திற்கு உரிய நட்ட ஈடும் கேட்டும், கடந்த 06.11.07 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டு, புகாரும் அளித்தேன்.

அதன் பின்பு, மேற்படி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், என் மனைவியின் மரணம் தொடர்பாக புலனாய்வு செய்யக்கோரியும் உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருக்கும் கடந்த 22.11.07 அன்று புகார் அனுப்பியுள்ளேன். இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


விழுப்புரம் மாவட்டம், கன்னியம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவியும், இறந்த பொம்மியின் தாயாருமான மங்கவர்த்தாள் வாக்குமூலம் :

நான் கன்னியம் கிராமத்தில் என் குடும்பத்துடன், விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு 3 ஆண், 3 பெண் குழந்தைகள். இதில் மகள் பொம்மியைத்தான், விழுப்புரம் மாவட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகனும், என்னுடைய தம்பியுமான பரமசிவம் என்பவருக்கு திருமணம் செய்து தந்தோம். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. சுமார் 2 மாதத்திற்கு முன்பு 6&வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குடும்ப கட்டுபாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தால் உதவிக்கு ஆள் வேண்டும் என்பதால், நான் சென்றேன். என் மகளை அழைத்துக்கொண்டு, மருமகனுடன், மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று 25.10.07 அன்று சேர்த்தோம். அன்றே குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். உடனடியாக என் மகளை படுக்கையில் சேர்த்து, ஒருவாரம் தங்கியிருக்கவேண்டும் என்றார்கள். அன்றே மேற்படி பாலப்பட்டு கிராமத்திலிருந்து மலர் என்பவரும் குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைகாக, அவரது உறவினர் அல்லி என்பவருடன் மேற்படி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.

ஆபரேசன் செய்ததில் இருந்து என் மகள் பொம்மி அடிக்கடி இருமிக்கொண்டிருந்தாள். மேலும் அவ்வப்போது வயிறும் வலிக்கிறது என்று கூறினாள். நான் இது குறித்து நர்ஸ் இடம் சொல்வேன். அதற்கு நர்ஸ் ‘‘அதான் மாத்திரை கொடுத்து, ஊசி போடுறோம் இல்ல, அப்புறம் என்ன, எல்லாம் சரியா போயிடும்’’ என்று கூறுவார்கள்.

தினமும் காலையில் ஒரு ஊசி போட்டு, மாத்திரை தருவார்கள். அவ்வளவுதான், பிறகு மாலைதான் வந்து பார்ப்பார்கள். அப்போதும் ஊசியும், மாத்திரையும் தருவார்கள். அதன் பிறகு இடையில் ஏதேனும், போய் சொன்னால், நான் மேலே சொன்னபடி சொல்வார்கள். இல்லையென்றால் வருகிறேன் போ என்று சொல்லி அனுப்புவார்கள், ஆனால் வரமாட்டார்கள். இரவில் மருத்துவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை. இந்நிலையில், ஆபரேசன் நடந்த 3&வது நாள் 29.10.07 விடிகாலை என் மகள் மிகவும் அதிகமாக வயிறு வலிக்கிறது என்றாள். பாத்ரூம் போகவேண்டும் என்று கூறினாள். நான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பாத்ரூம் அருகில் விட்டேன். பாத்ரூம் சென்றவள் பாத்ரூம் வரவில்லை என்று கூறி வெளியில் வந்தவள், நடக்கமுடியாமல் உட்கார்ந்தாள். பாத்ரூம் பக்கதில் ஏம்மா உட்காருகிறாய், இங்கே வா என்று நான் அவளை படுக்கைக்கு கூப்பிட்டேன். அதற்கு அவள் என்னால் நடக்க முடியவில்லை, வயிறு வலிக்கிறது என்று கூறி, வயிறை வலிக்கிறது என்று கூறி வயிற்றைப் பிடித்துக்கொண்டு உர்கார்ந்துகொண்டாள்.

அதன் பிறகு நான், மேற்படி அல்லியை துணைக்கு அழைத்தேன். கைக்குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு வந்த அல்லியும், நானும் சேர்ந்து பொம்மியை தூக்க முயற்சி செய்தோம். எங்களால் முடியவில்லை. அதன்பிறகு வெளியில் இருந்த என் தம்பி பரமசிவத்தை அழைத்து நடந்த சம்பவத்தைச் சொல்லி, பொம்மியை தூக்க வேண்டும் என்று கூறினேன். பிறகு என் தம்பி பரமசிவம் பொம்மியின் காலை பிடித்தும், நானும் அல்லியும் கைகளை பிடித்துக்கொண்டும் தூக்கி வந்து படுக்கையருகில் கீழே உட்காரவைத்தோம். அதன் பிறகும் பொம்மி வயிறு வலிக்கிறது என கத்திக்கொண்டே, வயிறை பிடித்துக்கொண்டே புரண்டு புரண்டு படுத்தாள்.

என் தம்பி பரசிவம் நர்ஸை அழைத்துவந்தான். வந்த நர்ஸ் என் மகளை தொட்டுக்கூடப் பார்க்காமல், உற்றுப் பார்த்துவிட்டு சென்றார். அப்போது கீழே படுத்து வயிறு வலிக்கிறது என புரண்டு புரண்டு படுத்த அவள், திடீரென வேகமாக சுருண்டு படுதாள். அதன்பிறகு அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை. நான் அங்கே அடித்துக்கொண்டு அழுது புலம்பினேன். அப்போது, இரண்டு நர்ஸ், கம்பவுன்டர், டாக்டர் என நான்கு பேரும் வந்தார்கள். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் மகளின் கையையும், காலையும் பிடித்து தூக்கி படுகையில் வைத்து, நெஞ்சை அழுத்திப் பார்த்தார்கள். அப்போது என்மகளின் மூக்கில் இருந்து லேசாக நுறை வந்தது. பின்பு அவர்கள் நான்கு பேரும் எதுவும் சொல்லாமல் வெளியில் சென்றார்கள். என் மகன் விடாமல் அவர்களை பின்தொடர்ந்து சென்று வற்புறுத்தி கேட்டபின்புதான், மேற்படி மருத்துவர்கள், என் மகள் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அழுது புலம்பினோம்.

ஆபரேசனுக்கு பிறகு வயிற்று வலியாலும், இருமலாலும் அவதிப்பட்ட என் மகளை பாண்டிச்சேரி அழைத்துச் செல்கிறோம் என்று கேட்டும், மேற்படி மருத்துவர்கள் சரியாகி விடும், இங்கேயே இருக்கட்டும் என்று கூறி பாண்டிக்கு அனுப்ப மறுத்தார்கள். பாண்டிக்கு அனுப்பியிருந்தாள் எனமகளை காப்பாற்றியிருப்போம். இறந்த என் மகளை மேற்படி டாக்டர்கள் சேர்ந்து, மருத்துவமனை வண்டியிலேயே ஏற்றி பாலப்பட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்கள். என்னையும் வண்டியில் ஏற்ற கட்டாயப்படுத்தினார்கள். இதற்கிடையில் தாயை இழந்து அழுதுகொண்டிருந்த கைக்குழந்தைக்கு பால் வாங்கிவரும்படி நெற்குனத்தை சேர்ந்தவரை அல்லி அனுப்பியிருதார். அவர் இன்னும் வரவில்லை, குழந்தை பாலுக்கு அழுகிறது எனச்சொல்லியும், டாக்டர்கள் சீக்கிரம் சீக்கிரம் என அவசரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே பால் வந்ததும், மேற்படி அல்லி பாலை குழந்தைக்கு புகட்டினார். மருத்துவர்களும், நர்சும் பையை எடுத்துவரும்படி என்னை அனுப்பினார்கள். நான் என் மகள் பொம்மியின் படுக்கையருகே சென்று, பைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். என் மகள் இறந்துபோன துக்கம், கவலை, அதிர்ச்சி, கைக்குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது போன்று எனக்குள் இருந்த குழப்பத்திலும், விடியாத சுமார் மணி 4.00 என்பதால் இருந்த இருட்டிலும் வழி தெரியாமல் கதவுகளின்மீது மோதி அடிப்பட்டு கீழே விழுந்தேன்.

அப்போது மருத்துவர்கள் அல்லியை சீக்கிரம் பால் கொடுத்துட்டு வண்டிக்கு வாங்க இவ்வளவு நேரமா பால் கொடுப்பாங்க என்று கூறியது என் காதில் விழுந்தது. பின்பு நான் தடவி எழுந்து, இருட்டிலேயே பையையும் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வண்டி அருகில் சென்றேன். அப்போது அங்கிருந்த ஒரு நர்ஸ் என்னை வண்டியில் ஏறுங்கள் என்றார்கள். நான் ஏறும்போது கால் தடுக்கி பின்பக்கமாக அப்படியே தரையில் கீழே விழுந்தேன். அதற்குள் குழந்தையுடன் அல்லியும், இறந்துபோன என் மகளை தள்ளுவண்டியில் வைத்தும் ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆம்புலன்ஸ் விடிவதற்குள் பாலபட்டு சென்றது. நர்ஸ்ம், கம்பவுன்டரும் சேர்ந்து தெருமுனையிலேயே எங்களை இறக்கிவிட்டு, பொம்மியின் பிணத்தையும் இறக்கி வைத்துவிட்டு வேகமாக சென்று விட்டனர்.

அதன்பிற்குதான் என் தம்பி கேஸ் கொடுத்திருக்கான். டாக்டர்கள் ஏதோ தப்பான ஆபரேசன் செய்துதான் என் மகளை கொன்னுட்டாங்க. இல்லன்னா நாங்க பாண்டிக்கு அழைச்சிகிட்டு போறோம்னு சொன்னதுக்கு எதுக்கு வேணாம்னு மறுதாங்கனும். அந்த மயிலம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இதே மாதிரிதான் நடக்குது. இப்ப கூட பாதிரிப்புலியூரை சேர்ந்த ஒரு பொண்ணுக்கு ஆபரேசன் பண்ணும் போது, கர்ப்பப் பையையும் சேர்த்த் தச்சி, சீரியசாகி, பாண்டிக்கு அனுப்பி, அங்க இப்ப அந்தம்மாவுக்கு 2 ஆபரேசன் செஞ்சிருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க.


சம்பவத்தின் சாட்சியும், விழுப்புரம் மாவட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும், மறைந்த சோமு என்பவரின் மனைவியுமான அல்லி வாக்குமூலம்.

நான் மேற்படி பாலப்பட்டு கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 25.10.07 அன்று என் அக்கா மகள் மலருக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்வதற்காக மயிலம் ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு சென்றோம். அங்கு எங்கள் ஊரைச் சேர்ந்த பொம்மியும் அவரது கணவர், தாயருடன் வந்திருந்தார்.

ஆபரேசன் செய்ததில் இருந்தே மேற்படி மொம்மி அடிக்கடி இருமிக்கொண்டிருந்தார். மேலும் அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்றும் கூறினாள். 29.10.07 திங்கள் அன்று விடியற்காலை 3.30 மணியளவில், என்னிடம் வந்த பொம்மியின் அம்மா, வயிறு வலிக்கிறது என்று கூறி பாத்ரூம் போன பொம்மி அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள், எழுந்து நடக்க முடியலையாம் படுக்கையில் தூக்கி வைக்க வேண்டும் உடனே வா என்று என்னை கூப்பிட்டார். பின்பு நானும், பொம்மியின் அம்மாவும் சேர்ந்து தூக்க முயன்றோம் முடியவில்லை. அதனால் பொம்மியின் கணவர் பரமசிவத்தை அழைத்து வந்து பொம்மியை அவள் படுக்கை அருகே தூக்கி வந்து கீழே உட்காரவைத்தோம். அதற்குள் வயிறை பிடித்துக்கொண்டு வயிறு வலிக்கின்றது என்று சுருன்டு சுருன்டு அழுது புலம்பினாள் பொம்மி. நர்ஸ் வந்து பார்த்து, டாக்டரை அழைத்து வரச்சென்றார். டாக்டர் வருவதற்குள் பொம்மி சத்தமில்லாமல் அமைதியாக இருந்தாள். வந்து பார்த்த டாக்டர் பொம்மி இறந்துவிட்டதாகக் கூறினார்.

அப்போது பொம்மியின் கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. பொம்மியின் அம்மாவும், வீட்டுக்காரரும் பொம்மி இறந்த அதிர்ச்சியில் இருந்தனர், அதனால் குழந்தையை நான் கையில் எடுத்துக்கொண்டு, நெற்குணத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, அழுகின்ற குழந்தைக்கு பால் வாங்கிவரச்சொல்லி, குழந்தைக்கு புகட்டிக்கொண்டிருந்தேன். அப்போது டாக்டர்களும், நர்சும் சீக்கிரம் சீக்கிரம் என என்னை அவசரப்படுத்தி, பொம்மியின் உடல் ஏற்றப்பட்டிருந்த மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். பின்பு, பொம்மியின் அம்மா, வீட்டுக்காரர் இருவரையும் ஏற்றிக்கொண்டு, விடிவதற்குள் இருட்டிலேயே எங்களை பாலப்பட்டில் இறக்கிவிட்டு சென்றார்கள்.

கண்டறிந்தைவகள் :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்த, கிராம உதவியாளராக பணியாற்றுகின்ற பரமசிவம் & பொம்மி தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். 6&வது குழந்தையாக ஆண் குழந்தை கடந்த 19.10.07 அன்று மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்துள்ளது என்பதையும், 25.10.07 அன்று மேற்படி பொம்மிக்கு, மேற்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுபாடு அறுவைசிகிச்சை நடந்துள்ளது என்பதையும், மேற்படி பாலப்பட்டு கிராமத்திலிருந்து அதே நாளில் மலர் க/பெ ஜெயமூர்த்தி என்பவர், தனது உறவினர் அல்லி க/பெ சோமு என்பவர் உதவியுடன் அறுவைசிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்து அறிய முடிந்தது.

 அறுவை சிகிச்சை நடந்த பின்பு, மேற்படி பொம்மியின் உடல் மிகவும் பலகீனம் அடைந்துள்ளது என்பதையும், தொடர்ந்து இருமலும், வயிற்று வலியும் இருந்துள்ளது என்பதையும், அதற்காக பணியில் இருக்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோரிடம் போய் சொல்லும் போது ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருக்கு சரியாகிப்போகிவிடும் என்று கூறி திருப்பியனுப்பி விடுகிறார்கள் என்பதையும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதையும் கண்டறிய முடிந்தது.

 மேற்படி பொம்மிக்கு வயிறு வலி இருப்பதையும், நாளுக்கு நாள் உடல் பலகீனம் அடைந்து வருவதையும் பொம்மியின் தாயாரும், கணவரும் நர்ஸ் இடம் சொன்னபின்பும், கவனம் செலுத்தி மருத்துவம் பார்க்கப்படவில்லை என்பதையும், அதன் காரணமாக புதுவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக எழுதித் தரும்படி கேட்டும், மருத்துவர்கள் மறுத்துள்ளார்கள் என்பதையும் வாக்குமூலங்களின் அடிப்படையில் கண்டறிய முடிந்தது.

 கடந்த 29.10.07 அன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மேற்படி பொம்மி பாத்ரூம் சென்று, வயிற்று வலி காரணமாக படுக்கைக்கு திரும்ப முடியாமல், வயிற்றை பிடித்துக்கொண்டு பாத்ரூம் அருகிலேயே உட்கார்ந்துள்ளார் என்பதையும், மேற்படி பொம்மியின் தாயார், கணவர், சாட்சி அல்லி ஆகியோர் சேர்ந்து பொம்மியை தூக்கிவந்து அவர் படுக்கை அருகில் உட்கார வைத்துள்ளனர் என்பதையும், அதன் பின்பு பொம்மி கடுமையான வயிற்று வலி காரணமாக புரண்டு, புரண்டு படுத்துள்ளார் என்பதையும், சில நிமிடங்களில் சத்தமில்லாமல் அடங்கி அமைதியாகிவிட்டார் என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்து அறியமுடிந்தது.

 பொம்மி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டபோது அந்தப்பகுதியில் பணியில் இருக்கவேண்டிய நர்ஸ் இல்லை என்பதையும், எப்போதுமே இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய நர்ஸ் இருப்பதில்லை என்பதையும், வலியால் அவதிப்படுகிறார் என்று கூறியபின்பும், நர்ஸோ, மருத்துவர்களோ உடனடியாக வந்து பார்க்கவில்லை என்பதையும், பொம்மி இறந்து பின்புதான் மருத்துவர், 2 நர்ஸ், கம்பவுன்டர் ஆகிய நான்கு பேரும் வந்து பார்த்து, கீழே கிடந்த பொம்மியை, மேற்படி நால்வரும் சேர்ந்து, கையை காலை பிடித்து, தூக்கி படுக்கையில் வைத்து, பொம்மி இறந்ததை உறுதிபடுத்தியுள்ளனர் என்பதையும் கண்டறிய முடிந்தது.

 அதன்பின்பு அவசர அவசரமாக அதே நேரத்தில், பொம்மியின் உடலை மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றி, ஒரு நர்ஸ், கம்பவுன்டர் ஆகியோருடன், கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி பொம்மியின் தாயாரையும், கணவரையும் இழுத்து ஆம்புலன்சில் போட்டுக்கொண்டும், மேற்படி அல்லி என்பவர் பிறந்து சில நாட்களே ஆன பொம்மியின் கைக்குழந்தையை தூக்கிகொண்டும் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது என்பதையும், மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் கொல்லியங்குணத்தைச் சேர்ந்த இளைஞர் ஆம்புலன்ஸை ஓட்டியுள்ளார் என்பதையும் கண்டறிய முடிந்தது.

 ஆம்புலன்ஸ் நேராக பாலப்பட்டு கிராமத்திற்கு சென்று, மேற்படி பொம்மியின் உடலை அவரது வீட்டருகில் கொண்டு செல்லாமல், தெருமுனையில் இறக்கி வைத்துவிட்டார்கள் என்பதையும் கண்டறிந்துள்ளோம்.

 மாலை சுமார் 4 மணியளவில் மேற்படி பரமசிவத்தின் உறவினர்களான குணா, பிச்சைமுகமது உள்ளிட்டோர்கள் உதவியுடன், மேற்படி பரமசிவம் மயிலம் காவல்நிலையம் சென்று, தவறான சிகிச்சையளித்து தனது மனைவியின் இறப்புக்கு காரணமான மருத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தந்துள்ளார்.

 மயிலம் காவல் துறையினர், பொம்மியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அன்று இரவு 9.00 மணியளவில் கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக சி.ஆர்.பி.சி 174 என்கிற சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்கு பதிய திட்டமிட்டுள்ளனர்.

 மறுநாள் 30.10.07 அன்று, தகவலறிந்து மருத்துவமனை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் மீது இ.த.ச பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யவேண்டும் என மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள். திண்டிவனம் வட்டாட்சியரும், பொறுப்பிலிருந்த செஞ்சி டி.எஸ்.பியும் மருத்துவமனை சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவர்கள் மீது இ.த.ச பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும், இறந்த பொம்மியின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத்தருவதாகவும் சொல்லியுள்ளனர்.

 அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டு, உடலைப் பெற்றுக்கொண்டு, பாலப்பட்டு கிராமத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

 மயிலம் காவல்துறையினர் கா.நி.கு.எண் 599/07 பிரிவு 304(வீவீ) இ.த.ச பிரிவுகளின்படி, மேற்படி பரமசிவம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 06.11.07 அன்று மேற்படி பரமசிவம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தனது குடும்பச்சூழலை சொல்லி, நிவாரணமும், வழக்கின்மீது நடவடிக்கையும் கேட்டு எழுத்துமூலமாக புகார் மனு தந்துள்ளார்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புகாரின் மீது நடவடிக்கை கோரி, மேற்படி பரசிவம் மீண்டும் 22.11.07 அன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

 மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், நர்சுகள், உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பதையும், உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் இரவில் தங்கவேண்டிய பணி நர்சுகள் யாரும் எப்போதும் தங்குவதில்லை என்பதையும், அதனால்தான் பொம்மி போன்ற மரணங்கள் நிகழ்கின்றன என்பதையும் அனைவரின் வாக்குமூலங்களில் இருந்தும் அறிய முடிந்தது.

 மேலும், உள்நோயாளிகள் பிரிவில் இரவில் பணி மருத்துவர்களோ, பணி நர்சுகளோ தங்குவதில்லை என்பதையும், உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு திடீரென்று ஏற்படும் உடற்கோளாறுகளை தகவல் சொன்னாலும் உடனடியாக சீரியசாக நினைத்துப் பார்ப்பதில்லை என்பதையும் கண்டறியமுடிந்தது.

 சமீபத்தில் மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பாதிராப்புலியூர் என்கிற கிராமத்தில் இருந்து சென்ற பெண் ஒருவருக்கு குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சை செய்யும்போது, கர்ப்பபையும் சேர்த்து தைத்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அப்பெண்ணை புதுவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு, அங்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் பலரிடம் பேசியதிலிருந்து அறிய முடிந்தது.

 பொம்மியின் மரணம் குறித்து போடப்பட்டுள்ள கு.எண் 599/07, பிரிவு 304(வீவீ) இ.த.ச என்கிற வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மயிலம் போலீசாரிடம் கேட்டபோது, ‘‘பொம்மி கீழே விழுந்து, தலையில் அடிப்பட்டதில் இறந்துபோனதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட சொல்கிறது. கெமிக்கல் ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். இறுதி அறிக்கை வந்தால்தான் தெரியும்’’ என்று கூறினார்.

 இச்சம்பவம் தொடர்பாக திண்டிவனம் வட்டாட்சியர் திரு.சுப்பிரமணி அவர்கள் நம்மிடம், ‘‘இது ஐ.பி.சி வழக்கு. போலீஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். வயிற்று வலி காரணமாக பாத்ரூம் சென்று வந்த பொம்மி சிலநிமிடங்களில் இறந்துள்ளார். பாத்ரூமிலிருந்து விழுந்து அடிபட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பும்போது, வழியில் இறந்து போனதாகவும் மருத்துவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். இதற்கு மேல் இதில் ஜெ.டி &தான் விசாரிக்கவேண்டும். எங்களைப்பொறுத்த அளவில் நிவாரணத்திற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளோம். அவர் அரசுக்குச் சொல்லவேண்டும்’‘ என்று கூறிமுடித்தார்.

 நடந்த சம்பவம் தொடர்பாக மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் திரு.தங்கதுரை அவர்கள் நம்மிடம், ‘‘பாத்ரூம் போன பொம்மி. வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு மயக்கமாகிவிட்டார். நாங்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவ மனைக்கு அனுப்பும்போது வழியில் பொம்மி இறந்துள்ளார். பொம்மிக்கு தலையில் காயம் பட்டுள்ளது.’’ என்று கூறினார்.

பரிந்துரைகள் :

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த பின்பு, ஒருவாரம் கழித்து குடும்பகட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யும் வரை, மேற்படி பொம்மியின் உடல்நிலை எந்தவித குறைபாடும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்துள்ளது. குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சைக்கு பின்புதான் வயிற்று வலி, தொடர் இருமல் போன்றவைகள் இருந்துள்ளது. அதன்பின்புதான் உடல் பலகீனமாகி பொம்மி இறந்துள்ளார். எனவே பொம்மியின் மரணத்துக்கு காரணமான மருத்துவ அலுவலர் திரு.தங்கதுரை, மற்றும் அப்போது பணியில் இருந்த நர்ஸ், கம்பவுன்டர் உள்ளிட்டோர் பெயர்களை, மயிலம் காவல் நிலைய கு.எண் 599/07 வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தவறான அறுவைசிகிச்சை மற்றும் உரிய முறையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் மற்றும் நர்சுகளின் அலட்சியம் காரணமாகவே பொம்மி இறந்துள்ளார். இதற்கு காரணமான மருத்துவர்கள், நர்சுகள், கம்பவுன்டர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோரை உடனடியாக பணி நீக்கம் செய்தும், அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

 மருத்துவர்களின் தவறான அறுவைசிகிச்சையாலும், அலட்சியத்தாலும் 29.10.07 அன்று அதிகாலை 3.30 மணியளவில் பொம்மி உயிரிழக்க நேரிட்டுள்ளது. ஆனால் ஆரம்ப சுகாததார நிலைய மருத்துவர்கள், பொம்மியை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். போகும் வழியில் இறந்ததாகவும் இப்போது கூறுகின்றனர். ஆனால் அன்று பொம்மியின் தாயார், கணவர், சாட்சி அல்லி ஆகியோரிடம் பொம்மி இறந்துபோனதாகத்தான் மேற்படி மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.அபாய கட்டத்தில் இருந்த பொம்மிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை, மேலும், மேல் சிகிச்சைக்காக அனுப்புவதற்கான கடிதம் எதுவும் நோயாளிகளின் உறவினர்களிடம் தரப்படவில்லை. போகும் வழியில் இறந்திருந்தால், நேராக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கோ அல்லது மீண்டும் மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ பொம்மியின் உடலை கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்பதுதான் நடைமுறை. பொம்மிக்கு அவ்வாறு செய்யப்படாமல், நேராக யாருக்கும் தெரியாமல் ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெரிய போராட்டத்திற்கு பின்புதான் காவல்துறையினரும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இவ்வாறு உள்ள நிலையில், உள்ளூர் காவல் துறையினர் இவ்வழக்கை விசாரித்தால், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நீதியும், நியாயமும் கிடைக்காமல் போவதுடன், பொம்மி மரணம் குறித்த உண்மைச் சம்பவங்கள் வெளிவராமல் போகும் வாய்ப்புள்ளது. எனவே, பொம்மி மரணம் தொடர்பான இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக செல்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதும், அறுவை சிகிச்சைகளிலும் மருத்துவர்கள் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். எனவே, மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை நடைபெற்றுள்ள குடும்ப கட்டுபாடு அறுவைசிகிச்சைகள் தொடர்பாக முழுமையான ஒரு விசாரனை நடத்தப்படவேண்டும்.

 மேற்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனே நிரப்பப்படவேண்டும்.

 கர்ப்பினி பெண்கள், குழந்தை பிறந்த பின்பும், குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் பெண்களின் உடல் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம சபா கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர் பெண் ஆசா ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிப்பார். அவ்வாறு மேற்படி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசா தன்னார்வலர், நிலையத்தை கண்காணித்துள்ளாரா என்பது கண்டறியப்படவேண்டும். இதுவரை ‘‘ஆசா’’ தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் உடனடியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு ஆசாக்களை செயல்பட வைப்பதன் மூலம் பொம்மி போன்ற மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்கலாம்.

 மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த பொம்மியின் 6 குழந்தைகளும் தாயில்லாமல் ஆதவற்ற நிலையில் உள்ளது. எனவே அக்குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும்.

1 comment:

மாசிலா said...

இவர்கள் போன்ற பொறுக்கி மருத்துவர்கள் மற்றும் அவர்கள் சுற்றியிருந்த நாசக்கார காலிக்கூட்டங்கள் அனைத்தும் சமூகத்தை, ஏழை எளியவர்களின் குடும்பங்களை கெடுத்து குட்டிச்சுவராக்க உருவெடுத்து இருக்கும் பேய்களே! இந்த மசுருக்கு இவன்களுக்கு மருத்துவன் என்கிற பட்டம் வேறு!

வேறு என்னத்தை சொல்வது? இதுபோல் புலம்புவதை தவிர?

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

பாதிக்கப்பட்டவர்கள் வலிகளை தாங்கி, இழப்புகளை ஏற்று, சமாளித்து, நிவாரணம் பெற்று பழைய நிலை வாழ்க்கைக்கு திரும்புவர் என வேண்டுகிறேன்.

பச்சை குழந்தை...???

:-(