Tuesday, February 23, 2010

ஹெய்தி நிலநடுக்கம்.








ஹெய்தி நிலநடுக்கம்.
2 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம்.
உதவிக்கரம் நீட்டுவோம்...

‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ இதை நாம் உணர்ந்த நேரங்களும்,
உலகுக்கு உணர்த்திய தருணங்களும் ஏராளம்.
இப்போது உணர்த்த வேண்டிய நேரம்.

• 12-01-2010 நள்ளிரவு. தூங்கிக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் இறந்தது தெரியாமல் மரணமடைந்தனர்.

• கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஹெய்தி என்கிற நாட்டில் நிகழ்ந்த பூகம்பம்தான் இப்படி ஒரு பேரழிவை உருவாக்கியது. விடிவதற்குள் சுமார் இரண்டு லட்சம் பேர் இறந்துபோயினர். அரசு கட்டிடங்களும், அதிபர் மாளிகளையும் நொறுங்கியது நிலநடுக்கத்தில். ஹெய்தியின் அதிபரும், பிரதமரும் சேதமடையாமலிருந்த ஒரு காவல் நிலையத்தில் தங்கியிருந்தனர்.

• உலக நாடுகள் உடனடியாக உதவிகள் அளித்தன. மீட்புதவிகள் செய்தன. ஆனாலும், போதிய நிவாரணம் கிடைக்காமல் ஹெய்தி நாட்டு மக்கள் அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டார்கள். ஒரு உணவுப்பொட்டலத்திற்கு 50-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டுக்கொண்ட அவலங்களை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

• பாதிக்கப்பட்ட ஹெய்தி மக்களுக்கு செய்யவேண்டிய ஏராளமான நிவாரணம், மறு வாழ்வு, மறுகட்டமைப்புப் பணிகள் உள்ளன

செய்நன்றி மறவாமை!
ஹெய்தி நிலநடுக்கம் போன்று. நாமும் பாதிக்கப்பட்டோம், 2004 சுனாமியால். இந்திய, தமிழக கடலோரங்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள், வீடுகள், மரங்கள், படகுகள் என மக்களின் வாழ்க்கையை சுனாமி அலை அழித்தது. நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் அந்த நேரத்தில் உலக நாடுகள் எல்லாம் உதவிக்கரம் நீட்டியது. இழந்தவை கிடைக்கவில்லை என்றாலும். பாதிப்பிலிருந்து மீண்டோம். அன்றிருந்த நம்முடைய நிலையில் இன்று ஹெய்தி மக்கள். நாம் பெற்றவைகளை, நமக்களித்த சமூகத்திற்கு நாம் திருப்பியளித்து, நம்முடைய நன்றிக்கடனை, நன்றி மறவா நெஞ்சத்தை வெளிப்படுத்துவோம்.

பாதிப்புற்றோருக்கு நேசக்கரம் நீட்டுவதும்,
உடமை இழந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதும்
நமது கடமையும்.

இடிபாடுகளை அகற்ற இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என ஹெய்தி அதிபர் அறிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் உள்ள கட்டிடமே தற்காலிக அதிபர் அலுவலகமாக செயல்படுகின்றது.