Thursday, February 19, 2009

முத்துகுமார் கவிதைகள்


முத்துகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'புதியவன் முத்துகுமார்' என்ற பெயரில் எழுதிய கவிதைகள் இவைகள்.

தற்போது வந்துள்ள கவிதாசரண் (அக்டோபர் 08&மார்ச் 09) இதழில் வெளியாகியுள்ளது.

கவிதைகளை வெளியிட்டமை உட்பட அனைத்துக்கும் அய்யா கவிதாசரண் அவர்களுக்கு நன்றி.


சாதிப்பன

என் கண்ணைத் தோண்டி,

அமிலம் ஊற்றி,

காலை வெட்டி,

கையை உடைத்து,

குடலைக் கிழித்து,

சதையை அறுத்து,

என்னைக்

கொன்றுவிட்டதாக

எகத்தாளம் செய்யும்

என்

எதிரணியில் உள்ள

நண்பனே, நீஅறிவாயா?

போராளியின்

வாழ்வை விட

மரணம்

அதிகமாகவே சாதிக்கும்.


வாஸ்து

குளியறையில் சமையல்-

கழிவறையில் சாப்பாடு-

பரணில் படுக்கை-

நடுவீட்டில் கிணறு-

கூரையில் வாசல்-

குழப்ப வேண்டாம்-

இது‘வாஸ்து’ சாஸ்திர நிபுணரின்

வீடாகவும் இருக்கலாம்.


காகிதக் கூழ்

கல்லணை கட்ட

கரிகாலனுக்கு

போரடிமைகளும்

கற்களும்

தேவைபட்டனவாம்.

நாம்தான்

முன்னேறிவிட்டோமல்லவா

அறிவியலில்?

இனி

காவிரியில்

இன்னொரு

அணை கட்ட

கற்கள் தேவையில்லை.

கொஞ்சம் போதும்

காகிதக் கழிவுகளும்

காகிதக் கூழம்



மே

உழைப்பதற்குக்

கைகள் மட்டுமே

கொண்டிருந்த

தொழிலாள வர்க்கத்திற்கு

உரிமைகளை

உரக்கக் கேட்க

வாய் புதிதாக

வாய்த்த திருநாள்.


மனிதாபிமான உதவி

தீராத வழக்கொன்று

தினம் தினம்

சண்டைக்கென்று

திரள்கின்றான்

பக்கத்து வீட்டான்.
அவன்

பேச்சை மட்டுமல்ல

மூச்சையே நிறுத்திக்

கொலை செய்தாலும்

கூட

நல்லதுதான்.
கழுத்தைச் சுற்றிக்

கயிறு போட்டு

இறுக்கக்கையில்

தெம்பு இல்லை.
கத்தி

வாங்கக் கைவசம்

காசும் இல்லை.

அணுகுண்டு

கிடைத்தால்

நலம்.
தயவு செய்து

எந்த நாடாவது

செய்யுங்களேன்

எனக்கு

மனிதாபிமான உதவி.


சுயமரியாதை

மீண்டும்

மீண்டும்

மிதிக்கிறேன்

குரூரமாய்

ஆனாலும்

உயிரது

பனியாய்த்

துளிர்க்க

மீண்டும்

மீண்டும்

தலைநிமிர்கிறது-

புல்!


வைத்தியப் பரிமாணம்

உள்ளங்கை மட்டுமே

உடைமையாகஇருந்த

காலத்தில்

பாட்டி வைத்தியம்.
இழப்பதற்கு

குடிசையன்று

கிடைத்துவிட்ட

பிறகு

வைத்தியரிடம்

வந்தான்,

சொஸ்தமானது.
கையில்

கொஞ்சம்காசு

சேர்ந்தபோது

சர்கார் வைத்தியம்-

சடுதியில் அல்ல

சாவகாசமாய் சரியானது.
காசின்

பரிணாமம்

கொஞ்சமே

கொஞ்சம்

கூடிவிட்ட

பின்பு

தனியார்

வைத்தியம்

வாடிக்கையாளன்

ஆனான்.
காசுகள் காக்க

பணப் பைகள்

கிடைத்த பிறகு

ஸ்பெஷலிஸ்டிடம் போனான்
ஸ்பெஷலிஸ்ட்

வெற்றிகரமாக

முடித்து வைத்தார்

அவன் கதையை.


தனி வழி
நாலு பக்கம்

கடலிருந்தால்

தீவு.

மூனு பக்கம்

கடலிருந்தால்

தீபகற்பம்.
மூனு பக்கம்

கடல்

நாலாவது பக்கம்

மலை

எட்டுப் பக்கமும்

கடன்-

நம் தேசம்.


ஒரு வீடு இரு திருடர்கள்
அது

அவர்களுடைய

தொழில்

கொளையடிப்பதும்,

கொலை செய்வதும்.
நாய்களுக்கு

சிறுநீரால் ஆன

எல்லைக்கோடு போல

அவர்களுக்குத்

தொழில் தர்மம்.
ஒருவர்

தொழிலில் மற்றவர்

குறுக்கிட்டால்

குறுக்கிடும்

தொழில் தர்மம்.
ஒரு

வீட்டின் புறவாசல்

வழியேஒருவனும்,

கூரை வழியே

ஒருவனும்

தொழில் செய்யப் போனார்கள்

அந்தோ பரிதாபம்

குறுக்கிட்டது

தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது.?

யார் பின்வாங்குவது?

முடிவு

காணமுடியவில்லை

திருடர்களால்.
முதல் திருடன்

சொன்னான்.

‘‘மக்கள் தீர்ப்பே

இரண்டாம் திருடன்

சொன்னான்‘திருடுவது

நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது

வீட்டுக்காரரின் கடமை.’
ஆகவே,

எழுப்பப்பட்டான்

அந்தவீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப் பெட்டி.
யார்

திருடவேண்டுமெனத்

தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன்

வேண்டப்பட்டான்.
அவனுக்கு

ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.
இங்கு

திருடர்களுக்கு

வீட்டுக்காரனே

எஜமானன்.
அவன்

சொல்லும்

நபரே

திருட முடியும்.
கடைசியில்

ஜனநாயகம் வென்றது.

ஆம்-வீட்டுக்காரனைப்

புதைத்தார்கள்.

Monday, February 16, 2009

போரை நிறுத்து! - தாய்தமிழ் பிள்ளைகள் கருப்புக்கொடி ஊர்வலம்

ஈழ்த்தமிழினம் மீதான போரை நிறுத்தக்கோரி
திண்டிவனம், உரோசனை,
தாய்த் தமிம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்கும் குறைவான 95 மாணவ, மாணவிகள் சுமார் 2-00 மணி நேரம் திண்டிவனம் நகர் முழுவதும் நடந்துசென்றனர்.
மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உட்பட சுமார் 100 பேர் என ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் அட்டைகளுடன், கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டார்கள். ஊர்வலத்தின் சில புகைப்படங்கள்.































Saturday, February 14, 2009

செயல்வழிக் கற்றலை சரியாக அமல்படுத்தக் கோரியும்,
ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 20 தேவையென வற்புறுத்தியும்


பள்ளிக்கல்வி மாநாடு

22-02-2009, காலை 9-00 மணி முதல் மாலை 4-00 மணி வரை, விழுப்புரம்.

ஏன் இந்த மாநாடு?
தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சமீபத்தில் எழுந்துள்ளது. ஒருசில ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கற்றலை எதிர்த்துப் பிரச்சாரங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்துவருகின்றன. அதே வேளையில் வகுப்பறையில் செயல்வழிக் கற்றலை முறையாக நடைமுறைப்படுத்திப் பார்த்த ஆசிரியர்கள், இது ஒரு நல்ல முறை என வரவேற்கிறார்கள். மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றம் உள்ளதாகக் கூறுகிறார்கள். தொடக்கக் கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும். எனவே இது தொடர்பாக நாம் ஆராய்ந்து முடிவு செய்து செயல்பட வேண்டியது நமது கடமையாகும்.

செயல்வழிக் கற்றல் எப்படி வந்தது?
முதலில் இம்முறையானது ஆந்திராவில் உள்ள ரி´ வேலி பள்ளியில் பின்பற்றப்பட்டு வந்தது. இது பற்றி ஆய்வு செய்ய, திட்ட ஒருங்கிணைப்பாளர் நான்கு பேருடன் 26 ஆசிரியர்கள் அடங்கிய குழு தமிழ் நாட்டிலிருந்து சென்றது. அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தைக் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவானதே இந்த செயல்வழிக் கற்றல் ஆகும்.
ரிஷி வேலி முறையை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதை தமிழகச் சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்பு இம்முறையானது 2003-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 13 பள்ளிகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிறை குறைகளைக் கண்டறிந்து, மேலும் செழுமைப்படுத்தி 2004-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 264 பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து கல்வியாளர்களும், அலுவலர்களும் மாநகராட்சிப் பள்ளிகளை, பார்வையிட்டு பாராட்டினார்கள். ஐ.நா. சபையில் கல்விக்கான பொறுப்பாளர்களும் இதுவே
சிறந்தமுறை என சான்றளித்தனர். இதன்பின்புதான் இக்கல்விமுறை 2006 இல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் வீதமும், 2007 இல் அனைத்து பள்ளிகளுக்குமாக விரிவுபடுத்தப்பட்டது.

செயல்வழிக் கற்றல் என்றால் என்ன?
இது தானே கற்றல், மகிழ்வுடன் கற்றல், மாணவர் மையக் கல்வி, தனியாய் கற்றல், குழுவாய் கற்றல், ஆசிரியர் துணையுடன் கற்றல் போன்ற பல்வேறு கற்றல் முறைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு திறனைக் கற்பதற்கும் பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அட்டையில் வண்ண வண்ண நிறங்களில் கண்ணைக் கவரும் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆறு குழுவாகப் பிரிந்து அமரும் வண்ணம் தரையில் பாய்கள் போடப்பட்டு இருக்கும். முதல் மூன்று குழுக்கள் ஆசிரியர் துணையுடனும், 4,5
-வது குழுக்கள் சக மாணவர் உதவியுடனும், 6-வது குழு தனியே கற்றலுக்கும் ஏற்றவாறு குழு அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் ஒரு செயல் அட்டை முடிந்தவுடன் அடுத்து எந்தச் செயல் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியும் (ஏணிப்படி),அடையாளச் சின்னங்களுடன் (முத்திரை) வழங்கப்பட்டுள்ளது.

செயல்வழிக் கற்றலின் சிறப்புகள் :
மாணவர்கள் ஒரு திறனை அடைந்த பிறகுதான் அடுத்தத் திறனை அடைய முடியும். இது போன்று ஒரு வகுப்பிற்கான திறன்களை முடித்த பிறகுதான் அடுத்த வகுப்பிற்கான திறன்களை கற்க முடியும். மாணவர்களின் தனித்திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்பக் கற்க முடியும். இது ஆசிரியர் மைய வகுப்பறையை, மாணவர் மைய வகுப்பறையாக மாற்றியுள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
கல்வியின் நோக்கமான அறிவியல் மனப்பான்மை, கற்பனைத்திறன், படைப்பாற்றதன்னம்பிக்கை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதாக இக்கல்வி முறை உள்ளது. இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்றுள்ளது.
அ.கி.வேங்கடசுப்பரமணியன், டாக்டர் வசந்தி தேவி, எஸ்.எஸ். ராஜகோபாலன், எழுத்தாளர் ரவிக்குமார் போன்ற கல்வியாளர்கள் செயல்வழிக் கற்றலை ஆதரிக்கிறார்கள். தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியா முழுவதும் 7341 பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில் மொழி மற்றும் கணிதப் பாடத்தில் தமிழகம் முதல் நிலையில் உள்ளது. இதற்கு செயல்வழிக் கற்றலே காரணமாகும்.

மாணவர் சேர்க்கை எதனால் குறைகிறது?
செயல்வழிக் கற்றல் முறையை விரும்பாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. உண்மையில், ஆங்கில மோகம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பள்ளிகள், உள் கட்டமைப்பு, மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை கல்வியில் வணிகமயம் போன்ற பல காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாகவே, அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக் குறைந்து வருகிறது. இதனால் 1985-ல் 212 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 2005-ல் 3386 ஆகக் கூடியுள்ளது. செயல்வழிக் கற்றலை நன்கு செயல் படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரம் உயரும். தாய் மொழியில் பயில்வதே சிறந்தது என்பதையும், செயல்வழிக் கற்றலின் சிறப்புகளையும் மக்களிடம் விளக்கினால், மெட்ரிகுலேசன் பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிப்பார்கள், அரசுப் பள்ளிகளை ஆதரிப்பார்கள்.


20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் :


கல்விக்கண் திறந்த காமராசர் காலத்தில் 20 மாணவர் இருந்தால் ஒரு ஆசிரியரை நியமனம் செய்தார்கள். அதனால் கல்வித்தரம் சிறந்தோங்கியது எனவேதான் அவருடைய காலத்தை கல்வியின் பொற்காலம் என்கிறோம். பின்பு வந்தவர்கள் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்தனர். இதனால் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் அதை நிறைவேற்ற வில்லை. கேட்டால் சம்பளம் கொடுக்க பணமில்லை என்கிறார்கள்.
ஆண்டுதோறும், சைக்கிள் வழங்க ரூ.120 கோடி, டி.வி. வழங்க ரூ.750 கோடி, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட ரூ. 1,000 கோடி என “வாரி வழங்கும்” இவர்களால் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் போட முடியாதா?


பள்ளிக்கல்வி மாநாடு

  • 1965-ல் மாணவர்கள், உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1967-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 40 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமை என்ன? தமிழ் வழியில் படிக்கும் மாணவன் தலை நிமிர முடியவில்லை.
  • சமச்சீர் கல்வி கொண்டுவர முத்துக்குமரன் குழுவை நியமித்தார்கள். அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. அமலாக்கம் பற்றி பேச்சே இல்லை.
  • +2 மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளும், பொதுத்தேர்வு நடத்தி வரும் ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு 1697 பேர் ஐ.ஐ.டி. யில் தேர்வு பெற்றார்கள். ஒரு ஆண்டு மட்டும் தேர்வு நடத்துவதால் தமிழகத்தில் இருந்து 202 பேர் மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
  • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்-நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்களா?
  • தனிப்பயிற்சி மற்றும் காப்பியடிக்கும் கலாச்சாரம் பற்றி பேசவேண்டாமா?

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே நாம்தான் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுக்கவேண்டும். எனவேதான் இந்த மாநாடு.
ஆதரவு தாரீர், அணிதிரண்டு வாரீர்.

மக்கள் கல்வி கூட்டமைப்பு
துரும்பர் விடுதலை இயக்கம். சமூக நீதி அறக்கட்டளை, சாந்தி நிலையம். கவசம்.சுரபி. மக்கள் கல்வி இயக்கம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை. புனித அன்னாள் கல்விச்சுடர். மலரகம்-சமூக செயல்பாட்டு அரங்கம். மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம். கிராமக் குழந்தைகள் கல்வி முன்னேற்ற சமூகசேவை நிறுவனம். சமூகக்கல்விக்கான கிராமப் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம். திண்டிவனம் நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு. குழந்தைகளைக் கொண்டாடுவோம்-கல்வி இயக்கம், ஆனந்தன் கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை - பெருங்கலம்பூண்டி. ( தொடர்புக்கு : 94433 28740 )

Monday, February 2, 2009

முத்துக்குமார் - நினைவேந்தல்


ஈழப் போராட்டத்தில் இந்திய அரசின் போக்கை கண்டித்து சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பத்திரிகையாளர் முத்துக்குமாரின்

நினைவு ஊர்வலம் 28-01-2009 மாலை 5-30 மணியளவில் திண்டிவனம் நேரு வீதியில் நடத்தப்பட்டது. பின்பு 6-15 மணியளவில் காந்தி சிலை அருகில் நினைவுக் கூட்டமும் நடைபெற்றது. நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் மு.கந்தசாமி. பேராசிரியர் பா.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் அ.ராஜகண்பதி, மு.பூபால், ஆசிரியர்கள் நவா.ஏழுமலை, க.சாரதி, நடத்துனர் ஏழுமலை, ஓவியர் சங்கர்,

ஆ.வெங்கடேசன், இரா.முருகப்பன், வை.கருணாநிதி, த.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.