Wednesday, September 10, 2008

இரட்டணை : தடியடி, துப்பாக்கிச்சூடு









விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ளது இரட்டணை கிராமம். சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கடுத்தும், பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்தவர்கள் உள்ளிட்ட, பிற சாதி இந்து சமூகத்தவர்களும் என சுமார் 10,000 குடும்பத்தினர் வசிக்கின்ற மிகப்பெரும் ஊராட்சியாகும். மொத்தம் 5 வார்டுகளைக் கொண்ட இக்கிராமத்திற்கு பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.















  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் நடைபெறும் வேலைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டைச் சேர்ந்தவர்கள் செய்து வந்துள்ளனர். தொடக்கத்தில், திட்டத்தில் கூறியுள்ளபடி நாளன்றுக்கு ரூ.80 கூலியாக வழங்கியுள்ளனர். அதன்பின்பு படிப்படியாக ரூ. 70, ரூ.60, ரூ.50 எனக் குறைத்துக் கொடுத்துள்ளனர். மக்கள் நலப் பணியாளர் நந்தகோபால், மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வனை கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளனர்.




  • கடந்த 16.08.08 அன்று ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலித் மக்கள் இரண்டு குழுவாக சுமார் 500 பேரும், தலித் அல்லாத சாதி இந்துக்கள் ஒரு குழுவாக சுமார் 250 பேரும் என மொத்தம் சுமார் 750 பேர் இரட்டணையில் உள்ள புதுக்குளம், தலைவாழைப்பட்டு கால்வாய் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகளைச் செய்து வந்துள்ளனர். காலை 10 மணியளவில் மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் வேலை செய்துகொண்டிருந்த மக்களிடம் வழக்கமாக செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்யவேண்டும் என்றும், கூலியாக ரூ.40 அல்லது 45&தான் தருவோம், அதுவும் கூட பி.டி.ஓ தந்தால்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார்.• தினசரி செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்ய வேண்டியிருப்பதுடன், வழக்கமான கூலியையும் குறைத்து கொடுப்பது ஏன் என்று வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு மேற்படி மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால், ‘‘இதெல்லாம் எனக்குத்தெரியாது இஷ்டம் இருந்தா செய்ங்க. இல்லன்னா போங்க. அதிகாரிய வேணா போய் கேளுங்க’’ என்று கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் அதிகாரியிடம் விவரம் கேட்கலாம் என வேலைசெய்து கொண்டிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஊருக்குள் வந்து மேம்பாலத்தில் நின்றுள்ளனர்.• தகவலறிந்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம், மயிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ ஆகியோர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். மேலும், வட்டாட்சியர் அக்கிராமத்திற்கு செல்லும்போது பெரியதச்சூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை வரவழைத்துள்ளார். காலை 11&00 மணி முதல் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கூட்டம் கலையாமல் மேலும் மேலும் கூடியுள்ளது. பேச்சு வார்த்தையின் போது தற்போதைய தலைவர் கலைச்செல்வன், முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோரும் இருந்துள்ளனர்.• பெரியதச்சூர் போலீசார் தகவல் தந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திலிருந்தும் காவலர்களை வரவழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2&00 மணியளவில் அதிரடிப்படைபோலீசார் வண்டி வந்துள்ளது. வண்டி வந்து நின்றதும் வண்டியில் இருந்து இறங்கிய அதிரடிப்படை போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்கு நின்றிருந்த மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.• வந்ததும் தாக்கத்தொடங்கிய அதிரடிபடை போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்காத மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அவ்வாறு ஓடிய மக்களை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர் போலீசார். அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் மக்களை தாக்காதீர்கள் என தடுக்கமுயன்ற ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் மீதும், அவருடன் இருந்த அவரது தம்பியும், சட்டக்கல்லூரி மாணவருமான தமிழரசனையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். • தன்னைத் தாக்கியவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் என்றும், தன்னை அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும், மேலும் தான் ஊராட்சி மன்றத் தலைவர் என்று கூறிய பின்பும் போலீசார் தன்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று நேரில் சந்தித்தபோது ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் கூறியுள்ளார். போலீசாரின் தாக்குதலில் தலைவர் கலைச்செல்வனுக்கு தலையிலும், இடது கையிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளது. அவரது தம்பி தமிழரசனுக்கு இடது கை, முதுகு, தலை ஆகிய இடங்களில் கடுமையாக அடிபட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.• ஊராட்சி மன்றத் தலைவரும், அவரது தம்பியும் அடிபட்டு இரத்த காயத்தில் கீழே விழுந்ததை கண்ட மக்கள் பீதியில் அங்கும், இங்கும் கலைந்து ஓடியுள்ளனர். இந்நிலையில் அதிரடிப்படைபோலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.• போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலித் இளைஞரான மூர்த்தி முதுகில் குண்டடிபட்டு காயமடைந்தார்.• மறுநாள் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் இரட்டனை மக்கள் பயந்து ஓடுவதும், போலீசார் தடியடி நடத்துவதும், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசனையும் போலீசார் கூடி நின்று தாக்குவதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.• முன்னறிவிப்பின்றி நடத்திய தடியடி தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். முதலில் சென்ற சிலருக்கு மட்டும் இரட்டனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்துள்ளனர். குறிப்பாக தடியடியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இதுவரை எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.• அதிரடிப்படை போலீசார் நடத்திய தடியடிக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் தான் உத்திடவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அமுல்ராஜ் எமது கள ஆய்வுக்குழுவினரிடம் கூறினார்.• திண்டிவனம் வட்டாட்சியர் திரு.கல்யாணம் அவர்களை சந்தித்தபோது அவர் எம்மிடம், ‘‘மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து கிராமத்திற்கு சென்றேன். ஊராட்சி ஒன்றிய அலுவலரையும் வரவழைத்து நான் ஒருபக்கமும், அவர் ஒருபக்கமுமாக மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, சமாதானப்படுத்திக்கொண்டிருந்தோம். எங்களுடன் பெரியத்தச்சூர் போலீசார் நின்றிருந்தனர். இந்நிலையில் அதிரடிப்படை போலீசார் கிராமத்திற்கு வந்தபோது, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம், எங்கள் ஊருக்கு எதுக்கு போலீசை வரவழைத்தாய் என்று கேட்டு எங்களிடம் வாக்கு வாதம் செய்தார். அப்போது அவர் குடித்திருந்தார். என்னுடன் இருந்த போலீசார் அவரை தள்ளி நிற்கச்சொல்லி கைவைத்து தள்ளினார். அதில் அவர் கிழே விழுந்துவிட்டார். இதனைக் கண்டதும் மக்கள் தலைவரை அடிச்சிட்டாங்க என்று கூறி எங்களை தாக்க முயன்றார்கள். எங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள தடியடி நடத்த உத்திரவிட்டேன். மேலும் மக்கள் கைகளில் கட்டை, தடிகளுடன் எங்களைத் தாக்க வந்தார்கள். அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவிட்டேன். அதன் பின்பு அக்கிராமத்தை விட்டு வெளியேறி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன்.’’ என்று கூறினார்.




  • மேலும் இக்கிராமத்தில், தலித் மக்கள் மீது தீண்டாமை பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிய முடிந்தது. கிராமத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், வெண்ணியம்மன் போன்ற கோயில்களில் தலித் மக்கள் வழிபாடு நடத்த சாதி இந்துக்கள் தடைசெய்துள்ளனர். கடந்த ஆண்டு இக்கிராமத்தில் உள்ள தலித் ஒருவர் திருமணம் நடத்துவதற்கு சாதி இந்துக்கள் திருமண மண்டபத்தை தருவதற்கு மறுத்துள்ளனர். மேலும், சாதி இந்துக்கள் வீட்டில் தலித் மக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. இதுபோன்ற தீண்டாமைகளை தலித் மக்கள் மீது, இக்கிராமத்தின் சாதி இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர்.




பரிந்துரைகள் :








  • வேலை அதிகரிக்கப்பட்டு, கூலி குறைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்க கூடியிருந்த மக்கள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி அத்துமீறலில் ஈடுப்பட்ட பெரியத்தச்சூர், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் ஆகிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான விசாரனைக்கு தமிழக அரசு உத்திரவிடவேண்டும். மேலும், தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கவேண்டும்.




  • துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட தலித் இளைஞன் மூர்த்திக்கு அரசு தனது பொறுப்பில் சென்னையில் உயர்மருத்துவ சிகிசைக்கு ஏற்பாடு செய்து, பத்தாம் வகுப்பு முடித்துள்ள மூர்த்திக்கு அரசு தனது செலவில் மேல்நிலை மற்றும் உயர்கல்வியை வழங்கவேண்டும்.




  • போலீசாரின் தடியடியில் காயம்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசன் ஆகியோருக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதுடன், தடியடியில் காயம்பட்ட அனைவருக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்




  • கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுள்ள அனைத்து பணிகளையும் மறு ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ள ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன், மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் ஆகியோரை உடனடியாக பணிநீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்திரவிடவேண்டும்




  • உயரதிகாரிகளிடம் தகவல் அளிக்காமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கூடியிருந்த மக்கள் மீது தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம் உத்தரவிட்டுள்ளார். ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ இரட்டனையில் இத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இவர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், காவல் மற்றும் வருவாய்த் துறையின் அத்துமீறலை, வருவாய்த் துறை அதிகாரிகளே விசாரிப்பதன் மூலம், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இரட்டனையில் நடந்த தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அத்துமீறல் சம்பவத்தை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்திரவிடவேண்டும்.




  • இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளைக்களைய அரசு உரிய முன்முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டதின் கீழ் வழங்கப்படவேண்டிய கூலியை வழங்குமாறு கேட்ட மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய வருவாய் துறை மற்றும் காவல் துறையின் இந்த அத்துமீறல் சம்பவம் குறித்தும், இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகள் குறித்தும், தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் மட்டுமில்லாமல், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரித்து, அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி, நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும்.




  • மக்கள் தங்கள் பிரசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான குறைந்தபட்ச வழிமுறையாக சாலைமறியில் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசு அதிகாரிகள் பேசியபின்பு ஆறுதலடைந்த மக்கள் கலைந்துசெல்வார்கள். இதுதான் இம்மாவட்டத்திலும் நடைமுறையாக உள்ளது. ஆனால், மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக திரு. அமுல்ராஜ் பொறுபேற்ற பின்பு, போராட்டடம் நடத்துகின்ற மக்கள் மீது தடியடி நடத்துவது, பெண்கள் என்று கூட பார்க்காமல் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைப்பது, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற அத்துமீறல்கள் அனைத்தும் நடந்தேறி வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தைரியம் பெற்று மாவட்டத்தில் உள்ள பிற காவல் அதிகாரிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். சரவணபாக்கம், இறையூர், பேரங்கியூர், சொரத்தூர் போன்ற பல்வேறு சம்பங்களை உதாரணமாகச் சொல்லலாம். மாவட்டத்தில் எண்ணிலடங்காத வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள நிலையில், எலவனாசூர்கோட்டை மலையிலிருந்த பீரங்கியை கொண்டுவந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுவியதன் மூலம் காவல் கண்காணிப்பாளரின் ஆயுதங்களின் மீதான ஈடுபாடும், ஆதிக்க மனோபாவத்தை அறியலாம்.




  • மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.அமுல்ராஜ் பொறுபேற்றதிலிருந்து மாவட்டத்தில் நடைபெற்ற காவல் துறையின் அத்துமீறல் சம்பவங்கள் அனைத்தையும் விசாரனை கமிஷன் அமைத்து அரசு விசாரிக்கவேண்டும். மாவட்டத்தில் காவல் துறை தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்ற தன்மைக்கு முழுமையான காரணமாக உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அமுல்ராஜை அரசு உடனடியாக இம்மாவட்டத்திலிருந்து நீக்கவேண்டும்.

Monday, September 8, 2008

முதன்முதலாக ரயிலைப் பார்த்த மாணவர்கள்

என்ன படிப்பது? எப்படிப் படிப்பது? எப்படித் தேர்வெழுதுவது? என்ன படித்தால் எந்த வேலைக்குப் போகலாம்? போன்றவை பற்றி தெரியாமல் கிராமப்புறங்களில் எத்தனையோ மாணவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும் என்பதே "வாழை'யின் நோக்கம். மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கித் தருவது, ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித் தருவது போன்ற உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவது என்பதுதான் எல்லாராலும் முடியாது. எனவே திவ்யா தனது மாணவியுடன், அமுதரசன், ரமேஷ், "இன்று வாழ்க்கையில் இவ்வளவு துன்பப்படுவதற்குக் காரணம், சிறிய வயதில் எனக்கு வழிகாட்ட சரியான ஆள் யாரும் இல்லை' என்று புலம்புபவரா நீங்கள்? பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் சரியான வழிகாட்டியிருந்திருந்தால் நான் என்னவெல்லாமோ படித்து எங்கேயோ இருந்திருப்பேன் என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவரா நீங்கள்? உங்களுடைய ஏக்கமும் பெருமூச்சும் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதற்காக இப்போது புலம்புவதால் என்ன பயன்? உங்களைப் போலவே வழிகாட்டியில்லாமல் திசைமாறிப் போகும் இன்றைய இளந்தலைமுறையினருக்கு நீங்கள் வழிகாட்டலாமே? வருங்காலத்தில் அவர்களாவது நன்றாக இருப்பார்களே? இந்த எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதோ, இல்லையோ ஐடி தொழிலகங்களில் கைநிறையச் சம்பாதிக்கும் சில இளைஞர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அவர்கள் எல்லாரும் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாக பட்டப் படிப்பு முடித்தவர்கள். இந்த நல்ல நிலைக்கு வருவதற்கு "யாம் பட்ட துன்பம் இவ்வையகம் படக்கூடாது' என்ற உயர்ந்த எண்ணத்துடன் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். "வாழை' என்கிற பெயரில் அவர்கள் நடத்தும் அமைப்பு இத்தகைய வழிகாட்டுதலை அளித்துக் கொண்டிருக்கிறது.
வாழை அமைப்பைச் சேர்ந்த இளைஞர் பாரதிராஜனிடம் அவர்களுடைய அரிய பணியைப் பற்றி பேசினோம்.
""எனது சொந்த ஊர் திண்டிவனம். எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. நான் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்தேன். அங்குள்ள எனது நண்பர்கள் மூலமாக ஞானவேல் நாங்கள் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழகி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் எல்லாரும் சென்னை, பெங்களூர், கரூர் போன்ற நகரங்களில் வேலை செய்பவர்கள். எப்படி கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது? என்ற கேள்வி எழுந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் தாலுகாவில் உள்ள நெருப்பூர், சின்ன வத்தலாபுரம், செல்லமுடி ஆகிய மூன்று கிராமப் பள்ளிகளிலிருந்து முதன் முதலாக 15 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டுவது என்று "வாழை' முடிவு செய்தது. இப்போது 60 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு ஒரு வழிகாட்டி வீதம் எங்களை நாங்கள் நியமித்துக் கொண்டோம். அந்த மாணவருடன் 15 நாளுக்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம். வாரத்திற்கு ஒருமுறை கடிதத் தொடர்பு கொள்வோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை சனி, ஞாயிறுகளில் இரண்டுநாள் பயிற்சிப் பட்டறைகளை அவர்களுடைய கிராமத்திற்குச் சென்று நடத்துவோம்.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். முதலில் அந்த மாணவர் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாகப் படிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பதற்கும், வழிநடத்துவதற்கும் யாரும் இருக்கக் கூடாது. தூரத்து உறவினர் கூட இருக்கக் கூடாது.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் மாணவிகளின் எண்ணிக்கையும் சம அளவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி. மாணவிக்கு பெண் வழிகாட்டி என்றெல்லாம் முடிவு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதன்முதலில் ஒரு மாணவனை ஒரு வழிகாட்டி சந்திக்கும் போது ஆசிரியர் - மாணவர் உறவுதான் இருக்கும். மாணவனுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். இடைவெளி இருக்கும். ஆனால் இரண்டு மாதங்களுக்குள்ளேயே அண்ணன் - தம்பி உறவு ஏற்பட்டுவிடும்.
நாங்கள் தேர்ந்தெடுத்த கிராமப் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதேயில்லை. அவர்களின் பெற்றோர் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட பெரும்பாலும் பிள்ளைகளும் முதியவர்களும்தான் வீட்டில் இருக்கிறார்கள். இதனால் பெண் பிள்ளைகள் என்றால் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். மாணவர்கள் பெரும்பாலும் எட்டாவது வகுப்பைத் தாண்டுவதில்லை. ஆடு மேய்க்கப் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை உள்ள கிராமங்களில் எட்டாவது படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய பத்தாவது வகுப்பு வரையிலும் அதற்குப் பின்பு என்ன படிப்பது என்பதற்கும் வழிகாட்டுகிறோம். அவர்களுடைய பல்வேறு திறன்களை வளர்ப்பது, அவர்கள் பிறருடன் சிறந்த முறையில் தகவல் தொடர்பு கொள்ளும் திறனை வளர்ப்பது, தமிழ், ஆங்கில மொழித் திறனை வளர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம். இதற்காக நாங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளைப் பயன்படுத்துகிறோம். அதில் நாடகப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றைத் தருகிறோம். மாணவர்களுக்காக மருத்துவ முகாம்களையும் நடத்துகிறோம். கடந்த ஆண்டு வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 3 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். அங்கே வந்திருந்த மாணவர்களில் சிலர் அப்போதுதான் முதன்முறையாக ரயிலைப் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நகர்ப்புறங்களிலேயே செஸ் விளையாட்டு இன்று பரவலாக அறிமுகமாகவில்லை. நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக "டென்த் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் நான், கவிதா, பிரவீணா, விஸ்வேஸ்வரன், அம்பலவாணன், பொன்ராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவை உருவாக்கினோம். அந்தக் குழு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் சிறப்புக் கவனம் செலுத்தியது. அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களை மாணவர்கள் எளிதாகப் பயில வழிகாட்டியது. கணக்கு என்றால் பயப்படும் மாணவர்களுக்குக் கணக்கில் ஆர்வத்தை ஊட்டியது. இதன் விளைவாக பின்தங்கிய அந்தக் கிராமப்புற மாணவர்களில் சிலர் ஐந்நூறுக்கு 421 என்றும் 417... 391... 386... என்றும் மதிப்பெண்கள் எடுத்தனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனை சொன்னோம். அதில் இரண்டு மாணவர்களை கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில் சேர்த்து ட்ரிபிள் இ படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளை எங்கள் "வாழை'யே ஏற்றுக் கொள்கிறது. இதற்கான தொகையை நன்கொடை மூலமாகவே பெறுகிறோம். "இவ்வாறு மாணவர்களைப் படிக்க வைக்க நிதி தேவைப்படுகிறது. முடிந்த நண்பர்கள் உதவுங்கள்' என்று இ மெயில் அனுப்பினோம். பல நண்பர்கள் மாதந்தோறும் நிதியளிக்க ஒப்புக் கொண்டார்கள்.
வாழை ஆரம்பித்தது முதலே எங்களுடைய ஆலோசகர்களாக பத்திரிகையாளர் ஞாநி, மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், மாஃபா பாண்டியராஜன், ஜெகத் கஸ்பார், நம்பி ஆருரன் போன்றவர்கள் உள்ளனர்.
நாங்கள் நடத்திய மருத்துவமுகாமிற்கு டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர் குழு வந்து உதவுகின்றனர். வரும் ஆண்டில் விழுப்புரத்துக்கு அருகே உள்ள அன்னியூரில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறோம். எட்டாம் வகுப்பிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.
எங்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கு முடிந்தவிதத்தில் உதவ முடியும். நிதி தர முடிந்தவர்கள் நிதி தரலாம். எங்களுடன் இணைந்து வழிகாட்டியாகச் செயல்படலாம். குறிப்பாக மாணவிகளுக்கு வழிகாட்ட பெண் வழிகாட்டிகள் கிடைப்பது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. இவை தவிர, "வாழை'யின் அன்றாட செயற்பாடுகளில் தன்னால் முடிந்த வேலைகளை ஒருவர் செய்து தரலாம்.'' இது ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா?
(நன்றி : ந.ஜீவா, தினமணிக்கதிர்)