Thursday, December 13, 2007

உண்மையறியும் குழு அறிக்கை

திண்டிவனம் - பூதேரி கலா மீது
மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம்

உண்மையறியும் குழு அறிக்கை

334, நேரு வீதி, பூந்தோட்டத் தெரு, திண்டிவனம் - 604 001.
தொடர்புக்கு : 99429 93463, 94426 22970.


திண்டிவனம் பூதேரியில் உள்ள ஒத்தைவாடை தெருவில் கலா(27)-லட்சுமணன் தம்பதியினர் தங்களுடையய 3 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். லட்சுமணன் மூட்டை தூக்குதல், லாரிக்கு கிளினராக செல்லுதல் போன்ற வேலைகளுக்கு செல்வார். கலா வீட்டு வேலைகளுக்குச் செல்வார். அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் பரத் என்பவர், மேற்படி கலாவை பலசந்தர்ப்பங்களில் பாலியல் தொந்தரவு செய்து, உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். உடன்படாத கலா பரத்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26.09.07 அன்று இரவு 8.00 மணியளவில் மேற்படி கலா, திண்டிவனத்திலிருந்து பூதேரி செல்லும்போது, வழியில் உள்ள அகல்குளம் அருகே மேற்படி பரத், கலாவை கையை பிடித்து, வாயைப் பொத்தி மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். கலா அவரிடம் போராடி, சண்டையிட்டு, தள்ளிவிட்டு ஓடி வந்துள்ளார். அந்த ஊரில் ஆதரவாக யாரும் இல்லாத நிலையிலும், இரவு என்பதாலும், மறுநாள் 27.09.07 காலை, கலா தான் உறுப்பினராக உள்ள பவ்டா சுய உதவிக்குழு தலைவியும், திண்டிவனம் போலீஸ்லைன் பின்புறம் குடியிருப்பவருமான லட்சுமி க/பெ கோவிந்தன் என்பவரிடம் கூறியுள்ளார். அதன்பின்பு, மேற்படி லட்சுமி, தனது சுய உதவி குழுவில் உள்ள மீனா, தனது கணவரின் நண்பர் கனகசபை ஆகியோரை அழைத்துக்கொண்டு பூதேரி பரத்தின் வீட்டிற்குச் சென்று, பரத்தின் தந்தை நடராஜனிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால் பரத்தின் தந்தையோ, ‘‘என் மகன் அப்படித்தான் இருப்பான். தேவிடியாளுங்க நீங்க என்னா இப்பதான் பெரிசா கேக்க வந்தீட்டிங்க’’ என்று அவமானப்படுத்திப் பேசி, அடிப்பதாகவும் மிரட்டியுள்ளார். அதனால் பயந்துபோன அவர்கள் கலாவின் வீட்டிற்கு சென்று, காவல் நிலையம் செல்லலாமா அல்லது வழக்கறிஞரிடம் செல்லலாமா என்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, அவர்களது உறவினர்களான ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் கலாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். நடராஜன் கலாவின் முடியைப் பிடித்து அடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு கூடவே சென்ற சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மா ஆகியோர் நடராஜனுடன் சேர்ந்து கலாவை அடித்து உதைத்துள்ளனர். அதைத் தடுப்பதற்கு முயற்சித்த மேற்படி லட்சுமியை அடித்து, மீனாவை கீழே பிடித்துத் தள்ளி, கனகசபையை மிரட்டியுள்ளார் மேற்படி பரத்.

அப்போது மேற்படி நடராஜன் ‘‘இவள மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்துடா’’ என்று கூறியுள்ளார். அப்போது கலா கத்தாமல் இருப்பதற்காக ஆண்டாள் என்பவர் கலாவின் வாயைப் பொத்தியுள்ளர். கண்ணம்மா என்பவர் கலாவின் கைகளை பிடித்துக்கொண்டுள்ளார். நடராஜன் கலாவின் முடியைப் பிடித்துகொண்டுள்ளார். அப்போது பரத் கலாவின் மீது மண்ணெண்யை ஊற்றிய பின்பு சங்கீதா தீக்குச்சி எடுத்து கொளுத்தியுள்ளார். தீப்பிடித்து எரிந்த நிலையில் கலா அங்கும் இங்கும் கத்திக்கொண்டே ஓடியுள்ளார். கொளுத்தியதும் நடராஜனும், அவருடன் வந்த மற்றவர்களும் அங்கிருந்து ஓடியிருக்கின்றனர். மேற்படி லட்சுமி, மீனா ஆகியோர் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி அணைத்து, கலாவை திண்டிவனம் அரசு மருத்து மனையில் சேர்த்துள்ளனர்.


மேற்கண்ட இச்செய்தியை அறிந்த உண்மையறியும் குழுவினர், கொளுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ள கலா, சாட்சிகளான லட்சுமி, கனகசபை, ஒத்தைவாடை தெருவில் உள்ள கலாவின் வீடு, தெருவில் உள்ள பொதுமக்கள், மருத்துவர்கள், கொளுத்திய நடராஜன், காவலதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தும், நேர்காணல் செய்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி கிடைத்த தகவல்களை அனைத்தையும் ஆய்வு செய்ததில் கீழ்கண்ட உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது :

கண்டறிந்த உண்மைகள்
• நடந்த சம்பவம் குறித்து, கலாவின் பக்கத்து வீட்டில் உள்ளவர், அத்தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரித்த வகையில், 27.09.07 அன்று சம்பவம் நடக்கும்போது மேற்படி நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, உறவினர்களான ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோர் கலாவின் வீட்டிற்கு வந்துள்ளனர் என்பதையும், கலாவிடம் சண்டையிட்டு உள்ளனர் என்பதையும், மேற்படி சாட்சிகளான லட்சுமி, கனகசபை ஆகியோர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி நடராஜனும், அவருடன் வந்தவர்களும்தான் கலாவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளனர் என்பதையும் கண்டறிய முடிந்தது.

• மேற்படி பக்கத்து வீட்டில் உள்ளவர், அத்தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோர், கலா எரிந்த நிலையில் தோட்டத்திலிருந்து கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைய முற்பட்டார் என்றும், அப்போது கலாவின் வீட்டுக் கூரையில் சில இடங்களில் தீபிடித்தது என்றும், பிடுங்கப்பட்ட தீப்பிடித்த கூரைகள் தோட்டத்தில் போடப்பட்டிருப்பதையும் கூறினார்கள், தொடர்ந்து அவர்களிடம், கலாவை யார் கொளுத்தியது என்பது குறித்து கேட்டபோது சொல்லத்தயங்கினார்கள், ஆனால் அதே நேரத்தில் கலா தானாகவே கொளுத்திக்கொண்டதாகவும் ஒருவரும் சொல்லவில்லை. மேலும், மேற்படி மேற்படி கண்ணம்மாள் என்பவர் தானாகவே முன்வந்து, கலா தானாகவே கொளுத்திக்கொண்டதாக கூறினார். கண்ணம்மாவிடம் அவர் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டபோது அடுத்த தெருவில் உள்ளது என்று கூறினார். ஆனால் பிறகு விசாரித்தபோது கலாவின் வீட்டருகில்தான் கண்ணம்மாள் வீடும் உள்ளது என்பதையும், குழுவிடம் கண்ணம்மாள் அதை மறைத்து, அடுத்த தெருவில் உள்ளதாக மாற்றிச் சொல்லியுள்ளார் என்பதையும் கண்டறிய முடிந்தது.

• மேற்படி நடராஜனின் மகள் சங்கீதாவும், அவரது கணவர் ஏ.ராஜேஷ் இருவரும் கலாவின் வீட்டருகில் குடியிருந்து வந்துள்ளனர் என்பதையும், கலாவை கொளுத்திய சில நாட்களில் அந்த வீட்டை காலி செய்துள்ளனர் என்பதை, தற்போது அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரித்ததில் இருந்து கண்டறிய முடிந்தது.

• கலாவை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதும், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் மேற்படி ஏ.ராஜேஷ் உடனிருந்து கொண்டு, தானாகவே கொளுத்திக்கொண்டதாக சொல்லும்படி கலாவிடமும், லட்சுமியிடமும் கூறிக்கொண்டிருந்துள்ளார் என்பதையும், திண்டிவனம் அரசு மருத்துமனையிலிருந்து, புதுவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துசென்ற முழு செலவையும் மேற்படி நடராஜன் தரப்பினரே செய்துள்ளனர் என்பதையும் லட்சுமி, கலா ஆகியோரின் வாக்குமூலத்திலிருந்து அறிய முடிந்தது.

• மேற்படி ஏ.ராஜேஷ், நடராஜனின் தம்பி செல்வம், ராஜேஷின் தாயாரும் சங்கீதாவின் மாமியாருமான சந்திரா, சங்கீதா, பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி, செல்வத்தின் அக்கா மகனான ரா.ராஜேஷ் ஆகியோர் அடிக்கடி மேற்படி சாட்சியான லட்சுமியின் வீட்டிற்குச் சென்று, மருத்துவ சிகிச்சையில் இருந்த கலாவிடம் மாற்றி சொல்லச்சொல்லும்படியும் வற்புறுத்தியும், மிரட்டியும் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேற்படி செல்வம், திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவரான கவிதாவின் கணவரும், நகர தி.மு.க பிரமுகரான முரளிதரன் அவர்கள் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு லட்சுமியை அழைத்துச்சென்று, மேற்படி முரளிதரன், ரா.ராஜேஷ், நடராஜனின் மற்றொரு தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்ட சுமார் 20 பேரை வைத்து கலாவை மாற்றி சொல்லச்சொல்லும்படி லட்சுமியை மிரட்டியுள்ளனர் என்பதையும் லட்சுமியின் வாக்குமூலத்தில் இருந்து அறிய முடிந்தது.

• சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து 29.09.07, 03.10.07 ஆகிய இரண்டு நாட்களும் திண்டிவனம் எஸ்.ஐ, ஒரு காவலருடன் சென்று கலாவை விசாரித்துள்ளார். ஆனால் வழக்கு எதுவும் பதியவில்லை என்பதையும் கண்டறியப்பட்டது. மேலும் 03.10.07 அன்று மாலை 7.00 மணியளவில் ஒரு காரில் எஸ்.ஐ சந்திரசேகர், மற்றொரு காவலர், மேற்படி ராஜேஷ் த/பெ ராஜீ, மேற்படி முனியாண்டியுடன், மேற்படி லட்சுமியை மிரட்டி, ஏற்றிக்கொண்டும், மற்றொரு காரில் மேற்படி செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மானூர் வழக்கறிஞர் ஒருவரும் என புதுவை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் என்பதையும், போலீசார் அப்போதும் கலாவிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர் என்பதையும், அப்போது போலீசார் கலாவிடம் எதுவும் எழுதப்படாத வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்பதையும் லட்சுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டறிய முடிந்தது.


• நடந்த சம்பவம் தொடர்பாக 05.10.07 அன்று கலாவின் அப்பா தேவராஜ், அம்மா சின்னபொன்னு ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நடவடிக்கை கோரி புகார் மனு கொடுத்துள்ளனர்.

• அதனைத் தொடர்ந்து 07.10.07 அன்று, கலாவின் அப்பா அவரது ஊரான வந்தவாசி அருகே உள்ள எச்சூரில் இருந்து ஜெய்சங்கர் என்கிற வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு, திண்டிவனம் காவல் நிலையம் சென்று வழக்கு போடாமலிருப்பது குறித்து விசாரித்துள்ளார். நடந்த சம்பவத்திற்கு நேரடி சாட்சி என வழக்கறிஞர் மூலம் அழைத்து செல்லப்பட்ட லட்சுமியை ஆய்வாளர் விசாரிக்க மறுத்து, வெளியில் ச்சீ.. ஓடு என்று அவமானபடுத்தி அனுப்பியுள்ளார். உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மேற்படி வழக்கறிஞர் ஜெய்சங்கர் இருவரும் தனியாக பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் புதுவை அரசு மருத்துவமனைக்கு சென்று கலாவிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மீண்டும் திண்டிவனம் காவல் நிலையம் வந்துள்ளார். அதன் பின்புதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கூட முக்கிய குற்றவாளியான பரத்தை தவிர்த்துவிட்டும், இ.த.ச.பிரிவு 324 &ல் மட்டும், சொத்து தகராறு என்றும் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதை லட்சுமியின் வாக்குமூலம், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றின் மூலம் கண்டறிய முடிந்தது.

• அதன்பின்பு 12.10.07 அன்று புதுவை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சொந்த ஊரான எச்சூருக்கு சென்ற கலா, மீண்டும் 15.10.07 அன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். தற்போது மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், 22.10.07 அன்று கலா உயரதிகாரிகள் அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளார். நடந்த சம்பவங்களை குறிப்பிட்டும், தான் மிரட்டப்பட்டது குறித்தும், தன்னை போலீசார் சாட்சியாக சேர்க்காதது குறித்தும் மேற்படி லட்சுமியும் விரிவான புகார் ஒன்றை 16.11.07 அன்று உயரதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார் என்பதையும் அறிந்தோம்.

• இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தைரியம் பெற்ற, மேற்படி நடராஜனின் மகளும், கலாவை தீக்குச்சி வைத்து கொளுத்தியவரும், மேற்படி பரத்தின் சகோதரியுமான சங்கீதா, அவரது தோழி சந்திரலேகா ஆகிய இருவரும், மேற்படி சாட்சியான லட்சுமியை அவரது வீட்டில் வைத்து மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, புகார் மனு ஏற்புச் சான்று (வரிசை எண் 269/07, நாள் : 12.11.07) மட்டும் வழங்கியுள்ளனர். அதன் பின்பு மேற்படி நடராஜனின் ஆதரவாளர்களால் கலாவின் கணவர் லட்சுமணன் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக லட்சுமணன் கொடுத்த புகாருக்கு போலீசார் புகார் மனு ஏற்புச்சான்று மட்டும் வழங்கியுள்ளனர் (வரிசை எண் 276/07 நாள் : 22.11.07) என்பதையும் கண்டறிய முடிந்தது.

• நடந்த சம்பவம் குறித்து மேற்படி நடராஜன் அவர்களிடம் கேட்டபோது, தன் மகன் அப்படி செய்யவில்லை என்றும், படிக்கின்ற அவன் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டான் என்றும், தான் அவனை அப்படி வளர்க்கவில்லை என்றும், சம்பவத்தன்று கலா வீட்டிற்கு சென்றேன் என்றும், ஆனால் தான் கொளுத்தவில்லை என்றும் கூறினார்.

• கலா மேற்படி நடராஜன் குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டது குறித்தும், மிரட்டப்பட்டது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் மீதும், தாக்கப்பட்டது தொடர்பாக லட்சுமணன் கொடுத்த புகாரின் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, திண்டிவனம் காவல் நிலைய எஸ்.ஐ சந்திரசேகர் அவர்களிடம் 23.11.07 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, விசாரித்து கொண்டிருப்பதாகவும், ஆள் அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.


கொளுத்தப்பட்டதில் மிகவும் பாதிக்கப்பட்டு, 3 சிறு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வறிய சூழலில் வாழ்ந்து வரும் கலாவிற்கு நீதியும், நியாயமும் கிடைக்க தாங்கள் ஆவனசெய்து, தக்க நடவடிக்கை எடுக்க கீழ்கண்ட கோரிக்கைகளை தங்கள் மேலான கவனத்திற்று பரிந்துரைக்கின்றோம்.

பரிந்துரைகள்
நடராஜன், பரத் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்!• கலாவை பாலியல் தொந்தரவு செய்து, பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த மேற்படி பரத் த/பெ நடராஜன், இது குறித்து நியாயம் கேட்டதற்காக, கலாவை உயிரோடு எரித்து, கொலை செய்ய முயற்சித்த மேற்படி நடராஜன், பரத், சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோர் மீது, திண்டிவனம் காவல் நிலைய குற்றஎண் 935/07 நாள் ; 07.10.07 பிரிவு 324 இதச என்ற வழக்கைத் திருத்தி, உரிய வழக்கு பதிவு செய்து, மேற்படி பரத்தை குற்றவாளியாக சேர்த்து, உடனடியாக அனைவரையும் கைது செய்யவேண்டு.

சி.பி.சி.ஐ.டி புலன் விசாரனைக்கு உத்திரவிடு!
• திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர், தொடக்கத்திலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், பின்னர் காலம் தாழ்த்தி, சாதாரண இந்திய தண்டனை சட்டம் 324 பிரிவில் வழக்கு பதிவு செய்திருப்பதும், சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளை சம்பவத்தை மாற்றி சொல்லச்சொல்லும் படி வற்புறுத்தியிருப்பதாலும், இதுவரை குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும், இவ்வழக்கில் மேற்படி உதவி ஆய்வாளர் குற்றவாளிகளுக்கு சாதாகமாகவே செயல்பட்டு வருகிறார் என்பதையே காட்டுகிறது என்பதாலும், மேலும் இதுவரை கலா உள்நோயாளியாக இருந்து வரும் நிலையிலும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் புலன்விசாரனை செய்ய உத்திரவேண்டும்.

கலாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கு!
• கலா மருத்துவமனையில் இருப்பதால் குடும்பம் வருமானம் ஏதுமின்றி 3 பெண் குழந்தைகளும் வறிய நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே கலாவின் குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரண உதவிகள் அளிக்கவேண்டும். மேலும் கலாவின் குழந்தைகளை அரசு இல்லத்தில் தங்க வைத்து படிப்பதற்கான உதவிகளை செய்ய வேண்டும்.

திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரனை கைதுசெய்!
• கலாவை எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட செய்தி கிடைத்தும், மூன்று நாள் தாமதமாக சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்றும், பிறகு 03.10.07 அன்று மீண்டும் வாக்குமூலம் பெற்றும் வழக்கு பதிவு செய்யாமல், 07.10.07 அன்று புதுவை அரசு மருத்துமனைக்கு செல்லாமல், கலாவிடம் வாக்குமூலம் பெறாமல், மருத்துவமனைக்குசென்று வாக்குமூலம் பெற்றதாக, போலியான வாக்குமூல ஆவணம் தயாரித்து, முதன்மைக்குற்றவாளியை காப்பாற்றும் நோக்குடன் வழக்கு பதிவு செய்துள்ள திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மீது, சட்டப்படி உரிய கிரிமினல் வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாட்சிகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடு!
• முக்கிய சாட்சியான லட்சுமியை, திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவரான கவிதாவின் கணவரும், நகர தி.மு.க பிரமுகருமான முரளிதரன் அவர்கள் நடத்தும் கணபதி ஓட்டலுக்கு அழைத்துச்சென்று மிரட்டிய, மேற்படி முரளிதரன், ரா.ராஜேஷ், நடராஜனின் மற்றொரு தம்பி சின்னய்யா, மேற்படி முனியாண்டி, மேற்படி ஆண்டாள் மகன் வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் உள்ளிட்டோர் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கு எடுக்கப்படவேண்டும். மேலும், திண்டிவனம் காவல் நிலையத்தில் 12.11.07 அன்று லட்சுமியும், 22.11.07 அன்று லட்சுமணனும் கொடுத்த புகாரின் மீதும் உரிய வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலாவிற்கு சென்னையில் உயர்மருத்துவ சிகிச்சை வழங்கு!
• உடம்பில் தீக்காயத்துடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற கலாவிற்கு, அரசு தனது பொறுப்பில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மாவட்ட காவல் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டிக்கிறோம்!
• மேற்படி சம்பவம் தொடர்பாக 05.10.07 அன்று கலாவின் பெற்றோர் நேரிலும், 22.10.07 நாளிட்டு கலாவும், 16.11.07 நாளிட்டு லட்சுமியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். 13.11.07 அன்று தினமலர் நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு பின்பும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பெண்கள் மீதான கடுமையான குற்றச்செயல்களில் கூட இதுபோன்று மெத்தனமாக இருப்பது என்பது, காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது.

முக்கிய சாட்சியான லட்சுமியை பாராட்டுவோம்!
• குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் துறையும், நடராஜனின் ஆட்களும் மிரட்டி வரும் நிலையிலும், சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியான லட்சுமி, கலாவுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வரும் லட்சுமி பாராட்டப்பட வேண்டிய பெண்மணி ஆவார்.


உண்மையறியும் குழுவினர்

1. பேராசியர் பிரபா.கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்
2. ஆசிரியர் மு.கந்தசாமி, நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு
3. வழக்கறிஞர்அ.ராஜகணபதி, விடுதலைச் சிறுத்தைகள்
4. வழக்கறிஞர் லூச,மனித உரிமை இயக்கம்
5. பி.வி.ரமேஷ,மனித உரிமைகள் கழகம்
6. இரா.முருகப்பன்,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்

No comments: